Mittwoch, April 29, 2009

ஆங்கிலத்தில் எழுதிக் கெஞ்ச வேண்டுமென்கிறார்கள்!

இனிமேற்றாம் நாம் மேற்குலகத்துக்காக ஆங்கிலத்தில்...


சொந்த மக்களது ஜனநாயக உரிமையை மறுத்த அராஜகவாதப் புலிகள் தமது அழிவோடு மக்கள் விடுதலைப் போராட்டத்தையே தவறாகப் புரிவதற்கான முறைமைகளையுஞ் செய்தபடியே மரித்துப் போகிறார்கள்.அந்நியத் தேசங்களுக்குக் கூஜாத் தூக்கிய தமிழ் ஆளும் வர்க்கம், தமிழ்பேசும் மொத்த மக்களையும் புலிகளைவைத்து மொட்டையடித்த ஈழத்து அரசியல் வரலாற்றில் இனியும் அதே தோரணத்தில் இன்னொரு துடைப்பம்...


ஈழத்தமிழர்களுக்காக-அவர்களது இன்றைய இழி நிலைக்காக இனிமேற்றாம் ஆங்கிலத்தில் எழுதி,மேற்குலகத்தை-அந்தத் தேசத்து மக்களை அணுகுவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள்.மிகப் பெரும் பாசிசப் புலி இயக்கம்-பெரும் வலைப் பின்னலுடன்கூடிய சர்வ வல்லமையுடைய புலி இயக்கம் தன்னால் சரிவரச் செய்யமுடியாத அரசியலைச் சில தனிநபர்களால் ஈடேற்றிவிட முடியுமெனும் தனிநபர் முனைப்புகள், உலக ஏகாதிபத்தியங்களிடம் எமது பிரச்சனை குறித்துக் குறிப்புணர்த்த முனைகிறார்களாம்.ஏனெனில், இந்த மேற்குலகத்தினது -நமது அவலம் தெரியாத-அவர்களது இருண்ட நிலைக்கு இவர்கள் இயம்புவது ஒளிக்கற்றைகளாம்!

"மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்-தேசியத் தலைவர்",பன்னாடைகளெல்லம் பண்ணிய போராட்டத்தின் இன்றைய நிலைக்கு, இனித்தாம் சரியான செல் நெறி வழங்கப் போகிறார்களாம். உலக அரசியல் அரங்கில் முற்போக்குச் சக்திகளைக் கேவலமாகக் கருதிய புலிப் பாசிஸ்டுக்கள் இன்று, புதிய கதையோடு தமது தப்பை மற்றவர்களைத் துரோகியாக்கி அவர்களது தலையில் கொட்டித் தப்பிக்கின்றனர்.இந்த இலட்சணத்தில் இனிமேலும் மேற்குலக எஜமான்கள் மூலமாகத் தமிழருக்குத் தீர்வு தேடும் மகாப் பெரிய மூளைகள், "தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகனின் வழி காட்டலில் கூஜாத் தூக்கியே தீரவேண்டுமாம்.இதை ஆங்கிலத்தில்,பிரஞ்சில்,டொச்சில்,இன்னுமேன் ஸ்பானிஸ் வரை மொழிமாற்றிச் சொல்லணுமாம்.


அதாவது:"எங்கள் தலைவர் மேதகு வே.பிரபாகரன்,எங்கள் தாகம் தமிழீழம்" என்றாம்!


கேவலம்!


இன்றைய உலகத்தில் தேசியவிடுதலைப் போராட்டங்கள் குறித்துச் சரியான பார்வையற்ற"படிப்பாளிகள்" மேற்குலக ஏகாதிபத்தியங்கள் முதல் ஜெயலலிதாவரை எமது பிரச்சனைக்குத் தீர்வு வேண்டி ,விண்ணப்பிக்கின்றார்கள்.இவர்கள்,கடந்த கால் நூற்றாண்டாக நாம் செய்த போராட்டத்தில் புலிகளது கொடியதும்,ஈனத்தனமுமான அரசியலை வர்க்கக் கண்ணோட்டத்துடன் பார்க்க முடியாது,இன்றைய அழிவு அரசியலுக்காக மேற்குலகத்திடம் ஆங்கிலத்தில் எழுதிக் கெஞ்ச வேண்டுமென்கிறார்கள்!







முதலில், இலங்கையினது பிரச்சனையை அந்த நாட்டு மக்களுக்குச் சொல்லிக்கொடுக்க முனையுங்கள்!


"உங்கள் பிரச்சனை" பாராளுமன்றத்துக்குள் இல்லை-அது,வெளியிலேதாம் இருக்கிறதென்பதைச் சொல்லிக் கொடுங்கள்.அதன்பிறகு அவ் மக்களை நம்பி, அவர்களையே போராட அணித்திரட்டிக் கொள்ளும்போது அங்கே, நாம் எவரைச் சார்ந்தியங்கவேண்டுமென்பதை அவர்களே தீர்மானிப்பர்.


எமது மக்களுக்கு அந்நிய உலகத் தூதர்களுடாகப் புனைந்த "தமிழீழம்", இனி அவசியமல்லை!


அவர்களுக்குத் தெரியும் தமது விலங்கை ஒடிப்பதற்கான தெரிவைச் செய்ய.புலிகள் அதை மிக இலகுவாகச் சொல்லியபடியேதாம் மரணித்துப் போகிறார்கள்-சரணடைகிறார்கள்-சங்கதிகளைச் சிங்கள முகாமிலிருந்து இப்போது சொல்லவும் முனைகிறார்கள்.


ஈழத்தவன் ஏதோ உரிச்ச வெங்காயமென்று எண்ணியபடி ஜெயலலிதா முதல் இணைய அநுதாபிகள்வரை எமது மக்களது பிரச்சனைக்காக ஈழம்-மேற்குலகமெனக் கருத்தாடுகிறார்கள்.இதையேதாம், பாசிசப் புலிகளும் அன்றுமுதல் சொல்லி, இன்று அழிந்து சுடுகாட்டில் ஈழத்தைக் கொண்டுபோய்விட்டுள்ளார்கள்.இதை மீளவும் அதே கதையோடு தொடங்குவதற்கு நீங்கள் எல்லோரும் எதற்கு?



மக்களது பிரச்சனையின் மூல காரணி என்ன?



அதன் வேர் எங்கு வரையும் ஓடுகிறது?



இன்றைய-அன்றைய மேற்குலகமும், தேசிய விடுதலைப் போராட்டங்களை இங்ஙனமே தத்தமது நலனுக்காகக் கையாளுவதில் உலகத்தில் பற்பல இனக் குழுக்களை வேட்டையாடித் தமது வருவாய்கேற்ற உலகைத் தயார்ப்படுத்துகின்றன!இதன் பாத்திரத்தில் இலங்கை அரசால் அழிவுறும் ஈழத் தமிழருக்காக மேற்குலகம் எந்த மயிரையும் புடுங்காது!


இத்தகைய புடுங்கலை அவர்களால் செய்யமுடியாதென்பதுற்கு குர்தீஸ் இன மக்களது விடுதலைப் போராட்டத்தைக் குறித்த பார்வைகள் தெளிவுப்படுத்தும்.இதே மேற்குலகப் பொருளாதார நலன்களுக்காகக் குர்தீஸ் மக்கள், அவர்களது காற்பந்தாகக் கிடந்து உதை வேண்டுவதை எந்த அளவு கோலுக்குள் திணிக்க முடியும்?


அயர்லாந்துப் பிரச்சனையில் இலண்டனது நிலைப்பாடென்ன?இதற்குள் ஒளிந்திருக்கும் நலன்கள் என்ன?



பாஸ்கன் குடியரசுப் போராட்டத்தில் ஸ்பெயினின் நிலை என்ன?



பெல்ஜியத்தின் இனங்களுக்கிடையிலான இனமுரண்பாடு எங்ஙனம் ஐரோப்பிய யூனியனுக்குள் அணுகப்படுகிறது?



இந்தியாவின் காஸ்மீரி மக்களது போராட்டத்தையும்,நாகலாந்து மக்களது போராட்டத்தையும் இந்தியாவும் ,உலக நாடுகளும் எவ் வகைக் கண்ணோட்டத்துடன் அணுகுகின்றன?


திபேத்தை எந்தத் தளத்தில் சீனாவின் முன் நிறுத்துகின்றன?திபேத்துக்காகச் சொல்லமலே ஊதிப்பெருக்கிப் புனைந்த மேற்குலக அரசுகள் ஆயிரக்கணக்காக அழியும் தமிழனைக் கண்டும் காணாதிருப்பதற்கு அவர்களுக்கு இலங்கை அரசினது அடக்குமுறைபற்றி போதிய அறிவு இல்லாத காரணமா இன்றைய எமது நிலைக்குக் காரணம்?



ஒன்றுபட்ட கனடாவுக்குள் மொன்றியால் மாநிலத்தின் கோரிக்கைகளை முன் தள்ளும் வர்க்கத்தின் நோக்கம் என்ன?



சுவிஸ்சர்லாந்துக்குள் கன்டோன் முறை ஆட்சியமைக்குள் கிட்டி விளையாடும் பல்லின மக்களது பொருளாதாரக் கண்ணோட்டம் எத்தகையது?அவர்களது பிரத்தியேகமான அரசியல் கோரிக்கை என்ன?


இவை எல்லாவற்றையும்விட ஈழத்துப் பிரச்சனைக்கு, இத்தகைய தேசங்கள்(மேற்குலக) எந்த நிலையில் இலங்கையை அணுகுகிறார்கள் என்றாவது
கேள்விகளைத் தொடுத்தோமா?




அங்ஙனம் இன்றி,மேற்குலகத்தவர்களால் நாம் அரவணைக்கப்பட்டு,மிக நேர்த்தியாக நடாத்தப்படுவோம் என்ற பாணியில் எழுதுவது அப்பாவி மக்களை ஏமாற்றுவதாகும்.


ஜோர்ச்சியாவுக்குள் 50 பேர்கள் செத்தால் வீதிவீதியாகக் கத்தும் மேற்குலகம் ருவாண்டாவில் மில்லியன் மக்கள் செத்தபோது என்ன செய்தது?சமீபத்தில்"நாசகார"ஆயுதம் வைத்திருந்த சதாமின் ஆட்சிக்கு அடுப்பூதிய ஈராக்கியர்களில் எத்தனைபேரைக் கொன்று குவித்தது?

அவ்கானிஸ்தானிலும்,பாகிஸ்தானிலும் எல்லை கடந்த குண்டுகளைத் தூவும் அமெரிக்காவுக்கும் மேற்குலகத்துக்கும் எந்த அதிகாரம் மக்களைக் கொன்றுகுவிக்க "ஆடர்"கொடுத்தது?



புலிகளது அழிவைப் பார்!
நாங்கள் கற்பதற்குப் பாடம் ஒன்றுள்ளது.
துப்பாக்கிக்குத் தோளைக் கொடையாக்கியதில்
கரங்களுக்குள்ளேயே உலகமெனச் சொன்ன புலிகளும்-நாங்களும்
கற்பதற்குப் பாடம் ஒன்றுள்ளது.


அந்தப்பாடம்
விடுதலையினதும்,
விலங்கினதும்
சரியான அர்த்தத்தை அவர்களுக்கு
இனியாவது மக்களது கண்ணீரிலிருந்து
சொல்லிக் கொடுக்கட்டும்.

ஈழம் பெற்றுத் தருவதாகவுஞ் சில சொல்வார்
எம்மை மீளவும் மொட்டை அடிக்க
அது தமது ஆட்சியிலும் தொடர
போலிக்கு ஈழம் விற்பார்!

நம்பாதே!
நாடுகளுக்குள் விலங்குகள் இருப்பதை அறி!
அதற்கு மொழியுமில்லை
மதமும் இல்லை.
உன்னைக் கட்டிப் போடுபவர்க்கு மட்டுமே
மொழியும்
மதமும்
மண்ணும் அவசியம்.


எங்களது மக்களது இன்றைய அவலத்துக்கான அரசியல் பின்புலம் என்ன?


இந்த அரசியலால் ஈழத்தமிழ் மக்கள் காட்டிக்கொடுக்கப்பட்டத்தன் இறுதி முடிவு புலிகளால் படம்போட்டுச் சொல்லப்படகிறது.வரலாற்றில் புலிகளெனும் எதிர்புரட்சிகர இயக்கம் தனது எஜமானர்களுக்காகத் தமிழ் பேசும் மக்கiளேயே அநாதைகளாக்கிச் சிங்கள அரசிடம் அடிமையாக்கிச் செல்கிறது!அதையும் புலிகளே இலங்கை அரசிடம் சரணடைந்து ஒப்புதல் அளிக்கின்றார்கள்.


தமிழ்பேசும் மக்களினத்தின் விடுதலை-சுயநிர்ணயத்துக்காக,அதி மோசமான அரசியல் வரலாற்றைச் செய்தவர்கள் புலிகள்.


இவ்வியத்தின் தலைமையை ஒரு வடிகட்டிய அடிமுட்டாளிடம் கையளித்த புலிகளுக்குப் பின்னால் ஒளிந்துள்ள தமிழ் ஆளும் வர்க்கம்,இப்போது அதே முட்டாளைக் காக்கப் பல முடிச்சுகளை அவிழ்க்கிறது.


அது தன் தவறுகளைத் "தயா மாஸ்டர்-ஜோர்ச் மாஸ்டர்" என்ற கேவலமான ஜீவன்களுக்கூடாகச் சொல்லுகிற இன்றைய நிலையில்,மீளவும் மேற்குலகத்துக்கு அவர்களது மொழிகளில் ஈழத்தமிழர்களின் அவலத்தைச் சொல்ல வேண்டுமென்பதன் அரசியல் தொடர்ச்சி என்ன?


இதன் வர்க்கத் தளம் எது?


யாரது நலன்சார்ந்து இந்த வாதம் "மனிதாபிமான"வேடம் பூண்டு கருத்துக்களை முன் தள்ளுகிறது?


ஆனாவுக்கு அர்த்தந் தெரியாத அடி முட்டாளைத் தலைவரென்று சொல்லிக் கொடுத்தவர்கள் அழித்த மக்களது தொகை இலட்சம் தாண்டுகிறது!


இதன் தொடர்ச்சியில் இனியொரு துடைப்பம் தலைவரென மேற்குலகத்தால் வழிமொழிய நாம் என்ன மந்தைக்கூட்டமா அல்லது மலினப்பட்ட தமிழ்நாட்டுச் சினிமாக்கூட்டமா?அன்றி அக்கூட்டத்தைத் தலைரெனச் சொல்லி அட்டைக் கத்தியேந்திப் புரட்சி பேசும் கனவுலகக் கஸ்மாலமா?


இவர்கள்தாம் மேற்குலகத்தின் தயவில் எமக்கு விடிவு வருமெனக் கனவு காண முடியும்.


நாம் சொல்கிறோம்: நமது மக்களது விடுதலைக்கு அவர்கள்தாம் உழைக்க வேண்டும்.அதற்குப் புலிகளது அரசியல் செத்துப் புரட்சிகரமான சிந்தனை உதித்தாகவேண்டும்.இச் சிந்தனையூடாக நாம் இலங்கைக்குள் மற்றைய இனங்களோடு கை கோர்த்தாகவேண்டும்.அங்கே,இவர்கள் சொல்லும் மேற்குலகத்தை ஒட்ட வேரறுப்பதற்கு முனையும் புரட்சி,மேற்குலகத்தால் அடிமைப்பட்ட அவர்களது மக்களோடு கைகோர்க்கும்.இதன்வழி தனது பொது எதிரியை மனித சமுதாயம்-உழைப்பவர் கண்டடைவர்!



இதுதாம் இன்றைய அவலத்தைத் தீர்க்கும் சரியான திசைவழி.



ப.வி.ஸ்ரீரங்கன்
29.04.09

Sonntag, April 19, 2009

அவித்த மீன் துடிக்கிறது அம்மியும் கவி பாடுகிறது

நெருக்கடிக்குள்ளாகும் அரசியலும்,அரசியல் பார்வகைகளும்,புலிகள் பினாமிகளும்.

பகுதி:3 -(இப்போதைக்கு இறுதிப் பகுதி இஃது.)



"அவித்த மீன் துடிக்கிறது அம்மியும் கவி பாடுகிறது".



"புலிகளது போராட்டம் மேலும் மேலும் இலங்கையை அரை
இராணுவத்தன்மையிலான அரசினது பிடிக்குள் தள்ளியுள்ளது.இதைத் திட்டமிட்டுப்
புலிகளுக்கூடாக நடாத்தி முடித்தவர்கள் அமெரிக்காவும்,
மேற்குலகங்களுமாகும்.பாகிஸ்தான்போன்றவொரு தேசம் இந்தியாவுக்கு இன்னொரு பக்கத்தில்
உருவாவது அவசியமானவொரு பூகோள அரசியல் வியூகமாகும்.இதை இனங்கண்ட ஆசிய மூலதனமானது
புலிகளை அழித்து உருவாக்க முனையும் இலங்கை சாரம்சத்தில் அதன் இராணுவ வலுவைச்
சிதைத்தே உருவாகிறது.இதை இந்தியப் பிராந்திய நலன் செய்தபடிதாம் புலியழிப்பில் தமது
பாத்திரத்தை இறுக்கி வருகிறது.இங்கே,உருவாக்கப்படும் இலங்கை மேலும்பல உள்
முரண்பாடுகளை நீறுபூத்த நெருப்பாகவே வைத்திருக்கப் போகிறது.இது இலங்கையின்
சுயவளர்ச்சியை இல்லாதாக்கும் அந்நியச் சகதிகளது கனவு."




ப்போது, புலிகளின் தரப்பில் யுத்தமென்பது தவிர்க்க முடியாத காரணியாகக் கருத்துக்கட்டப்படுகிறது.புலிகள் போராடி மடிவது தியாகம் என்றும் அழிவு யுத்தத்துக்கு வரைவிலக்கணங் கற்பிக்கப்படுகிறது!வன்னி மக்களது அழிவுக்குப் புலிகளும் சிங்கள அரசும் காரணமானாலும் புலிகளது போராட்டத்துக்குத் தியாகங்கற்பிக்கும் அரசியலே மிகக் கடைந்தெடுத்தப் புலி அரசியலின் நீட்சியாக மக்களைக் கருவறுக்கிறது.இது,புலம் பெயர்ந்து மேற்குலகில் வாழும் தமிழர்முதல் புரட்சிபேசும் புலிப்பினாமிகள்முதல் "ஒரு தமிழன் இருக்குவரை போராடி மடி"எனும் பாசிச மொழிக்கொப்ப ஆளும்வர்க்கக்களின் அடவாடித்தனமான யுத்தம் மக்களுக்கான விடுதலைக்கான புறவயச் சூழலை ஏற்படுத்தும் காரணத்துக்காகத் தலைவணங்கி வரவேற்கப்படுகிறது.


நாம் தேசிய விடுதலைப்போரைப் புலிகளது குழுவாத-அந்நியச் சக்திகளுக்கான எதிர்புரட்சிப் போரால் புரிந்துகொள்ள வைக்கப்படுகிறோம்.புலிகளது தவறுகள் திட்டமிடப்பட்டு மறைக்கப்படுகிறது.நாம் இலட்சம் மக்களைக் கொன்று குவித்த அரசியல்-அழிவு யுத்தத்தைப் பற்றிய சரியான புரிதலைச் செய்யாதிருக்கப் புலிகளது அழிவைத் தியாகமாக்கும் மிகக்கெடுதியான திரிபுவாதத்தை எதிர்கொள்ளவேண்டியுள்ளது.இன்று,வன்னிக்குள் தினமும் செத்து மடிபவர்களுக்கு புலிகள் சரணடைவது துரோகம் என்று கூறும் புலிகளாலும், இறுதிவரை போராடி மரிப்பது என்ற அதன் அழிவு அரசியலாலும் ஆபத்தான சூழலையே மேலும் அழைத்துவருகிறது.




மக்கள் சாவதற்கு விருப்பமின்றி இருக்கும்போது அவர்களைத் தேசத்தினதும்,தியாகத்தினதும் பெயரால் கட்டாயப்படுதித் தயாராக்கும் புலி-இலங்கை அரச பயங்கரவாதத்துக்கும் கொத்துக்கொத்தாகச் செத்து வருகிறார்கள்.இந்த இரண்டு பயங்கரவாதத்துக்கும் பெயர்"தேசிய விடுதை-ஜனநாகம்-பயங்கரவாதத்துக் எதிரானபோர்"இன்று.



சிங்களப்பாசிச இனவாத அரசோ புலிகளைக் கொல்லுவதாகச் சொல்லித் தமிழ்பேசும் மக்கள் அனைவரையுமே கொல்லுகிறது.வலுகட்டாயமாக வன்னிமக்களைத் தம்மோடு அழைத்துச் சென்ற புலிகள் தற்போது அதே மக்களுக்குள் ஒளிந்திருக்கிறார்கள்.இதனால் தமது தலைமையைக் காப்பதற்கான கேடயமாக மக்கள் பயன்படுத்தப்படும்போது இவர்களது "இறுதிவரையான போராட்டத்தை-போராடி மரி"ப்பதை ஊக்குவிக்கும் புலிச் சிந்தாந்த வல்லுனர்கள் புலிகளிடம் "மக்களை விடுவிக்கும்படியும்,போராட விருப்பமற்றவர்களை விட்டுவிட்டுப் போராட்டத்தோடு இணைந்து போராடுபவர்களோடு இணைந்து, இறுதிவரை சரணடையாது போராடி மரிக்கத் தயாருகும்படி" கோருகிறார்கள்.இது, அன்று தொட்டுக் கட்டாயப் போராளிகளாக்கிய ஒரு இயக்கத்துக்குச் சிறார்களை அவர்களது பெற்றோரின் அனுமதியின்றி இயக்கத்துக்குப் பிடித்துச் சென்றவொரு இயக்கத்துக்கு விடுவிக்கும் கோரிக்கையென்பதை நாம் முதலில் புரிவோமானால் இந்தப் புலிப்பினாமிகளது சித்தாந்தத்துக்குள் புலிகளது அழிவு அரசியலே புரட்சிகரமானதாகவும்,தேசிய விடுதலைக்கானதாகவும் கட்டியமைக்கப்படுவதை மிக இலகுவாக நாம் அறிய முடியும்.



மக்களால் முன்னெடுக்கப்படாத எந்தப் போராட்டமும் மக்களுக்கானதாக இருப்பதற்கில்லை.மக்களினது அடிமைத்தனத்தைத் தொடர்ந்திருத்தி வைத்திருக்கும் இயக்கவாதம், இயக்கத்தின் இருப்பையும் அதன் நலன்களையும் மக்களின் நலனோடு போட்டுக் குழப்பி, மக்களை மயக்கி வருவதற்காகத் "தேசம்-தேசியம்-தமிழ்-ஈழம்"என்று கதையளந்து யுத்தத்துள் மக்களை இருத்திவைப்பதைச் "சரணடையாது போராடி மடிதல்" என்றுரைக்கப் புலிகளது சித்தாந்தம் இப்போது புரட்சிகர வேடங்கலைத்துத் "தியாகம்-துரோகம்" என்கிறது.



பாசிசம் என்பது ஒரு கொடிய நோய்.அது,மனிதப்பரப்பில் எத்தனையோ உயிர்களைத் தேசத்தின் பெயராலூம்,இனத்தின் பெயராலும் அழித்து மனித வரலாற்றையே கொலைகளது வழி கற்பிக்கிறது.நாம்,கிட்லரையோ அல்லது முசேலினியோ அல்லது ஸ்டாலினையோ பாசிசத்துக்கான புரிதலுக்குள் உள்வாங்குவதைவிட இவர்களையும் கடந்து இன்றைக்குச் சிந்திக்க வரலாற்றில் பல நிகழ்கின்றன-நிகழ்ந்தன.



இதுள்,புலிகளது இயக்கவாதம்-போராட்டச் செல்நெறி,அவர்களது இயக்க நலன் மற்றும் தலைமையின் நலனுக்கானதும்,அந்நியச் சேவைக்குமான இந்த "தமிழீழப் போராட்டம்"மிகவும் புரிந்துகொள்ள முடியாதளவுக்கான பாசிசக் குழப்பத்தால் "தியாகம்-துரோகம்"எனும் பாரிய உளவியல் நெருக்கடியை நமக்குள் உருவாக்குகிறது.மக்களது அறிவைக் காயடிப்பதற்குப் புரட்சிகர வேடமிட்டவொரு புலிக் கும்பல் எப்போதுமே தயாராகக் கணினிமுன் கிடந்து தமது தொழிலைச் சுத்தமாக முன்னெடுக்கிறது.இங்கே, மக்களது அழிவைத் தமக்கு முடிந்தவரை எதிர்ப்பதாகக்காட்டி அவர்கள் செத்து மடிவதைத் தியாகமெனவும் புலிகளுக்கூடாகக் கருத்தை வடிவமைக்கிறது.இந்தச் சமூகவிரோத அரசியல் நடாத்தையைக் கேள்வி கேட்பவர்களைச் சிங்கள அரசினது கைக்கூலிகளாகவும் இந்தக் கும்பல் வசைபாடுகிறது!


நாம்,எங்கே போகிறோம்?


நமது மக்களது அழிவில் எதை முன்னிறுத்துகிறோம்?


புரட்சிகரமான அரசியல் வேலைத் திட்டமென்பதற்கான கருத்துப் பகிர்வில் புரட்சிகரப் புறவயச் சூழலையே காயடித்து அழிவு யுத்தத்தைத் தியாகமானதாகவும்-இலட்சியமுடையதாகவும் கருத்துக்கட்டி யாரது-எந்த வர்க்கத்து நலனைக் காக்க முனைகிறோம்?



இது மிக அவசியமாகப் புரியவேண்டிய தருணம்!



எங்கு நோக்கினும் அந்நிய நலன்களை முதன்மைப்படுத்தும் தந்திரங்களோடு கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.மக்கள் தம்மை அறியாத வகையில் அந்நிய நலன்களைத் தமது நலன்களாக உணரும் தருணங்களை வலு கட்டாயமாக மக்கள் மத்தியில் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.இங்கே நமது சிந்தனைகள் தடைப்படுத்தப்பட்டே வருகிறது.ஒவ்வொரு முறையும் நாம் நம்மைக் கண்டுகொள்ளாதிருப்பதற்கான கட்சி-இயக்கம்,கருத்துகள்-சிந்தனைப் போக்குகள் நமக்குள் உருவாக்கப்படுகின்றன.இதை முன்னின்று நடாத்தும் புலிகளது சிந்தாந்தத் தலைமை மேலும் போராடிச் செத்துப் போவதற்குப் போராளிகளையும் மக்களையும் ஊக்கப்படுத்துகிறது.இது கடந்த காலத்தில் புலிகளது இராணுவக்கட்டமைப்பை "தேசிய விடுதலை இராணுவமாகவும்"தமிழீழத்தின் படையணியாகவும் கருத்துக்கட்டியது.இப்போது இப்பிழையான போராட்ட நெறியைத் தியாகமாக்க முனையும் ஒவ்வொரு பொழுதும் புரட்சிக்கான புறவயச் சூழலுக்குப் புலியைத் தியாகத்தின்வழி அழிப்பதாகப் பாசிச உரையாடலைப் புரட்சிகரமாக்குகிறது.



இது,ஆபத்தானது!



இவர்களை எங்ஙனமும் வெற்றிகொளவது அவசியம்.



போலித்தனமாகப் புரட்சி பேசுகின்ற புலிகளது கைக்கூலிகள் நமது மக்களது அழிவை-போராளிகளின் சாவை புரட்சியின்பால் தியாமெனச் சொல்வது மனித நடாத்தைக்குப் புறம்பானது.இங்கே,மனிதாபிமானம் என்பது கிடையவே கிடையதென்றும் இவர்கள் கூறுகிறார்கள்.இதன் உள் அர்த்தம் இதுவரை புலிகளால் காயடிக்கப்பட்ட அனைத்துக் கொலைகளுக்கும் தேசத்தினதும்,விடுதலையினதும் பெயரால் நியாயங் கற்பிப்பதும்,தியாகத்துக்காக-விடுதலைக்காக அவர்கள் செய்வதாகச் சொல்லும் பாசிச யுத்தத்தை நியாயப்படுத்துவதில் மிக நாசுக்காக இந்த மக்கள்விரோதிகள் சித்தாந்த எல்லைக்குள் ஒளிந்தபடி மிக நேர்த்தியாகச் செஞ்சோற்றுக் கடனை ஆற்றுகிறார்கள்.



தமது நடாத்தையைக் கடந்தவொரு மாற்றுக்கருத்தெழுவதற்கானவொரு சூழல் வலுமூர்க்கமாக அழித்தொழிக்கப்படுகிறது.



இதற்காகத் தேசத்தினது பெயரால்-தேசியத்தின் பெயரால் நியாயப்படுத்தப்பட்டபடி"புலிகளைச் சரணடையச் சொல்பவர்களை,அரசினது கைக்கூலி"என்றும் கருத்துக் கட்டுகிறது.இத்தகைய கருத்துக்களின் பின்னே மறைந்திருக்கும் அதிகார மையம் பாசிசத்தால் தன்னை இருத்திக் கட்டிக்காத்து வருகிறது.இங்கே,மக்களின் துயரங்கள் துன்பங்கள் யாவும் சிங்களப் பாசிச அரசுக்கும் புலிகளுக்கும் மற்றும் குழுக்களுக்கும் அரசியல் செய்வதற்கானவொரு வாய்ப்பாகப் பயன்படுத்தப்பட்டுவரும் பரிதாபம் நிலவுகிறது.




அப்பாவி மக்கள் உயிர்வாழ்வதற்காகத் தமது எதிர்கால விடிவை எதிர்பார்த்துக் கிடக்கிறார்கள்.அவர்களது வாழும் விருப்பத்தை அழித்துத் தத்தமது எஜமான விசுவாசத்துக்காகக் கூஜா தூக்கும் ஒருகூட்டம் நாளாந்தம் தத்துவ விளக்கக்கட்டுரை போடுகிறது.இதையும் மக்களுக்குச் சார்பான மொழிகளுடாகப் புனைகிறது.இத்தகைய கொடியவொரு சூழலில் மக்களைப் பலியாக்கும் புலிகளதும், இலங்கை அரசினதும் பரப்புரைப் பீரங்கிகள் மக்களது நலனையே திரித்துத் தமது தரப்பை நியாயப்படுத்துகிறார்கள்.இவர்களது நோக்கம் எப்படியும் நிறைவேறுவதற்குச் சாதாரண மனிதர்களது யுத்த எதிர்ப்பு உணர்வை ஏதோவொரு பக்கத்துக்குச் சார்பாக்கி இக் கொடியவர்கள் அரசியல் செய்கிறார்கள்.



அன்பு வாசகர்களே,பரந்துபட்ட புரட்சியின் சமூக அடிப்படைகள் எதுவுமற்ற இன்றைய சூழலில்,ஒப்பீட்டளவில் சமாதானத்துக்கான(சரணடைவு அல்லது இருதரப்பும் யுத்த நிறுத்தஞ் செய்வது) முன்னெடுப்பே இலங்கையில் பாட்டாளிய வர்க்கத்துக்கும், அதன் முன்னணிப்பாத்திரத்துக்கும்,மக்கள் ஜனநாயக(புதிய ஜனநாயக)வடிவத்தினது பொது அம்சத்தை நிர்ணயிக்கிறது.இந்த உண்மையைத் திரிக்கும் ஓடுகாலிகள் இறுதிவரைப் போராடி மடி என்பது புலிகளது தலைமையைக் காப்பதற்கானதாக மாறுகிறது.மக்களதும்,போராளிகளதும் தியாக உணர்வைக் கொச்சைப்படுத்தி மனித இருத்தலையே கீழாக மதிக்கும் உளப்பாங்கைப் புரட்சியின் பெயரால்-பாட்டாளிகளின் பெயரால் சரியானதென வாதிட்டுப் புலிகளைத் தியாகிகளாக்கி, முழு மக்களையும் வேட்டையாட முனைகிறார்கள்.



இதைக் குறித்து நிறைய விவாதித்தாகவேண்டும்.



தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டப் பாத்திரத்தில் புலிகளது போராட்டச் செல்நெறி தவறானதென்பதும்,அது அந்நியச் சக்திகளால் வழிநடாத்தப்பட்டவொரு எதிர்புரட்சிகர அணியென்பதும் மறைக்கப்பட்டு, மக்களுக்காகப் போராடி மறையும் ஒரு இலட்சிய அமைப்பாக வரலாற்றில் பதியமிடப் புலிப்பினாமிகள் தமது வலுவுள்ளவரை சித்தாந்தைத் திரிக்கிறார்கள்.



இன்றைய சூழலில் யுத்தமற்ற இலங்கையும் அதன் பாராளுமன்ற போலி ஜனநாயச் சூழலும் அவசியமானதாகவே இருக்கிறது.இந்தப் பூர்ச்சுவா ஜனநாயகத்தின்மீதுதாம் நாம் அடுத்த கட்டத்தை நாடும் புதியஜனநாயகப் புரட்சிக்கான மக்கள் முன்னணி எனும் ஸ்தாபனம் கட்டியமைக்க முடியும்.இது,இலங்கைத் தொழிலாளிவர்கத்தையும்(அனைத்து இனங்களுக்குள்ளும் உருவாகியுள்ள பாட்டாளிகள்),விவசாயிகள் மற்றும் ஏகாதிபத்தியத்தாலும் தரகு முதலாளிகளாலும் பழிவாங்கப்பட்ட நகரக் குட்டிமுதலாளிய வர்க்கம்,இதுசார்ந்து சிந்திக்கும் அறிவுத்துறையினரின் கூட்டோடே சாத்தியமாவதாகும்.இந்த மக்கள் முன்னணியின்றி இலங்கையில் ஒரு துரும்பைக்கூடப் புரட்சியின் பெயரால் ஆற்றமுடியாது.இங்கே, இலங்கைவாழ் அனைத்து இனங்களும் பரஸ்பரம் இன ஐக்கியத்தைக் கடைப்பிடிக்குமொரு குறைந்தபட்ச ஜனநாயகச் சூழல் அவசியமாகிறது.இது,இலங்கையில் இராணுவ முனைப்புடைய அரசுகளாலும்,இயக்ககங்களாலும் அழிக்கப்பட்டு, இலங்கை அரை இராணுவ ஆட்சியாக மாற்றப்பட்டபின் புரட்சிகர முயற்சிக்குப் பாதகமான சூழலே இப்போது நிலவுகிறது.



புலிகளது போராட்டம் மேலும் மேலும் இலங்கையை அரை இராணுவத்தன்மையிலான அரசினது பிடிக்குள் தள்ளியுள்ளது.இதைத் திட்டமிட்டுப் புலிகளுக்கூடாக நடாத்தி முடித்தவர்கள் அமெரிக்காவும் மேற்குலகங்களுமாகும்.பாகிஸ்தான்போன்றவொரு தேசம் இந்தியாவுக்கு இன்னொரு பக்கத்தில் உருவாவது அவசியமானவொரு பூகோள அரசியல் வியூகமாகும்.இதை இனங்கண்ட ஆசிய மூலதனமானது புலிகளை அழித்து உருவாக்க முனையும் இலங்கை சாரம்சத்தில் அதன் இராணுவ வலுவைச் சிதைத்தே உருவாகிறது.இதை இந்தியப் பிராந்திய நலன் செய்தபடிதாம் புலியழிப்பில் தமது பாத்திரத்தை இறுக்கி வருகிறது.இங்கே,உருவாக்கப்படும் இலங்கை மேலும்பல உள் முரண்பாடுகளை நீறுபூத்த நெருப்பாகவே வைத்திருக்கப் போகிறது.இது இலங்கையின் சுயவளர்ச்சியை இல்லாதாக்கும் அந்நியச் சகதிகளது கனவு.குறிப்பாக அமெரிக்கா.







தமிழ்பேசும் மக்களது பாரம்பரிய நிலப்பகுதியைப் பிளந்த அமெரிக்க நலன் இலங்கையின் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டை ஒருபோதும் தீர்க்க முனையாது.எனவே,யுத்தம் நிறுத்தப்பட்டு அல்லது புலிகள் சரணடைந்து இலங்கையின் இனங்களுக்கிடையிலான பரஸ்பர ஒற்றுமைக்கான சூழல் உருவாக்கப்பட்டாக வேண்டும்.இதற்காக இன்றைய புலிகளது அழிவுப் போராட்ட ஜந்திரம் தோற்கடிக்கப்பட்டு (இங்கே,கவனியுங்கள்:நான் சொல்வது புலிகளது யுத்த ஜந்திரமாகும்,அவர்களைப் பூண்டோடு கொல்வதல்ல.இது அவர்கள் மீளவும் இலங்கை அரசியலில் தமது தரப்பு அரசியலை ஜனநாயவழிக்குள் முன்னெடுத்து இயங்க அனுமதிப்பதுதாம்.பூர்ச்சுவா ஜனநாயகத்தில் தமது ஆயுதங்களை இழக்கும் புலி, மக்களிடம் அம்பலமாக இதுவே சரியானதொருவழி,அவ்வியக்கம் தவறானவழியில் தமிழீழப் போலிக்கோசத்தால் இலட்சம் மக்களது அழிவுக்குக் காரணமானது.இவ்வியக்கம் அதற்குப் பொறுப்பேற்று வரலாற்றில் தண்டிக்கப்பட மக்களது வலுவுக்குள் வாழ்ந்தாக வேண்டும்,அரசிலை முன்னெடுத்தாகவேண்டும்.இங்கே,இன்னுமொரு புலிகளது அரசியல் நடாத்தையையும் கவனியுங்கள்.அதாவது,புலியைப் பிளந்து கருணா "ஜனநாயக"ச் சூழலுக்குள் இழுத்துவரப்பட்டு இலங்கைச் சட்டவாக்கத்துள் அரசியல் செய்யும்போது,கருணா தனது கடந்தகால அனைத்து நடவடிக்கைகளையும் பிரபாவினது தலையில் சுமத்துவதும்,அதைக் கண்ட புலிப்பினாமிகள் பிரபாகரனை ஒரு அப்பாவியாகக் கட்டுரை புனைந்ததையும்.இங்கே தத்தமது கொலை அழிவு யுத்தத்தைப் பொறுப்பெடுக்காததும்,தண்டைனுக்குள்ளிருந்து தப்பிக்கொள்ளவும் இவர்கள் மிக அவதானமாக இருக்கிறார்கள்.இதன் உச்சக்கட்டம் புலியினது அழிவுக்குத் தியாகங் கற்பிக்கிறது.தூ...என்னவொரு பிழைப்பு.இதைவிடப் பிச்சையெடுத்து வாழுங்கோடா!), அந்நியச் சக்திகளது நலன்கள் இலங்கையில் வீரியமற்றதாக்கப்படவேண்டும்.அங்ஙனம் உருவாகும் இலங்கையில் தொழிலாள வர்க்கத்துக்குப் பிரதான எதிரியாக இலங்கை அரசே முன் நிற்கிறது.இது,புலிகளையும்,இலங்கை அரசையும் எதிர்கொண்ட சூழல் இல்லாதாக்கப்பட்டு,இலங்கை அரசையும்- ஏகாதிபத்தியங்களை வலுக்குன்றிய குழுக்களுக்குள் மற்றும் கட்சிகளுக்கூடாக எதிர்கொள்வதாகவே இருக்கும்.இப்போது இலங்கை வாழ் தொழிலாள வர்க்கம் மிகப் பெரும் இரு எதிரிகளைப் பிரதானமாக எதிர்கொள்கிறார்கள்.இவை இரண்டுமே போட்டி போட்டு அந்நிய நலன்களை இலங்கைக்குள் திணிக்கும்போது இலங்கையில் புரட்சி காட்டிக்கொடுக்கப்பட்டு முற்போக்குதளம் நிர்மூலமாக்கப்படுகிறது.



இந்த உண்மை புரட்சியினது புறவயச் சூழலைச் சரியாக மதிப்பிடும் அரசியல் தத்துவார்த்தத் தளத்திலிருந்து உருவாகிறது.குறுந்தேசிய வாதப் பரப்புரை செய்யும் புலிப் பினாமிகள் புரட்சியைக்காட்டிக் கொடுக்கும் புலிக்கு வக்காலத்து வேண்டுவது, அவர்களது தொழிலாகப் புலிகளால் நிறுவப்பட்டது.இது,கக்கும் புரட்சிகரத் தத்துவமென்பது திரிவுவாதமாகும்.இதைத்தாண்டி நாம் இலங்கையில் குறைந்தபட்ச ஜனநாயகச் சூழலின் அவசியத்துக்காகவும்,மேற்சொன்னபடி அரசியலை முன்னெடுக்கவும் புலிகள் தமது அந்நியச் சேவைப் பாத்திரத்தைவிட்டு ஒதுங்குவதற்குச் சரணடைவதால் மக்களைக் காப்பதும்,போராளிகளைக்காப்பதும் கூடவே இலங்கைப் பாட்டாளியவர்க்கத்தின் எதிரியைத் தகுந்த முறையில் எதிர்கொள்வதற்குமான புரட்சியின் புறவயச் சூழலை முன் தள்ளவே இதை ஒரு அரசியலாக முன்வைக்கிறோம்.எனவே,புலிகள் தமது பாசிசக் கட்டமைபைக் குலைத்துச் சரணடைவதும்; அந்நியச் சேவைக்காகக் காரயமாற்றும் அவர்களது வெளியுலகப் பிரமுகர்கள் மேலும் தமது குருதிக்கறைபடிந்த கரத்தைத் தமிழ்பேசும் மக்கள்மீது திணிப்பதைத் தவிர்ப்பதும் அவசியமானவொரு பணியாகிறது.



யுத்தத்தால் நாசமாக்கப்பட்ட தமிழ்பேசும் மக்களும் மற்றைய இனங்களும் தமது ஐக்கியத்னூடாகப் பொது எதிரியானதும் அந்நியச் சக்திகளுக்கு உடந்தையானதுமான இலங்கை ஆளும் வர்க்கத்தை எதிர்கொள்ள, இலங்கையின் அனைத்து இனமக்களும் ஒன்றிணைந்து போராடும் சூழலின்றி இலங்கையில் புரட்சிகரப் போராட்டமும் இலங்களுக்கிடையிலான சுயநிர்ணய உரிமையும் நிலைக்கமுடியாது.


ப.வி.ஸ்ரீரங்கன்
19.04.09

Samstag, April 18, 2009

புலிகள் மீளவும் புத்துயிர்ப்புப் பெறுவார்களா?

புலிகள்
மீளவும் புத்துயிர்ப்புப் பெறுவார்களா?


கிடையாது!

ஏனெனில்,
துரோகஞ் செய்யாது
புலிகள் போராடி மடிந்தால்
மீளவும் புலிகள் புத்துயிர் பெறமுடியாது...


எங்கே?


வன்னிக்குள்ளதான்!


அப்ப கிழக்கில கருணா?...


சீச்சீ,
அது,புலியல்ல
தேசியப் பூர்ச்சுவாதம்
எதிர்ப் புரட்சிக்காரன்.


ஈழத்தை
விட்டு எத்தியோப்பியாவில்தான்
கிழக்கு மாகாணமே இருக்கா?


ஓம்!


புலிகளென்றால் பிரபா
வன்னியைச் சுற்றித்தாம்
துரோகக் குழு இனி உருவாகவேண்டும்
அங்ஙனம் வந்தால் நீடிப்பார்கள்
கூலிக் குழுவாக...


இப்போது
தேசியவிடுதலை இராணுவம்
தேசியச் சக்தி
அந்நியச் சேவை அறியாத
ஏகாதிபத்திய எதிர்ப்புப் படை
அதுதான்
தேசியச் சக்தி
வலதுசாரத்தில்...







தமிழர் பூமியை
பிரதேசமாகப் பிளந்தவர்கள்
கிழக்கைப் பிளந்தபோது
புலியையும் பிளந்தனரா?


கருணா துரோகியாக நீடிப்பது புலி அல்ல
யாழ்ப்பாணம் பறிபோய்
அதற்கும் டக்ளஸ் தலைமைகொண்டாலென்ன?
அவரும் ஒட்டுக் குழு


தலைவரென்பது பிரபா
புலிகள் என்பது பிரபா
பிரபா என்பதும் புலிகள் என்பதுமே
வன்னிகொள் தமிழர்-அதுவே தமிழ்ச் சமுதாயம்!

அங்கே,
புலிகள் பலியானால்
இலட்சியங்கொள் தியாகம்
அறிக,
புலிகள் அழிந்திடுவர்
இஃது துரோகமிழைக்காத இலட்சியம்!


ஏலவே
புலிகள் கற்பித்த"கருணாத் துரோகம்"
துரோகமெனச் சொல்லுதலும்
துரத்தி அழிக்கப்படும் தலைவருக்குப்
பட்டுடுத்தப் போதுமானதுதாம்


தலைவரை அழிப்பது
நிச்சியமெனும்போது
தியாகத்தைச் சொல்பவர்கள்
வன்னிக்குள் மட்டுமே புலிகளைக்காண
கிழக்கிலும் முன்னம் இருந்தனர்
கருணாவழி நீடிக்கவில்லை-கொல்லப்பட்டனர்?


எனினும்,
எஞ்சியவர்கள் ஓட்டுக் குழுக்கள்
வன்னிக்குள் ஒரு கருணா முளைத்தால்
புலிகள் இனிமேல்தாம் துரோகியாவார்கள்


ஏனெனில்,
தலைவரே இலட்சியப் புருஷர்!
இதுவரை புலிகளாகப் போரிடுபவர்
தமிழ்த் தேசம் வன்னிக்குள்ளதான்
வர்க்கச் சமுதாயமும் அதற்குள்ளதாம்
தத்துவஞ் சொல்லுகிறோம் தத்துவம்...


ஆதலால்,
வன்னிக்குள்ளிருந்து
வருபவர் மட்டுந்தாம் துரோகமிழைப்பார் எதிரியுடன்கூடி
கருணா-பிள்ளையானா?
ஓ,அவர்கள் மட்டக்களப்பார் ஒட்டுக் குழுவல்லோ அது!
கிழக்கிலும் தமிழர்கள் வாழ்கிறார்களா?


அங்கே,
அரசியல் வெளிகள் இருப்பதில்லை
அதனால் புலிகள்
நீடிப்பதென்பது தத்துவத்துக்குப் பொருந்தாது


புரட்சியின் அடிப்படை விதிகொண்ட
இலட்சியப் புருஷர் வன்னிக்குள்
அதை மறுத்த கிழக்குப் புலிகள் ஒட்டுக் குழுக்கள்
புரட்சி நிலவரம்
வன்னிக்குள் தியாகங்கள் தோன்ற உருவாகிறது
புரட்சியின் புறவய நியதி இஃது!


வன்னிக்குள்
புலிபோராடிச் சாவதால்
வடக்குத் தமிழரை எதிரி வென்றிட முடியுமா?
இல்லையில்லை!
வடக்குப் புலி அரசிடம் சேர்ந்து
துரோகம் இழைக்காததால்
அது தன் வர்க்கத்துக் இன்னும் துரோகஞ் செய்யவில்லை
அதனது வர்க்கம் வன்னிக்குள் மட்டுந்தான்...


தன் வர்க்க சாரத்தில்
குட்டிப் பூர்ச்சுவா வர்க்கத்தின்
எதிர்ப்புரட்சிக்காரன் கருணா ஆதலால்
ஒட்டுக்கு குழு-அது புலியல்ல எலி.


எனவே,
புலிகள்தம் பாசிச வழிகளில்
நின்று
வன்னிக்குள் இருக்கும் வலது சாரிய நிலைக்குத்
துரோகமிழைக்காது போராடி மரணிக்குங்கால்
தமிழர்தம்(வன்னித்தமிழர்)பிரதான எதிரியான அரசு
தமிழ் மக்களிடம் தோற்றுவிடும்!

அப்பாடா,
அருமை.

ப.வி.ஸ்ரீரங்கன்
17.04.09

Montag, April 06, 2009

இதையும் மறந்திடாதே!

வன்னிக் காண்டம்.

சிறு பொறிதனினும் விட்டுவிடாதே
உன்னைச் சுற்றியே உலகம் உருண்டு
உப்புக்காக அமிழ்ந்து போகிறது
ஊசி முனைக்குத் துளைபோட்டதுகூட


இன்றைய மாற்று முனைதாம்
எவரறிவார்
இதற்கென் பெயர் கொல்?
அர்த்தங்கொள் கணமென?


நாட் கணக்கெனவும்
மாதக் கணக்கெனவும்
கண்ணீரைச் சிந்தவொரு கூட்டம் வன்னிக்குள் அன்று
இன்றோ குருதியால் நிலம் மெழுகும் பொழுதைத்தானும்
மறுத்தொதுக்குங் கண்ணீர் மறுத்தொதுக்கத்
தேசம் ஒரு பொருட்டாய் உனக்கு!


என்ன மனிதன் நீ?
புலிக்கொரு காவடி
புறத்திலொரு புருடா
இதற்குள் சுண்ணாம்பு தடவுவதில்
நாவைச் சிதறடிக்கிறாய்!



நீரற்ற மட் குடத்தை
முன்னிருந்து பின்னுக்கும்
பின்னிருந்து முன்னுக்கும் தள்ளு புரட்சியெனவும்
சுயநிர்ணயமெனவும் கூடவே தமிழீத்துக்காகத்
தேசபக்தர்களுக்குச் சமாதிகட்டி!


மரக் கிளையில்
தமிழீழத்தின் தேசியக் கொடியில் ஏணைகட்டியபடி
குற்றுயிராக் கிடக்கும் மழலையைப்
பறிகொடு ஈழத்தின் பெயரால்
தலைவர்களது கொம்பு சீவிக்
கடைவிரிப்பவன் காசுக்காகச் சுத்தும்போது
உனது மழலை பிணமென வீழ்கிறதா?


பயப்படாதே!
உண்மை எந்த ரூபத்திலும் வரும்
அது,
உன் மழலையைப்
புசித்து உன்னிடம் வருகிறது



மக்கள் நலன்
வழிநெடுக மத்தாப்பு வீசுகிறதாம்
எஞ்சிய மகனைத் தயார் படுத்து
இன்னொரு சுயநிர்ணயப் போருக்கு!


சாவுதானே,
அது,எனது பிள்ளைகளை நாடாதவரை
உனது பிள்ளை சாவது
தமிழர்களின் அடிமைத் தளையறுக்கவே
முடிந்தால்,
முலைகொடுத்தவளையும் சேர்த்தே அனுப்பு
இறுதிக்கட்ட யுத்தத்தில்
ஒத்த தமிழன் செத்துத் தேசம் காக்க

இனியொரு பொழுதில்,
கச்சை கழட்டுவதற்கு முன்னமே
கண்ணீர் குறித்து அறிந்துவிடு!


சாவு வியாபாரிகள் பல ரூபத்தில்
அடுத்த கருவைக் கற்பத்திலேயே கருவறுக்க
ஐரோப்பியத் தெருவில் புலிகொடிக்கு முத்தமிடுவதில்
உன்னைக் குறித்துக் கிஞ்சித்தும்
கவலைகொள்ளாக் கண்ணீரோடு...


தேசியத் தலைவருக்குப் பூசை எடுத்தபடி
தழிழரின் தாகம் தமிழீழமெனக் கொக்கரிக்க ஒரு கூட்டம்
வணங்கா மண் பெயரில்
கப்பலிட்டுச் சாவுக்கென சங்கூதும்!
இதையும் மறந்திடாதே!


ப.வி.ஸ்ரீரங்கன்
05.04.09

யுத்தம்

"உலகத்தின்-அமெரிக்காவின் "பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்"
என்ற கோசம், இலங்கையில் ஒரு இனத்தைப் பழிவாங்கவும்,யுத்தத்தின் மூலம் நாதிகளற்று
அடிமைகளாக்கிக்கொள்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது.இஃது, அவ்வினத்தின்
அடிமைத்தனத்துக்குப் பின் இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்களைச் சிங்களப்
பெருந்தேசிய வாதத்துக்குள் திணித்து இன-அடையாள அழிப்பில் முடிவடைவதில்
முடியும்."



லங்கை அரசு சொல்லும் யுத்தம்சார் சித்தாந்தம்-அரசியல்,"அமைதிக்கானது,சமாதானத்துக்கானது,ஜனநாயகத்துக்கானது"என்பது உண்மையானதாக இருக்க முடியுமா?


இக்கேள்விக்குப் பதிலளிக்கவேண்டியது நம் ஒவ்வொருவரினதும் கடமை!


புலிகளது தவறான போராட்டத்தின் முடிவில் தத்தளிக்கும் தமிழ்பேசும் மக்களை அடியோடு மொட்டையடிக்கும் அரசியலைப் பலர் முன்னெடுக்கும்போது-அந்தப் பலருள்,இந்தியாவும் ஏகாதிபத்திய உலகமும் மட்டுமல்ல அவைகளைத் தாங்கிப்பிடிக்கும் நாமுமே காரணமாக இருக்கின்றோம்.அந்நியர்களுக்கு அடியாட்படையாக மாறிய புலிகள், எங்ஙனம் தமிழ்பேசும் மக்களை அழிவு யுத்தத்துக்குள் திணித்தாகளோ-அதையே நியாயமாக்க முனையும் இன்றைய அரசியல்,சித்தாந்தங்களை வெற்றிகொள்வதும் தமிழ்பேசும் மக்களது விடுதலைக்கு முன்நிபந்தனையான அவசியமே.இந்நோக்கில் சிங்கள அரசினது இன்றைய கோசத்தினூடாக(பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் மற்றும்,"நாம் இலங்கையர்" என்ற தேசிய இனத்தைக் கடந்து வேறொரு தேசிய இனம் "இலங்கையில்" இல்லையெனும் மறைமுகச் சிந்தாந்தம்) சிலவற்றைப் பார்ப்போம்.



சமீபத்தில் இலங்கையானது மேற்குலகத்தினவர்கள்தம் நலனுக்கான மூலவளக்கொள்ளை யுத்தத்துக்கான முகமூடி அரசியற் கருவூகங்களான "அமைதி,சமாதானம், ஜனநாயகம்" எனும் உளவியல் கருத்தாக்கங்களது புனைவுகளோடு தமிழர்கள்மீது யுத்தஞ் செய்வதைப் புலிகள்மீதான யுத்தமாகக் காட்டி,அதை பயங்கரவாதத்துக்கு எதிரானதாகச் சொல்கிறது.இலங்கை அதிபர் மகிந்தாவினது உரைகளில் இத்தகைய கருத்துக்கள் மேலும் போரைத் திறம்பட முன்னெடுப்பதற்காக எப்போதும் காணக்கூடியதாக இருக்கிறது.



இலங்கையில் பொதுவாகவே ஜனநாயகத்துக்கான அரசில் சூழலோ அன்றி அத்தகைய அரசியலை முன் தள்ளும் பொருளாதார உற்பத்திச் சூழலோ இல்லை.எனினும்,இந்தக் குறைவிருத்திச் சமுதாயமான இலங்கைச் சமுதாயத்தில்,நிலவுகின்ற இராணுவ மையவாத அரசியல் போக்குகள் மற்றும், நிலவும் புத்தமதவாதத் தத்துவப் பேரவா,சிங்களப் பொற்காலத்தை மீளக்கட்டுவதில் இனவழிப்பை பயங்கரவாதத்துக்கு எதிரான செயற்பாடாகக் காட்டப்படுகிறது.உலகத்தினது அதே பாணியிலான கயமைப் போரை, இலங்கையும் முன்னெடுப்பதற்கு மிக அவசியமான உலகச் சூழல் என்றுமே நிலவிவருகிறது.இத்தகைய சூழலை பெரும்பாலும் உலகத்தின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் பொதுமைப்படுத்தும் மேற்குலகமும் அமெரிக்காவும், நேட்டோ எனும் ஏகாதிபத்திய இராணுவவாதக்கூட்டுத்தலைமையோடு அகிலமெங்கும் மறைமுகமான உலகயுத்தத்தை நடாத்திவருகிறது.அமெரிக்காவின் புதிய அதிபரும் மேற்குலக நாடுகளது தலைவர்களும் அவ்கானிஸ்த்தானுக்கு மேலும் படைகளை அனுப்புவது குறித்து உடன்படுகிறபோது அங்கே, வலிந்துருவாக்கப்படும் யுத்தச் சூழல் மேலும் உலகத்தின் அனைத்துக் குடிசார் உரிமைகளையும் தமது காலடியில் போட்டு நசுக்குவதற்கானவொரு அரசியல் ஆதிக்கத்தை அவர்களுக்கு வழங்குகிறது(இந்த உலகத்திடம்தாம் தமிழர்கள் கையேந்திப் பிச்சை எடுக்கப் புலிகளது போராட்டம் வழிவகுத்துள்ளது இன்று).



இதே பாணியிலான சிங்கள அரசியல்-இராணுவ வியூகத்துக்கு இலங்கையில் தமிழ்பேசும் மக்களது பாரம்பரிய நிலப்பரப்பு ஒரு அவ்கானிஸ்த்தானாகவோ அன்றி ஈராக்காகவோ இருக்கிறது.இலங்கை அரசுக்கு தார்மீகரீதியாக எவருமே எதிர்ப்புக்கூற முடியாதளவுக்கு இந்த யுத்த பூமி-அதாவது,அவ்கானிஸ்த்தான் அதனது உள் நாட்டுக்குள்ளேயும்,அதன் அரச ஆதிக்கத்துக்குள்ளும் இருப்பதால் இலங்கையது எந்த வகை இராணுவ அழிப்பு யுத்தத்தையும் உலகம் கைகட்டியே பார்க்க முடியும்.இது,இலங்கையின் மிக யதார்த்தமானவொரு அரசியல் வெற்றியை இலங்கைக்கு வழங்கிய சந்தர்ப்பம் 11-செம்டம்பருக்குரிய அரசியல் தெரிவோடு உருவாகிறது.இங்கே,இலங்கை தன்னை இனவாத அரசு என்ற தளத்திலிருந்து விடுவித்தபடி,பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தைத் திசைவழியாகத் தெரிவதற்கும் இந்த உலகங்களது பொருளாதார நோகத்தின் யுத்த வியூகமே அச்சொட்டான உதாரணமாக இருக்கிறது.சிறுபான்மை இனங்களது தார்மீக உரிமைகளுக்கான எந்தவகை அரசியல் முன்னெடுப்பையும் ஆளும் சிங்களப் பெருந்தேசியவாத அரசு மிகச் சுலபமாகப் பயங்கரவாதமாகச் சித்தரிக்க முடிகிறது.இது,வருங்காலத்தில் இலங்கையின் இனங்களுக்கிடையிலான பரஸ்பரவுறுவுகளைப் குழிதோண்டிப் புதைத்துவிட்டு,பெரும்பான்மைச் சிங்களவினத்தோடு கலந்து வாழும் இலங்கைத் தேசியத்தைப் பேசமுனையும்.இது,மேற்குலங்கங்களில் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த-இன்றும் வாழும் சிறுபான்மை இனங்களுக்கு நேர்ந்த அதே அரசியல் பலவீனத்தை-தற்கொலையை இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்களுக்கு மேலும் அழைத்துவரும்.



இன்று,மேற்கு நாடுகளின் பொருளாதார இலக்குக்கும்,நீண்டகால அரசியல் ஸ்த்திரத்துக்கும் இத்தகைய தேசங்களுக்கு இடம்பெயர்ந்து வந்த பல் தேசிய இன-மத மக்களுக்கும் ஒரே தெரிவான கலத்தல்-கலந்து வாழுதல் எனும் இந்த வாதம் அவர்களது எதிர்கால இருப்பை அழிப்பதற்கும் பாரம்பரிய பண்பாட்டு வேர்களை நசுக்குவதற்காகவுமான அரசியல் கோரிக்கையே(இதை, ஜேர்மனிக்கு வந்த துருக்கிய இனம் சரியான தெரிவோடு உடைப்பதில் இலக்காக இருக்கிறது இங்கு).இதை,இலங்கை அரசு இன்றைய பொருளாதாரப் போக்குகளுக்கமைய புதிய உத்வேகத்தோடு"நாம் இலங்கையர்"எனும் கோசத்தின் வாயிலாக "கலந்து வாழுதல்" எனும் கருத்தாக்கம் சிங்களப் பொற்காலத்தின் மறுவார்ப்பாக மேலெழவுள்ளது.இலங்கையின் இன்றைய அரசியல் கோசத்தை மிகக் கவனமாக விளங்க முற்படாத சிறுபான்மை இனங்களது அரசியலானது மேலும் இராணுவவாதக் கண்ணோட்டத்தோடு நகர்வதில் எந்த நியாயவாதமும் இல்லை.இலங்கையினது புரட்சியை வற்புறுத்தி சிறுபான்மையினங்களின் சுயநிர்ணயவுரிமைகளை அங்கீகரிக்காத போக்குகள் அல்லது அடக்கிவாசித்தல் சாரம்சத்தில் இலங்கையினது இன்றைய வியூகத்துக்கு பலமானதாகவே இருக்கும்.இன்று,இலங்கையில் அமைதி,சமாதானம்,ஜனநாயகம் அவசியமெனினும் இவைகளை முகமூடியாக்கித் தமது அரசியல் பிழைப்புக்காக கோசமிடும் தமிழ் அரசியல் வாதிகள்-குறிப்பாக,டக்ளஸ்,புலித்தளபதி கருணா,பிள்ளையான்,மற்றும் ஆனந்தசங்கரி போன்ற மக்கள் விரோத அரசியலாளர்கள் இலங்கை அரசினது அடுத்த கட்ட-மேற்கூறப்பட்ட-நகர்வுக்கு அண்மையாகவே இருக்கின்றார்கள்.


இலங்கையில் ஜனநாயகம்,அமைதி,சமாதானம் அவசியம்.ஆனால்,இனங்களுக்கிடையிலான அவர்களது சுய கௌரவத்துக்கான உரிமைகளை இவற்றுக்காக கழுவேற்றி எவரும்அமைதி,சமாதானம்,ஜனநாயகம் மீள் உருவாக்கஞ் செய்துவிட முடியாது.போலித்தனமான அரசியல் கோசங்கள் இலங்கையில் இனங்களது சுயநிர்ணயவுரிமைக்கு ஆப்பு வைத்துப் பிழைப்புவாத அரசியலாக மாறுவது அந்தந்தவினங்களது இருப்பையே அழிப்பதில் முடியும்.இதை வெல்வதற்காகவேனும் தமிழ்பேசும் மக்களது உண்மையான அரசியல் தெரிவு தமது சுயநிர்ணயத்துக்கான அரசியலைவிடாப்பிடியாக நடாத்துவதே சரியானது.இதுவே,இலங்கையில் மற்றைய இனங்களது சுயநிர்ணயவுரிமையையும் பெற்றுக் கொடுப்பதற்கானவொரு முன் நிபந்தனையாக இருக்கிறது.இதைப் புலிகளதுவழி போராட்டத்தால் பறிகொடுத்த நிலையில் மீளவும், இந்தச் சுயநிர்ணயத்துக்கான கோரிக்கை,அரசியல் போராட்டமாக விரிவுறவேண்டியுள்ளது.இதை, மறுத்தொதுக்கும் தமிழ் அரசியல்-ஜனநாயகக் குழுக்கள் மெல்ல இனங்களுக்கிடையிலான பரஸ்பரவுரிமைகளை மறுத்து, "வல்லவன் வைத்ததே சட்டமெனும்" போக்கில் இலங்கையில் சிங்களக் குடிகளே பூர்வீகக் குடிகளெனும் மகாவம்சத்துக்கு ஒத்திசைவான அரசியலை முன்னெடுப்பதாக அமையும்(இக் கருத்தைப் புலிவழிப் புரியவேண்டாம்.புலிகள் பேசுவது,செய்வது அனைத்தும் வியாபாரத்தனமானது-அது,டீலில் தமது வர்க்க நலனுக்கிசைவாகத் குறுந்தேசியவாதத்தை முன்னெடுத்து வருவது).




அகில உலகத்துக்கான சோசலிசமோ அல்லது ஓரு குறிப்பிட்ட நில எல்லைக்குட்பட்ட சோசலிசப் போராட்டமோ இனங்களது உரிமைகளை இல்லாதாக்கும் பெருந்தேசிய வாதத்தைத் தெரிவுகளாக்க முடியாது.இலங்கையர் எனும் கோசம் எப்போது இலங்கையில் வாழும் இனங்களது சுயநிர்ணயத்தின் இருப்போடு மட்டுமே சாத்தியமாகும்.இதுவன்றி பேசப்படும் இலங்கையர்கள் எனும் அரசியல் கோசம் சாரம்சத்தில் பெருந்தேசியவாதச் சிங்கள மேலாதிக்கத்தின் மறைக்கப்பட்ட வடிவமே.


11 செம்படம்பருக்குப் பின்பான காலம் அமெரிக்க-ஐரோப்பிய நவலிபரல்களுக்கானவொரு காலமாகும்.அவர்களது பொருளாதார முன்னெடுப்புகளுக்கு இந்தப் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் அவசியமான பற்பல சாதகங்களைத் தகவமைத்துக்கொடுக்கிறது.இதன் காரணமாக அவ்கானிஸ்தானையோ அன்றி ஈராக்கையோ அல்லது எல்லை கடந்து பாகிஸ்தானின் இறைமையையோ அவர்களால் மீறமுடிகிறது.இதற்கான அரசியல் மற்றும் இராணுவ உரிமைகளை இந்த பயங்கரவாதத்துக்கு எதிரான எனும் மாய அரசியல் ஏற்படுத்திக்கொடுக்கிறது.இதனால் தங்குதடையின்றி மூலவளங்களைக் கொள்ளையடிப்பதற்கும்,பங்கு போடுவதற்கும் அவசியமானவொரு கூட்டணி தவிர்க்கமுடியாது ஏற்படகிறது.இந்தக் கூட்டணி இப்போது ஜீ-20 எனும் அமைப்பு வடிவத்தை முன்னெடுக்கும்போது இலங்கையின் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்ற கோசம் இலங்கையில் சிறுபான்மை இனங்களை வேட்டையாடுவதற்கும்,அவர்களை மேலும் அரசியல் அநாதைகளாக்கித் தம்மோடு கலப்படையவைக்கும் "நாம் அனைவரும் இலங்கையர்"எனும் சிங்கள அபிலாசையாக விரியும்.



இலங்கையின் அரசியல் தெரிவுகளுக்கு, மிக யதார்த்தமான உலகப் பொருளாதாரச் சூழல் நெருக்கமாக அண்மித்து வருகிறது.இதைப் பெரும்பாலும் மிகச் சரியாகக் கையாளும் இலங்கை அரசு,சிங்களப் பௌத்தமதப் பொற்காலத்தை மீட்டெடுப்பதில் பெரும் அவாக்கொண்டுள்ளது.இஃது, மிகச் சாதாரணமான அரசியல் சொல்லாடல்களின்வழி-அதாவது,பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்,இலங்கையர்,மற்றும் கலப்புறதல் அல்லது ஒன்றித்தல் எனும் கோசங்களின் வழி அடையப்படக்கூடியதே.கடந்தகால மேற்குலக யுத்தங்களின்வழி இத்தகைய ஒற்றையினவுருவாக்கம் வலுவாக வெற்றியளித்தது.இது,பல் தேசியவினங்களை முற்றாக அழித்து, ஒரு தேசத்தினது ஆளும் வர்க்கத்தினது மொழியைப் பண்பாட்டை அனைத்து மக்களுக்குமான பண்பாடாகவும்,மொழியாகவும் ஆக்கிக் கொண்டது.இலங்கை போன்றவொரு சிறிய தேசத்தில் இது மிக இலகுவாகச் செய்து முடிக்கப்படக்கூடியது.புலிகளது அப்பட்டமான விதேசியப் போராட்டத்தால் இன்று இந்த ஆபத்து நம்மை நெருங்கி வருகிறது.இதைப் பூண்டோடு அறுப்பதற்கு தடைகள் என்ன என்பது அவசியமான கேள்வியாக மேலெழ வேண்டும்.


இத்தடைகள் பற்பல வடிவத்திலுள்ளன:



1: புலிகளது விதேசியவாதம்,


2:புலிகள் கற்பித்த துரோக அரசியல்,


3:புலிகளைச் சுற்றிய இயக்கவாத அரசியல் மாயை,


4:புலி எதிர்ப்பு ஜனநாயக அரசியல்(உதாரணம்:டக்ளஸ்,புலித்தளபதி கருணா-பிள்ளையான் வகை அரசியல் தெரிவு)


5:புரட்சிகர முற்போக்குச் சக்திகள் எனும் வடிவிலள்ள புலிப் பினாமிகள்(உதாரணம்:சேரன் அவரது மைத்துனன் விக்கி,சிவகுமார், பாலகுமார்,மு.திருநாவுக்கரசு,சிவத்தம்பி மற்றும் புலம் பெயர் சூழலில் மாற்றுக் குழுக்களாகக் கருத்தாடும் ரீ.பீ.சீ.வானொலி,இன்னும்பல முற்போக்கு முகமூடிகள்.)



6: அடையாளத்தை மறுத்து,பின்-முன் நவீனம் பேசும் முகமூடிகளாக இருந்து இனங்களுக்கிடையிலான சுயநிர்ணயக் கோரிக்கைகளை வெறும் செல்லாக் காசாகக் கருத்துக்கட்டும் எதிர்ப்புரட்கரச் சக்திகள்.




இத்தகைய தடைகளை எங்ஙனம் வெற்றிகொண்டு,இலங்கையில் இனங்களுக்கிடையிலான பரஸ்ப்பர நட்புறவோடுகூடிய உரிமைகளுக்கான போரை முன்னெடுப்பது?




சுயநிர்ணயத்தை வலியுறுத்தி, அதை முன் நிபந்தனையாக வைத்துப் புதிய ஜனநாயகப் புரட்சிக்கான வேலைத் திட்டம் அவசியமாகிறது.இங்கே,இலங்கை அரசுதாம் முதலாவதும்,பிரதான எதிரியென்பதும்,அதன் இன்றைய அரசியல் சித்தாந்தத்துக்கு உலகு தழுவிய பலமும் ஒத்துழைப்பும் உண்டென்பதும் அவசியமாகப் புரியப்படவேண்டும்.புலிகளது தவறான வழிகாட்ல்களால் தமிழ்பேசும் மக்களது சுயநிர்ணயத்துக்கான போராட்டம் தோல்வியில் முடிவடைகிறது.இது,இன்னொரு வடிவத்தில் மேலெழுவது அவசியம்.அதைச் சாதிப்பதற்கான போராட்டத்திசையமைவுக்குச் சுத்த இராணுவவாதமோ அன்றிப் பழையபாணி இயக்கவாத அறிவோ எப்போதும் உடன்பாடானது அல்ல.



நாம் பற்பல உலகத்துக்குள் வாழ்கிறோம்.எனினும்,உலகம் இப்போது ஒரே திசைவழியில் தன்னை அடையாளம் காட்டுகிறது.இது,பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் எனும்போது அதை இலங்கையிலிருந்துமட்டுமல்ல மேற்குலக நாடுகளிலிருந்தும் அம்பலப்படுத்திப் போராடவேண்டும்.இங்ஙனம் போராட முடியாது அரசுசாரா அமைப்புகளுக்குக் காவடி தூக்கி இலங்கையில் ஜனநாயகத்தை அமைதியை,சமாதானத்தை ஏற்படுத்துவதென்பது, சாரம்சத்தில் ஒற்றைத்துருவ ஒழுங்கமைப்பில் உலகத்தை வேட்டையாடும் ஏகாதிபத்தியத்தின் அரச ஆதிக்கமுடைய அடியாட்கள் தாம்சார்ந்த இனத்துக்குள் மற்றைய இனங்களை முடக்கும் அரசியலுக்கு உடந்தையாக இருப்பதே.அதை மிக நேர்த்தியாகப் புலிகளின் தளபதி கருணா-பிள்ளையான்,டக்ளஸ் போன்றோர் செய்து முடிக்கின்றார்கள்.




இன்று,இந்த ஜீ-20 கூட்டினது பொருளாதார இலக்குகள் யாவும் உலகத்தில் மேல்நிலை வகிக்கும் அரசுகளது சொந்த முரண்பாடுகளுக்கு ஒரு வடிகாலான அரசியலை முன்னிறுத்தும்.இது,தேசங்களில் வாழும் அரசியல் உரிமைகளற்ற இனங்களை அரச ஆதிக்கச் சமுதாயங்களோடு கலப்படைய வைப்பதில் முனைப்படையும்.அதன் அவசியமான நோக்குப் பொருளாதாரச் சந்தைக்கு ஒரு மொழி,ஒரே மதம்,ஒரே இனம் எனும் ஒன்றைத் துருவ குவிப்புறுதியூக்கத்துக்கிசைவான உலகத்தைவேண்டிய அரசியல்-இராணுவ நகர்வாகவே அமைகிறது.இது,இன்றுள்ள தேசங்களுக்குள் பல்வகைக் பண்பாட்டு விழுமியங்களை அந்தந்தத் தேசப் பண்பாட்டு மேலாத்திக்கத்துக்கு முதலில் பலியாக்கும்.




நவலிபரல்களது அரசியலுக்கு இவை அவசியமானது.அவர்களால் முன்தள்ளப்பட்ட பொருளாதாரத்தின் அரிச்சுவடிக்கு கெய்னிஸ் சித்தாந்தக் குருவாக இருந்து இவற்றைய வற்புறுத்தும்போது, நாம் மார்க்சைச் சொல்லி மேலும் சுயநிர்ணயத்தை-தேசியத்தை மறுப்பதாக அமையும்போது,அங்கே,சுயநிர்ணயவுரிமைக்கான போராட்டம் புலிகள்போன்ற பாசிச வாதிகளிடம் தஞ்சமடைகிறது.அவர்கள் அதைத் தமது வர்க்க நலனுக்கான முறையில் முன்னெடுக்கும்போது அதுவே ஒரு கட்டத்தில் தோல்வியாகி இலட்சம் மக்களை அழித்துவிடுகிறது.இங்கே,இந்த வரலாறு நன்றாகக் காணக்கூடியதாக இருக்கிறது.



நாம் முதலில் அணித்திரட்சிக்கேற்ற முறையில் தடைகளை அகற்றிக்கொண்டு ஐக்கியப்படவேண்டும்.



இந்த ஐக்கியம் புரட்சிகரக்கட்சிக்கான கருவூலத்தோடு உண்மையாக மக்களைச் சார்ந்து அரசியல் செய்ய நிபந்தனையாக வர்க்க உணர்வுள்ள தோழர்களுக்குள் கேட்கப்படுகிறது.புரட்சியைக் காட்டிக் கொடுக்கும் சதிகாரர்கள் பழைய இயக்கவாத அரசியல் தெரிவிலிருந்து நமக்குள் விதைக்கும் அரசியலை அம்பலமாக்குவது அவசியம்.இவைகளின்றிச் சிங்கள அரசுக்குத் தோதான இந்த உலக அரசியல் வியூகத்தைத் தோற்கடித்துச் சுயநிர்ணயத்துக்கான போராட்டத்தை முன்னெடுப்பது கல்லில் நார் உரிபதாகவே முடியும்.



ப.வி.ஸ்ரீரங்கன்