Posts mit dem Label இன அழிப்பு werden angezeigt. Alle Posts anzeigen
Posts mit dem Label இன அழிப்பு werden angezeigt. Alle Posts anzeigen

Donnerstag, Juni 19, 2014

முசிலீம் மக்கள் மீதான வன்முறையைப் புரிந்துகொள்ள...

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலைக்குப் பின் முஸ்லீம் இனத்தின்மீதான இலங்கை அரசின் கொலைகள்-வன்முறைகள் சொல்வது என்ன?


(1)

ப்பாவி மக்களைப் பலியெடுக்கும் இனப்படுகொலை அரசிலானது இன்றைய இலங்கையை பாலஸ்தீன மற்றும் இஸ்ரேலிய வகைத் தாக்குதலுக்குள் தள்ளியுள்ளது.கடந்த மூன்று தசாப்தமாக நடைபெற்ற ஈழத்துக்கான போரின் எதிர்விளைவுகளாக இதை எடுப்பதற்கில்லை.இலங்கையின் மிக அண்மைய அரசியல் நகர்வும் அதுசார்ந்த பௌத மதவாதச் சாயம் பூசிய இனவாதத்தாக்குதல் போக்குகளும்,இலங்கைச் சிறுபான்மை இனங்களை ஒட்டயொடுக்கி காலப்போக்கில் அவர்களை எந்தவுரிமையுமற்ற வந்தேறுகுடிகளாக்கும் பாரிய திட்டத்தைக் கொண்டிருக்கிறது.


இன்றைய இலங்கையின் பொருளாதார நெருக்கடியிலிருந்து சிங்கள மக்களைத் திசை திருப்பி மகிந்த அரசைக் காப்பதற்கெடுக்கும் முயற்சிக்குப் புலிகளில்லாத இலங்கையில் "பௌத -இஸ்லாம்"மதப் பிரச்சனையொன்று திட்டமிடப்பட்டு இயக்கப்படுகிறது.


இதற்கான ஒத்திகைகளைப் புலத்துத் தமிழர்களுக்குள் இயங்கும் தலித்துவ மற்றும் பிரதேசவாதக் குழுக்களைவைத்து இயக்கிய மகிந்தா அரசு, இதை மிக நேர்த்தியாக இயக்கும் பண்பை இவர்களது ஒத்துழைப்புகளோடுதாம் மீளவும், இயக்குகிறது. இதற்காவேதாம் சிங்கள பௌத அடிப்படைவாதச் சக்திகளையெல்லாம் தலித்துவக் குழுக்கள் சந்தித்து, பகிரங்கமாக ஒப்புதலளித்தும் இருந்தனர்.





இன்று நாட்டில் பேயாட்டம் போடும் ஞானசார தேரோவுடன்
Raman Yogaratnam Asura Nathan Theva Thasan


இதன்பின் தலித்துவக் குழுவின் தலைவர் தேவதாசன்குழுவும்  மற்றும் பிரதேசவாதப் பிளவு வாதிகளான ஞானம் குழுவும்இணைந்த "நாம் அனைவரும் இலங்கையர்கள்" தமிழ்த் தேசிய வாதத்தை நிராகரித்து இலங்கையை முன்னேற்ற வேண்டுமெனப் பகிரங்கமாகப் பேசவும் முற்பட்டனர்.சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் முள்ளிவாய்கால் இனப்படுகொலையைக் குறுக்கி "பாசிசப் புலிகளை"அழித்த மகிந்தாவுக்கு நன்றியும் தொடர்ந்து தெரிவித்தனர்.


இதை யாழ்பாணம்வரை சென்று, டான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் -பிரச்சாரமும் செய்தனர்.இவர்களுக்கிணைவாகப் பிழைப்புவாதி குகதாசனின் தொலைக்காட்சியும் இலங்கையில் சமாதனம் தோன்றி, ஜனநாயகம் மலர்ந்துவிட்டதாகவும் பரப்புரையைத் தொடர்ந்து  செய்து மகிந்தாவின் பாசிச அரசைக் காத்துவந்தனர்.


இன்றிந்த முஸ்லீம் மக்கள் மீதான இனப்படுகொலைகளைப் பார்த்து இப்படித்தான் கருத்தாடத் தோன்றினுங்கூட இத்தகைய தாக்குதல்களின் பின்னே ஒளிந்திருக்கும் அன்னிய நலன்களும் அவை சார்ந்த அரசியல் சாணாக்கியமும் அப்பாவிகளைத் தமிழரின்- முஸ்லீம்களின் மற்றும் பௌத்த சிங்களவரின் பேரால் அழித்து வருகிறது.இதற்குடந்தையாக விடுதலைவேண்டிப் போராடப் புறப்பட்ட முன்னாள் தமிழ் இயக்கங்கள் அனைத்துமே இருக்கின்றன. ஒவ்வொரு இயக்கங்களும்-குழுக்களும்,கட்சிகளும் தத்தமது இயக்க-கட்சி நலன்களின் அரசியலை அப்பாவி மக்களின் மீது பலிகளைச் செய்து, தமது எஜமான வேண்டுதலை நிறைவேற்றும்போது சாவதென்னவோ ஏழையெளிய மக்களே.அந்த மக்கள் தமிழைப் பேசினால் என்ன சிங்களத்தைப் பேசினாலென்ன இல்லை, முஸ்லீம் ,பௌத்தர்களாகவிருந்தாலென்ன அனைவரும் மனிதர்கள்தாம்!


சிங்களப் பேரினவாதத்தின் அதீத வெளிப்பாடுகள் மக்களை வகைதொகையின்றி வருத்தியபடி அவர்களின் உயிர்களை இனப்படுகொலையாகப் பறித்துவருவதை எந்த மனிதாபிமானமிக்க நபரும் பார்வையாளராக இருந்து மௌனிக்க முடியாது.

அப்பாவி மக்கள் முள்ளி வாய்க்காலிலோ அல்லது, அழுத்கமவிலோ சரி இனவாத அரசியலுக்குத் தீனீயாக்க முடியுமென்றால் இலங்கையின் இன்றைய அரசியல் சூழலை எந்தத் தேசத்தோடும் ஒப்பிட முடியாதளவு மோசமானவொரு இருண்ட சூழலுக்குள் இருப்பதை நாம் ஊகிக்க முடியும்.உலகம் 21 ஆம் நூற்றாண்டை மனித வேட்டை-நர மாமிசம் புசிக்கும் நூற்றாண்டாகவே பிரகடனப்படுத்தியுள்ளது.இவ் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆவ்கானிஸ்தானை-ஈராக்கை அத்துமீறி அழித்து வரத் தொடங்கிய ஏகாதிபத்திய எரிபொருளுக்கான பெரு வேட்டை, கொத்துக் கொத்தாகச் சிரியாவில் , உக்கிரைனில்மனிதப் பிணங்களை உற்பத்தி பண்ணி வருகிறது.இத்தகையவொரு அரசியலை உலகம் வலிந்துருவாக்கி வைத்தபடி இன்றைய தேசிய இன முரண்பாட்டை அத்தகையவொரு சதிமிகு நலன்களுக்குடந்தையாக்கி எமது மண்ணில் குருதியாற்றைத் தொடர்ந்து ஓட வைத்திருக்கிறது.


இன்று உலகந்தழுவி எப்பகுதியிலும் மனிதர்களைக் கொல்லுதல் மிகச் சாதரணமான விடையமாகப் போயுள்ளது!


பயங்கரவாதத்தின் பெயராலும்,பட்டுணியின் பேராலும் அப்பாவிகளின் உயிரைப் பறித்துவரும் புதிய உலக ஒழுங்கானது இன்றைய குறைவிருத்திச் சமுதாயங்களின்மீது தமது அத்துமீறிய வலுக்கரத்தைப் பதித்து தேசங்களின் இறைமைகளையே நாசமாக்கியுள்ளது.இந்த அரசியல் இலக்குக்கிசைவாகக் காரியமாற்றும் மூன்றாமுலக அரசியல் மற்றும் பெருங்கட்சிகள்கூடவே அவர்களது லொபிக் கூலிக் குழுக்கள் தமது மக்களின் உண்மையான எதிரியாக மாறியுள்ளது.இதுவொரு மிக மோசமான புறச் சூழலை அமைதியாக வாழும் இனங்களுக்கிடையில் தோற்றி வைத்து,அதுசார்ந்து இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளாக வளர்த்துச் சம்பந்தப்பட்ட தேசங்களின் சுய வளர்ச்சியை மெல்லச் சிதைத்து வருகிறது.இத்தகைய தந்திரம் அந்நிய நிதி மூலதனத்துக்கு அவசியமானது.


இதன் தொடர்ச்சியான விளைவுகள்,போர்,பொருளாதார அழிவுகள்,நோய்,நொடி,பட்டுணிச் சாவாக மக்களை அண்டும்போது தேசத்தின் மிகப் பொதுவான மனிதவளம் நோய்வாய்க்குட்பட்டுத் தேசத்தின் சுய ஆளுமை அழிந்து தேசம் அன்னியத் தயவில் சுயசார்பிழந்து தங்கி வாழும் இனத்தை உற்பத்தி பண்ணுகிறது.இங்கே, தொடர்ச்சியான யுத்தத்துள் இருத்தி வைப்பதற்காகவும் தமது பழைய-கழிவு ஆயுதங்களை விற்றுக் காசாக்கவுமாக மூன்றாம் உலகத்தில் செயற்கையான முரண்பாடுகளையும் அதுசார்ந்த யுத்தத்தையும் ஏகாதிபத்தியக் கம்பனிகள் தொடக்கி வைத்திருக்கின்றன.இன்றைய நிலவரப்படி ஜேர்மனிய அரசு காட்டுமிராண்டி அரசான அல்ஜீரியாவுக்கு 980 டாங்கிளை 1600 கோடிகள் டொலருக்கு விற்பனை செய்கிறதென்றால் இதன் நோக்கம் என்னவாக இருக்கும்?


இதன் தொடர்ச்சியில் மையங்கொள்ளும் ஏகாதிபத்தியத்தின் பொருளாதார மற்றும் இராணுவக் கேந்திர அரசியலானது என்றைக்கும் மூன்றாமுலகத்தில் அமைதியும் சமாதானம் மலர விருப்பமுற்றே இருக்கிறது.இது, தான் உற்பத்தி செய்வதற்கானவொரு இனமாகத் தமது தேசத்தைக் கட்டி வளர்த்தபடி மற்றைய கீழத்தேய வலயத்தை மூலதனத்தைச் சுரண்டும் வலயங்களாகவே இருத்தி வைத்திருக்கிறது.இத்தகைய அரசியலைப் புரிந்து கொள்ள ஆபிரிக்கக்கண்டக் கொங்கோ தேசமே நல்ல உதாரணமாக இருக்கிறது. இன்று -இப்போது இலங்கையே நல்ல உதாரணமாகும்!


இத்தகையவொரு இருண்ட பொருளாதார நலன்சார்ந்த இனவழிப்பு -வன்முறைகள்நமது தேசத்தில் அப்பாவிக் குழந்தைகளை இனப்படுகொலையாகக் கொன்று குவிப்பதற்குச் சிங்கள-தமிழ்-முஸ்லீம் இனங்களின் நலன்களின் வாயிலாக எழும் முரண்பாடாக எவரும் பார்ப்பாராகின், எமது இத்தகைய அழிவுகளைத் தடுத்து நிறுத்தவே முடியாது.இது இன்னும் பலிக்குப்பலி அரசியல் வடிவத்தை எட்டி, எமது மண்ணில் என்றைக்குமே அமைதியற்றவொரு சூழலை நிரந்தரமாக்கித் தேசத்தை இராணுவச் சர்வதிகாரத்தின் கீழ் கட்டிப்போடும் அபாயம் நெருங்கி வருகிறது.இதிலிருந்து மீள்வதும், இனங்களுக்கிடையாலான முரண்பாடுகளின் மீது இலகுவாக ஆதிக்கஞ் செய்யும் அன்னிய நலன்களை வெற்றிகொண்டபடி இலங்கையில் பல்லினங்களும் பரஸ்பர நட்புறவோடு வாழ்வை முன்னெடுப்பது அவசியமானவொரு அதி மானுடத் தேவையாகவே இன்றிருக்கிறது.இதையொட்டிச் சிந்தித்ததாகச் சொல்லும் புலம் பெயர் "மாற்றுக் குழுக்கள்"எனும் போர்வைக்குள் ஒடுக்குமுறையாளர்களோடு  கைகோர்த்த தலித்துவ-பிரதேசவாதப் பிளவுவாதிகள் செய்த சதி அரசியலை எங்ஙனம் புரிந்துகொள்வது நண்பர்களே?



இனப்படு கொலை அரசியலானது அப்பாவி மக்கள்மீது பயங்கரத்தனமான தாக்குதல்களைத் தொடுத்து அவர்களது கனவைச் சிதைப்பதை நாம் தொடர்ந்து"அடிக்கு அடி-இனப் படுகொலைக்குக் கொலை"எனும்படி அனுமதிப்போமானால் இலங்கையில் எந்தவொரு இனமும் தனது நிம்மதியை-நிலைத்த வாழ்வைத் தக்கவைக்க முடியாது!இது எமது தேசத்தைக் குட்டிச் சுவாராக்க எண்ணும் அன்னிய ஆளும் வர்க்கங்களுக்கும் இலங்கையின் தரகு ஆளும் கும்பலுக்குமான வேட்டைக் காடாகவும் அவர்களின் குடும்ப நலன்களுக்கான கொலைகளுமாகப் படுகொலைகள் பரந்த அரசியல் பழிவாங்கலாக நம்மைப் பூண்டோடு அழிப்பதாக முன் நகரும்.இத்தகைய அரசியல் செல்நெறி ஒருபோதும் முஸ்லீம்களுக்கோ அல்லது ,தமிழருக்கான-இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்கான விடுதலையைத் தரப்போவதில்லை. மாறாக, நமக்கு இன்னும் பல தசாப்த காலத்துக்கு இதே அழிவு வாழ்வைத் தந்து நமது வரலாறே சுடுகாடாகும்!






இதை தடுப்பதற்கான ஒரு அரசியல், இலங்கையின் இனங்களுக்கிடையலான முரண்பாட்டை முடிவுக்குக்கொணரும் இன விடுதலைசார்ந்த சுய நிர்ணயத்தை அங்கீகரிப்பதும், சுய ஆட்சியுடைய வலயங்களை உருவாக்குவதுமே இன்றைய மூன்றாமுலகத்தின் முன் இருக்கும் அரசியல் பணி.இதைச் செய்து முடிக்கும் தகமை இனங்களுக்கிடையலான ஒற்றைமையின் இருப்பிலே சாத்தியமாகும்.இந்த ஒற்றுமையைக் குலைப்பதே அன்னிய நலன்களின் பெருவிருப்பு.நாம் இதை வெற்றிகொள்வது அவசியம்.அங்ஙனம் வெற்றி கொள்ளாதவரை முள்ளிவாய்க்காலுக்குப்பின் அழுத்கமவிலும் பின் யாழ்ப்பாணத்துக்கும் ,மட்டககளப்புவுக்குமென மதவாத வன்முறையாகவும்-இன வன்முறைகளாகவும் சுழன்றடிக்கும் இலங்கைப் பாசிச அரசின் இனவழிப்பு அரசியலாகும்.இதன்வழி மகிந்தாவின் அந்நியச் சேவை அரசு தன்னைத் தற்காத்துக்கொள்ளும்.இதற்காவேதாம் இந்தப் புலத்து லொபிக்குழுக்கள் யாவும் தமது பிழைப்புக்காக இலங்கை மக்களைச் சாதிரீதியாக-பிரதேசரீதியாக மற்றும் மதவாத ரீதியாவும் பிளந்து குருதி குடிக்கின்றனர்.இந்தப் பயங்கரவாதிகளை வெல்வதும் இவர்களை ஜனநாயகரீதியாகத் தோற்கடிப்பதும் புரட்சிகரமான அரசியலுக்குட்பட்டதே.இதையொட்டி உதிரிகளான நாம் என்ன செய்யப் போகின்றோம்?-இது கேள்வி...

( 2)

முசிலீம் மக்கள் மீதான வன்முறையைப் புரிந்துகொள்ள...


இலங்கையில் முசுலீம் இனத்தின்மீது அரசியல் வன்முறையை ஏவி விட்டுள்ள  மகிந்தா தலைமையிலான இனவாத அரசானது "தற்செயலான வன்முறைக்கு"ப் பாத்திரமற்றது என்றொரு கருத்தைப் பலர் உரையாடுகிறார்கள்.அவர்களுள் முசுலீம் அரசியற்றலைமைகள் கூட இங்ஙனம் உரையாடுவதில் தமது பதவிகளை -அமைச்சகப் பொறுப்புக்களைக் காக்கவும் முனைகின்றனர்.இந்த சிக்கலான காலத்திற்கூட இலங்கையில் ஒடுக்குமுறைக்குட்பட்ட - உட்படும் சிறுபான்மை மக்களினங்களானவை தமக்குள் இணக்கமானவொரு அரசியலைக் கொண்டியங்க முடியாத  தடைகளாக இருப்பவைகள் என்ன?

தமிழ்பேசும் மக்களது ஒரு பிரிவான மலையக மக்கள், மலையகத்தில் ஒட்டச் சுரண்டப்பட்டுக்கொண்டிருக்கும் இந்தப் பொழுதில்  பொது பல சேனாவின் முகத்தோடு அந்த மக்களையும் வேட்டையாடப்போகும் மகிந்தா அரசின் தொழிலாளர்களுக்கெதிரான அசியற்போக்ககளின் விருத்தியே இத்தகைய வன்முறையாகவெழுகின்றது.இதன் மிக நுணுக்கமான செல்நெறியானது மக்களினங்களைப் பல வடிவினில் அரசு சாரத முறைமைகளில் ஒடுக்குவதும் ,அதன்வழி தத்தமது எசமானர்களான அந்நிய முதலீட்டார்களின் நலன்களை இலங்கையில் அடைவதற்கான அனைத்து வழிகளையும் திறந்துவிடுவதாகவே இன்றைய மகிந்தா தலைமையிலான இலங்கை அரசின்  பண்பாக -நிலைப்பாடாகவிருக்கிறது!

இன்று முசிலீம் மக்கள்மீது இலங்கை அரசால் ஏவப்படும் சிங்கள உதிரிவர்க்கமானது தனக்கான நலன்களைப் பேணத்தக்க முறைமைகளில் முசீலீம் சிறு வர்த்தகர்களைத் தாக்கியழிப்பதில் குறியாவிருக்கிறது.மதரீதியாக -மொழிரீதியாகப் பிளவுண்ட சிறு வர்த்தக நலன்களானது இக் குழுமங்களுக்குள் மிகவும் போட்டியானவொரு சூழலைக் கடந்த 20 ஆண்டுகளாகச் செயற்கையாகவே உருவாக்கியது.இதன் பலாபலன்களானது ஊட்டி வளர்க்கப்படும் இன -மத வாதச் சூழலைத் தகமைத்து மக்களினங்களைப் பிளந்து  அரசுக்கெதிரான அணித் திரள்வை உடைத்தெறிவதே இலங்கை -சீன அரசுகளது தந்திரமாவிருக்கிறது.

இலங்கையில் நடாத்தப்படவிருந்த இரூனேசியப் பாணி"மக்கள் எழிச்சி" ஒட்போரது[Otpor!] தலைமையின் தூண்டலோடு சம்பந்தப்பட்டதெனினும் அஃது மேற்குலகின் வியூகம் -ஒத்துழைப்போடு சம்பந்தப்பட்டதென்பதையும் கூடவே , இலங்கையில் கம்யூனிச-வர்க்கவுணர்வு அதிகமாகப் போர்க் குணமிக்க பாட்டாளிகளைக்கொண்டிருப்பதென்பதும் உலகம் அறிந்ததுதாம்.இதன் திசையில் கட்டப்படும் வியூகங்களை ஒடுக்குமுறைக்குட்படும் எந்தச் சிறுபான்மையினங்களும் சரியப்புரிந்து முன்னெடுக்கும் அரசியல் வெற்றிடமாகவே உள்ளது.

இந்நிலையை மீள மறுத்தொதுக்கும் தமிழ் "மார்க்சிய" நண்பர்கள் சிலர் கீழ்வரும்படி எதிர்வு கூறுகிறார்கள்:"இலங்கையின் புரட்சிக்கான சூழலுக்கு, ஆசிய மூலதனத்தின் வரவோடு புதிய பாட்டாளிய வர்க்கத்தை அது தோற்றுவிக்கும் என்றும், உற்பத்திச் சக்திகளை(தொழில்மயப்படுத்தும் உற்பத்தி ஜந்திரங்கள்) உருவாக்கி அதுசார்ந்த உறவுகளை வலுப்படுத்தும்.இதனால் தொழிற்சங்கம்வரும்,பாட்டாளிகள் தமக்குள் இனங்கடந்து ஒன்றுபடுவார்கள்-இனவாதம் செயலிழக்கும்,இனங்கலந்து தொழில் ஈடுபடும்போது அங்கே இனவொற்றுமை வலுக்கும்,இது புரட்சிகரமான சூழலைத் தகவமைக்கும்." என்று பகற் கனவுகாணும் நண்பர்கள்,அதன் பாதகமான பக்கங்களை மறுப்பது ஒருவகையில் ஏகாதிபத்தியங்களிடம் சரணடையும் அரசியலாகவே இருக்கும்.இதைக் கவனப்படுத்தும்போது,நிலைமை கட்டுக்கடங்காத திசை நோக்கிச் செல்வதை இனங்காண முடியும்.இதைச் சற்றுப் புரிய முனைவோம்.

1):முள்ளிவாய்காலிற் புலிகளை முற்று முழுதாக அழித்தபின் இலங்கையினது அரசியல் நகர்வானது ஆசிய மூலதனத்தைச் சுற்றியருப்பினும் அது சிங்கள மையவாதத்தில் மூழ்கியே கிடக்கிறது.அந்நியப் பெருவர்த்தகங்கள் இலங்கையை நோக்கிப்படையெடுப்பதாகவிருந்தாலும் அங்கே  அரசுக்கும் , பரந்துபட்ட உழைக்கும் மக்களுக்குமான இடைவெளி மிக அதிகமாகவே இருக்கிறது.இது இலங்கை தழுவிய புரட்சிக்கான விசும்பு நிலையை அடைவதற்குத் தடையாகத் தமிழ்த் தேசிய இனத்தின் முரண்பாடுகள் ஒவ்வொரு வடிவங்களில் அணுகப்படுகிறது.இஃது,அந்நிய மூலதனத்துக்கிசைவான இலங்கையின் முன் நகர்வுகளில் ஒன்றானதே.இலங்கை -அந்நிய அரசுகளது இன்றைய இலங்கை மீதான பொருளாதார நகர்வுகள் இலங்கையின் வளங்களை ஒட்டச் சுரண்டுவதிலும் ,கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடல் வலயத்தை வார்த்தக -அரசியல் தேவைக்குட்பக்  கையக்படுத்தும்போது வரும் மக்களது கூட்டுத் தாக்குதலைக்கொண்ட உணர்வெழுச்சி வெடித்துக் கிளம்பாதிருக்கச் செயற்கையாக இனக் குரோதத்தைத் திட்டமிட்டு வளர்க்கிறார்கள் .இலங்கையை மாறி மாறி ஆளும் கட்சிகளானவை இன்றைய தெரிவில் வன்முறையான சகல வடிவங்களையும் தமக்குள் உள்வாங்கிச் செயற்படுத்துகின்றனர்.

2):புலிகளென்பவர்கள் இன்று அழிக்கப்பட்டபின், ஒவ்வொரு களமுனையிலும் சாகடிக்கப்பட்ட எமது மக்களது குழந்தைகளின் அளப்பெரிய உயிர் பிழையான முறையில் அந்நிய நலன்களுக்காகப் பலியெடுக்கப்பட்டதாகவே போய்விட்டது.இத்தகைய நிலைமைகளில், புலிகளின் படுபாதகமான அரசியல் கபடத்தனமே நம் மக்கள் மத்தியில் அம்பலமாகியது.எனினும், புலிகளால் ஏமாற்றப்பட்ட தமிழ்பேசும் மக்களினது உரிமைகளை இந்த இலங்கையை ஆளும் எந்தக் கட்சிகளும் மதித்து,அவர்களது வாழ்வைச் செப்பனிட இனிமேல் முனைவதற்கில்லை.இதனால் இனங்களுக்கிடையில் தொடர்ந்து அவநம்பிக்கை வளர்க்கப்படுகிறது.

3):இலங்கையின் இன்றைய பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் ஆசிய-மேற்குலக ஏகாதிபத்தியங்களின் மிக மட்டரமான அணுகுமுறையானது இலங்கைச் சிறுபான்மை இனங்களைத் தொடர்ந்து இனவொதுக்குதலுக்குள் முடக்கியபடி, இலங்கையின் ஜனநாயகச் சூழலை இல்லாதாக்குவது.அதன்பின், இராணுவ வகைப்பட்ட ஆட்சியலகை நிலைப்படுத்துவது.இதற்குச் சிலியினது பினேசேவ் ஆட்சியை உதாரணமாக எடுக்கலாம்(இது அமெரிக்கப் புதியலிபரல்களின் பொருளாதாரவாதியான மில்டன் பிறீட்மான் திசைவழிப்பட்டது.)

4):இதன் தொடராக வந்தடையும் இலங்கையின் அரசியலில்,இலங்கை மக்களினது எந்தவுரிமையும்(போராட்டம்,தொழிற்சங்கவுரிமை,வேலைநிறுத்தம்,சுதந்திரமான கருத்துப்பரிமாற்றம் இன்னபிற)தேசவிரோதம்-அரசுக்கு விரோதமெனும் போக்கில் நசுக்குவதற்கானவொரு இராணுவச் சர்வதிகாரமே இலங்கைக்கு இனிமேல் வாய்க்கப்பெறும்படியாக இந்த அந்நிய ஆர்வங்கள் விதிக்கின்றவொரு சூழலை எட்டுவதே அவர்களின் நோக்கு(பத்திரிகையாளர் திரு.திஸ்சநாயகத்துக்கு விதிக்கப்பட்ட இருபதுவருடச் சிறைத் தண்டனை இதை மேலும் உறுதிப்படுத்தும்).

5):இலங்கையை ஆளும் கட்சிகளும்,போராடும் சிறுபான்மை இனங்களின் அமைப்புகளும் வர்க்க அரசியலுக்குள் தாம் சார்ந்த உடமை வர்க்கத்துக்கு-எஜமானர்களுக்கு ஏற்ற வகைகளிலேயே வளர்தெடுக்கப்பட்டு,இன்றுவரை உயிர்த்திருக்கும்படி விடப்பட்டிருக்கிறார்கள்.

6):இன்றைய பின்போராட்டச் சூழலில்-போராட்டத் தோல்விக்குப்பின் இவைகளைக் கடந்து, நமது மக்கள் இலங்கையின் பெரும்பாண்மைச் சிங்களத் தொழிலாள வர்க்கத்தோடு தோள் சேர்ந்து-தமக்கு நேர்ந்த கொடுமைகளுக்கெதிராக-அவர்களது பலத்தோடு போராடுவதைத் தவிர வேறு வழி இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்கில்லை என்றாகிறது இன்றைய சூழல்.என்றபோதும், இத்தகைய ஒருமைப்பாட்டை எட்டுவதற்கான பல தடைகளை இலங்கையின் கட்சி அரசியலுக்குள் நாம் இனங்காணமுடியயும்.இனஞ்சார்ந்த குறுகிய கதையாடல்களை வளர்த்துச் சதி அரசியலை முன்னெடுக்கும் கட்சிகளுக்கு அந்நியச் சக்திகளது நிதி ஆதாரமாக இருக்கிறது.இதன் உண்மையில் திட்டமிடப்பட்ட உலக வல்லரசுகளது இலங்கைமீதான ஆதிக்கம்-அரசியல் இலாபங்கள் குவிந்திருக்கிறது.இவற்றைத் தகர்ப்பதற்கான இலங்கையின் முழுமொத்த மக்களது எதிர்ப்புப் போராட்டம் இன்னமும் மையங்கொள்ளாது இனவாதத் தீயில் மூழ்கிக்கிடப்பதற்காக ஒவ்வொரு பொழுதிலும் ஏதோவொரு வகையில் படுகொலைகள் நடந்தேறுகிறது.அல்லது, குறைந்தபட்சமாவது இனவாத அவநம்பிக்கைப் பிரகடனங்கள் முன்னுக்குத் தள்ளப்படுகிறது.

7) : இப்போது முசுலீம் -சிங்கள இனங்களுக்கிடையில் வளர்க்கப்படும் குரோதமானது திட்டமிட்ட அந்நியச்சதி என்கிறோம். இதிலிருந்து வளர்க்கப்படும் பொதுபல சேன என்ற இனவாத அமைப்பானது இலங்கைக்குள் நிகழ்த்தப்படவிருக்கும் பல்வேறு சமூக அமுக்க வினைகளுக்கானவொரு ஆரம்பம்.இத்தகைய அரசியல் வாழ்வை எதிர்கொள்ளும் இலங்கை மக்கள் மத்தியில் கட்டிவளர்க்கப்படவேண்டிய "இனங்களுக்கிடையிலான ஐக்கியம்" இன்று அதே சக்திகளலேயேதாம் பேசவும் படுகிறது.இவற்றை எதிர்கொண்டு இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தைப் பேணும் அரசாக மகிந்தாவின் அரசை எண்ணமுடியாது.அவ்வரசு முசுலீம் மக்களை மட்டுமல்ல இலங்கையின் அனைத்து இனங்களையும் அழித்துக் கரைத்துச் சிங்கள "நாம் அனைவரும் இலங்கையர்" என்று கதையைத் தொடர்கிறது.இந்தத் திசையில் முசுலீம் மக்கள் மத்தியில் தொடரப்படும் இன்றைய இனவாதத் தாக்குதல்களுக்கும், சீன முசுலீம் முரண்பாட்டிற்கும் பல்வேறு வகையான தொடர்புகள் உண்டு. சீனாவில் முசுலீம் மக்களுக்கும் சீன அரசுக்குமிடையிலான முரண்பாட்டின் விளைவுகளை [Shaanxi (province, China)Holy War in China ]-வெளிகளை [History of Muslims in Northwest China ]ஆயும் ஒரு முன்னோட்டமாகச் சீன அரசும் இதை வளர்த்து இயக்கிப் பார்த்துக்கொள்கிறது.தற்போது இலங்கையானது சீனாவின் மட்டுமல்ல பல அந்நியச் சக்திகளது பரீட்சார்த்தக்களமாகவே இருக்கிறது.சீனாவின் சமீபத்து (2009 )முரண்பாட்டில் (ethnic tensions between Uighurs and Han Chinese )பலர் கொல்லப்பட்டார்கள்.பண்டுதொட்டுச் சீனாவின் இந்த முரண்பாடுகள் இன்னும் நீறுபூத்த நெருப்பாகவே இருப்பதால் இதை அணுகும் பல பொறிமுறைகளை நோக்கிச் சீனா நகர்கிறது[ Read more ... : Studies in Islamic History and Civilization: In Honour of Professor David Ayalon ]

எனவே, இந்நிலையில் முசிலீம் மக்கள் மீதான வன்முறையைப் புரிந்துகொள்ள முனையுந் தருணத்திற்கூட முசிலீம் இனமானதோ அதைக் குறித்துப் பேசுவதைவிட்டுப் பண்ட்டுதொட்டுச்  சிங்கள இனவாத அரசுகளால் ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் பரந்துபட்ட  தமிழ்மக்களைக் குற்றக்கூண்டில் ஏற்றுவதிலேயேதாம் முழுமூச்சாகவிருக்கிறது.இதைக் கடக்கும் அரசியலைத் தமிழ்ச் சூழலை அண்மித்த அரசியற் குழுக்கள் தற்போது முன்வைத்தாகவேண்டும்.

ப.வி.ஸ்ரீரங்கன்

19.06.2014

Sonntag, Februar 23, 2014

நிலாந்தனின் கட்டுரையூடாகவொரு...

நிலாந்தனின் கட்டுரையூடாகவொரு நீண்ட பயணம்.


கோடைகால ஜெனிவா இருக்கையின் தொடராக மூன்றாவது முறையாக ஜெனிவாவில் "திறவுகோல்" தேடுவதென்ற நம் அரசியற் சூழலில் திரு.நிலாந்தன் அவர்கள் ஜெனாவாவைக் கையாள்வதைக் குறித்தொரு கட்டுரையை"தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும்?"என்ற தலையங்கத்தோடு எழுதியுள்ளார்.எப்பவும், நான் இத்தகைய கட்டுரைகளை வெறுமனவே இணையத்தில் வாசித்துவிட்டுச் செல்வது கிடையாது.அத்தகைய கட்டுரைகளைப் படியெடுத்துப் பல முறைகள்வாசித்து முக்கியமானவற்றை மீளமீளப் புரிய முனைந்தே வாசிப்பதுண்டு.நிலாந்தன் கட்டுரைக்கும் இதுவே கதி.

இதிலிருந்து:

நிலாந்தன் தனது புரிதலில் பலவிடையங்களைக் குறித்துப் பேசுகிறார்.மனந்திறந்த எழுத்தாக அஃது இருப்பதுள் சில முக்கியமான தேடலைச் சுட்டிச் சித்தரித்திருக்கும் தருணத்துள் கட்சிகள் ,இயக்கங்கள்,மற்றும்தமிழ்டயஸ்பொறாவும்,சிவில்சமூகங்களும் குறித்த மதிப்பீட்டோடு செயற்பாட்டியங்கம்,மத நிறுவனங்களதும் பங்கையும்,கூடவே,அபிப்பிராயத்தை உருவாக்கவல்ல படிப்பாளிகள்,புத்தி ஜீவிகள், ஆய்வாளர்கள், ஊடகவியலாளர்கள்,படைப்பாளிகள் குறித்தும்,அத்துடன் இத்தகையவர்களால் செயற்படுத்தப்படும் அல்லது உருவாக்கப்படும் அபிப்பிராயங்களின் பின்னே செல்லவைக்கப்படும் சாதரணச் சனங்களையும் தமிழ்பேசும் மக்களுக்குச் செய்ய வேண்டியதை முன்வைத்து இயங்கங் கோருகிறார்.

நல்லது!

எனது பிரச்சனைகூட எமது மக்களது மனங்களில் கேள்வியாகவிரியும் மிகச் சாதராணக் கேள்வியே.

முள்ளிவாய்க்காலுக்குப்பின்,தமிழ்பேசும் மக்களுக்கான பிரச்சனை என்ன?

- தமிழீழமா?,

- வடக்குக் கிழக்கு இணைந்த மாநில சுயாட்சி அதிகாரக்கோரிக்கையா?

- ,இலங்கை அரசால் "பண்டுதொட்டு இனப்பாகுபாட்டு முறையின்பொருட்டு" தமிழ்பேசும் மக்கள்மீது கட்டவிழ்த்துவிடப்டும் இனவொடுக்குமுறையா?,

- இதுவரையான தமிழீழப் போராட்டத்தின்வழி இலங்கை அரசாலும்-புலிகளாலும் அழித்துக் குதறப்பட்ட தமிழ்பேசும் மக்கள் தமது அழிவுக்கும் -உயிர் இழப்புகளுக்குமான நியாயம் கேட்கும் நிலையும்,இழக்கப்பட்டவைக்கான நஷ்டஈடும்,அபிவிருத்தியும் அதுசார்ந்த அரசியல் -பொருளாதார சுயாதிபத்யமுமா? -என்னதாம் எமது பிரச்சனை?


! அன்றி மகிந்தாவை சர்வதேச நீதிபரிபாலனத்தின்வழி தண்டிப்பதோ?



?: எதை முன்வைத்து ஜெனிவாவையும்,அந்நியத் தேசங்களையும் கையாள்வது?

உலக்தின் எங்கோவொரு புள்ளியில் இருக்கும் வளங்குன்றிய தேசமொன்றின் இனக்குழுவானது இன்றைய இந்தவுலகத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் தமக்கானவொரு நலன்சார்ந்த நோக்குக்காக மட்டும் இந்த அந்நியத் தேசங்களைக் கையாளமுடியுமா?




திரு.நிலாந்தனே தமிழ்த் தேசியவினத்துக்குள் தற்போது உருவாகிய-திரண்ட பொருளாதார நெறி,அதன் இயக்கப்பாடு,நலன்கள் இதை முன்வைத்து அல்லது அதன் அடித்தளத்திலிருந்தெழும் கோரிக்கைகள் அதன் வழியிலான அமைப்புகள்-இயக்கங்கள் -கட்சிகள் குறித்துக் கவனப்படுத்தவுமில்லை. அப்படியொரு பொருளாதார வாழ்வே நமக்குக் கிடையாத தொனியில் வெறும் பொம்மலாட்ட ஓட்டுக்கட்சிகயாலும்,செயற்பாட்டியங்கங்களாலும்,அபிப்பிரயத்தையுருவாக்கும் சக்திகளாலும் நமக்கான கோரிக்கைகள்,அரசியல் சுயாதிபத்திய வாழ்வை, இனவொடுக்கு முறையிலிருந்து விடுபடுவதற்கானவொரு அரியல் தீர்வைக் குறித்துப் பேசுகிறார்.


இந்தச் சூழலிற்றாம் புலத்திலுள்ள ப(பி) ணப் புலிப் பினாமிகள் இலங்கையில் புதிய நிதியீடுகளைச் செய்கின்றனர்.இலங்கையின் புதிய தாரளவாதப் பொருளாதார நகர்வுள் இவர்கள் இணையுந் தருணத்திற்றாம் தமிழ்பேசும் மக்களது பாரம்பரிய நிலப்பரப்பில் இராணுவத்துடனான கூட்டுக் கொள்ளையோடு வளங்களைச் சுரண்டியொரு புதிய தமிழ் உடைமையாளர்கள் உருவாகியுள்ளனர். இவர்களது நலனுக்கும், புலத்தின் புலிப்பினாமிப் புதிய நிதியீட்டாளுர்களுக்குமான முரண்பாடுகளும்,மக்கள் நலன் சார்ந்த சந்தைப் பொருளாதாரத்தைக் கோரும் பாரம்பரிய சிறு உடமையாளுர்களுக்குமள்ள முரண்பாடுகளில் ஒரு தேசிவினமாகவெழும் தமிழ்பேசும் மக்கள்மீது செலுத்தப்படும் இனவொடுக்குமுறை-இனப்பாகுபாடுக்கான தீர்வுகள் குறித்த அரசியல் எழுகிறது.


இதன் முகம் மேற்சொன்ன உடமையாளர்கள்-நிதியீட்டாளர்கள்-புதிய முதலாளிகளது சர்வதேசத் தொடாபுகளோடிணைந்தே மேலெழுகின்ற நிலையில், நிலாந்தனின் கட்டுரையில் முன்வைக்கப்பட்ட சக்திகள செயற்பாடுகள்,முற்றுமுழுதானதும் -பரந்து பட்டதுமான "மக்கள் நலன்"சார்ந்து இயங்க முடியுமா?அல்லது இந்திய வர்த்தக நலத்துடன் பிணைவுற்றுள்ளச் சிங்கள இராணுவவாதப் பொருளாதரப்போக்குள் ஒத்துழைத்தியங்கும்  தமிழ்ப் புதிய தரகு முதலாளிகளது இருப்புக்கான அரசியலுக்குள் பாரம்பரியமாகப் புரிய முனையும்"தமிழ்த் தேசிவினப் பிரச்சனையின்"மரபு சார்ந்த கோரிக்கைகள்,அரசியல் மற்றும் வியூகத்தின் தலைவிதி என்ன?


இந்த எதிர்வினையெழுதும் இந்நொடியில், உக்கிரையின் அமெரிக்க-ஐரோப்பிய அரசியல் நிகழ்ச்சிக்கேற்பத் தனது சுயாதீனத்தை இழந்து அவர்களது கையில் வீழ்த்தப்படும் சூழலிற்றாம் நாம் ஜெனிவாவைக் கையாள்வதில் முனைப்புறுகிறோம்.


எனவே,சிலவற்றைக் குறித்து ஏலவே பேசப்பட்ட வடிவில் மீளவும், பேசியாகவேண்டும்:


முள்ளி வாய்க்காலில் மர்ம அரசியல்-போராட்டஞ் செய்த புலிகளும்,அதன் வெளியுலகப் பணப் புலிகளும்,பரந்துபட்ட மக்களினது அடிமைத்தனத்தைத் தொடர்ந்திருத்தி வைத்திருக்கும் இயக்கவாதம், இயக்கத்தின் இருப்பையும் அதன் நலன்களையும் மக்களின் நலனோடு போட்டுக் குழப்பி, மக்களை மயக்கி வருவதற்காகத் "தேசம்-தேசியம்-தமிழ்-ஈழம்"என்று கதையளந்து யுத்தத்துள் மக்களை இருத்திவைத்து ஒடுக்கியபடி,சிங்களப் பாசிச அரசுக்குப் பலியாக்கியது வரலாறு மட்டுமல்ல.இது முள்ளிவாய்க்காலில் தனது இராணுவப்பிரிவை-தலைமையை இழந்தபின் முன் தள்ளும் புதிய பொருளாதார நகர்வுகள்,இலங்கை அரசுடனான ஒப்பந்தங்கள்,ஒத்துழைப்புகள் யாவும் நமது தலைவிதியைத் தமது புதிய தேவைகளுக்கமையவும் -நட்புகளுக்காவும் மேலும்,மேலும் பல் வடிவங்களுக்குள் பிரிதியீடு செய்கின்றன.ஆனால், பாதிகப்பட்ட மக்களுக்கான எந்த அரசியல் நீதியும் இதுவரைச் சட்டபூர்வமாகக் கிடைக்கவில்லை.இந்த மக்களது இந்நிலையை வைத்தே தமிழ்ப் பொருளதாரச் சக்திகள் தமன்கானவொரு அரசியலை ஓட்டுக் கட்சிகளை முன் தள்ளி நகர்த்துகின்றனரென்பது முதலாவது பாலர் பாடம்.


புலம்பெயர்  தமிழ் மக்கள் மத்தியில் செய்யப்படும் அரசியல் முன்னெடுப்புகள் இதுவரை காணாத அந்நிய நலன்களின் அபிலாசைகளின் வெளிப்பாட்டோடு நடைபெறுகின்றன.இங்கே, மக்களென்பது வெறும் சதைப் பிண்டங்களாகவும்,இனவாத-வர்க்க அரசியலுள் ஒரு வகை மூலப் பொருள்களாகவும் பயன்படுத்தப் படுகிறது.அரசுக்கோ அன்றி அந்நியத் தேசங்களுக்கோ மட்டுமல்லப் பணப் புலிகளுக்கும்(மேற்சொன்ன புதிய வர்த்தகர்கள்) இத்தகையபோக்குப் பொருந்தி வருகிறது. நிரந்தரமானவொரு அமைதியான வாழ்வுக்காக ஏங்கும் பல இலட்சம் இலங்கை மக்கள் தம் முன் விரிந்து கிடக்கும் இராணுவக் காட்டாட்சியை-முனைப்பைக் கண்டு எந்தத் திசையில் காரியமாற்றப் போகிறார்களென்பதிலிருந்துதாம் அடுத்தக்கட்ட நகர்வுகள் இலங்கையில் அரசியல் ரீதியாக இடம்பெறும் சூழல் நிலவுகிறது.இதற்கு நிலாந்தனே சுட்டிக் காட்டிய 60 ஆண்டுகளான கொழுத்த அரசியல் -போராட்ட அநுபவமே ஆசான் என்பதும் உண்மை!இந்தப் பட்டறிவின்மீதான பாரிய கருத்தியற்றாக்குலேதாம் இனஇறு இவ் மக்களைப் புரட்டிப்போடுகிறது.இந்தப் பட்டறிவை நிர்மூலமாக்கும் அந்நியத் தேசங்களது லொபிகளேதாம் இம்மக்களின் கையறு நிலையான குறைந்தளவிலான அரசியல் மயப்படுத்தப்பட்ட சமூக வாழ்வியல் நெறியையும் திட்டமிட்டுச் செய்கின்றனர் அல்லது, அதையொட்டிய நகர்வை அழுத்தமாக இயக்குகின்றனர்.


பரந்துபட்ட மக்களின் நலன்களை ஒதுக்கிவிட்டு,அந்த மக்களின் அதிமானுடத்தேவைகளைத் தமது அரசியலுக்குப் பகடைக் காயாக்கியபடி  மக்களை அரசியல் -பொருளாதார வாழ்விலிருந்து துண்டித்தும், அவர்களையொரு ஒட்டுண்ணிச் சமூதாயமாக்கும் முனைப்பே சிங்கள இராணுவத்தின் இன்றைய முகாங்கள் வகைப்பட்ட நகர்வும் - கண்காணிப்பும்,பொருளாதாரத்துள்,வர்தகத்துள் இராணுவத் தலைமையின் செல்வாக்கும்ஆகும்!

தமிழ்பேசும் மக்களது பாரம்பரிய நிலத்தின் வளங்களைத் திருடிக்கொண்டே மக்களைத் தமது தேவைக்கேற்ப இயங்க அநுமதிக்கும் அரை இராணுப் பொருதார-அரசியல் வாழ்வில் மக்களை அரசியல் மயப்படுத்துதலென்பது பொருளாதாரச் சுயாதிபத்தியத்திலிருந்து எழும் தொழிற்சங்கள்,போராட்டங்கள் மூலமென்பது பொருளாதாரவாத்துள் ஒரு சிறு உண்மை.இதை நிலாந்தன் புரிந்திருக்க வேண்டும்.எனினும் இந்த அரசியல் மயப்படுத்தப்படாத சூழலைத் தனியே இயக்கங்கள்-கட்சிகள் மற்றும் படிப்பாளிகள்-படைப்பாளிகளுக்குள் தள்ளிவிடுதலென்பது 30 ஆண்டுகாலப் புலிகளது விதேசியவாதப் போராட்டச் செல்நெறியையும்,அவர்களது பாசிசவொடுக்குமுறையையும் தணித்துப் பேசுவதாகவும் ,அதேயளவு ஆண்டுகள் இராணுக் காட்டாட்சிகுட்பட்ட மக்கள்மீதான இலங்கை அரச பாசிசத்தின்  இக்கட்டான பௌதிக மற்றும்  உளவொடுக்குமுறை கூடவே, பொரளாதாரத்தாக்குதல் வியூகத்தையும் புறந்தள்ளுவதாவிருக்கிறது.



புலத்தைக் குறித்துப் பேசுவதானவிருந்தால்,அதாவது தமிழ் டயஸ்பொறாக் குறித்தென்று புரிக. சிங்கள அரசு-இந்தியாவுக்குத் தோதான பிராந்திய நலனை முன்னெடுக்கும் புலம்பெயர் லொபிக் குழுக்கள் "பரந்தபட்ட மக்களது நலன்சார் போராட்டங்கள்,அரசியல் தீர்வு,இனப்பிரச்சனைக்கான ஆத்மார்த்தமான அரசியல்தீர்வுக்கான நகர்வை முன்நிபந்தனையாக்கி " இத்தகைய மக்களின்நலனைச் சார்ந்தியங்கும்-போராடும் முன்னணிஅரசியல் அணிகளைக் கொண்டிருப்பவர்களும் அல்ல. எனவே,மக்களின் உரிமைகளைத் தமது இருப்புக்காக மக்களிடமும்,உலகிடமும் கோசமாக்கியபடி அந்த மக்களை வருத்தி இலங்கை-இந்திய ஆளும் வர்க்கத்துக்கு அடிமையாக்குவது ,இனவாதச் சிங்கள அரசின் ஒடுக்குமுறையை இன்னும் வலுப்படுத்துமேயொழிய அதைத் தடுத்துத் தகர்த்தெறிந்து தமிழ்பேசும் மக்களுக்கு நியாயமான தீர்வைத் தரப்போவதில்லை! எனவே, இத்தகைய லொபிக் குழுக்கள் குறித்துப் புலம் பெயர் மக்களாகிய நாம் கவனத்தில் எடுத்துக் கொள்வது மிக முக்கியம்.இவர்கள் நிலாந்தன் பார்வைக்குட்பட்ட தமிழ் டயஸ்பொறாவல்ல!


நாம்,புலம் பெயர்ந்து வாழும் தேசங்களில் இத்தகைய குழுக்களை நிர்மூலமாக்கும் அரசியற்றெளிவு மிக அவசியமானது.அத்தகைய தெளிவைக்கொண்டியக்கி, மக்களைப் புரட்சிகரமாகச் சிந்திக்கவும்,உணர்வுபெறவும் தூண்டுவதற்கானவொரு வெளியை நாம் இதுவரை தெரிவுசெய்து ஒன்றிணைந்து இயங்க முடியாதிருப்பது துர்வதிஸ்டம் அல்ல.இஃது, நமது சமூக உளவியற்போக்குக்கும்,வர்க்க உணர்வுக்குஞ் சம்பந்தப்பட்டது.இந்தச் சமூகத்தில் ஒடுக்கு முறையானது வெறும் மொழிவாரியான சமாச்சாரமில்லையென்பதும்,அது பொருள் வகைப்பட்ட நோக்குகளால் அனைத்து மொழிவழி,மதவழி அதிகாரங்களையும் ஒவ்வொரு இனத்துக்குள்ளும் குவிக்கிறதென்பதையும் நாம் புரிவதும், அதன் வாயிலாக எல்லைகளை உடைத்துவிட்டு அனைத்து மக்கள் தரப்புடனும் கைகோற்று ஒடுக்குமுறைகளை உடைப்பதற்கான செயலூக்கத்தைப் பெறவேண்டும்.இன்று,தமிழ்பேசும் மக்களது பாரம்பரிய மண்ணில் நடக்கும்  சிங்கள இராணுவக் காட்டாட்சிக்குத் தமிழ் பேசும் மக்களுக் கெதிரான உலக ஒப்புதல் இருக்கிறது.அந்த ஒப்புதல்வழி இந்தப் புலம்பெயர் லொபிக் குழுக்கள் மக்களது இணைவை-அரசியற்றெளிவை உடைத்துக் கூறுபோடுவதும்,சாதிய ரீதியாக மக்களைப் பிளந்து புலத்திலும் சாதியச் சண்டைகளை நடாத்தித் தொடர்ந்து பிளவை நிலைப்படுத்த இந்தக் லொபிக் குழக்கள் போன்ற கபடவாதிகளைக் கூலிக்கமர்த்தி வைத்திருக்கிறது, தமிழ்பேசும் மக்களது எதிரி முகாம்.

நாம் இவர்களைக் குறித்து இனிமேலும் மௌனமாக இருக்க  முடியுமா நிலாந்தன்?


புலம் பெயர்ந்து நாம் வாழும் தேசமெங்கு நோக்கினும் அந்நிய நலன்களை முதன்மைப்படுத்தும் தந்திரங்களோடு "மாற்றுக் கருத்து மந்தைகள்" கட்டும்கருத்துக்கள் பரப்பப்படுகின்றன .



மக்கள் தம்மை அறியாத வகையில், அந்நிய நலன்களைத் தமது நலன்களாக உணரும் தருணங்களை வலு கட்டாயமாக மக்கள் மத்தியில் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. இங்கே, நமது சிந்தனைகள் தடைப்படுத்தப்பட்டே வருகிறது.இதுள், ஜெனிவாவுக்குள் ஒரு தமிழ் டயஸ்பொறா வலுவாக இருக்குமென்பதோ அன்றி இல்லாதிருக்குமென்பதோ பிரச்சனையல்ல!


இங்கே பிரச்சனையானது,  தமிழ்பேசும் மக்கள்சாhந்த பிரச்சனைகள், தீர்வுகள் யாவும் இத்தகைய ஜெனிவா- சட்டமன்றங்கள்-நீதிசபைகள் -பாராளுமன்றங்களுக்கு வெளியேதாம் இருக்கிறது.எனவே,நிலத்திலிருக்கும் மக்களைச் சுயமாக இயங்க அநுமதிக்கும் பொருளாத-அரசியல் வாழ்வைக் குறித்து நாம் கவனத்தைத் திருப்பியாகவேண்டும்.

அப்படித்திருப்பும்போது தமிழ்பேசும் மக்களது பாரம்பரிய நிலத்தில் பூதாகரமாகவிருக்கும் இராணுவ முகாங்கள் மற்றும், பொருளாதார வாழ்வில் தமிழ்ப்பிரதேசமெங்கும்  இராணுவமும் அதன் துணைப்படைகளான குழுக்களின் மாபிய வழிப்பட்ட பொருளாதாரப் பொறியமைவுகமே நமது முதல் முரண்பாடுகளாக நம் விழிகள்முன விரியும்.



யுத்தத்தால் பழிவாங்கப்பட்ட தமிழ்பேசும் மக்கள், தமது தலைவிதையைக்  கண்டுகொள்ளாதிருப்பதற்கான கட்சி-இயக்கம்-அரசசார்புக் கருத்துக்கள்-சிந்தனைப் போக்குகள் நமக்குள் உருவாக்கப்படுகின்றன.இதற்காகத் திட்டமிடப்பட்டு"ஜனநாயகம்-அபிவிருத்தி,வாழ்வாதாரப் பிரச்சனைகளைத் தீர்த்தல்,சாதியப் பிரச்சனையைத் தீர்த்தல்"எனும் நியாய வாதங்களை மேற்சொன்ன வியூகத்தின் வழி முன்னெடுக்கப்படுவதில் இந்திய-இலங்கை ஆளும் வர்க்கத்தின் நலன்கள் பாரிய அளவில் நமக்குள் கரையேற்றப்படுகிறது. இஃது,சாரம்சத்தில் இந்தியாவினதும்,அதன் ஆளும் வர்க்கத்தினதும் நலன்களின்வழிச் சிங்கள ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கதை உறுதிப்படுத்த முனைகிறது.இந்தச் சிங்கள ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்தைச் சட்டபூர்வமாக நிலைநாட்ட இந்தியாவின் அதி மதிநுட்பமும்,ஆலோசனைகளும் அவசியமாகிறது.அதன் தொடராகவே,புலம் பெயர் தளத்தில் உருவாகிவரும் லொபி அரசியலும்-குரலும் தமிழ் டயஸ்பொறா வகை மாதிரிக்குள் திணித்து இயக்கப்படுவதைக்குறித்து நிலாந்தன் புரிந்திருப்பார்.


இறுதியாக...

தமிழ் பேசும் மக்களின் அனைத்து வாழ்விடங்களையும் அழித்து அவர்களை முழுநிலையானவொரு தொடர் வருத்தலுக்குள் தள்ளிய முள்ளிவாய்க்கால் மர்மம்,இன்றைக்கு கே.பி.,நாடுகடந்த அரசாங்கம்-நெடியவன் குழு மூலமாக,இலங்கைப்பாசிசச் சிங்கள அரசு புதிய வியூகத்தோடு சிங்களக் குடிப் பரம்பலை வன்னியெங்கும் ஊக்கப்படுத்துகிறது.இதன் மூலமாகச்சிங்கள மேலாதிக்கம் நிலை நாட்டப்பட்டு வருகிறது.யுத்தத்தில் இடம் பெயர்ந்த "தமிழ் மக்கள் மீள் குடியேற்றம்-புனர்வாழ்வென"ச் சொல்லப்படும் இந்த மோசடியான கருத்தியல்,முழு மொத்தத் தமிழ்பேசும் மற்றும் இலங்கைச் சிறுபான்மை இனங்களக்கு எதிரான இனவொதுக்கல் அரசியலோடு சம்பந்தப்பட்டது என்பதை எவரும் கவனத்தில் எடுக்காதிருப்போமானால், இலங்கை அரச திமிர் நமது மக்களை அரசியல் ரீதியாவும் வெற்றிகொண்டுவிடும்.இதுவரை யுத்தத்தில் வென்ற சிங்கள அரச ஆதிக்கம் இப்போது, அரசியல் ரீதியாவும் வென்று அடிமைத்தனத்தை அரசியல் சட்டமாக்கி(விகிதார மாவட்ட ஆளுமை-நிர்வாகம்) ஒப்பேற்றிவிடும். இது,இன்றைய கட்சி ஆதிக்கத்தில் சாத்தியமானதென்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். இதைத் தவிர்த்துவிட்டு, ஜெனிவாவுக்குள் ஒரு தமிழ் டயஸ்பொறாவைப் பலமானதாக்கி ,அந்நிய தேசத்தை நமக்காகக் கையாள்வதென்பது மேற்சொன்ன அந்நியச் சக்திகளது லொபிக் குழழுக்களது இருப்பையும் அவர்களது நகர்வையும் நமக்குள் உள்வாங்குவதாகவே இருக்கும்.இஃது, ஆபத்தானது.எனவே, நிலத்தில் -தாயத்தில் மக்களது சுயாதீனச் செய்பாட்டுக்கும்,வாழ்வுக்கும் அவசியமான பொருளாதாரச் சுதந்திரம் மற்றும், இராணு ஆதிக்கம் தவிர்க்கப்பட்ட அடிப்படையான எளிய ஜனநாயகச் சூழலே இப்போதைய அவசியம்.இதற்காகப் போராடுவதும் பரந்துபட்ட மக்கள் திரெண்டெழுவதும் மட்டுமேதாம் என்னைப்பொறுத்தவரை இன்று நம்முன் உள்ள ஒரே தெரிவு.இதன் அடிப்படையில் சிங்கள இராணு முகாங்கள் அகற்ப்பட்டு,அரசியல் ரீதியான சட்டவாத அரசின் ஆதிக்கமும் அதன்வழியிலான சுதந்தரமான சந்தைப் பொருளாதார நகர்வும்,உழைப்பும் தமிழ்ப் பிரதேசமெங்கும் நிலைகொள்ளவேண்டும்.இதிலிருந்துதாம் தமிழ்பேசும் மக்களுக்குமட்டுமல்ல இலங்கையின் முழு மொத்த மக்களுக்குமான சட்டத்துக்குட்பட்ட அரசும்,ஜனநாயகம் உறுதிப்படும்.இது உறுதியாகதவரை தமிழ்பேசும்மக்களினதின் மீதான ஒடுக்குமுறைகள் விலகியவொரு அரசியல் தீர்வு குறித்த பேச்சுக்கே இடமில்லை!


ப.வி.ஸ்ரீரங்கன்
23.02.2014
ஜேர்மனி

Sonntag, Februar 09, 2014

வண.சோபித தேரர்தம் கருத்திலிருந்து புரிவது கடினமானதா?

"எதுவரையில்?"  தொடரும்  எனது விவாதம்...

ழ்ந்து யோசித்தால், இலங்கையில் கட்சிகள்,தலைவர்கள்,மடாதிபதிகள்தம்  வரலாறு பரந்துபட்ட மக்களுக்கு எதிரானதாகவே இதுவரை இருக்கிறது!பொதுவாகத் தமிழ்த் தலைமைகள் உடமை வர்க்கத்தோடு பிணைந்தே இருந்தவர்கள்.நிலவுகின்ற அமைப்புக்குச் சார்பாகவே இயங்கியவர்கள்.அது,செல்வாவாக இருந்தாலென்ன இல்லை பொன்னம்பலமாக இருந்தாலென்ன எல்லோருமே ஏகாதிபத்தியங்களின் கைக்கூலிகளாகவே இருந்து வந்துள்ளார்கள் என்ற முடிவே சரியானது.ஓட்டு வங்கிக்காக வெறும் இன-மத உணர்வுகளைத் தூண்டி "அடங்காத் தமிழன்" சுந்தரலிங்கம்-மங்கையற்கரசி வகை  அரசியல் செய்தவர்கள்,நமது கட்சியரசியல் தலைவர்கள்.இவர்களுக்கு அரசியலை விஞ்ஞான பூர்வமாக விளங்கிக்கொள்ளும் திறன் முக்கியமாகப்படவில்லை.ஆனால், இந்தியா-இலங்கை மற்றும் அமெரிக்க உளவுத்துறை இந்த வெகுளித்தனமான தமிழ்த் தலைமைகளைத் தமது இலாபங்களுக்காகப் பயன்படுத்திய வரலாறுதாம் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னானவின்றுங்கூட  நம்மை நடுத்தெருவில் விட்டுள்ளது- மூன்று இலட்சம் மக்களின் உயிர்களைக் காவுகொண்டு,நம்மை அகதிகளாக்கி அலையவிட்ட இத்தொடர் நிகழ்வில், தொடர்ந்தபடி அரசியல் செய்யும் தமிழ்த் தலைமைகளை யார் என்ன செய்துவிட முடியும்?எனினும்,இன்றைய வணக்கத்துக்குரிய சோபித தேரர்தம் அரசியல் நகர்வு-கோரிக்கைகளை வெறுமனவேயொரு "பெரும்பான்மை இனத்துள் இருந்து ஒரு முற்போக்குக் குரல்" என்றும்,தனிப்பட்ட நல்ல மனிதரது கோரிக்கையென்றும் ,அரசியல் ஜனநாயகச் செயற்பாடகக் குறுக்விட முடியுமா?






அவரது கோரிக்கையில் எது முற்போக்கானது?அனைத்து அதிகாரமுடைய ஜனாதிபதிப்பதவியை ஒழித்தலா அன்றி மகிந்தாவுக்குச் சர்வேதச சட்ட எல்லையில் வைத்துத் தண்டித்தலா?தமிழ்பேசும் மக்களது -இலங்கைச் சிறுபான்மை இனங்களது மட்டுமல்ல பெரும்பான்மைச் சிங்கள மக்களது பொருளாதார மற்றும் நல்வாழ்வுக்கான அடிபடைகள் குறித்த நோக்கானதா? எது முற்போக்கானது?தீடீர் திடீரெனவெழும் தனிப்பட்டவர்களதும்,கட்சித் தலைவர்களதும்"நல்ல மனது"க் கோரிக்களை வெறுமனவே நம்பிக்கொள்ளும் பற்பல சந்தர்ப்பத்தைத்தாம் இந்தப் பொருளாதாரவாழ்வில் உலகம் பூராகவுமுள்ள  மக்கள் நம்பிக்கொள்கின்றனர்.


"பாதிக்கப்பட்ட மன நிலையிலிருந்து" தமிழர்கள், பெரும்பான்மை இனத்துக்குள்ளிருக்கும் முற்போக்குக் குரல்களைச் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதென்பதைக் குறித்து நாம் வரலாற்று ரீதியாகப் புரிந்திருக்கிறோமோ?





இலங்கையின் ஆளும் வர்க்கமானது தனது எஜமானர்களான காலனித்துவக் கொடுங்கோன்மை அரசுகள்-ஏகாதிபத்தியங்கள்-பிராந்திய வல்லரசுகளோடிணைந்து பாதிப்புக்குள்ளாக்கிய இலங்கைச் சிறுபான்மை இனங்களது அரசியல் வாழ்வைக் குறித்து என்ன வகையான மதிப்பீடுகளோடு நாம் பெரும் பான்மை இனத்தின் முற்போக்குக் குரல்களை அணுகும்படி-அரவணைக்கும்படி கோருகிறோம்?

இலங்கையில் அனைத்து ஓட்டுக்கட்சிகளது -இயக்கங்களதும் அரசியல் வரலாறானது  இலங்கையைத் தத்தமது பொருளாதார மற்றும் பூகோள அரசியல் வியூகங்களுக்கமைய வழி நடாத்த முனையும் அந்நியச் சக்திகளால் ஊக்கப்படுத்தப்பட்டு,ஒருவகைக் கோணங்கித்தனமான அரசியலாகவே இன்றும் நகர்கிறது.முள்ளிவாய்க்காலுக்குப் பின்புங்கூட இனத்துவ அரசியலின் அடையாளப்படுத்தப்பட்ட இனவொடுக்கு முறையானது சாரம்சத்தில் இலங்கையின் ஒற்றைத் துருவ இனத்துவ அடையாளத்துக்கான நிபந்தனைகளைத் தாங்கியுள்ளது.இது பாராளுமன்றக் கட்சி அரசியலுக்குத் தேவையானது.இதை மிகத் தறுவாகக் கடைப்பிடிக்கும் இலங்கையை மாறி,மாறி ஆளும் கட்சிகளானவை இதுவரை இலங்கையின் இனப் பிரச்சனைக்கான எந்த முடிவுக்கும் வர முடியாதிருப்பதன் பின்னணி என்ன?வளர்த்தெடுக்கப்பட்ட சிங்களப் பெரும்பான்மை மனவியல்புக்கேற்ப அரசியல் -கட்சி நகர்வுகள் பெரும்பாலும் இலங்கை ஆளும் வர்க்க நலனின் பொருட்டென்பதற்கப்பால் நம்மை அண்டிய தேசத்தினதும் அரசியல் ஸ்த்திரத்தன்மை மற்றும் பூகோள அரசியல் நலன்களைப் பின்னி வைத்திருப்பதென்பதில் இன்றைய வண.சோபித தேரர்தம் கருத்திலிருந்து புரிவது கடினமானதா?

இலங்கைத் தரகு முதலாளியத்தின் வளர்ச்சியானது பல் தேசியக் கம்பனிகளின் தேசங்கடந்த வர்த்தகத் தொடர் சங்கிலியால் பின்னப்பட்டபின் இலங்கையின் உள்நாட்டுப் போரில் அதன்பங்கு பெரிதும் யுத்தத்துக்கான முனைப்பைச் செய்வதில் தூண்டுதலாக இருந்தது.அதன் விளைவு முள்ளிவாய்க்காலில் எந்த  அரசியலறமுமற்ற கொடும் யுத்தத்துள் தமிழ் மக்களைச் சிக்கவைத்த சிங்கள அரசு முற்றும் பாசிசப் புலிகளது அரசியலானது எவர்களது நலன்சார்ந்திருந்தது-இப்போது அதன் மிச்சசொச்சங்களதும் அரசியலது தெரிவு எது?அந்நிய நலன்களது தெரிவாக இது இருக்கவில்லையா?பிளவுண்ட உலக நிதி மூலதனங்களது பிடியுள் சிக்குப்பட்ட இலங்கையினது வரலாறாக இவை இருக்கும்போது வண.பிதா சோபித தேரர்தம் கருத்துக்களைப் பரந்துபட்ட மக்களது தெரிவுகளாக வரையறுக்கும் அவசரம் அரசியற் தற்கொலைக்கொப்பானது.இத்தகைய தற்கொலையைத் தமிழ்பேசுபவர்கள் ஏலவே புலிகளை ஆதரித்தபடி செய்துவிட்டனர்.


இன்றைய பிளவுண்ட உலக நிதி மூலதனத்துக்கு இலங்கை வேட்டைக்காடாகப் பலப் பரிட்சார்த்த களமாக இருக்கிறது.நேட்டோ[NATO -wirtschaftliche und strategische Interessen ] தலைமையில் தம்மை முன் நிறுத்தும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நலனானது இருஷ்சிய மற்றும் சீனா ,இந்திய மற்றும் பிறிக்ஸ் கூட்டமைகளும்[BRICS  ] கூடவேயான சங்காய் கூட்டமைப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்குள் [The Shanghai Cooperation Organisation  ]முட்டிமோதும் தருணங்கள் இலங்கையின் இனப் பிரச்சனையுள் புலிகளை அழித்துபோது கூடவே பல்லாயிரம் அப்பாவி மக்களையும் அழித்தே மோதியது.இது, ஒருபோதும் இலங்கையில் அரசியல் ரீதியானவொரு தீர்வுக்கு இலங்கையிலுள்ள பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை இனங்களை இணங்க விடுவதாகவில்லை.எந்தவொரு சமயத்திலும் ஒவ்வொரு இனங்களையும் எதிரெதிர் நிலைக்குத் தள்ளிவிடுவதற்கான சிறு-பெருங் கட்சிகளைத் தயார்ப்படுத்தி, இயக்கி வருகிறது.அநேகமாக இலங்கையிலுள்ள அனைத்துக் கட்சிகளும்-இயக்கங்களும்  இந்தக் கயிற்றில்கட்டப்பட்டு பொம்மலாட்டஞ் செய்யப்படுபவை.இந்தப் பொம்மைகளின் பின்னே பிணைக்கப்பட்ட கயிற்றைப் பிடித்திருப்பவர்களின் அரசியலுக்கு விசுவாசத்தைத் தெரிவிப்பதில்"பெரும்பான்மை இனத்துக்குள் இருக்கும் முற்போக்குக் குரல்"முகமூடி அவசியமென்றால் அதையும் செய்யுங்கோ சாமிகளா!.ஆனால், இந்த முற்போக்குக் குரல் நமக்குப் புதில்லை!இவைகளைவிட மிக நேர்த்தியாக லங்கா சமசமாயக் கட்சி மற்றும் கொல்வின் ஆர்.டி.சில்வா போன்ற பெருந்தலைவர்களிடமிருந்தும் இன்றைய வாசு தேவ நாணயக்காரா வரையுமாக நாம் பார்த்தும் -கேட்டும் ஆச்சு!நடந்தது என்ன?

தனிப்பட்டவர்களதோ அன்றி ஒரு கட்சியினதோ, தலைவரினதோ விருப்புக்குத் தெரிவுக்கு வெளியிலேதாம் இனப்பிரச்சனைக்கான காரணிகளுண்டு.அது, பாராளுமன்றத்துக்கு வெளியிலேதாம் உண்டு.அதை, அணுகுவதில்தாம் மேற்காணும் நலன்களைக் குறித்து பேச்சு வருகிறது.இலங்கையில் ஆளும் வர்க்கத்தின் இருப்புக்கு -நலனுக்குத் தெரிவாகும் அரசியல் என்ன?அது கட்சிகளது புதிய நிதியூகத்துள் மாறிவிட்ட வர்க்க அரசியலது தெரிவுக்குள் இணைவுறும் தருணங்களென்ன?மகிந்தா குடும்பமோ அன்றிப் பட்டார நாயக்க குடும்பமோ இல்லை ரணில் குடும்பமோ வெறும் அரசியல் தலைவர்களில்லை.அவர்களின்று பல்லாயிரம்கோடிச் சொத்துக்களுக்குச் சொந்தக்காரர்களென்பதில் நாம் காணும் அரசியலென்ன-தெரிவென்ன?இவர்களுக்கும்,ஆசிய-ஐரோப்பிய நிதி மூலதனத்துக்குமிடையிலான வர்த்தகவுறுவுகள் எத்தகையானவை?இவற்றைப் புரிந்துகொள்வதிலிருந்துதாம் நாம் காணும் இலங்கையின் சட்டவாத அரசின் சாரம்சத்தைப் புரிந்துகொள்ள முடியும்.இங்கிருந்துதாம் புதிய அணிகளது கூட்டு,அவைகளால் முன் வைக்கப்படும் கோரிக்கைகள்,அவர்கள் மக்களைச் சொல்லி, அணி திரளச் சொல்லும் கட்சிகளுக்குப் பின்னால் தள்ளும் அரசியல் அமுக்கக் குழு மனப்பாண்மையானது இத்தகைய பின்புலத்தைத் தள்ளி வைத்துவிட்டு அகவிருப்புக்குட்பட்ட தெரிவுகளால் இவைகளை நாம் ஆதரிப்பதில்லை.இந்த விவாதம் நீள்கிறது.நான்தொடரும் விவாத்தில் மேலும் தொடர்வேன்.

ப.வி.ஸ்ரீரங்கன்
09.02.2014

Donnerstag, April 18, 2013

41 வது ,இலக்கியச் சந்திப்பு...

41 வது ,இலக்கியச் சந்திப்பு இலங்கையில் நடப்பது அவசியமே!

[சுசீந்திரன்-சிவலிங்கம் போன்றோரது கருத்துக்கள்மீதான மாற்றுக் கருத்தாடல்].

லன்டனில் நடந்தேறிய 40 வது இலக்கியச் சந்திப்புக்குப் பின் 41 வது இலக்கியச் சந்திப்பை இலங்கையில் நடாத்தவேண்டுமெனத் தொடர்ந்த கதையாடல்கள் இப்போது சந்திக்கு வருகின்றன.இங்கே, குழுவாதம் மேலும் நெருக்கடிக்குள் நகர்த்தும் தமிழ்த் தேசியவினத்தின் ஓரளவான சனநாயகப்பண்புக்குடந்தையான இச்சந்திப்பைத் தொடர்ந்து, சிதைத்துவரும் இந்தக் குழுவாதமானது இன்றுச்சத்தில் வளர்ந்து கிளைபரப்புகிறது?.

திரு.சிவலிங்கம் மற்றும் ,நண்பர் திரு.சுசீந்திரன் போன்றோர் தமது கருத்துக்களைப் பதிவுசெய்திருக்கின்றனர்.இருவருமே குழுவாதத்தின் சதித்தனமான அணிச் சேர்க்கைகள் குறித்துப் பேசுகிறார்கள்-வரவேற்கப்பட வேண்டியது.

இத்தகைய குழுவாதமானது கடந்த நான்கு-ஐந்து சந்திப்புக்குள் வலுவாகவும்-வேகமாகவும் வளர்வதற்கான தோற்றுவாய்கள் மெல்லத் தலித்துவ,சாதிய-பெண்ணிய அடையாளங்கட்குட்பட்ட  நலன்களது தெரிவில் -இலங்கை ஆளும் வர்க்க நிகழ்ச்சி நிரலை - இந்திய நலன் மற்றும் லொபிக் குழுக்களால் மிக நேர்த்தியாக நமக்குள் திணிக்கப்பட்டதைக் கடந்த  2005 ஆம் ஆண்டுகளிலிருந்து "நாம் நேர்மையான முறையில் அரசியலைக்கொண்டிருந்தால் " கண்டடைந்திருப்போம்.

இது, காலங் கடந்த ஞானமாகவே திரு.சுசீந்திரனது கருத்துக்களிலிருந்து  தொகுக்கமுடியும்.இதுவரை இத்தகைய குழுவாதத்துள் இலக்கியச் சந்திப்புச் சிதைவதைக் கவனத்துள் எடுக்காது அத்தகைய ஓட்டத்தோடு ஒத்தோடிய நண்பர் சுசீந்திரன் இப்போது, இது குறித்துக் கருத்துச் சொல்வது இந்த நெருக்கடியின்  வன்மத்தை உண்மையாவுணரவைக்கிறது.என்றபோதும் , இதன் அரசியல் என்ன?-தெரிவுகள் என்வென்பதைக் குறித்து நாம் பார்த்தாகவேண்டும்.

இன்றைய  கட்டத்துள் புலம் பெயர் எதிர்ப்பிலக்கியப் பாரம்பரியத்தின் அறிவின்மீது,மொத்தக் குத்தகைச் செய்தவர்கள், இந்தத் தளத்தின் மீது எவரொருவர் அறிவாந்த தேடலையிட்டுக் கொள்ள முனைந்தாலும் அந்தத் தேடல்மீதான எதிர்ப் போக்கான மறுதலிப்பின் வினையாற்று குறிப்பிட்வொரு தளத்தில் தன் தர்க்கத்துக்குமாற்றான கருதுகோளை -அதன் உச்ச பச்ச நிராகரித்தலூடாய் இருப்பிழக்கத்தக்க பனுவல்களாக மாற்றவதிலும்,குறுகிய மனத்தளவான மதிப்பீடுகளின் மாதிரிகளைக் கொண்டு, வெற்றிடத்தை நிரப்புதலில் இதுகால வரை காலத்தைக் கடத்திவருகிறது இந்த இலக்கியச் சந்திப்பும், அதன் நிழல் தலைமைகளும்.இது ,40 வது இலக்கியச் சந்திப்புள் வலு உச்சத்திலிருப்பதைக் காணக் கூடியதாகவே இருக்கின்றது.தம்மைத் தாமே தலைமைத்துவ வடிவமாகவுணரும் அதிகாரத்தை இவர்கள் கைக் கொண்ட தருணமானது ஒருவித அரசியற்றொடர்ச்சியை இலங்கைக்குள் வலிந்து காணுமிடத்துள் இவர்களது தெரிவு, இலங்கைக்குச் சந்திப்பை நகர்த்துவதில் குறியான எதிர்ப்பார்ப்பானது அதற்கான தெரிவுகளில் அணிகளைக் கட்டியமைத்தது.அதுள், "தலித்தியம்-சாதிய மார்க்சியம் " எனப் பல மானுடவிரோதக் கருத்தாடல்களை இதன் எதிர்ப் பாளர்களுக்கு அது வலிந்து போர்த்தியபோது இன்றைய இலங்கையின் பிளவுவாத அரசியலது உச்சம் புலம்பெயர் மக்களுக்குள் இடறிக்கொண்டதை நாம் உணர்கிறோம்.




இவர்களுக்கும் இந்திய-இலங்கை அரசுகளுக்கிடையிலான தொடர்புகள் புலம்பெயர் மக்கள்மீதான காயடிப்பு அரசியலெனும் வியூகத்துக்கிணையவே தொடர்கிறது.இது, அடக்குமுறையாளர்களோடு, ஒடுக்கப்படும் மக்களைக் கட்டிப்போடும் அரசியலை ஜனநாயகத்தினும்,அபிவிருத்தியினதும் பெயரில் தொடர்கிறது.இதற்கான திட்டமிடப்பட்ட பரப்புரைகளுக்கிசைவாகவே "தீர்மானங்களும் "-உரையாடல்களும்,பயிற்சிப்பட்டறைகளும் கட்டியமைக்கப்படுகின்றனர். இத்தகைய நோக்குக்கு இலங்கையில் தொடரும் இலக்கியச் சந்திப்பானது புத்திமட்டத்தில் வலுவான கருத்தியலை ஊன்றமுடியும்.தமிழ்த் தேசியவினத்தின் இதயத்தைக் குதறும் அரசியலைத் தொடரும் இன்றைய தமிழ் அரசியல் நடாத்தையுள் இது, மற்றொரு தெரிவு.இதற்குள் சிக்குப்பட்ட பிழைப்புவாதத் தலித்துவ-குழுவாத,இயக்கவாத மாயைக்குட்பட்ட  நபர்கள்-குழுக்கள் ,தமது அராசக அரசியலைத் தொடர்ந்து, உதயன் பத்திரிகையை நெருப்பூட்டியெரிப்பதிலிருந்து மீளவுருவாக்கும்  வன்மைத் தனமான அரசியலுள் இலக்கியச் சந்திப்பும் சிக்குண்டே போனது.

இலண்டன் 40வது இலக்கியச் சந்திப்பின் தற்காலிகத் தலமையானது இலங்கையின் அரசியல் சூழ்ச்சியோடு ஒன்றித்தே இயங்கிக்கொண்டிருக்கிறது.இதுள் ,இராகவன் என்ற தனி நபருக்குப் பின் பலர் தம்மை இனங்காட்ட மறுக்கின்றனர்?.

இத்தகைய பண்பினது விருத்தியே மாற்றுக்கருத்தாளர்களை மிகவும் பிளந்து குறுகிய இழி நிலைக் குழுக்கட்டல்களாக விரிந்து தனிமனித் தேவைகளை நிறைவேற்றுகிறது.

பரந்துபட்ட மக்களின் உயிரோடு விளையாடும் கொடிய யுத்தப் பிரபுக்களை அண்டிப் பிழைக்கமுனையும் ஒருகூட்டம், தம்மைக் குறித்த புனைவில் ,தாம் மாற்றுக் கருத்துத்தளத்திலிருந்து வந்தவர்களாககச் சொல்லிக்கொண்டு,இலங்கையினது இனப்படுகொலைகளை நியாயப்படுத்துகிறது.இத்தகைய சதிகாரர்களுடுடன் ஒரே மேசையில் உட்காருவதற்கு மேலுங் சிலர் நமக்குள்ளும் இருக்கத்தாம் செய்கிறார்கள்.அவர்கள் உலகத்தில் ஒடுக்கப்படும் மக்களது மறைக்கப்பட்ட செய்திகளையும் தொடர்ந்து கொணர்வதே தமது கடமையென்றும் தம்பட்டம் அடிப்பதில் திருப்திப்பட்டும்  கடந்தகாலத்துள் இருந்தார்கள்.அவர்களுள் நண்பர் சுசீந்திரனும் ஒருவராகவே இருந்தாரென்று குற்றஞ் சுமத்தாதுபோயினும் எனது உணர்வுக்கு அப்படியேதாம் படுகிறது!இந்த இழி நிலைக்கு மாற்றான தெரிவுகளை இனங்காணவேண்டிய சந்தர்ப்பத்தை இத்தகைய பண்பே இல்லாதாக்கியது!

இன்று, இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் பின் போராட்டச் சூழலில் இலங்கையில் மிகவும் கூர்மையடைகிறது.இங்கு, இனங்களுக்குள் நிலவும் பரஸ்பர புரிந்துணர்வானது மிகக்கேவலமான அரசியல் சூழ்ச்சியால் உடைத்தெறியப்பட்டு மக்களை அவர்களது மண்ணிலேயே அந்நியர்களாக்கும் இழி நிலையில் நாம் உந்தித் தள்ளப்பட்டுள்ளோம்.தமிழ்பேசும் மக்களின் பிரச்சனையுள் மிக நெருங்கிய உறவுடைய நாடான இந்தியாவின் கபடத்தனமான பொருளாதார ஆர்வங்கள் இலங்கையைக் கூறுபோட்டுக் காரியமாற்றுவதல்ல.மாறாக, இனங்களின் -பிரதேசங்களின் முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தி அந்தந்த இனத்தின் வீரியத்தை-படைப்பாற்றலை முழுமையாக அழித்து அந்தத் தேசத்தை முழுமையான தனது அரசியல் ஆதிக்கத்துக்குள் நிலைப்படுத்துவதே அதன் நோக்கமாகும்.,சாதிய வாதம்-தலித்துவம் மற்றும் பிரதேசவாதம் உச்சத்துள் வைத்துக் கருத்தியற்றளம் உருவாக்கப்படுகிறது.இதுவே, சாதிய அடையாளத்தைத் சுதேசி அடையாளமாக ஏற்கவேண்டுமென ஆய்வும் செய்து ,இந்தியாவில் இருப்புற்ற  நிறவனப்பட்ட வடிவமாகச்  சாதிய அடையாளத்தைக் கோருகிறது.இதற்குத் தோதாகவேதாம் புலம்பெயர் தலித்துவக் குழுக்கள் வளர்த்தெடுக்கப்படுகின்றனர்.இவர்களது தெரிவில் ,வகுக்கப்படும் இந்தச் சதித்தனமான அரசியலானது பரந்துபட்ட மக்களுக்கு எதிராகவே தொடர்கிறது.
 
எனவே தொடர்ந்து ஊன்றப்படும் மேற்சொன்ன அரசியலது தெரிவாகவே நமக்குள் கடந்த காலத்துள் இலக்கியச் சந்திப்போடு "சமாதானப் பட்டறை, அபிவிருத்திப்பட்டறை,தீர்வுத்திட்ட ஒன்றுகூடல்,சிந்தனையாளர்களது அவைக்கான கருவூலம் அமைத்தல் " என்றும், இன்னபிற வடிவங்களிலும் மிக நேர்மையின்றிப் பொய்யுரைத்துத் தமிழ்பேசும் மக்களை அரசியல் அநாதைகளாக்கிவிட முனைந்தோம்!

இதன் தொடரக இன்று ,எங்கு நோக்கினும் அந்நிய உளவு முகவர்களின் அணிவகுப்பே நமக்கு முன் நிகழ்கிறது.இது கொள்ளும் முகமூடிகளானது மேற்சொன்ன நிகழ்வுகளாக விரிகிறது.இலங்கையின் கட்சிகள்- இயக்கங்களின் எந்தப் பக்கத்தைப் பார்த்தாலும் அவை குரூரம் நிறைந்த பக்கமாகவே தெரிகிறது.இதை மூடிமறைத்தல் இன்னுமின்னும் நம்மை அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்லும்.இலங்கைக்கு நகர்த்தப்பட்ட இலக்கியச் சந்திப்புக்காக க் கைக்கொள்ளப்பட்ட அரசியல் மிக மோசமான தெரிவு.இது,  பற்பல சந்தேகங்களுக்குட்பட்டுச் சிந்திக்கவேண்டிய அணிதிரட்சியாகும்.தனிநபர்கள் அணியுறும் தருணமானது எப்பவும் ஒடுக்குமுறையாளருக்கு எதிராக இருப்பதில்லை!அது, ஒடுக்கு முறையாளரது அரசியலது தெரிவாகவும் மாறியதும்-இயங்கியதும் நமக்கு ஏலவே பாடமாச்சு.
இந்த அரசியல்-சதிகளைப் புரிய நாம் வள்ளவரிடம் போவோம்.அதன் அநுபவத்தோடு இலங்கைக்குள் நகர்த்தப்படும் சாணாக்கியம் பிழைப்புவாதத் தமிழர்களை எப்படியெல்லாம் பிழைக்கத் தூண்டுகிறதெனப் பார்க்கலாம்.

"வில்லேருழர் பகை கொளினுங் கொள்ளற்க
சொல்லே ருழர் பகை." -குறள்:872, பக்கம்:347

வள்ளுவர் பேனா முனையை எதிர்க்காத அரசியல் சொல்ல,சாணாக்கியன் அதனையும் கடந்து மேலே செல்கிறான்.இவனது தந்தரமே மிகக் குள்ள நரித்தனமானதும்,நயவஞ்சகமானதும்கூட!

சாணாக்கியனின் உலகத்தில் ,தடுக்கி விழுபவர்கள்கூட ஒரு உளவாளியின்மீதே விழும் அளவுக்கு உளவுப்படைகள் அவசியமென்கிறான் சாணாக்கியன்.இன்று நமது புலம்பெயர் வாழ்வில் எங்கு நோக்கினும் உளவு அமைப்புகளுக்குத் தொண்டூழியஞ் செய்யவே "இலக்கியச் சந்திப்பு"ச் செய்பவர்களாகவும்,"சிந்தனையாளர்களின்" அவை அமைப்பவர்களாகவும் தமிழ் மக்களது துரோகிகள் தமது அரசியலைத் தமிழ்பேசும் மக்களது பெயரில் முன் தள்ளுகிறார்கள்.இவர்களே 40 வது இலக்கியச் சந்திப்பில் இலன்டனில் மிக நேர்த்தியாகக் கூடினார்கள் . கூடவே ,பலருக்குத் தலைவெட்டி ஒரு வினோதமான அரசியல் நடாத்தையைச் செய்தனர்.இதற்காகவே, பயிற்றுவிக்கப்பட்ட தலித்துவக் குழுக்களது தயவில் மேலும், விருத்தியான இந்த அரசக அரசியல் மெல்லத் தளத்தை மாற்றி இலக்கியச் சந்திப்பைக் கையகப்படுத்தியது.இதற்கு உடந்தையான இலங்கை -இந்திய உளவுக் கூலிகள் தொடர்ந்து பிளவுவாத அரசியலைகத் தமது  எதிர்ப்பாளருக்கு முன் நிறுத்திச்  சாதிய வாதத்தை ஆயுதமாக்கினர்.இது குறித்துத்தாம் சுசீந்திரன் தனது கட்டுரையில் கறாராகப் பேசியுள்ளார்.


இவர்களது எஜமானர்களால் பழிவாங்கப்பட்டுத் தமது உறவுகளைப் பலிகொடுத்தும் தமது வாழ்வை இழந்தும் தடுப்பு முகாமுக்குள்ளும் திறந்தவெளிச் சிறைகளுக்குள்ளும் பரதவிக்கும் தமிழ் மக்களுக்கு இவர்கள் மீளவும் துரோகமிழைத்திட தமக்குள் ஒன்றிணைகிறார்கள்.இதிலிருந்து தமது எஜமானர்களது அரசியலுக்கு வெளியில் மாற்று அரசியல் மையமுறுவதைக் கண்காணிக்கவும்,தடுத்து உடைத்தெறியவும் எதிரிகள் மிக நிதானமாகத் தமக்குள் வலுவடைகிறார்கள்.இது குறித்துப் பரவலாக விளங்க முற்படுவோம்.

கடந்தகாலத்தில் பிரான்சின் வரலாற்றியலாளர் Alexis de Tocqueville தனித்துவமான சுதந்திரத்துக்காக-விடுதலைக்காகப் போராடிய முன்னிலையாளர் என்பதை நாம் அறிவோம்.இத்தகைய தனித்துவமென்பது தமது இனத்துக்கானதாகவே இருக்கும் என்பதை Olivier Le Cour Grandmaison அல்ஜீரிய நடவடிக்கைகளில் பார்க்க முடியும், 1840 களில் அல்ஜீரியக் குடிகளை-குழந்தைகளைப் பெண்களை மிருகங்களிலும் கேவலமாக வருத்திய வரலாறை எவரும் இலகுவில் மறந்திட முடியாது.என்றபோதும்,கடந்த முள்ளி வாய்க்கால் யுத்தமானது  இந்திய-இலங்கை அரசுகளது கூட்டு வன்னிப் படுகொலையாக மாறியது!இதுவே ஒரு கட்டத்தில் தமிழினப் படுகொலை நெட்டூரமாக எழுந்தது.இதை எந்தவொரு வரலாற்றுத் துரோகத்தோடும் ஒப்பிட முடியாதவையாகவே நான் கருதுகிறேன்.
 
ஜனாதிபதி இராஜபக்ஷ தமிழ் மக்களை ஏமாற்றியபடி அவர்களைப் பூரணமாகக் கையலாகாதவர்களாக்கப் போடும் அரசியல் சுழிகளில் அகப்பட்ட இலங்கைச் சிறுபான்மை இனங்கள் யாவும், இனிமேற்காலத்தில் இலங்கையில் அடிப்படை உரிமைகளைபெறுவதற்கான எந்த அரசியற்பலத்தையும் பெற்றுவிடமுடியாதளவுக்கு இலங்கையின் இராணுவவாதம் இருக்கிறது.இதைக் கவனிக்காது நாம் புலிகளின் அழிவில் இலங்கைக்கு விமோசனமெனக் கருத்தாடமுடியாது.அது,மிகவும் கேவலமாக இலங்கையின் அரச தந்திரத்துக்குப் பலியாகிப்போவதாகவே இருக்கும்.ஆனால் ,இராகவன் குழு மற்றும் ,தலித்துவக் குழுக்கள் இராசபக்சே பின்னால் சனநாயகந் தேடியதும்-திரண்டதும் நாம் ஏலவே, பார்த்த கதைதாம்.இவர்களது அரசியல் இன்று ,மாற்றுக் கருத்துத் தளமான இலக்கியச் சந்திப்பை மெல்ல விழுங்கி ஏப்பமிட்டிருப்பினும் அதன் அரசியலைச் சரியாக மதிப்பிட்டே ஆகவேண்டும்.

தமிழ்பேசும் மக்கள் இவ்வளவு தூரம் அழிவுக்குள் உட்பட்டுவரும் இந்தத் தருணத்தில்,எவரெவாரோ அந்த மக்களின் நலன்களைச் சொல்லியே அவர்களை அழித்தும்,அவர்களின் வாழ்வாதாரங்களைச் சூறையாடியும் தத்தமது வாழ்வை மெருக்கூட்டியுள்ளார்கள்-மெருக்கூட்ட முனைகிறார்கள்.இதுவரை,இலங்கை இனப் பிரச்சனையுள் நடைபெறும் அரச தந்திரங்கள்-இராணுவ வியூகங்கள் ,நெறிகள் யாவும் பாசிசப் போக்கினது வழிப்பட்டதாகும்.இதை மிக இலகுவாகச் செயற்படுத்தும் இந்தியா-அந்நிய அரசியலே நமது மக்களின் வாழ்வோடு மிகக் கேவலமாக யுத்தம் மற்றும் மனித விரோத அரசியலைக் கட்டி வளர்த்து வந்தது-இன்னும் தொடர்ந்து வருகிறது.

இதற்காக அமெரிக்காவும், மேற்குலகமும் ஒரு புறமும்,இந்தியாவும்,சீனாவும் மறு புறமாகக் காய் நகர்த்தி எமது தேசத்தை அந்நிய நலன்களின் வேட்டைக் காடாக்கியுள்ளது.இந்நிலையுள்,தமிழ் பேசும் மக்களது அடிப்படைப் பிரச்சனைகளைப் புலியழிப்பிலிருந்து விளங்க முற்படுபவர்கள் மீளவும் வரலாற்றில் உண்மைகளையும் புலிகளுக்கூடாகவே கற்பிக்க முனைகின்றனர்.புலித் தலைமையினது பாதையிலும் மீளவும் நடக்கக் கற்பிக்கின்றனர்.
 
காலனித்துவக் காலக்கட்டத்தில்-இலங்கையின் சமூக வளர்ச்சிக்காலக் கட்டத்தை மறுத்து, முரண்பாடுகளை மழுங்கடித்த காலனித்துவம்,இலங்கையில் தீடீர் முதலாளித்துவத்தைத் தோற்றுவித்து அதையே அரச முதலாளியமாக விட்டுவைத்துச் சென்றது.அதன் மீள் வருகையில் நவ காலனித்துவம் தொடர்ந்து இருப்புக்குள்ளாகியது. இதுவே,இப்போதும் இலங்கையின் பொருளாதார முரண்பாடுகளால் வளர்வுறும் சமூக வளர்ச்சிப்பாதையில் இனங்கள் உதிர்ந்து"இலங்கையர்கள்"எனும் கோசம் வலுப்பெறுவதற்கு முன்பே சமூக வளர்சியை மறுத்தபடி, அதன் இயல்பான வளர்ச்சிக்குக் குறுக்கே நின்றகொண்டும், திடீர்"இலங்கையர்கள்"எனும் தேசிய இன அடையாளத்தை, முழுமொத்த இலங்கை வாழ் இனக் குழுமத்துக்கும் பொருத்திவைத்துத் தமது நிதியாதாரத்தை இலங்கையில் பெருக்கும் பெரு முயற்சியில் மகிந்தாவினது குரலாக அனைவருக்குமான இலங்கை என்கிறது.இது, சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு மிகச் சாதகமான குறுகிய இலாபங்களை வழங்கிக்கொள்வதால் இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்களை ஒட்ட மொட்டையடித்து அவ்வினங்களைப் பெரும்பான்மைச் சிங்கள ஆதிக்கத்துள் உள்வாங்கி அழிப்பதற்கு மிக நேர்த்தியான சூழலை உருவாக்குகிறது.இங்குதாம் தலித்துவக் குழுக்களது அரசியல் சதியும்-பிழைப்புவாதமும் இலங்கைக்கு மிக நெருக்கமாக இருக்கிறது.இது, ஒரு கட்டத்துள் நிலத்துள் நிலவும் "டக்ளசு "  வகைப்பட்ட புதிய குட்டி முதலாளிகளோடொரு சமரச அரசியல் சதிக்குட்பட்டு நிகழ்ச்சி நிரலை வகுத்துள்ளது.இதன் தொடர்  அகிம்சை, காந்தியமெனப் பின்னப்பட்டுச் சர்வோதயம்வரை மீளவொரு லொபித்தனமான அரசியலுக்கு நம்மைக் காட்டிப் போடுகிறது.இதன் மறுபக்கம் அராசகமே!


நான்,தலித்துவத் தேவதாசன் ,இராகவன் ,கீரன் போன்றவர்கள் முன் வைக்கும் "நாம் இலங்கையர்கள்"என்ற வாதத்தை மீளப் பேச முனைகிறேன்: இலங்கையைவிட்டுப் புலம்பெயர்ந்து மேற்குலகில் வாழும் இலங்கையர்களுக்குள் பற்பல கூறுகள்,பிளவுகள் இருக்கும்போது "இலங்கையர்கள்"எனும் பொது அடையாளம் அவசியமாக இருக்கிறதென்றால் பிறகெதற்குத்"தலித்துவ அடையாளம்",பிரதேச அடையாளம்,மதஞ்சார்ந்த குழும அடையாளம்?

கலாச்சாரத் தேசியம் பேசுபவர்கள் எதற்காக"இலங்கையர்கள்" எனும் அடையாளத்துக்குள் ஒரு இனத்தின் தனித்துவத்தையும்,உரிமையையும் மறைப்பது?

தமிழ்த் தேசிய இன அடையாளத்தை மறுபவர்கள் பின்பு தலித்துவ அடையாளத்தை எதற்காகத் தூக்கிப்பிடிப்பது?-மலையகத் தேசியத்தையும்,இஸ்லாமியத் தேசியத்தையும் பற்றிப் பேசுவது?

ஒடுக்குமுறைகள் யாவும் ஒடுக்குமுறைகளாகவே இருக்கும்போது அதில் ஒரு கூறை மறைத்துவிட்டு மறுகூறைத் தூக்கிப்பிடித்து எந்தவுரிமையையும் பெற்றுவிட முடியாது.இத்தகைய நடாத்தையானது சிங்கள ஆளும் வர்க்கத்தினது கனவை நிறைவேற்றும் கயமைக்குப் பலியான அரசியல் வாழ்வாகும்.இதுவே, தலித்துவக் குழுக்களது தலைவிதி!

"ஈழப்போருக்கு"பின்னான இலங்கையில்,பெரும்பகுதி உழைக்கும் மக்கள்,இன அடையாளப்படுத்தப்பட்ட அரசியலில்,சிறுபான்மையாகவும் பெரும்பான்மையாகவும் பிளவுபட்டுக்கிடக்கும் இன்றைய சூழலில்,இலங்கையில் சிறுபான்மை இனங்களே கிடையாதென்றும்,"நாம் அனைவரும் இலங்கையர்களே"என்றும், மகிந்தாவிடும் குரலில் மாறிவரும் பொருளாதாரச் சூழலில் இலங்கையை முற்றுகையிடும் அந்நியப் பொருளாதார ஆர்வங்கள் இருக்கக் காணக்கடவது.இவை, இன்றைய ஆசிய மூலதனத்தோடான உறவில் பின்னிப்பிணைந்து இலங்கையிலுள்ள இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளைத் தமது இலக்குக்கேற்பச் சொல்லுகின்றன.

உலக ஏகாதிபத்தியங்கள் தமது பொருளாதார மற்றும் புவிகோள அரசியல் ஆதாயங்களுக்காகப் பொது அமைப்புகள் எனும் வடிவில் "அரசுசாரா"அமைப்புகளை உருவாக்கி வைத்து அவற்றை இயக்குவதுபோன்று, இன்றைய இலங்கை புலிகள் அழிப்புக்குப் பின் இலங்கைத் தேசத்தில் சிறுபான்மை இனங்களை ஒட்ட மொட்டையடிக்க இத்தகைய "அரசுசாரா"அமைப்புகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து இயக்கத் தக்கபடி உள்ளுர் அமைப்புகளைத் தோற்றுகிறது.இது மிகவும் ஆபத்தானவொரு மேற்குலக ஏகாதிபத்தியங்களின் அரசியல் வியூகத்தின் தொடர்ச்சியாக நம்முன் கொணரப்படுகிறது.

இங்கே,இலங்கை அரசானது தனது அரசியல் நிகழ்ச்சி நிரலை மையப்படுத்தபட்ட இலக்குக்கமைய முன்நகர்த்துவதற்கு இத்தகைய அமைப்புளது ஒத்துழைப்புகளுடாகப் பொதுக் கருத்தை ஏற்படுத்தி, அதையே மக்களுக்கு நன்மை பயப்பதாகவும் இவ்வமைப்புகளுடாகச் சொல்கிறது. இங்குதாம் 41வது இலக்கியச் சந்திப்பின் கதி ஒரு தெரிவுக்கான அரசியலை மையப்படுத்திச் செல்கிறது!

இன்று, புலம் பெயர்ந்து மேற்குலகில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் இலங்கை அரசுக்குச் சார்பான அரசியலை முன்தள்ளும்-முன்னெடுக்கும் இக் குழுக்கள், பல்வேறு வடிவங்களில் தமது முகமூடியைத் தயார்ப்படுத்தி வைத்திருக்கிறது.இதுள் தலித்துக்களுக்காகக் குரல் கொடுக்கும் அமைப்புகளாகவிருந்தாலுஞ்சரி அல்லது கிழக்குக்குப் பிரதேச  மாநில உரிமை -முதலமைச்சர் அரசியலானாலுஞ்சரி -இல்லை -இதையுற்தாண்டி வன்னி மக்களுக்கு உதவும் அமைப்புகளாகவிருந்தாலுஞ்சரி இவையாவும் இலங்கை அரசினது இன்றை இனவழிப்பு அரசியல் வியூகத்துக்கு வலுச் சேர்ப்பதற்கான கூறுகளாகவே இனம் காணத்தக்கன.இதன் புள்ளியிற்றாம் இலக்கியச் சந்திப்பு ,41வது சந்திப்பை இலங்கையில் நடாத்திவிடுவதற்கானவொரு  "தார்மீக" நியாயத்தைத் தலித்துவ அரசியலைக்கொண்டு நிமிர்த்த முடியுமென இராகவன் குழுவும் நிரூபித்திருக்கிறது.

ப.வி.ஶ்ரீரங்கன்
யேர்மனி
17.04.2013

Sonntag, März 17, 2013

தமிழக மாணவர்களே,வீட்டுக்குப் போங்கள்!

மிழக மாணவர்கள் வீதிக்கு இறங்கிப் போராடுகின்றனர்!நம்மில் பலர் பூரித்துப் போய் வீர முழக்கமிடாத குறையாய் விதந்துரைத்து மகிழ்ந்து போகின்றோம்.அப்பாவித்தனமாக மாணவர்களைப் பலியாக்கும் இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரிவுகளுக்குள் சிக்குண்ட கட்சி அரசியல் செய்யும் கிறுக்குத் தனமானது, இந்த மாணவர்களது எதிர்காலத்தைப் பாழாக்குவதென்பது இந்திய-ஆசிய மக்களது படைப்புத் திறனை அழித்து, மேற்குலகத்தில் தங்க வைக்கும் ஏற்பாடாகும்.

உற்பத்தித் திறன்,ஊக்கம்,புதுமைப்படுத்தல் யாவும் மாதாந்தம் மாற்றத்துக்குள்ளாக்கப்பட்டுச் சந்தை,உற்பத்தித் தளத்தையெல்லாம் தக்க வைக்கப் படாத பாடுபடும் மேற்குலகம் மாதக் கணக்கில் மாணவரைத் திசை திருப்பி ,ஆசியாவுக்கான சாவு மணி அடிக்கிறது.




இதற்காக நமக்குள் நிலவும் பல முரண்பாடுகளை நமக்கான பெயரில் அவர்களே தமக்கான ஆயுதமாக எடுக்கின்றனர்.தரித்திர தேசங்களது தறுதலை மாணவர்களே-புரியுங்கோ!!

உங்களது போராட்டத்தை-ஆற்றலை வீணே "விழலுக்கிறைத்து" வறுமையையும்,பட்டுணியையும் உங்கள் பெற்றோருக்கு வழங்காதீர்கள்!இதன்வழி நமது தலைவிதியையும் நம்மைச் சாராது அந்நியருக்குக் காட்டிக் கொடுக்காதீர்கள்.

ஒடுக்கப்படும் தமது சகோதர இனத்துக்காகத் தோழமை கொள்வதென்பதை வரவேற்கவேண்டும்தாம்.ஆனால்,உங்களில் ஒரு பகுதி "உலக ஒடுக்குமுறையாளன் அமெரிக்காவென்ற ஏகாதிபத்தியம்" கொண்டுவரும்இலங்கைக்கு எதிரான  தீர்மானத்தை ஆதரிக்கச் சொல்கிறது இந்தியாவை. இன்னொரு பகுதி எதிர் என்கிறது!இந்த அரசியலானது சதிகுட்பட்ட கட்சிசார் நலன்களது தெரிவாகிறது.இதை உந்தித் தள்ளும் லொபிகளை இனங்காணாது கோரிக்கைகளின் பின் கண்களைக் கட்டவைத்து உங்களைச் சுடுகாட்டுக்கு வழிகாட்டும் வேடதாரிகளை நம்புவது இன்னொரு "ஈழத்தை"தமிழ்நாட்டில் உருவாக்குவதென்பதே உண்மையாகிறது.




அமெரிக்கத் தீர்மானம் ஆதரிக்கப்படவேண்டும் என்று கொலைக்கார இந்திய அரசிடம்போய் மண்டியிடும் இந்த மாணவர்கள் யாரைக் காக்கின்றனர்?

என்ன சொல்ல வருகின்றனர்?

இந்திய அரசு, ஒடுக்கப்படும் தேசியவினங்களது கோரிக்கைக்குப் போராட்டதுக்குத் துணை நிற்கும் நண்பன் என்கின்றனரா?தங்கள் தேசத்துக்குள்ளே நலிபடும் தேசிய இனங்களைக் குறித்து என்ன பார்வையைக்கொண்டிருக்கின்றார்கள் இவ் மாணவர்கள்?

நாகலாந்து ,காஷ்மீரி,மக்களையும்,பழங்குடிகளையும் கொன்று குவிக்கும் இந்திய அரசுதாம்,இலங்கையில் கூட்டாகத் தமிழ்பேசும் மக்களையும் கொன்றுபோட்டது.இந்திய அமைதிப்படைக் காலத்திலோ இந்திய இராணுவஞ் செய்த மனித மீறல்கள் பல்லாயிரம் குற்றங்களாக இன்னும் இருக்கிறது.இந்திய இராணுவங் கொண்ட வன்புணர்பு - செய்த பாலியல் வதைகள் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு "தமிழச்சிகள்" முகத்தில் ஒட்டி வைக்கப்பட்டிருக்கின்ற காலத்தைக் குறித்து, இந்த மாணவர்கள் அறியாதவர்களா?,போராட்டப் புறப்பட்ட இயக்கங்கள் செய்த கொலைகள்,பாலியல் வதைகள்,மனித வதைகளை நீங்கள் அறியாதவர்களா?,அல்லது அதன்வழி இன்று, வியாபாரிகளாக மாறிய அதே இயகத் தலைமைகளை இன்னுமா நம்புகிறீர்கள்?




தமிழுக்காப் போராடியதென்றும்,மொழிக்காக மறியலில் வாழ்ந்தேன் என்றும் கதைவிடும் திராவிடக் கட்சிகள்,தலைமைகள் இன்று, ஆசியாவின் முன்னணிச் செல்வந்தர்களாக மாறிய கதைகள் உங்கள் விழி முன்னே இருக்கும்போது இன்னும் என்ன வேண்டும் உங்களுக்கு?

"ஈழத் தமழர்களது" மீதமுள்ள வாழ்வும் அந்நியருக்காக விற்கப்பட வேண்டுமா?

சொல்லுங்கள் மாணவர்களே-சொல்லுங்கள்!!

பதிலும் வேண்டாம் ஒரு கத்தரிக்காயும் வேண்டாம்,வீட்டுக்குப் போங்கோ-வீதிக்கு இறங்குந் தருணம் இதுவல்ல!



தமிழகத்தின்விலங்கு இந்தியத் தேசியமாக இருப்பதை உடைக்கும் தருணம் இதுவல்ல!

தமிழக அரசு "ஈழத்த தமிழ்"அகதிகளை அகதி முகாங்களில் கைதியாக அடைத்துக் கண்காணித்துக்"கொன்சன்ரேசன் லாகர்களாக-Nazi concentration camps"அவற்றை வைத்தபடி, "இலங்கைக்குப் பொருளாதாரத் தடைவிதி" என்பது என்ன சீலம்பாய் அறம்?

ஆக,ஆளும் வர்க்கங்கள் தமக்குள் பங்குச் சண்டை நடாத்துகின்றன.அதை,ஒழுங்கு முறையாகத் தீர்க்கும்போது நம்மை நடாற்றில் தள்ளிவிட இந்த மாணவர்களும் பலியாகின்றனர்.

"அடேய்,போங்கடா-போங்கடி",போய் ஒழுங்காகப் படித்து வீட்டுக்கு உதவுங்கோ!

வேடிக்கை அரசியல் செய்து இன்னும் நம்மை முட்டாளாக்காது,கொலைக்கார இந்திய அரசைக் காத்து நமது மக்களையும்,இந்தியத் துணைக்கண்டத்துள் இந்தியப் பாசிச இராணுவத்தால் ஒடுக்கப்படும் தேசிய இனங்களது குரல் வளையை அறுக்கும் இந்திய ஆளும் வர்க்கத்துக்கு"நல்ல பிள்ளை" சான்றிதழ் வழங்காமலும், வீட்டுக்குப் போய் படிக்கும் அலுவல்களைப் பாருங்கள் மாணவர்களே!இத்தகை உங்கள் போராட்டம் உங்கள் மண்ணில் இராணுவ வாதத்தைக் கொணர்ந்து நாளை தமிழகத்து விடுதலைக்கு ஆப்பு வைக்கும்.




போங்கோ,போய் வகுப்புகளில் உட்கார்ந்து படியுங்கோ,உலகம் தமது உற்பத்தித் தளத்தைக் காக்க விரும்புகிறது.சீனாவிடம் பறிகொடுத்த மாதிரி இந்தியாவிடமும் பறிகொடுத்துவிடாது தடுக்க மாணவர்களைத் திசை திருப்பிப் படிப்பிலிருந்து விரட்டியடிக்கும் தந்திரமெல்லாம்[ http://www.sozialebewegungen.org/   ] உண்டு.
இதைத்தாம் கெரால்ட்  கற்ஸ்மாயர் -Prof.Dr.Harald Katzmair [  http://www.workinprocess.at/pages/MitarbeiterInnen/Katzmair.htm ]தினமும் வகுப்பெடுக்கின்றார்.உலகத்தைப் புரியவேண்டுமா?இந்த நபரையும்  கற்றுத் தேறுங்கோ!

இதைப் பல்வகைப் பொருளியல் நலன்சார் உறவுகளோடு பொருத்திப் பார்க்கவும்.படைப்பு-புதுமையை புகுத்தும் கல்வியெல்லாம் [http://blog.gpa-djp.at/socialmedia/kategorie/veranstaltung/  ]ஆசியாவை நோக்கி நகர்ந்ததை மீளக் கையப்படுத்த ஆசிய மாணவரது கல்விக்குப் பல வழிகளில் ஆப்பு வைக்கும் மேற்குலகத்தின் இன்னொரு வடிவம்தாம் உங்கள் இந்தக் கலகமுமாக இருக்க முடியும்.

புரியுங்கோ!

புரிந்து, வீட்டுக்குப் போங்கோ,மீளக் கைகளில் புத்தகங்களைத் தூக்குங்கோ-இதுவேதாம் நீங்கள்"ஈழத் தமிழர்களுக்கு" ச் செய்யும் நல்ல காரியம்.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
17.03.2013

Samstag, August 29, 2009

சோபா சக்தியும்,பிறழ் சாட்சியமும்


சோபா சக்தியும்,பிறழ் சாட்சியமும்:

முளைத்து மூன்றிலை எறிக!
 
 
"இலங்கையர்கள்,எமது நாடு"என்ற வாதங்களோடு தமிழ்பேசும் மக்களுக்குள் வண்டியோட்டும் சிங்கள அரச கைக்கூலிகள்,இலங்கையர்கள் என்றும்,எமது நாடுவென்றும் தமிழ்பேசும் மக்களைச் சுற்றியொரு உளவியல் யுத்தஞ் செய்வதும்,அதுசார்ந்து விரிந்த கருத்துச் சொல்லி,இலங்கையில் இனவாதங் கடந்த, இலங்கைவாழ் மக்களுக்கான ஒரு அரசாகச் சிங்கள இனவாத அரசை முன்னிறுத்தும் இன்றைய தருணத்தில், நாம் மீளவும் ஏமாற்றப்படுகிறோம் என்பதற்குச் சமீபத்தில் சிங்கள இராணுவத்தின் மிகக் கொடுமையான இனவழிப்பின் சாட்சி, வீடியோவாகக் காணக்கிடைத்தது.
 
நாம் வாழ்வது 21ஆம் நூற்றாண்டிலாவென்று, ஐயுறும் அளவுக்குக் காட்டுமிராண்டிகளாகச் சிங்கள இனவாத இராணுவமும் அதன் அரசியற்றலமையும் அப்பாவித் தமிழ் மக்களை நாயிலும் கேவலமாக அவமானப்படுத்திச் சுட்டழிக்கிறது.
 
 
தமிழ் பேசும் ஒரேகாரணத்துக்காக, இலங்கையின் பூர்வீக மக்களில் ஒருபிரிவைப் பூண்டோடு அழிக்க முனைவது மிகவும் கொடுமையானது.இஃது, பாசிசக் கிட்லரது இனவழிப்புக்கு ஒப்பானது."இலங்கையில் சிறுபான்மை இனங்களே கிடையாது" என்று இந்த இனவழிப்புச் சதி அரசியலை நியாயப்படுத்தும் பாசிச மகிந்த அரசு, அனைத்து மனிதவுரிமை விதிகளையும் காலிற்போட்டு மிதித்தபடி இலங்கைச் சிறுபான்மை இனங்களை வேட்டையாடுவதைச் சில"மார்க்சிய மேதைகள்"முதலாளித்துவ வளர்ச்சியில் இவையாவும் சாத்தியம் என்றும் உரையாடுகிறார்கள்.
 
 
இதற்காக மேற்குலகில் முதலாளிய உருவாக்கத்தில் நிகழ்ந்த இனக்கலப்பு,உள்வாங்கல்-அழித்தல்,ஓரினப்படுத்தல் குறித்து விளக்கமுஞ் சொல்கிறார்கள்.சமீபத்தில் யுக்கோஸ்சிலாவியத் தேசத்தில் நிகழ்ந்த இனவழிப்புகள் வெறுமனவே கொசாவா சார்ந்து பரப்புரைக்கு வந்தது.அங்கே ஜப்பிசிகளைக் கொன்றுகுவித்த சேர்பிய-அல்பேனிய இனவாதம் தத்தமக்கான நியாயத்தைத் தேசங்களது பெயரில் சொன்னபோது, இந்த ஜிப்சிகளுக்கானவொரு தேசம்-வேர்-வரலாறு இல்லாதிருந்தது.அவர்கள் எந்தத் தடையமின்றிச் சமீபத்திலும் அழிக்கப்பட்டார்கள்.வரலாறு பூராகவும் இனவழிப்புகள் இந்த மக்கட்டொகைக்கு அவர்கள் வாழும் பற்பல நில எல்லைகட்குள் நிகழ்ந்து வரும்போது, அவர்கள் இவற்றை எதிர்க்க வலுவற்றும், தம்மை அரசியல் ரீதியாக அணிதிரட்டவும் வலுவற்றவர்களாகவே இருக்கிறார்கள்.இதுதாம் அவர்களது சமூக இருப்பு.இலங்கையில் தமிழ்பேசும் மக்களுக்கும் மற்றைய சிறுபான்மை இனங்களுக்கும் இத்தகையவொரு அபாயம் மிக நெருக்கமாக இருக்கிறது?
 
 
இன்று, இலங்கையை முழுமொத்தச் சிங்கள மயப்படுத்தும் மகிந்தாவினது இராணுவவாத ஆட்சிக்குப்பின் உலகத்தைப் பங்குபோடும் ஏகாதிபத்தியத்தின் முரண்பாடுகள் ஒவ்வொரு புறமாக(ஆசியா-ஐரோப்பா)நிற்கின்றன.தமிழ்பேசும் மக்களைக் கொன்றுகுவித்த சிங்கள இராணுவத்துக்குத் தீனி போடுவதற்கு உலக நாணய நிதியம் முதல் ஆசிய அபிவிருத்திவங்கி,சீன அரசு,இந்திய அரசுவெனப் பற்பல உதவிகள் இலங்கைக்குள் வந்துவிடுகிறது.இவையெல்லாமே மகிந்தா அரசு தமிழர்களுக்கெதிரான போரில் தமிழ்பேசும் மக்களுக்கு எதிராகச் செய்த படுகொலைகளை மறுத்தபடியேதாம் வந்திருக்கின்றது.இதன் தொடராக இலங்கையில் நகழும் தமிழினவழிப்பை சகல தரப்புமே நிராகரித்தபடிதாம் இலங்கைச் சிங்கள அரசுக்குத் தொடர்ந்து ஒப்புதல் அளித்துத் தமிழரது இருப்பையே இலங்கையில் இல்லாதாக்கும் அரசியல் நகர்வை"பொருளாதார அபிவிருத்தி,முதலாளிய வளர்ச்சி,ஒரு தேச உருவாக்கம்-புதிய இன உருவாக்கம்"என்று தத்துவ விளக்கம் அளிக்கின்றனர்.
 



இதைச் சாதகமாகக் கையெலடுத்த பாசிச மகிந்தாவோ, இலங்கையில் சிறுபான்மை இனங்களே கிடையாதென்று கூற,அதையும் முதலாளித்துவ வளர்ச்சி,சுய பொருளாதாரத் தேசிய எழிச்சியாகவும் கருத்துரை செய்யும் தமிழ்"மார்க்சியப் புரவலர்கள்"புலிகளது அடாவடித்தனமான வன்முறையே"இலங்கை அரச வன்முறையாக உருவாகியதாகவும்,அது இலங்கை தழுவிய தேசியத்தை முன்னெடுக்கவே(அதாவது சிங்கள மயப்படுத்துவதென்பதை தேசியத்தின் பெயரில் ஏற்றுச் சரண் அடைவது)அரச வன்முறை நிர்பந்திக்கப்படுகிறது என்று,நாவலுனக்குத் "தேசிய வகுப்பு"எடுக்க,இந்தச் சோபாசக்தியோ மகிந்தாவினது பாசிசச் செயற்ப்பாட்டைக் குறித்து மிக நெஞ்சுருகும் கட்டுரையை எழுதுகிறான்.
 
 
அவன் மனிதன்.தரையில் வாழ்கிறான்,தன்னுடன் வாழ்ந்து சாகடிக்கப்படுபவர்கள் குறிந்து நொந்து கொள்கிறான்-கலைஞன் அவன்!
 
 
நேர்த்தியாகச் சிந்திகத் தெரியாதவர்கள் நாம்.
 
 
"புலிகள் தம்மிடமிருந்த மாற்றியக்கக் கைதிகளை வன்னியைவிட்டு ஓடியபோது துணுக்காயில் சுட்டுக் கொன்றார்கள்" என்றும்,மாற்றியக்கக் கைதிகளை இங்ஙனம் கொன்றதையே பரப்புரை செய்யப் புலிகள் பயன்படுத்துவதாக"எல்லாந் தெரிந்த"சுகன் இலங்கைத் தேசியக் கீதம்பாடிச் சொல்லும்வரை எனது மரமண்டைக்கு இது புரியவில்லை!
 
 
இன்றைய எமது இழி நிலை என்பது சாதியப் பாகுபாடோ அன்றிச் சமாதிகட்டும் பாசிசச் சூழலோ மட்டுமில்லை!மாறாக,உண்மையைப் புலிப்பாசிசத்தின் தெரிவில் தான்தோன்றித்தனமாக மறுத்து,இலங்கைப் பாசிச அரசின் பின்னே ஒளிந்து அரசியல் செய்வதும் மிகப் பெரிய இழி நிலைதாம்!எம் மக்களின் அளப்பெரிய உயிர்வாழ்வே இங்கு கேவலமான பரப்புரைகளால் நிர்க்கதியாக்கப்படுகிறது.இதனால் பாசிச மகிந்தாவினது குடும்பமே தமிழினவழிப்பை முற்று முழுதாகத் தமிழினத்தைக்கொண்டே கச்சிதமாகச் செய்து வருகிறது.அன்று புலிகளும்,இன்று அதன் எச்சங்களும்(கருணா-பிள்ளையான்),மாற்று இயக்கங்கள் என்ற ஆயுததாரிகளும் டக்ளஸ் தலைமையில் கடும் காட்டாட்சி செய்யும் மகிந்தாவுக்குத் தேசியத்தின் பெயரில் காவடி தூக்கும்போது, சுகன் மட்டுமல்ல,தோழர்கள் பலரும் இங்ஙனம் முண்டுகொடுக்க, உண்மையாகப் புரட்சிகரமாகச் செயற்படும் புரட்சிகரச் சக்திகள் தவிர்க்க முடியாது இவர்களைத் தொடர்ந்து அம்பலப்படுத்தியாக வேண்டும் என்ற நிர்பந்தத்தால் இவற்றைத் தொடர்ந்து திரும்பத் திரும்பப் பேச வேண்டியுள்ளது.
 
 
"Die Welt ist viel zu gefaehrlich,um darin zu leben-nicht wegen der Menschen,die Boeses tun,sondern wegen der Menschen,die daneben stehen und sie gewaehren lassen.-Albert EINSTEIN(இவ்வுலகமானது ரொம்ப அபாயகரமானது,அதற்குள் வாழ்வதற்கு-இந்நிலை மனிதர்களாலோ,போக்கிரிகளாலோ அல்ல,மாறாக,மனிதர்கள் இவைகளுக்கு அருகினிலிருந்து அவர்களை அநுமதித்து விடுவதாலேயே.)-அல்பேர்ட் ஐன்ஸ்ரையன்"இது,இன்றைய சிங்கள இனவாத அரசுக்குக் குடைபிடிக்கும் அனைவருக்கும் பொருத்தமே.
 
 
 
சோபா சக்தி இத்தகையவர்களை நோக்கி சுயதேடலாகப் பிறழ் சாட்சியம் என்று எழுதுகிறார்.
 
 
இது,மிக அவசியமான தேடல்.
 
 
நம்மீது நிகழ்த்தப்படும் வரலாற்றுக் கொடுமைகளை தேசத்தின் பெயரில்,தேசியத்தின் பெயரில் புலியுஞ்சரி,இலங்கைச் சிங்கள அரசுஞ்சரி செய்து முடிக்கும் இன்றைய பொழுதுகள்வரை நாம் ஏதேதோ சொல்கிறோம் எமது மனத் தெரிவுகளுக்கமைய-உண்மையோ இலங்கையில் மனிதர்களைக் கொல்வதில் முனைப்புடைய கயவர்களை இனம்காணமறுத்துக் கிடக்கிறது.
 
அது,பற்பல வேடமிட்டுக் கருத்துக்களாக விரிகிறது.
 
 
இது,தமிழ்பேசும் மக்களது அனைத்துத் தளத்தையும் கைப்பற்றிக் கொண்டுள்ளதால் பாசிசச் சிங்கள அரசோ கொலைகளைச் செய்துவிட்டு,தமிழ்பேசும் மக்களது காவலனாக வேடமிடுகிறது.இது,எமது இழிநிலை.
 
 
பிறழ் சாட்சியம் சொல்லும் சோபா சக்தியை மீளப் பதியம் போடுகிறேன், முளைத்து மூன்றிலையாவது எறி என்றெண்ணி.
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
29.08.09

...............................................................


பிறழ் சாட்சியம்
 
 
 
மறுபடியும் ஒருமுறை வெறுப்புடன் அந்த வாசகத்தை உச்சரிக்க வேண்டியிருக்கிறது:

 
"கொடியவர்கள் இழைக்கும் கொடுமைகளிலும் பார்க்க அவற்றை நீதியான மனிதர்கள் என்போர் அதிர்ச்சியூட்டுமளவிற்கு மவுனமாய் சகித்துக்கொண்டிருப்பது குறித்தே நாம் இந்தந் தலைமுறையில் வருத்தமுற வேண்டும்" என்றார் மாட்டின் லூதர் கிங். நம்காலத்தில் மவுனத்தைக் கலைத்துக் கொடுமைகளை நியாயப்படுத்தும், திரிக்கும் நீதிமான்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.


சில நாட்களிற்கு முன்பு பிரித்தானிய தொலைக்காட்சியான 'சனல் 4'ல் ஒளிபரப்பப்பட்ட அந்தக் கொடூரக் காட்சியில் மனிதர்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு இராணுவச் சீருடை அணிந்தவர்களால் பன்றிகளைப்போல சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். கொல்லப்படுபவர்கள் புலிகளா அல்லது சாதாரண தமிழ் இளைஞர்களா என்பது குறித்து எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் கொல்பவர்கள் இலங்கை இராணுவத்தினர் என்பதில் எனக்குச் சந்தேகம் ஏதுமில்லை.


இலங்கை அரசினதும் இலங்கை இராணுவத்தினதும் ஆதரவு இணையத்தளங்களாலும் தனிநபர்களாலும் இப்போது அந்தச் சம்பவததில் கொல்லப்பட்டவர்கள் புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் என்றும் கொன்றவர்கள் புலிகள் என்றுமொரு பரப்புரை முன்னெடுக்கப்படுகிறது. மனித உரிமைக் கண்காணிப்பகமும் மற்றும் மனிதவுரிமை அமைப்புகளும் இலங்கை அரசின் யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று சொல்வதெல்லாம் இவர்களுக்கு ஒரு பொருட்டேயில்லை. எப்படியாவது என்ன பேய்க்கதையைச் சொல்லியாவது இலங்கை அரசைக் காப்பாற்றவேண்டும் என இவர்கள் துடிக்கிறார்கள்.

கொல்லப்பட்வர்கள் புலிகள் அல்ல என்பதற்கு இவர்கள் வைக்கும் மோட்டுத்தனமான வாதங்களில் ஒன்று 'புலிகள் தாடி வைப்பதில்லை, ஆனால் கொல்லப்பட்டிவர்களிற்கு தாடியிருக்கிறது' என்பதாகும். புலிகள் தாடி வைக்கமாட்டார்கள் என்று இவர்கள் எங்கே ஆய்வு செய்து இந்த உண்மையைக் கண்டடைந்தார்கள் என்பது தெரியவில்லை. புலிகளின் முதலாவது வாகனப் பொறுப்பாளருக்குப் பெயரே தாடி சிறி என்பதுதான் (அவர் விமானக் குண்டுவீச்சில் கொல்லப்பட்டார். ஆண்டு 1986 என்று ஞாபகம்) கிட்டு, திலீபன் போன்ற பிரபலங்களே அவ்வப்போது தாடி வைத்திருப்பார்கள். தாடி வைத்திருக்கக் கூடாது என்றெல்லாம் இயக்கத்தில் கண்டிப்பான விதிகள் ஏதும் எனக்குத் தெரிந்து கிடையாது. பிரபாகரனின் தாடிவைத்த புகைப்படம் கூட பிரபலம்தான்.


சரி அப்படி ஒரு விதியிருக்கிறது என வைத்தக்கொண்டாலும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த புலிகளுக்கு இராணுவம் ஒவ்வொரு நாளும் சவரம் செய்தா விடப்போகிறது. தாடி தன்பாட்டுக்கு வளர்ந்திருக்கும். இந்த மயிர் விவகாரத்தை வைத்து கொன்றவர்கள் இராணுவமல்ல என்று விவாதிப்பது கொலைகாரத்தனம்.


கொல்லப்பட்டவர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் பாருக் என்பது இவர்கள் கசியவிட்டிருக்கும் இன்னொரு செய்தி. அந்தக் காட்சியில் கொல்லப்படுபவர்களின் முகங்களை அடையாளம் காண்பது மிகச் சிரமமானது அல்லது சாதியமற்றது. இது இன்னொரு திரிப்புத்தான் என நான் நம்புகிறேன்.அதில் கொல்லப்பட்டவர் பாருக் என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் இதுவரை அறிவிக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
 
ஜனவரியில் நடந்த சம்பவத்தை ஏன் இத்தனைநாள் கழித்து வெளிக்கொணர வேண்டும் என்பது இவர்கள் எழுப்பும் இன்னொரு முட்டாள்தனமான கேள்வி. அங்கே என்ன சினிமா சூட்டிங்கா நடைபெற்றது குறித்த காலத்தில் படப்பிடிப்பை முடித்து குறித்த காலத்தில் ரீலிஸ் செய்ய. கொலைகாரர்களில் ஒருவனால் பதிவு செய்யப்பட்ட அந்த நிகழ்வு எத்தனையோ கைமாறித்தான் ஊடகவியலாளர்களைச் சேர்ந்திருக்கும். 'சனல் 4' பதிவின் நம்பகத்தன்மையை உறுதிசெய்ய நாட்களை எடுத்திருக்கும். தாமதமானதிற்கு இவ்வாறான ஏராளமான காரணங்கள் இருக்கின்றன.


புலிகள் தங்கள் சிறையிலிருந்தவர்களை நிர்வாணப்படுத்தமாட்டார்கள் என்பதோ, இழுத்துப்போய்ச் சுடமாட்டார்கள் என்பதோ என் கருத்தில்லை. தோழர்கள் இராயகரன், சரிநிகர் சிவக்குமார் உட்பட ஆயிரக்கணக்கான இயக்கப் போராளிகளும் அப்பாவிச் சனங்களும் புலிகளால் இவ்வாறு நிர்வாணப்படுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டவர்கள்தான். 'கந்தன் கருணைப் படுகொலை' எனச் சொல்லப்படும் கொலைச் சம்பவத்தில் புலிகளிடமிருந்த சிறைக்கைதிகள் அய்ம்பத்தேழு பேர்கள் ஒரே இரவில் புலிகளால் கொல்லப்பட்டார்கள். புலிகளின் மூத்த தளபதி அருணாவின் தலைமையில் இந்தக் கொடூரம் நிகழ்ந்தது. புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த ஒன்பது இலங்கைச் சிப்பாய்கள் குமரப்பா, புலேந்திரனின் மரணத்தைத் தொடர்நது புலிகளால் இரவோடு இரவாகச் சுடப்பட்டு யாழ் பஸ்நிலையத்தில் வீசப்பட்டார்கள். புலிகளின் வரலாறு நெடுகவும் இதுபோல ஆயிரம் கொலைச் சம்பவங்களுண்டு.
 
ஆனால் புலிகளின் கொலைச் செயல்களை முன்வைத்து இலங்கை இராணுவத்தின் கொலைகளை நியாயப்படுத்த முயற்சிப்பதோ பூசிமெழுக முயற்சிப்பதோ தாடி போன்ற அற்ப சந்தேகங்களைக் கிளப்பி இலங்கை இராணுவத்தைப் பாதுகாக்க முயல்வதோ சின்னத்தனமான அரசியல். இன்று இலங்கை இராணுவத்தின் கைகளில் ஆயிரக்கணக்கான புலிப் போராளிகளும் பொதுமக்களும் மீள்வதற்கு வழியேயின்றிச் சிக்கியிருக்கும் தருணத்தில் இதுபோன்ற சின்னத்தனங்கள் ஏற்கனவே இனவெறியில் ஆடிக்கொண்டிருக்கும் இராணுவத்திற்கு இன்னும் வலுச் சேர்ப்பதாகவேயிருக்கும். இராணுவத்தால் எத்தனை புலிப் போராளிகள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள், எத்தனைபேர்கள் சரணடைந்துள்ளார்கள் என்ற தகவல்களை இராணுவம் இதுவரை வெளியிட மறுக்கிறது. இராணுவத்திடம் சிக்கியிருப்பவர்களும் இவ்வறே சிறுகச் சிறுகக் கொல்லப்பட்டுவார்கள் என்ற நிலையிருக்கும்போது இத்தகைய நியாயமற்ற சந்தேகங்கள் அந்தக் கொலைகளை ஊக்குவிப்பதாகவும் விரைவுபடுத்துவதாகவுமே இருக்கும்.


இராணுவத்தின் கொலைச் செயல்களை எந்தவிதமான ஆதாரங்களுமின்றி புலிகளின் தலையில் சுமத்தும் வேலையை அரசு ஆதரவு ஊடகங்கள் தொடர்ந்து செய்து வருகின்றன. சனாதிபதியோ அல்லது இராணுவத் தளபதியோ 'இலங்கை இராணுவம் கண்ணியமானது' எனச் சொல்லும் செய்திகளை இவை முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்கின்றன.
இலங்கை இராணுவத்தின் 'கண்ணியத்திற்கு' ஒன்றா இரண்டா சாட்சியங்களுள்ளன. வந்தாறுமூலை, குமுதினி, செம்மணி, அல்லைப்பிட்டி, முள்ளிவாய்க்கால் என்று எண்ணற்ற கூட்டுப் படுகொலைகளை இலங்கை அரசு செய்தது. எது குறித்தும் இதுவரை நீதி விசாரணைகள் ஏதுமில்லை. பொது மருத்துவமனைகள், பாடசாலைகள், அகதிமுகாம்கள், கோயில்கள் என்று எத்தனை இடங்களின் மேல் குண்டுகள் வீசப்பட்டன. பொக்கணையில் நிவாரணப் பொருட்களைப் பெற வரிசையில் நின்ற அகதிகள்மீது குண்டு பொழிந்து கொன்ற கண்ணியத்துக்குரிய இராணுவமல்லாவா அது. 'சனல் 4'ல் ஒளிபரப்பான கொலைகளைப் போல ஆயிரக்கணக்கான கொலைகளைச் செய்து முடித்த இராணுவம்தான் இலங்கை இராணுவம். வெலிகடயிலும் பிந்தனுவெவயிலும் சிறைப்பட்டிருந்த கைதிகளை கொலை செய்த அரசுதான் இலங்கை அரசு.


இலங்கை அரச படைகளின் கொலைச் செயலைப் புலிகளின் மீது சுமத்தி 'தேனி' போன்ற அரசு சார்பு இணையங்கள் இலங்கை இராணுவத்தைப் பாதுகாக்கக் கிளப்பிவிடும் இதுபோன்ற வதந்திகளும் ஊகங்களும் பரப்புரைகளும் பாஸிசத்தின் ஊடக முகங்கள். அந்தப் பரப்புரைகளை நியாயப்படுத்தி சுகன் போன்றவர்கள் பேசும் சொற்கள் அவர்கள் இவ்வளவு நாளும் பேசிவந்த மானிட நேயத்தையும் கொலை மறுப்பு அரசியலையும் கேள்விக்குள்ளாக்கியே தீரும். பிறழ் சாட்சியத்தில் புத்திச்சாலித்தனம் இருக்கலாம், சிலவேளைகளில் கவித்துவம் கூட இருக்கலாம். ஆனால் அந்த சாட்சியத்தின் பின்னால் அநீதியும் இரத்தப்பழியும் இருக்கிறது.


Shoba Sakthi: பிறழ் சாட்சியம்
 
 
http://www.facebook.com/note.php?note_id=120318977910&mid=103262fG60993b60G7e38c9Ga