Montag, November 19, 2007

தமிழ்ச்செல்வனுக்குக் கருணாநிதி என்கிற...

கனிவுமில்லைக் கருணையுமில்லை!


"கனிவுமில்லைக் கருணையுமில்லை" என்ற தலைப்பின் கீழ் பேராசிரியர் கலாநிதி.சி.சிவசேகரம் அவர்கள் காலஞ்சென்ற தோழர் விஸ்வானந்ததேவனுக்கான நினைவுப் பேருரையொன்றை 1989ஆம் ஆண்டு செய்தார்.அதை, இலண்டனில் சிறு பதிப்பாகவும் அவரது நண்பர்கள் வெளியிட்டார்கள்.தென்னாசியப் பிராந்திய அரசியலில் இந்தியாவின் பங்கு-மேலாதிக்கம் பற்றிய மிக எளிமையான பார்வையை அதுள் முன்வைத்தார் திரு.சி.சிவசேகரம் அவர்கள்.இன்று, கிட்டத்தட்ட பதினெட்டாண்டுகளுக்குப் பின்பு, நமது தேசிய விடுதலைப் போராட்டத்தினதும்,அது சார்ந்தியங்குவதாகப் புலிகளால் முன் தள்ளப்பட்ட"தமிழர் தேசியக் கூட்டமைப்பு" மற்றும் மலையக மக்களின் இன்னல்களில் குளிர்காயும் அவர்களின் அரசியல் தலைவர்களும் இந்தியாவின் மூலமாகத் தமிழ் பேசும் மக்களின் இன்னல்களை இலங்கையில் தீர்த்துவிடலாமென்கிறார்கள்.இத்தகைய கூற்றை-பேட்டிகளை,கருத்துக்களை புலிகளின் ஊடகங்களோ விழுந்தடித்துச் செய்தியாகத் தலையங்கம் தீட்டி, எம்மக்கள் முன் தள்ளுவதில் முன்னணியில் நிற்பவர்கள்.

இது ஒரு சாபக்கேடான சூழல் இல்லை!


இங்குதாம் நாம் வர்க்கம் சார்ந்து சிந்திக்க- இயங்கக் கோருகிறோம்.வர்க்கச் சமுதாயத்தில் வர்க்க அரசியலே அடிப்படை என்பது விஞ்ஞானத்தின் வழி உண்மையானதாகும்.ஒவ்வொருவரும் தாம் எந்தெந்த வர்க்கத்தின் உணர்வுகளைக் காவித்திரிவதென்பதை முதலில் கண்டடையவேண்டும்.தொழிலாளியாக இருந்தபடி முதலாளியாகக் கனவுகாண வைக்கிறது இன்றைய ஆதிக்க வர்க்கத்தின் ஊடகங்கள்-பண்பாட்டுப்படையெடுப்புகள்.

நாம் நமது வாழ்வைத் தொலைத்தபடி எவரெவருக்காகவோ எமது உயிரை விட்டுவிடுகிறோம்.இது தப்பானது.நமது பெற்றோர்கள் பட்டுணிகிடக்கும்போது நாம் நமது வாழ்வையே ஆளும் வர்க்கத்துக்குத் தாரை வார்த்துவிடுகிறோம்.இதை இலகுவாக விளங்கிக்கொள்ள,கட்சித் தலைவனுக்காகத் தீக்குளித்து உயிரைவிடும் தொண்டனை எண்ணிக்கொண்டோமானால் உலகம் புரியும்.


"தொண்டனின் பிணத்தைவைத்தே
அரசியல் நடத்தி முடிப்பவர்கள்
ஓட்டுக்கட்சி-பாராளுமன்ற அரசியல் சாக்கடைகள்!"


இந்த நிலையில்,இலங்கையில்(இலங்கையிலென்ன உலகம் பூராகவும்தாம்)தமிழ் பேசும் மக்களில் பெரும்பான்மையானவர்கள் அன்றாடம் உழைத்துண்ணும் கூலித் தொழிலாளர்களும்,விவசாயிகளும்,கைவினைத் தொழிலாளர்களுமே.இத்தகைய மக்கள் சமுதாயத்தில் நிலவுகின்ற அரசியலானது இந்த மக்களை அடக்கும்-ஒடுக்கும் அரசியலாகவே இருக்கிறது.இதை முன்னெடுப்பவர்கள் தமிழ் பேசும் மக்கள் சமுதாயத்துள் சிறு தொகையான உடமையாளர்களும்,அவர்களுக்குக் கூஜாத் தூக்கும் அரசாங்க ஊழியர்கள்-அதிகாரிகளுமே!இவர்களின் நலனுக்கான அரசியலாகவும்-அபிலாசையாகவும்"தமிழீழம்"கோசமாகியது.இதைப் பற்பல சந்தர்ப்பத்தில் நாம் கட்டுரைகளுடாகச் சொன்னோம்.எமது மக்களின் அனைத்து முன்னெடுப்புகளும் முடக்கப்பட்டுள்ளது.அன்றாடச் சமூகச் சீவியம் சிதறடிக்கப்பட்டு,வாழ்விடங்களிலிருந்தே முற்றாகத் துரத்தப்பட்டு,அவர்கள் அநாதைகளாக்கப்பட்டுள்ளார்கள்.அவர்களின் குழந்தைகளான நாமோ நமது வீடுவாசல்கள் அனைத்தையும் சிங்கள இராணுவத்திடம் பறி கொடுத்து, அகதியாகி ஐரோப்பிய மண்ணில் கூலித் தொழிலாளிகளாகி,ஐரோப்பியத் தெருக்களைச் சுத்தஞ் செய்கிறோம்.எமது வாழ்வு நிர்மூலமாகப்பட்டபின் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள்-கொல்லப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையிலும் நமது அரசியல்தலைமையிடம் கபடம் நிறைந்து, இந்தியாவோடு,ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களோடு,அமெரிக்க அழிவுவாதிகளோடு கைகுலுக்கியபடி நம்மை ஏமாற்றி வருகிறார்கள்.இது கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல,இந்தக் கபோதித்தனமான ஈனமிக்க அரசியல்-இயக்க வாதிகளை மக்கள் முன் நிறுத்தித் தண்டிக்கவேண்டும்.ஏனெனில்,நாம் இலட்சம் உயிர்களை இவர்களின் ஈனத்தனத்துக்காகப் பறிகொடுத்துள்ளோம்!

பேராசிரியர் சி.சிவசேகரம் பதினெட்டாண்டுகளுக்குமுன் சொன்ன அதே கருத்தை மீளவும் இக்கட்டுரையில் வலியுறுத்துகிறார்.

தற்போது, உலக மூலதனமானது தென்னாசியப் பிராந்தியமெங்கும் பாய்ந்து,கணிசமானளவு தென்னாசிய அரசியலைக் கட்டுப்படுத்தி வருகின்றபோதும்,இந்தியாவின் மேலாதிக்க அரசியல் வியூகம் காலாவதியாகிவிடவில்லை.இந்தியாவின் மிகக் கெடுதியான அரசியல் நலன் நமது மக்களின் கணிசமானவர்களைக் கொலை செய்து,இந்திய ஆளும் வர்க்கத்தின் கனவை இலங்கையில் நிலைப்படுத்தி வருகிறது.மிகக் கேணைத்தனமாக இந்தியக் கோமாளிகள்-தமிழ்நாட்டு விரோதிகள் இராஜீவ் என்ற பாசிஸ்ட்டின் கொலைக்கு வக்காலத்து வேண்டுகின்ற இன்றைய சூழலில்கூட நமது மக்களை வகை தொகையின்றிக் கொன்று குவிக்கும் இந்தியத் துரோகத்தை நமது அரசியல்வாதிகள் கேள்விக்குட்படுத்தவில்லை.புலிகளின் மிகக் கெடுதியான அரசியல் கூட்டுக்கள் இந்தியாவிடம்-உலக ஏகாதிபத்தியங்களிடம் தமது நாணயக் கயிற்றை வழங்கியபின்,அந்த எஜமானர்களின் இழுப்புக்கேற்றபடி "போராட்டம்"செய்கிறார்கள்!மக்களோ இத்தகைய கொடிய யுத்தங்களால்,அரசியல் ஏமாற்றால் தமது பொன்னான உயிர்களைப் பறிகொடுத்தும்,வாழ்விடங்களை இழந்தும் வதைபடுகிறார்கள்.இதைத் தட்டிக் கேட்க எவருமேயில்லை!புலிகளை எதிர்ப்பதாக நாடகமாடும் புலி எதிர்ப்புக் குழுக்களோ இந்தியாவின் இன்னொரு வடிவிலான கைக்கூலிகள்.இவர்களை இனம் காட்டும் பேராசிரியர் சி.சிவசேகரம் மிக இலாவகமாக இந்திய-தமிழ்நாட்டு அரசியல் சூழ்ச்சிக்காரர்களையும்,அவர்களது துரோகத்தையும் இனம் காட்டுகிறார்.

கடைந்தெடுத்த துரோகிகளானவர்கள் இந்தியக் கைக்கூலி ஆனந்தசங்கரி,டக்ளஸ்,கருணா-பிள்ளையான்,தமிழ் தேசிய கூட்டமைப்பு,புலிகளின் தலைமைமட்டுமல்ல தமிழ்நாட்டின் வளங்களைச் சுருட்டி ஏப்பமிட்ட வடிகட்டிய துரோகி கருணாநிதியும்தாம் என்பதை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும்.இதையும், சிவசேகரம் அவர்கள் குறித்துரைக்கிறார்.

வடிகட்டிய துரோகி கருணாநிதியின் போலிக்கண்ணீர் ஒப்பாரியைப் பாட்டாக்கிய கண்ணனின் இசையைக் கேட்டபோது,இந்த முயற்சியில் கண்ணனின் திறமை வெளிப்பட்டபோது,சயந்தனின் பதிவில் கண்ணனைப் பாராட்டியபடி கருணாநிதியின் ஓலத்தை அம்பலப்படுத்தியிருந்தேன்.அதை அனானியாகச் சொன்னேன்.பேராசிரியரோ அக் கவிதையையும் விடாமற் சாடியிருக்கிறார்.


இவையெல்லாம் எதற்காகச் சொல்கிறோம்?

நமது பிரச்சனையைத் தத்தமது இலாபத்துக்காக அரசியலாக்கி மக்களை அழித்துவரும் கொடிய சக்திகளை இனம் காட்டவே நாம் இதுவரை எழுதித் தள்ளுகிறோம்.நாமும், நமது பெருங் கல்வியாளர்கள்போல் வாய்மூடி மெளனித்திருக்க முடியும்.இப்படியிருந்தால் எமது மக்களின் அழிவை எங்ஙனம் தடுத்து நிறுத்துவது நண்பர்களே?


எல்லோரும் தத்தமது குடும்பம்,பதவி,பட்டம் என்றிருந்தால் அப்பாவி மக்களின் வாழ்வோடு விளையாடும் அந்நிய-உள்நாட்டு யுத்தப் பேய்களை எங்ஙனம் அம்பலப்படுத்துவது-மக்களை அவர்களிடம் பலியாக்காது தடுப்பது?


இதுவோ பெரும் வரலாற்றுக்கடமை நண்பர்களே!

நாம் புரட்சி செய்கிறோமோ இல்லையோ நமது மக்களின் உரிமைகளை அந்நியர்களிடம் அடைவு வைத்துத் தமது வாழ்வையும்,வளத்தையும் பெருக்கும் கயமைமிக்க அரசியல்-இயக்கவாதிகளை நாம் மக்களுக்கு இனம் காட்டியாகவேண்டும்!இதுவரை எமது மக்களின் உயிரோடு விளையாடிய இந்தப் போராட்ட முறைமை நம் இனத்தின் அனைத்து வளங்களையும் அந்நியர்களோடு பங்குபோட்டு அநுபவித்துவருகிறது.அதைத் தொடர்ந்து நிலைப்படுத்தவும்,மக்களைச் சட்ட ரீதியாக ஒடுக்கும் உரிமைக்குமாக இவர்கள் போடும் கூச்சல் யுத்தம்-ஜனநாயகம் என்றபடி.நமது மக்களின் எதிர்காலம் இருண்டுபோய்க் கிடக்கிறது.இந்த நிலையிலும் நாம் மெளனித்திருக்க முடியுமா?

தமிழ்த் தேசிய மாயையில் கட்டுண்டு கிடந்தபடி இயக்கவாத மாயைக்குள் மெளனித்திருந்தோ அல்லது வக்காலத்து வாங்கியோ எம்மை நாம் ஏமாற்றமுடியாது!நாம் இழந்திருப்பது வரலாற்றால் மீளக்கட்டியமைக்க முடியாத உயிர்கள்.அந்த உயிர்களின் தியாகத்தைப் பிழைப்புக்காகப் பயன்படுத்தும் கட்சி-இயக்க அரசியல் தலைமைகள் தத்தம் பதவிகளுக்கும்-இருப்புக்குமாக நம்மை இன்னும் படுகுழியில் தள்ளுவதை அநுமதிக்க முடியாது.

தமிழ்நாட்டுச் சினிமாக்கூட்டமும்,பொறுக்கி அரசியல்வாதிகளும் தமிழ்ச் செல்வனின் கொலைக்கு நீலிக்கண்ணீர் வடித்தவுடன் ஈழத்துத் தமிழனுக்கு உச்சி குளிர்கிறது.ஆனால்,அந்தக் கூட்டம் இதுவரை எமக்கு என்ன செய்தார்கள்,எமது மக்களின் அழிவுக்கு காரணமானவர்களை எதிர்க்கக்கூட முடியாத-முனையாத கழிசடைகளின் ஒப்பாரிகள், நமது மக்களின் குருதியை-கண்ணீரை நிறுத்திவிடாது.மாறாகத் தமிழகத்தின் அப்பாவிக் குடிகளின் பெரும் குரலே எமது மக்களின் கண்ணீருக்கு முடிவுகட்ட ஒத்திசைவாகும்.

தமிழகத்தின் ஓட்டுக்கட்சிகளும்,சினிமாக் கூத்தாடிகளும் தமிழகத்து அப்பாவி மக்களின் குரல்வளைகளைத் திருகியே தமது அதிகாரத்தை,ஆதிக்கத்தை,செல்வத்தைக் குவித்து வைத்திருக்கிறார்கள்.தமது சொந்த குடிகளையே அடியோடு மொட்டையடிக்கும் இந்தக் கூட்டத்தின் குரலா எமது மக்களின் துயர் துடைக்கும்?-இலங்கையில் இந்தியாவினது பங்கு என்ன?புலிகள் ஏன் இந்தியாவுக்குத் தூதுவிடுகிறார்கள்,எப்படி இந்தியாவால் ஆட்டுவிக்கப்படுகிறார்கள்?மிக இலகுவான கேள்விகள்.தொடர்ந்து தேடும்போது விடைகள் மிக இலகுவாகக் கிடைத்துவிடும்.

சிந்தியுங்கள்!

நாம் அவசியம் நமது நண்பர்களை-எதிரிகளை இனம் கண்டாக வேண்டும்.

அதற்குப் பேராசிரியரின் இக்கட்டுரை பலகோணத்தில் பார்வைகளைத் திறந்துவிடுகிறது.

"படிப்போம்,
பாருக்குள் நமது எதிரிகளை
நேரிய-சீரிய,செம்மையான போராட்டத்துடன்
எதிர்கொள்வோம்.அங்கே, நாம் வணங்கும்
இன்றைய தெய்வங்கள்கூட
எதிரிகள் என்பதை வரலாறு புகட்டும்."


அதுவரையும் விவாதிப்போம்-விழிப்படைவோம்!

நட்புடன்;,

ப.வி.ஸ்ரீரங்கன்
19.11.2007


மறுபக்கம் :

"தமிழ்ச்செல்வனுக்குக் கருணாநிதி என்கிற நம்பிக்கைத் துரோகி இரங்கற் கவிதை எழுதினால் அது எட்டுப்பத்தி அகலச் செய்தியாகவும் வரலாம்."



இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை பற்றிய இந்திய நிலைப்பாடென்ன என்றும் அதுபற்றிய இலங்கைவாழ் தமிழ்த் தலைமைகளின் மதிப்பீடென்ன என்றும் யாருங் கேட்டால், முதலாவது கேள்விக்கு விடை கூறுவது எளிது. மற்றக் கேள்விக்கான பதிலைத் தலைவர்களாற் கூடத் தெளிவாகக் கூற இயலுமா என்பது நிச்சயமற்றது.


அக்டோபர் பிற்பகுதில் ஒரு தமிழ் நாளேட்டின் முதலாவது பக்கத்தில் ஒரு கட்டமிடப்பட்ட செய்தி இருந்தது. அதற்குக் கீழாகக் கொட்டையெழுத்துத் தலைப்புடனான ஒரு செய்தி இருந்தது. முதலாவது செய்தி இந்திய அரசாங்கம் இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கி வருவதை உறுதிப்படுத்துவது. மற்றது இந்தியா இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையின் தீர்விற்குப் பங்களிக்க வேண்டும் என்று தமிழ்த் தலைவர்கள் கேட்டுக் கொண்டது பற்றியது.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை பற்றியும் சமகால நிலைமைகள் பற்றியும் இந்திய ஆட்சியாளர்கள் சரிவர அறியமாட்டார்கள் என்று நம்புகிறவர்கள் இருக்கிறார்கள். இலங்கைத் தமிழ்த் தேசிய இனத்தின் பாதுகாப்பையும் இருப்பையும் அடையாளத்தையும் உறுதிப்படுத்துகிற தீர்வு பற்றி இந்தியாவுக்கு அக்கறை இருக்கிறது என்று நினைக்கிறவர்கள் இருக்கிறார்கள். தமிழக அரசியல் தலைவர்கள் மத்திய அரசில் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி மத்திய அரசின் நிலைப்பாட்டை இலங்கைத் தமிழருக்குச் சாதகமான திசையிற் திருப்ப வல்லவர்கள் என்று நினைக்கிறவர்கள் இருக்கிறார்கள். தமிழக அரசியல் தலைவர்களுக்கு அந்தவிதமான அக்கறை உண்டு என்று நினைக்கிறவர்கள் இருக்கிறார்கள். இதில் ஒரு பகுதியை நம்புவதற்குக் கால் நூற்றாண்டுக் காலம் முன்பு பலருக்கு ஒரு நியாயம் இருந்தது. இருபது ஆண்டுகள் முன்பு வரை அந்த நியாயம் தொடர்ந்தது. அதற்குப் பிறகும் தமிழகத் தலைமைகள் பற்றிய ஒரு நம்பிக்கை இன்னொரு ஐந்து வருடங்கள் தொடர ஏதோ நியாயம் இருந்தது.


ஆனாலும், இந்த நம்பிக்கைகள் தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் அமையவில்லை என்றும் இந்திய மேலாதிக்கத்தின் நோக்கங்கள் பற்றியும் கவனமாயிருக்குமாறும் எச்சரித்து வந்தவர்கள் இருந்தார்கள். பங்களாதேஷின் உருவாக்கத்தில் இந்தியாவின் பங்கு பற்றி எதிர்மாறான இரு மதிப்பீடுகள் இருந்தன. ஒன்று தமிழீழ விடுதலைக்கு இந்தியா கைகொடுக்கும் என்று சொன்னது. மற்றது தமிழர் பிரச்சினையைத் தனது மேலாதிக்க எண்ணங்கட்காக அல்லாமல் வேறெதற்கும் இந்தியா பயன்படுத்தாது என்றது. எல்லாத் தமிழ் தேசியவாதிகளும் ஏதோ வகையில் இந்தியாவை நம்பியவர்கள் தாம். அவர்கள் மட்டுமன்றிக் குழம்பிப்போன சில தமிழ் இடதுசாரிகளும் இந்தியாவை நம்பினார்கள். சிலரது நம்பிக்கைகள் ஏமாற்றத்துக்கு இட்டுச் சென்றன.

வேறு சிலர் இந்தியாவின் துரோகத்தைத் தெரிந்து கொண்டே அதன் பங்காளிகளானார்கள். இவையெல்லாம் வரலாறு கூறும் உண்மைகள். எளிதில் மறக்கும் அளவுக்கு அவை அற்ப விடயங்களுமல்ல, எப்போதோ ஒரு யுகத்தில் நடந்துமுடிந்தவையுமல்ல.


கடந்த பன்னிரண்டு மாதங்கட்குள்ளேயே தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திய ஆட்சியாளர்களாலும் அவர்களது பிரசார முகவர்களாலும் எவ்வளவு கேவலமாக நடத்தப்பட்டார்கள் என்பதுகூடப் பலருக்கு நினைவில் இல்லை என்றால் அவர்கள் பாராளுமன்ற அரசியலால் முற்றாகவே சுரணை கெட்டுப் போனவர்கள் என்று தான் சொல்ல முடியும். இந்தியாவை வளைத்துப் போடச் சீனாவையும் பாகிஸ்தானையும் காட்டினவர்கள் கண்டதெல்லாம் எதிர்பார்த்ததற்கு நேரெதிரான விளைவுகள் தாம். இந்திய அமெரிக்கப் போட்டியை வைத்துப் போட்ட கணக்கும் பொய்யாகிவிட்டது "கொக்குப் பிடிக்கிறதற்கு வழி, அதிகாலையில் கொக்கின் தலையில் வெண்ணெய்யை வைத்து விட்டால், வெய்யில் ஏறும்போது வெண்ணெய் உருகிக் கொக்கின் கண்கள் தெரியாமற் போகும்; அப்போது பார்த்துக் கொக்கைப் பிடிக்கலாம்" என்று ஆலோசனை சொன்னவனுக்குக் கூட இந்த அரசியல் ஞானிகளை விட விவேகம் அதிகம் என்று நினைக்கிறேன்.


நான் இப்போது கேள்விக்கு உட்படுத்துவது அறியாமையாற் செய்கிற பிழைகளையல்ல. முழு அரசியல் அயோக்கியத் தனத்தையே கேள்விக்குட்படுத்துகிறேன்.


இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு ஆயுதங்கள் விற்பதைப் பற்றி அரசியல்வசதி கருதியேனும் தமிழ்நாட்டிலிருந்து எதிர்ப்புக் குரல் எழுப்புகிற சிலர் இருக்கிறார்கள். நமது நாளேடுகளில் இந்திய அரசாங்கத்தைக் கண்டித்து அவர்கள் விடுகிற அறிக்கைகள் வெளிவருகின்றன. பலவாறான செய்திகள் வெளிவருகின்றன. ஆனால், இந்தியாவின் வஞ்சகத்தைக் கண்டித்து இங்கே எந்தத் தமிழ்த் தேசியவாதத் தலைமையும் வாயே திறப்பதில்லை. செய்யாதீர்கள் என்று கெஞ்சுகிறவர்கள் இருக்கிறார்கள் செய்ததைக் கண்டிக்கவோ எவரும் இல்லை.


வரதராஜப் பெருமாள் முதலாக ஆனந்த சங்கரி வரையிலானவர்கள் வேண்டுகிற இந்தியக் குறுக்கீடு பற்றி அவர்களுக்குப் பூரணமான தெரிவுண்டு. இந்தியா தனது மேலாதிக்க நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளுவதற்கு என்ன செய்தாலும் அதை அவர்கள் முழு மனதுடன் ஏற்பார்கள். இதில் அவர்களுக்கு தெரிவு, மாற்றுக் கருத்து என்ற விதமாக எதற்கும் இடமில்லை. எனவே தான் இந்தியா அவர்களைத் தமிழர் தலைவர்களாகக் கருதுகிறது.


ஆனால், வெளிவெளியாகவே யூ.என்.பி.யிடம் தமிழ் மக்களைச் சரணடையச் செய்ய முன்னிற்கின்ற மனோ கணேசன் போன்றவர்கள் முதல் திக்குத் தெரியாமல் தடுமாறுகிற தமிழர் தேசியக் கூட்டணித் தலைவர்கள் வரையிலானோர் எவ்வகையில் இந்தியா குறுக்கிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்? அவர்கள் எதிர்பார்ப்பதில் இந்தியாவால் எவ்வளவை நிறைவேற்ற இயலும் என்று எதிர்பார்க்கிறார்கள்?


வெறுமனே இந்தியா குறுக்கிட வேண்டும் என்று சொல்வதற்குப் பதிலாகக் குறிப்பாக எவ்வெவ் வகையிற் குறுக்கிட வேண்டும் என்று பட்டியலிடுவார்களா? அக் குறுக்கீட்டின் இலக்கு எவ்வகையில் அமைய வேண்டும் என்று தெளிவுபடுத்துவார்களா? இந்தியாவின் போக்கு இன்று வரை எவ்வாறு இருந்துள்ளது என்றும் அதில் அவர்கட்கு உடன்பாடான பகுதி எது உடன்பாடற்றது எது என்று சொல்வார்களா? இந்தியா தனது போக்கை எந்த விடயங்களை எவ்வாறு மாற்ற வேண்டும் என்று விளக்குவார்களா?
அவை பற்றி இந்திய ஆட்சியாளர்களின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும்படி கேட்பார்களா?

இந்தியக் குறுக்கீடு பற்றி ஆழச் சிந்தித்தவர்கட்கு இந்தியக் குறுக்கீடு வேண்டிய ஒன்றாக இருக்கும் என நான் நினைக்கவில்லை. எனினும், திரும்பத் திரும்பக் கீறல் விழுந்த கிராமபோன் தட்டுமாதிரி இந்தியா குறுக்கிட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறவர்கள் தங்கள் மனதில் உள்ளது என்ன என்று சொல்ல வேண்டும். சொல்ல மாட்டார்கள் என்று எனக்குத் தெரியும், உங்களுக்குத் தெரியும், செய்தியை அனுப்புகிற நிருபருக்குத் தெரியும், அதைக் கொட்டை எழுத்தில் தலைப்பிட்டு வெளியிடுகிற பத்திரிகை ஆசிரியருக்கும் தெரியும்.

அந்தப் புலுடாவுக்கு வழங்கப்படுகிற முக்கியத்தை ஏன் அதை அவிழ்த்து விடுவதற்கு தாம் வழங்க மறுக்கிறோம்? எங்களுக்கு என்ன நடக்கிறது? ஏன் எங்களால் உண்மைகளையும் பொய்களையும் பிரித்துப் பார்க்க இயலவில்லை?


தமிழ்ச்செல்வனுக்குக் கருணாநிதி என்கிற நம்பிக்கைத் துரோகி இரங்கற் கவிதை எழுதினால் அது எட்டுப்பத்தி அகலச் செய்தியாகவும் வரலாம். அதை ஜெயலலிதா கண்டித்ததில் எனக்கு உடன்பாடுண்டு. ஆனால், எனது காரணங்கள் வேறு. முதலாவதாக அது நேர்மையற்றது. இரண்டாவதாக அது மிகவும் மட்டரகமான கவிதை சொல்லப்போனால் அது கவிதையே அல்ல. தி.மு.க. சினிமா பாணியிலான சுத்தமான பேத்தல்; கருணாநிதி அரசியலின் பம்மாத்து.


தமிழகத்தையும் இலங்கையையும், குறிப்பாக வட, வடமேற்கு இலங்கையைப் பல்வேறு கெடுதல்கட்குள்ளாக்கி மீனவர்களது வயிற்றில் அடிக்கப்போகிற சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றிக் கூட வாய் திறக்க வக்கில்லாத தமிழ்த் தலைவர்கள் தான் நமக்கு வாய்த்திருக்கிறார்கள்.


இந்தியா இலங்கைக்குக் குழி பறிக்கிறது. இலங்கையின் பொருளாதாரம், பாதுகாப்பு, தேசிய இனங்களிடையில் புரிந்துணர்வு, தேசிய இனப்பிரச்சினைக்கான நியாயமான தீர்வு, அமைதியான எதிர்காலம் ஆகிய எல்லாவற்றுக்குமே இந்தியா குழிபறித்து வந்துள்ளது.


இந்தியக் குறுக்கீட்டைப் பேரினவாத வெறியர்கள் விரும்புகிறார்கள் என்றால், அமெரிக்கா மறைமுகமாக ஏற்கிறது என்றால், அதை தமிழர் விடுதலைக்கு ஆதரவான எவரும் ஆதரித்துப் பேசுகிற போது அவருடைய அரசியல் ஞானத்தைவிட அதிகம் ஐயத்துக்குரியது. அடிப்படையான நேர்மைதான்.



-பேராசிரியர் சி.சிவசேகரம்.


நன்றி தினக்குரலுக்கு.

Sonntag, November 18, 2007

எச்சங்கள் அழித்தவொரு படுகையில்...

எச்சங்கள் அழித்தவொரு படுகையில்...



திகழ் ஒளி நிலத்தில் சிந்த
விளங்கு பயிர் வான் நோக்கும்
எனினும்
எனக்கென்றொரு விடிவு இருண்டு கடந்தது
குப்பைக்குள் கிடக்கும் எனது எலும்புத்துண்டு
கோவணம் கட்டுகிறது வினை முடிப்பதற்கு
இது போதாத காலம்


மெலிய படுகையொன்றில்
தூங்குகிறது என் பாவம்!
பயிர் முளைத்தறியாத உவர் மண்ணாய்
மனங்கள் சில மனிதரின் பெயரில்
பெருங் கூச்சலுக்குள் கீறப்படும் கோடுகள்
அவை வளைந்தும் குறுகியும் குற்றப் பத்திரிகை தாங்கி


பொழுது புலரும்
போகும் நாளிகையும் மீண்டு வரும்
பொய் அறியாக் காலமும் கட்டுண்ட மனிதருக்காய் இரங்கும்
ஆனால்
மனிதன் நானோ மண்ணுக்குள் போய்விடினும்
மரணம் அறியாச் சிறு துகளாய்
மரணப் படுக்கையில் முள்ளாய்க் குற்றும் இருப்பு
எனது எலும்புத் துண்டம் எதிரில் தோன்ற


தோரணங்கள் துன்பித்துத் தொங்க
தூவும் மலர்ச் சொரிவும்
அர்ச்சனைக்கான அவசரத்துள்
ஆருக்கோ அபிஷேகம் அதற்கு அவஸ்த்தை


எச்சங்கள் அழித்தவொரு படுகையில்
நாளைய நிலை மறுப்பை நிச்சயிக்கச் சில முனைப்புகள்
எடுத்த எடுப்பில் சூரியனுக்குத் தூக்கு
ஊர் பெரியவரின் உதட்டில் உதிர்ந்தது உண்மை


கருத்தரித்த எனது இருப்பில்
பச்சை குத்திய முகங்களுக்கு எவருரிமை கொள்வார்?
வயற் பரப்பில் வட்டமிட்ட காகங்கள்
புழுக்களோடு மல்லுக் கட்டுகிறது
மண்பதத்தைச் செய்தவை புழுக்கள்!


தோப்பாக நின்றபோது நான் பெருங்காடாகவும்
தனிமரமாக நின்றபோது தடங்கலாகவும்
தெருவோரத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன
தறித்தெறிவதற்குத் தோதான கோடாரிக்கு
நானே முன்னொரு பொழுதில் காம்பாக இருந்திருக்கிறேன்


ஊழீ முதல்வனும் உயிர் தந்த ஆழீயும் எனக்குள் உறங்க
ஓரத்துக் கிளையில் முறிபடும் காலம்
ஈரத்தை மறைத்த இறங்காப் பொழிவில்
இதயத்தை இழக்கும்!


திகழ் ஒளி
நிலத்தினுள் சிந்தினும்
விளங்கு பயிர் வான் நோக்கினும்
விடியாத சில தேசங்கள்
எவனுக்கோ
முகமொன்று செய்து கடைவிரிக்கச்
சில காலிகள் தெருவெங்கும் ஒட்டுகிறது
களவாடிய எவன் அறி புலனை


ஸ்ரீரங்கன்
18.11.2007




Dienstag, November 06, 2007

எக்ஸ்சில் ஞானம்-எம்.ஆர்.ஸ்டாலினின் பதிலென்ன?

எக்ஸ்சில்
ஞானம்-எம்.ஆர்.ஸ்டாலினின்
பதிலென்ன?


"ஒரு வகுப்பாரைக் குரூர மிருகமாகவும்,
மற்றொரு வகுப்பாரை அந்த மிருகத்துக்கு
இரையாகும் பலவீன மிருகமாகவும் செய்யும்
இன்றைய சமூக அமைப்பு ஒழியத்தான் வேண்டும்!"-
காண்டேகர்.



தேசம் சஞ்சிகையில் நின்றுபோன "எக்ஸ்சில்:2" சஞ்சிகையின் ஆசிரியர் ஞானம் என்ற ஸ்டாலின் மீதான குற்றச் சாட்டுக்களும்,அவரின் மறுப்பென்றும் விவாதம் தொடர்கிறது.இங்கே அந்தச் சுட்டி:

http://thesamnet.net/?p=59



நாமோ திகைப்படைகிறோம்!

தமிழ்பேசும் மக்கள் இவ்வளவு தூரம் அழிவுக்குள் உட்பட்டுவரும் இந்தத் தரணத்தில்,எவரெவாரோ அந்த மக்களின் நலன்களைச் சொல்லியே அவர்களை அழித்தும்,அவர்களின் வாழ்வாதாரங்களைச் சூறையாடியும் தத்தமது வாழ்வை மெருக்கூட்டியுள்ளார்கள்.புலிகளின் முன்னாள் தளபதி கருணாவைப் பிரிப்பதற்கும்,அவரைத் தமது கைக்கூலியாகப் பயன்படுத்துவதற்கும் அன்னியச் சக்திகள் வழங்கிய பணங்கள்,வெகுமதிகள் பாரீசில் உடைமைகளாக வாங்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.அதற்கு ஞானத்தையும் முகவராக-பினாமியாகச் சொல்லப்படுகிறது.

இப்போது, இலண்டனில் பிடிபட்ட கருணாமீது சட்ட நடவடிக்கை எடுக்கும்படியும் சொல்லப்படுகிறது.இவர் புலிகளிலிருந்து பிரிந்தபின் செய்த மக்கள் விரோதத்துக்குமட்டுமா அல்லது புலிகளோடு இணைந்து போராடியவேளை செய்த குற்றங்களுக்காகவுமா?

தமிழர்களில் இவ்வளவு மோசமானவர்களெல்லாம் எப்படி வேசம் போடுகிறார்கள்!கிழக்கு மக்களின் விடிவுக்கு வந்த இரட்சகர்களாகத் தம்மை வெளிப்படுத்திய இவர்களை,இப்போது தேசம் சஞ்சிகையில் அம்பலப்படுத்துகிறார்கள்.

அப்பாவிகளாக இவர்களோடு "இலக்கியச் சந்திப்பு"ச் செய்த நாமோ திகைப்படைகிறோம்.

உலகத்தில் இப்படியும் மனிதர்களா?

உண்மையைப் பேசி,மக்களின் உண்மையான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க முனையும் மனிதர்களை ஏமாற்றுகிறார்களே!

இந்த மனிதர்கள் தம்மைப் பற்றிய சுய விமர்சனமின்றி பொய்யுரைத்துக் கிடந்தால் இவர்களின் நாணயத்தின்மீது நாம் சந்தேகம் கொள்கிறோம்.

நல்ல மனிதர்கள்வேடமிட்ட மனிதர்கள் 90 களின் பிற்பகுதியில் பாரிசீல் எல்லா வகைத் தத்துவங்களும் பேசினார்கள்!இந்தா நமது மக்களின் ஜனநாயகத்துக்காக் குரல் கொடுப்பதாகவுஞ் சொல்லிக் கொண்டார்கள்.


ஞானம் இன்னும் ஒரு படி மேலே பாய்ந்து தமிழ் பேசும் மக்களைப் பிரதேச ரீதியாகப் பிரிக்க முனையும் சிங்கள-இந்திய அரச கூட்டுக்கு உடந்தையாகக் கிழக்கு மக்களின் உரிமைகள்-வாழ்வாதாரங்கள்,அபிவிருத்திகளெனத் தூக்கிப் பிடித்தார்.கட்டுரைகளைப் புனைந்தார்.நாமும் இவரது கருத்துக்களை ஏற்க முடியாதிருந்தாலும் கிழக்கு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்காக் குரல் கொடுத்தோம்.

ஆனால்...

இத்தகைய மனிதர்கள் கருணா போன்ற அன்னியக் கைக்கூலியோடு நட்பு வைத்து, அவரது பினாமியாகப் பொருள் குவித்திருந்தால் இது மன்னிக்க முடியாத ஈனத்தனம்.புலிகளின் பினாமிகள்தான் இப்படியென்றால்,இப்போது புலியிலிருந்து பிரிந்த கருணாவின் கதையும் இதுவேயாகிறது.கருணா தான் கெட்டதும் மட்டுமல்ல மற்றவர்களையுங் கெடுத்துத் தனது பிரதேச மக்களின் வாழ்வில் நிரந்தரத் துக்கத்தை ஏற்படுத்தினான்.

பாவம் அந்தப் பகுதிமக்கள்.


நாம் வெளுத்தையெல்லாம் பாலாக நம்பினோம்.இவைகள் நமது தவறாகிறது.

எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கிறது?


இந்தப் பாரீஸ் வாழ் நம் இலக்கிய-பின் நவீனத்துவப் பேரரசர்கள் எல்லாம் இது குறித்து வெளிப்படையாக விமர்சனம்-சுய விமர்சனம் செய்தால் எதிர்காலத்தில் எவரெவரோடு குறைந்தபட்சமாவது மக்கள் பிரச்சனைகளைப் பேசலாமென்றாவது நமக்கொரு வழி கிடைக்கும்.

புலிகளையே புரட்டிப்போட்டுக் குதறியவர்களே இப்போது தாமும் புலிகள்தான் என நிரூபிக்கும்போது நாம் அதிர்கிறோம்.

ஈழத்து அப்பாவித் தமிழர்களைச் சொல்லி எவரெவரோ அரசியல்,பதவி,பணம் சம்பாதிக்கும்போது அந்த மக்களின் வாழ்வைச் சாய்தவர்கள் எல்லோருமே குற்றவாளிகள்தான்.இவர்களை எந்த நிதி மன்றம் தண்டிப்பது? இவர்களுக்கொரு தூ... தேவைதானா?

குறைந்தபட்சமாவது மனசாட்சியுண்டென்றால் ஞானம்போன்றவர்கள் தம்மைப் பற்றிய இந்த அவதூறுகளுக்குப் பதிலளித்து உண்மையை வெளிப்படுத்தலாம்.நாம் இச் செய்திகளைப் படித்து அதிர்கிறோம்.எங்களின் இதுநாள்வரையான செயற்பாட்டில் மக்களின் நலனுக்காவே-அவர்களின் விடிவுக்காகவே செயற்பட்டுள்ளோம்.இதுவரை முதுகுவலிக்க உழைத்து, ஓடாய்ப்போய் உருக்குலைந்தும் மக்களுக்காகக் குரல் கொடுத்து வருகிறோம்.அன்றாடஞ் சீவிப்பதற்காகத் தெருவெங்கும் குப்பைகூட்டிப் பிழைக்கிறோம்-ஜந்திரத்தில் ஜந்திரமாகப் போராடி வயிறு வளர்க்கிறோம்.எங்கள் முன் நின்று பேசும் அருகதையுண்டா ஞானம்?அது உண்டென்றால் உங்கள் தரப்பு உண்மைகளை வெளியில் எழுத்தாக வையுங்கள்!உங்களுக்கும் கருணாவுக்குமான தொடர்பு உண்மையா,அவரது பணத்தில் வீடுகள் வாங்கப்பட்டதா?கருணைதாசனின் குற்றப்பத்திரிகைக்கு நியாயம் உண்டா-அதில் உண்மை உண்டா?

இவற்றுக்குப் பொறுப்பான பதிலைத் தராது நீங்கள் கிழக்கு மக்களுக்காக் குரல் கொடுத்து என்ன பயன்?-என்னத்தைச் சொல்லி,என்ன ஆவது?...


இலங்கையில் நடக்கும் யுத்தத்தாண்டவத்தை நிறுத்துவதற்காக உங்களெல்லோரினதும் குரல்களையும் உண்மையென்றும்-நியாயம் என்றும் நம்பினோம்.நீங்களோ மக்களின் பிரச்சனைகளை உங்கள் வருவாய்காகப் பயன்படுத்தி வந்திருந்தால் அதையிட்டு வெட்கப்படுகிறோம்.

ஊர்ப் பணத்தில் உயிர்வாழ்வதைவிட ஒரு சொட்டுப் பூச்சி மருந்துண்டு உயிர் விடுவது மேல்.

அங்கே, அப்பாவிகள் உயிர்வாழத் துடிக்கும்போது,தவிச்ச முதல் அடிக்கும் டக்ளஸ் தேவனந்தா,ஆனந்த சங்கரி,கருணா போன்ற கயவாளிகளுக்கும் ஞானத்துக்கும் வித்தியாசமுண்டா?-உண்டென்றால் உளம் திறந்து வெளிச் சொல்லுங்கள்!நாங்கள் மகிழ்வோம்,உங்கள் நாணயம் எம்மை வலுப்படுத்தும்!உண்மையாய் வாழ்வதே உயிர்த்திருப்பின் அர்த்தமாகும்!சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளியற்று நியாயமாக இருத்லென்பது மக்களை அணுகும்-அவர்களின் மனங்களை நெருங்கும் முதற்படியாகும்.

ஞானம், உங்கள் மீது சாடப்பட்ட அல்லது சுமத்தப்பட்ட இந்தக் கறைகளுக்கு நீங்கள் மனம் திறந்து பதில் தருவது மிக நல்லது. நண்பன் யார்,எதிரி யார் என்று புரிவதே இன்றைய இருண்ட எமது மக்களின் வாழ்வுக்கு முதலில் அவசியம்.இதிலிருந்துதான் விடுதலையே சாத்தியமாகும்.

மக்களைத் துரோகியென்று போட்டார்கள்,போராடத்தில் இணையும்படி வற்புறுத்திக் கொன்றார்கள்,அவர்களின்மீது யுத்தத்தைத் திணித்துக் கொன்றார்கள்.இப்போது, அவர்களின் உரிமையையும் அடைவுவைத்துக் கொல்கிறார்கள்.இதில் நீங்கள் யார்?

அற்ப சுகங்களுக்காக நீங்கள் பொய்மைகளை அடுக்கினால் ஒரு நாள் அவையுடையும்!அப்போது, எமது கரங்கள் வலுப்படும்.மக்களின் அவலங்களுக்காக நாமும் அவர்களோடிணையும் நாளொன்று கூடும்.

நாயாய் அகதியாகி அழிந்து,ஓடாய் உழைத்தும் ஒரு குவளை சோற்றுக்கே அடுத்த நாள் உழைக்கும் நாமும் நாடு திரும்பி மக்களின் வாழ்வோடிணையும் ஒரு யுகம் பிறக்கும்.வரும்மாதச் சம்பளத்தில் இம் மாதம் வாழும் நமது அடிமை வாழ்வும் அகலும்!

ஜனநாயகம்
06.11.2007

Mittwoch, Oktober 24, 2007

ஆருக்காய் அழிந்தீர்?

ஆருக்காய் அழிந்தீர்?


தேகம் நோகிறது
திரண்டவென்னுறுதி குலைகிறது
உயிரே,உறவே,என் தெவிட்டாத தமிழே!
இந்தத் தேகம் ஆடுதே,அதிருதே
ஆருக்காய் அழிந்தீர்?

போருடல் யார்த்த புது மொழியே
துன்பப் பெருவெளியில் தோற்காத உயிரே
தோள் முறியா என் தேசமே,
தூணே,துயரறியாத் துணிவே!

நான் தோற்கிறேன்
தொலைவில் சென்றவரே
தோன்றீரோ மீள
என் தேசக் கருப்பையில்?

என்னிருப்பே,
ஏழ்மைதாங்கிய திடமே
தீனுக்காய் உயிர்த்திருக்கும் எனக்குள்
தீயாய் சுடும் தீபங்களே!

விழுப் புண்காவிச் சோர்ந்த உடலுரியச்
சொரியும் பூவில் உடல் மறைத்துங்களை
தோள் கூடிக் காவத் தெருவில் நிற்க
புதைத்தனரோ புத்தர்கள் புதை சேற்றில்?

பொல்லாத பேயரசு
பெயருக்கும் மனிதமற்ற
மடை நிலமாய் மாறிய இலங்கை
கடை நிலையாய்க் கண்ணீரற்ற மண்

புலம்பெயர்ந்த மனங்களின் மகிழ்ச்சி
விலையுயர்ந்த விமானத்தின் அழிவுக்கா?
என் விலை மதிப்பற்ற வீரத் தேச பக்தர்களே
உங்கள் மரிப்பில் மகிழ்வு தொலைய
மார்பெல்லாம் வலியதிகம்
விழிகொட்டும்,வாய் புசத்தும்

என் மகனே,மகளே!
எதற்காக இந்த வேள்வி?
மனம் முடங்கிய எமக்காக
மெல்ல நாமிட்ட பிச்சைக்காய்?

வேண்டாம்!
இத்தகைய வேதனையில்
வெற்றியொன்று வேண்டாம்!!
வீரர்களே விலங்ககற்ற
வேளையொன்று கூடும்
வேல்காவித் தோள் சேர
நூல் காவும் உங்களுறவும்!

தேசம் தொலைத்து
நேசம் அழித்து
தொலை தூரம் சென்று
சருகாய்ச் சாகும் என் உயிருள்
அதிர்வாய்,அக்கினியாய்
உதிர்ந்த உங்களுடலம்!

மெய்யே,மேன்மையே
மிகப் பெரும் வலுவே-என்
விருட்சமே,விழுதே-வீரமே!
துயரத்துள் என் மனம் பாரீர்!

கார்த்திகைக் கரும்பே
கண்ணீரின் பெருமிதமே
காலத்தால் அழியாக் காவியங்களே
காதலித்த மண்ணுக்காய்
வீழ்ந்தீரோ வீர முத்தத்துடன்!

தீராத சோகத்தில்
திக்கற்ற இந்த இழி மனிதன்
தானாடாதபோதும்
தன் தசையாடக் கவி பாடித் தமிழ் நோக
உணர்விட்ட பாதையொன்றில் தனி மரமாய் வான் நோக்கி

வாறீரோ என் வசைகளுக்குள்
ஒரு வாழ்த்துக் கேட்க?
வதங்குகிறேன்,
வாயெடுத்து ஓவென்ற ஓலத்தோடு
சளி சிந்தும் நாசித் துடைப்பிலும்
இந்தக் கிழட்டு விரல்கள்
தமிழழுத்தத் தரணம்வைத்த என் வாரீசுகளே
வாருங்கள் தேசத்து விடியலுக்குள்!

வர்க்க நிலைக்குளென்னுணர்வை வைத்து வதைக்காதீர்
தேசியத்தைச் சொல்லியும்
என்னைத் தாழ்த்தாதீர்!
இதுவென் சுயமாக்கப்பட்ட வலி.
சொன்னாலும் புரியாத தொப்புளுறவு.

தேசத்துக் குழந்தைகளின் உதிர்வோடு
அரசியற் சடுகுடுவா,
சாணாக்கியமா?-வேண்டாம்!

விடியலுக்கான வீரப்போரொன்றைப்
பொழுதோடு போற்றிக்
களமாடும் நிலையொன்றில்
புரட்சிக் கீதமொன்று ஓலத்தை மறைக்க
சீலத்தில் தேசமகள் திளைக்கத் தோன்றுக மீள!

உங்கள் புதுவரவுக்காய்
உழைப்பவர் மகிழ்வார்
உயிரினுள் வைத்துத் துதிப்பார்
தோன்றுக எம்தோள் சேர்ந்து
தேசத்தைக் காக்க

அதுவரையும்
சென்றுவாருங்கள் என் செல்வங்களே!
சோகச் சுமையாய்
துயிலுரிந்த உங்கள் உருவங்கள்
நெஞ்சில் கீறிய வலி ஆறுவதற்குள்
வாருங்கள் புரட்சிக் கீதம் இசைத்து!


ஜனநாயகம்
24.10.2007
இரவு மணி:22.16

Sonntag, September 30, 2007

புலிகள் சொல்லுஞ் சில...

புலிகள் சொல்லுஞ் சில சேதிகள்:"சுட்டுவிரல் தொட்டுவிடும் தூரத்தை எட்டிவிடும் எங்கள் ஒலி."

"மென்னுணர்வு இரையாகும் கவிதை மொழிக்குள்
கட்டப்படும் ஏமாற்று வித்தைகள்.இதுள்
வித்தகன்
எங்கள் "புரட்சி"க் கவி புதுவை.
பேரோடு போராடும் பொய்மைப் பொழுதுகள்
புதுமையாகப் பொலிவுறுந் தரணங்களைப்
புரட்டிப்
பார்த்தலும்,போட்டுடைத்தலும்."

பொதுவாக இசைக்கும் மனிதரிடையே இன,மத,மொழி,என்பதைக் கடந்து இசையில் இலயித்திருப்பது எல்லா மனிதருக்குமே சாத்தியமாகிறது.இசைக்கு மொழியென்பது கிடையாது என்பதை உணர்வுக்குள் நிறுத்தும்போது இசைக்கு மொழி உண்டென்பதும் சாத்தியமாகிறது.இதன் மிக நுணக்கமான செயற்பாடு மென்னுணர்வைத் தாக்குவது.அந்தத் தாக்குதலில் அது மனிதரிடையே மகத்துவத்தையும்,மாண்பையும் ஏற்படுத்தலாம் அவ்வண்ணமே கீழ்மைப்படுத்தவும் முனையலாம்.இவ்விரண்டு செயற்பாடுமே மொழியாக உணரும்-தாக்கும் கட்டளையாக உணரக்கடவது.இந்த நிலையில் மொழியானது இசைத்தல் முறைமைக்குள் ஓசை நயத்தோடு,எதுகை மோனையோடு பேசிக்கொள்ளும்போது, ஒலிக்கு இந்த இசையின் செயற்பாடுண்டு.எனவே, இசையென்பது ஓசை என்பதாக... இங்கே, இசையென்பது வாத்தியக் கருவிகளால் இசைப்பதைச் சொல்லவில்லை.இசையென்பது ஓசை நயத்துடன் மொழிவதை-உரைப்பதை,சத்த இலயத்தைச் சொல்கிறேன்."ஒலியே பிரமம்" என்பது அத்வைதத்தின் குறிப்பு.

இங்கே, அத்வைதம் சொல்லும் ஒரு உண்மை இறையோடு ஏற்றமாகிறது.அவ்வளவுக்கு ஒலியின் ஓசை முக்கியமானது.அத்வைதத்தின் அடுத்த கட்டங்கள் நம்மை அடிமைகொள்ளும் அரசியலாக இருப்பது நமது சாபக்கேடு.என்றாலும் இந்தவொரு நிலையை நாம் சில அநுபங்களோடு உணர்வோம்.

இதுவொரு இறுக்கமானவுணர்வு உந்தப்படும் மழைக்கால இரவு.

விடுதலைக்கும்,அடிமைத் தனத்துக்கும் இடைப்பட்ட நிலையில் வாழும் ஈழத்தமிழர்களின் இரண்டுங்கெட்டான் வாழ்வில் விடுதலைக்காகப் போராடும் ஒரு அமைப்பின் எல்லாவகைப்பட்ட(அடக்குமுறை,பாசிசம்,தேசியத்தன்மை-விதேசியத் தன்மை-இன்மை,இறுமை-பெருமை,புண்ணியம்,புண்ணாக்கு,உண்ணாக்கு...)செயற்பாடுகளுக்கும் மத்தியில் நாம் உணரும்,அநுபவப்படும்-ஆத்திரப்படுந் தரணங்களை,அள்ளிப் பருகும்-உருகும் பெருமை,சிறுமைகளைச் சொல்வதற்கு மனம் பிராண்டும் ஒரு நிலையைப் பகிர்வதற்கு முனைவதில் எந்த முத்திரைகளும் எப்படி விழுந்தாலும் அது உணர்வுக்கும்,அறிவுக்குமான இரு நிலைப்பட்ட மனித முயற்சியின் கோணங்கித்தனமென்று கம்மெண்டு கிட கண்மணிகளா!

இடைக்கும்,தொடைக்கும் உருகும் இசைக்கு நடுவில் அந்தவொலி ஓசை நயத்துக்குள் வீழ்ந்து தோயுந் தரணங்களில் கவிதை எழிச்யுறுந் தரணமாக விரியும்போதே, அங்கே சரிவும் வந்து விடுகிறது.இந்த இரவின் மடியில் இசை கேட்குமொரு உணர்வைக்கொண்டு,அதைப் பூர்த்தியாக்கும் தரணத்தில் இசைக்கான தெரிவு எப்பவுமே அநுபவத்திலிருந்து விசும்பு கொள்கிறது.இந்த விசும்பின் முகிழ்ப்பில் எத்தகைய இசையை மனதில் பதியமிட்டிருக்கிறோமோ அது முந்திக்கொள்ளும் பெருவிருப்பாக.எனக்கு இசையோடு உறவென்பது சகலவிதத்திலும் செவிப்புறத் துய்ப்பாகவே இருக்கிறது.அதன் உட்பரிணாமங்களில் அறிவு பெறமுடியவில்லை-முயலவில்லை.என்றபோதும், இசையால் ஏனோ வசமானேன்.இந்த இசையில் மிக விருப்பமாக கேட்கும் இசைவடிவம் சிம்பொனி.மேலத்தேய இசைக்குள் இருக்கும் மிகப் பெரும் ஸ்த்தானம் சிம்பொனியால் இன்றுவரையும் நிலைப்படுத்தப்பட்டு வருகிறது.பீத்தோவனுக்கு(Beethoven) முதலே மொசாட்டால்(Mozart),பக்கால்(Bach)வளங்கண்ட சிம்பொனி பீத்தோவனால் புரட்சிகரமாகத் தொழிலாளிகளுக்காகவும் கீழிறங்கிவருகிறது.மேட்டுக் குடிகளுக்கே அநுபவமான சிம்பனியை தாழ்த்தப்பட்ட தொழிலாளர்களும் கேட்கும் நிலைக்கு-அவர்கள் விடுதலையடையும் நிலைக்கு உந்திய பீத்தோவனின் அட்டகனாசமான சிம்பொனி 9 நம்மை வியப்பிலீடுபடுத்தி, அவனை இசையின் வேந்தனாக்கி வைக்கிறது நமது மனத்தில்.அவனது உணர்வுக்குள் அநுபவமான உலகப்படைப்பாளிகளுக்காக அவனும் ஏதோ செய்ய முனைந்தபோது சிம்பொனி 9 ஐ படைப்பாக்கிறான்.

அற்புதமாக ஓசை நயத்தோடு உரையாடும்-பாடும் எந்த விடையமும் நமது மென்னுணர்வோடு விளையாடும் தரணத்தைக் கணிதத்தால் வகுத்துப் பிரித்துச் சொல்வது கடினம்.ஏன்-எப்படி இந்த நிலை ஏற்படுகிறதென்பது இதுவரை அநுபவமாகவில்லை.பிறகம்ஸ்(Brahms:Violin Concerto-The Symphony series represents a major breakthrough in classical music)வையிலின் கொன்சேர்ட்டில் அமைதியடையும் ஒரு நிலையில் மனது இலயிக்கின்றபோது அங்கே மெளனித்திருக்கும் உணர்வுக்கு மேன்மேலும் பெரு வாழ்வைச் செய்கிறது அந்த ஓசை.இப்படியொரு நிலையானது மனத்தின் எல்லாவித மின்னல்களையும் உணரும்-அநுபவமாகும் ஒரு உயர்ந்த செயற்பாட்டைச் செய்கிறது நமது நரம்பு மண்டலத்துள்.அப்போது மூளையின் எல்லவித ஊக்கமும் ஒரு பொறியுள் அகப்பட்டுப்போய் ஏதோவொரு ஏவலால் உந்தப்படும் நிலையைப் பெறுவதால் நாம் இத்தகையவொரு ஓசை நயத்தோடு-எதுகை மோனையோடு எடுத்து வைக்கப்படும் வார்த்தைகளுக்குக் கட்டுப்படுவதும்,அத்தோடு ஒன்றித்தல் நிகழ்ந்துவிடுகிறது.அங்கே, நாம் நம்மை இழப்பதும் பின் ஏமாறுவதும் நிகழ்கிறது.இங்குதான் இந்தப் புனைவுக்குள் சிக்குணடு போகிறோம்.இது மூடத்தனமா இல்லை மனித உடலின்-உயிரின் சாபக்கேடா எனக்குப் புரியவில்லை!

அற்புதம்!

இசைக்கும் மனிதரிடையே இருக்கும் பொல்லாத தலைக்கனம்,மமதை. இந்த சிம்பொனி இசையின் தெரிவில் பீத்தோவனிடம் இருக்கும் மெலினப்பட்ட உணர்வு அவனைத் தான் வாழும் சமுதாயத்தோடு இணைத்திருக்கிறது.ஒருபொழுதில் நாம் மனித நிலையிலிருந்து விடுபட்டு மோன நிலையால் முடிச்சிடப்படும் தரணங்களில் கற்பிதமாக எமது உணர்வில் எழுந்தருளியிருக்கும் இறை நிலைக்குச் செல்வதுண்டு.அந்த நிலை மனத்தில் பற்பலவானவொரு மகிழும் தரணங்களைத் தந்துவிடுகிறது.அப்படி மகிழுந் தரணங்களை நாம் துறவு நிலை,அனைத்தையுங் கடந்த நிலை,தியான நிலை என்றெல்லாம் சொல்லி வருகிறோம்.ஆனால், எனக்கு அந்த நிலையெல்லாம் அற்புதமான மனித நிலையாக,மனதிற்கிசைவான உறங்கு நிலையாகவும், அதுவே ஒருகட்டத்துள் மனித ஆயற்றலில் பேரெழிச்சியாகவும், மனிதர்கள் உண்மையாக இருக்கும்(இருத்தல்)உண்மையாகவும் இருக்கிறது.மனதில் எழும் சுதந்திரமானவொரு உணர்வின் தெரிவில் கற்பிதங்கள் மறையும் பொழுதாக இது என்னால் உணரப்படும்போது, நான் நானாக இருக்கிறேன்.இந்தச் சுயத்தை நான் எந்தப் புறநிலையிடமுமிருந்து பெறாதவொரு தவநிலையை உணர்வதென்பது மிகைப்படுத்தலல்ல.

நமக்கிருக்கும் ஒரு குறுகிய கால அவகாசத்தில் நான்-நாங்கள் மெளனிக்கப் போகும் இன்னொரு நிலையில் எமது நாணயமான இருப்பை உணரும் நிலையை இந்த இசையுணர்வு எடுத்துப் போட்டு விடுகிறது.முக்கியமற்ற பொழுதாக அல்லது ஓய்வென்றுணரும் இந்தவொரு நிமிடம் எப்போதும் மலசலக் கூடத்தில் இருக்கும்போது, நம்மைத் தொட்டுச் செல்கிறது.இந்த நல்லதொரு உணர்வின் நம்பிக்கை மனிதர்களின் மற்றெல்லா விதத் தேவையையும் பூர்த்தி செய்யும் சக்தியை வளங்கிவரும்-வல்லவொரு உணர்வாய் நமக்குள் வடித்துக்கொள்ளப்படுகிறது.நமக்கே புரியாத நம்மீது ஆதிக்கஞ் செலுத்தும் இந்த சாதகமான உணர்வைத் தீயின் துணைகொண்ட செந்தழலாக்கிச் சிவப்பாக்கி வைத்திருக்குந் தரணத்தில் நம்மீது ஆதிக்கஞ் செய்யும் புற நிலையை மாற்றமடைய வைக்கும் அகவெழிசச்சி வந்தெழுகிறது.நாமதை உணரும் எல்லா வகைகளையும் நம் போராட்ட களத்தில் பார்க்க முடியும்.

ஈழதேசத்தில் இன்றுவரை தொடரும் யுத்தத்தில் எவரெவர் பங்குகள்-பற்றுக்கள்-பாசங்கள்(நலன்கள்)இருக்கிறதென்பதையுங் கடந்து புலிகளிடம் இந்த அகவெழிச்சி அறியும் உணர்வு அற்புதமாகச் செயற்படுவது கண்டு, ஒருபுறம் ஆச்சரியம்.மறுபுறம், அவர்களின் அதீத நிலைப்புக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ என்று சிந்திக்கும்போது அதுதாம் உண்மையென்பதற்குச் சமீபத்தில் புலிகளின்-ஈழத்தின் ஆஸ்த்தான கவி-ஆணவக் கவி புதுவை இரத்தினதுரையால் நடாத்தப்பட்ட கவியரங்கு சொல்லும் சிலவுண்மைகளை.

புதுவை இரத்தினதுரையின் வீச்செறியும் வார்த்தைகளின் பின்னே வந்தமரும் உணர்வு நிலையானது மிகவும் கூரியவுணர்வைத் தரவல்லது.அந்தவுணர்வு நிலையானது மிகவும் நம்மோடு நெருக்கமாக வந்து உட்கார்ந்து நம்மை ஏமாற்றும் பெரியவொரு செயலில் நர்த்தனஞ் செய்வது.அவரது மொழி ஓசையோடும் எதுகை மோனையோடும் நீண்டபடி செல்வது.அங்கே, அவர் தனது நோக்கத்தை நிறைவு செய்யும் மொழி இசையாக மாறிவிடுகிறது.இதுதான் இந்தக் கவிதை மனிதரின் இன்றைய வெற்றியாக இருக்கிறது.கவிதை "யாரது பின்னாலும் செல்லாது,மண்டியிடாது" என்பதை நாம் ஏற்பதற்கில்லை என்று சொல்லவே அவரது மொழி விடுவதாகவில்லை.ஆனால்,இந்தக் கயமையை அவர் செய்யும்-ஒப்பேற்றம் நிலைக்கு அவரைத் தொடரும் கவிஞர்கள் தரும் மெய் நிலை உறுதிப்படுத்தும்போது, அவரது கவிதைக் கம்பீரம் தவிடுபொடியாகிறது.அன்றைக்குக் கூலிக்குக் கவிபாடியவர்கள் எல்லாம் தமது வருமானத்துக்குத் தடையேற்படும்போது"மன்னவனும் நீயோ..."என்று ஓங்கி ஒலிப்பார்கள்.அதை மக்களினது குரலாக எடுக்க முடியுமோ?.இன்றைக்குக் கருணா நிதிக்காக ஓலமிடும் மேத்தா-வைரமுத்துக் கூலிக் கவிஞர்களிடம் இருக்கும் கூனிக் குறுகுதல் இந்தக் கவிஞனிடம் காணாதிருக்கும் சந்தர்ப்பங்கள் அதிகமெனினும் இவன் மண்டியிடும் ஒரு நிலை எப்போது-எங்கே என்பதை இவரது மொழிவுகளே காட்டிவிடுகிறது.

தேசத்தின் வாழ்தல் என்பது நமது படைப்புகளால்தான் என்பதை மிக நேர்த்தியாக அறிந்த இந்த ஆணவக் கவிக்கு எப்போது பொய் சொல்லும் நிலை வருகிறதென்பதை நாம் இவரது படைப்புகளோடு உலாவரும்போது உணர முடியும்."நான் சொன்ன வார்த்தைக்கு வடிவம் கொடுத்தாய் விசாலகா"என வர்ணிக்கும் விசாலகனின் ஓலத்துள் இருப்பது அப்பட்டமான ஏய்ப்புகள்.அப்பாவிச் சிறார்களுக்கு அல்வாக் கொடுத்து,ஆசை காட்டுவதல்ல கவிதையின் பணி.இது புதுவையாருக்குப் புரியாதாவென்ன?மக்களை அரசியல் மயப்படுத்தி,புரட்சிக்கான-தயாரிப்புக்கான மக்களின் சுயவெழிச்சிக்கு ஆப்பு வைக்கும் புலிகளின் குரல்களாக வரும் விசாலன் கொப்பளித்த வார்த்தைகளுக்கும், நுட்பகமாகக் கருத்திடும் புதுவைக்கும் என்னவொரு ஒற்றுமையாகிறது.இயக்கப் பிரச்சாரமிடுவதற்கு பெயர்"கவிதையென்பது எழுதாப் பொருள் கடந்த-அது,கவிதை, அதையெழுதும் அவன்(இங்கே பெண்ணுக்கு எந்த வேலையும் இல்லை.கவிதை என்பது ஆணோடு கூடப் பிறந்தது!-ஆணாதிக்க வரம்பில் நின்று வேட்டைக்கு வித்திட்டவர் புதுவை.)கவிஞன்"பிரபாகரனுக்குப் பட்டுப் போர்த்தாத குறையாகப் "பிரபஞ்சத் தமிழருக்கெல்லாம் பிரபாகரன்தான் தலைவர் என்பதற்கு"கவிதை மொழி எதற்கு?,எதுகை மோனை எதற்கு?வீராவுக்கு மேற்குலகப் பயணம் பல அநுபவத்தைத் தந்திருக்கிறது நமக்காய் நாடகமிடும் நல்ல நண்பராகிறார்.

பொன்.காந்தனின் கவிதை மொழிக்கு வேஷம்-தனிநபர் துதி,வீம்பு அவசியமாக இருக்கிறது. அவர் தன்னை இனம் காணும் சந்தர்ப்பம் அவருக்கு இல்லாதிருப்பதற்கான தரணங்களை அவரே புரிவதால் "கழுதை உனக்கும் காலந்தான்"என்பதும்,தான் பழிவாங்கப்பட்டு விடுவோமோ என்றவுணர்வில்"எழுதி வைத்துக்கொள்ளுங்கள் கரிகாலன் காலத்தில் எவனாலும் இல்லைத் தமிழருக்கு ஏய்ப்பு"என்று தற்பாதுகாப்புச் செய்கிறார்.இத்தகைய கவியரங்குக்குள் கட்டப்பட்டிருக்கும் ஓசை நயங்கள், ஓயாத ஏமாற்றுக்களின் வித்தைகள் வினையாகக் கட்டிவைக்கப்பட்டு,நம் மென்னுணர்வோடு விளையாடுகிறது.இந்த வினையானது எப்போதும் எம்மை ஏமாற்றும் சுழிகளைத் தொக்கிவைத்துப் பொய்மை பேசுகிறது.இது இசையாக-ஓசையாக மெல்லவருடும் தமிழாக நம்மை மொத்தி, நமது உணர்வோடு கட்டிவைக்கும் உணர்வுப் பொதியானது சிந்தனையைத் துரத்திவிட்டு, மீண்டும் மாயைத் தோற்றத்தை-மெளன அங்கீகரிப்பை நமக்குள் விதைக்கிறது.இந்த மொழிவுகளால் ஏமாற்றப்படும் நமது உண்மைத் தரவுகள் எந்தப் பொழுதிலும் தடுமாறித் தமிழின் பெயரால் யாரோ அநுபவிப்பதற்காகச் சிறார்களை மேலும் காவு கொள்ள வைக்கிறது.இந்தப் போலி மொழிவுகளுள் புதைந்துள்ள நமது "அவாக்கள்" மெல்லப் புரியும் தரணம் வெறும் வெற்று வார்த்தையாகிறது.சொந்தமான வான் ஊர்த்தியைப் போற்றுவதலாலோ அல்லது பெரும் ஆச்சரியப்படுவதாலோ அன்றிப் புகழப்படும் தனிமனிதரான பிரபாகரனின் தகமையைப் பற்றிப் பொய்யுரைப்பதால் நாம் பெறுவது விடுதலையல்ல!மாறாக, நாம் பெற்ற இன்றைய நிலையே சாட்சி!புதுவையார்(புலிகள்)உறவுகளிடம் கேள்வி கேட்டுச் சம்மதம்(...) கேட்பது புதிசாக இருக்கிறது.பொய்யில்லை,எல்லாப் புகழும் புதுவைக்கே சேரும்.

நமது உணர்வுகளோடு ஓசையாக வந்த இந்த மொழிக்கு நல்ல இசைச் சாயல் இருக்கிறது.

எமது மனதோடு மெல்லப் பதியம் வைக்கும் கருப்பொருள்களுக்கு மத்தாப்புக் கொளுத்தும் புதுவைக்கு நிகர் புதுவையே!இங்கே, நாம் அவதானமாக இருக்க வேண்டிய தரணங்கள் நம்மை இழக்காது இருப்பதும்,அந்த நிலையில் நம் போராட்டத்தள நிலமை என்ன என்பதை மீளப் பார்த்து அறிவதும்.அப்போது, இவர்கள் கட்டும் மாயைத் தோற்றம் என்ன என்பதை உணர்வது மிகச் சுலபம்.மக்கள் மீளவும் ஏமாறாது புரட்சிப் பயணத்தைத் தொடர்வதற்கான ஜனநாயகச் சூழலைப் பெறுவதற்கான சந்தர்ப்பம் அருகும் இன்னொரு தரணம்-அபாயம் நம்மை இப்படி நெருங்குகிறது என்பதைத்தான் இப்போது சொல்கிறோம்.

"பாடுபட்டவர்கள்(வேதனை,இழப்பு,மரணம்,அகதி நிலை,வீட்டிற்கொரு பிள்ளைப் பறிப்பு,தட்டிப் பேசத் துப்பாக்கித் தடுப்பு இத்யாதியும் இன்னபிறவும்) மக்கள் அவர்கள் முன்வரவேண்டும் இதற்குப் பதில் சொல்ல!"
ஜனநாயகம்.
29.புரட்டாதி 2007

Donnerstag, September 27, 2007

அகதியாகி அழியுங் காலம்

அகதியாகி அழியுங் காலம்


த்தமில்லாதவொரு தெரு முடுக்கில்
தனித்தேயிருக்கும் பொழுதொன்றில்
ஊர்க் கனவு
மனது கனக்கும்


அந்நியன்
எச்சமிடும் நிலையிலும்
கொலை விழும் தரணத்திலும்
எனது தேசத்துக்
கிராமத்தின் துடிப்பில் வலுவிருக்கும்
வாழ்விருக்கும்


ஆத்தையின்
இடுப்பிலிருக்கும் நீர்க் குடமும்
அள்ளிய நீரும்
ஆச்சியின்
சோறூட்டும் சூம்பிய விரல்களும்
அப்புவின்
சுருட்டு மணமும்
அந்தச்
சாக்குக் கட்டில் குட்டித் தூக்கமும்
சித்திரை நிலவும்
சின்னமடுமாதாவின்
பூசை மணியும்
சங்கு ஊதியதற்காகவும்
தேவாரம் பாடியதற்காகவும்
வைரவர் கோவிலில்
ஐயரிட்ட பொங்கலும் அழிந்த காலத்துள்
பதியமிட்ட உணர்வு


புகையிலைச் செடிகளின் மலர்ந்த இலைகளும்
மெளனமாய்க்
கொட்டும் பனியும்
இதற்குள்
மனசைப் பறிக்கும்


அணிலின் பாட்டும்
பனங்காய் வாசமும்
அவற்றைப் பந்தாடும் ஊர் மாடுகளும்
அணைக்க
மாமிமகள் மச்சினிச்சியும்...
இளையராசாவின்"மச்சானைப் பார்த்தீங்களா"ப் பாட்டும்...
என்னத்தைச் சொல்ல?


ஐரோப்பியச் சந்தையில்
அனைத்தையும் பெற்றும்
அம்மாவுக்கு "அடுப்பெரிக்க விறகு பொறுக்கும்"
அந்தச் சுகம் இல்லை


கட்டிய மாட்டுக்குப்
புல் செருக்கும் வலியும்
அன்றைய வதையினுள்
ஓன்றாய் விரியும்
இங்கே
அகதிய அழிவில் அதுவும் சுகமே



கால் நூற்றாண்டு கடந்தாலென்ன
இல்லைக்
கட்டை
வெந்து மண்ணாகினாலென்ன?
கள்ளிக்கும்
ஆமணக்குக்கும்
கதை சொன்ன அந்தக் காலம்
கண்ணீரில் படரும்


பட்டம் விட்டு
அண்ணனும் தம்பியுமாக
அள்ளிச் சுவைத்த அம்மாச் சோறு அமுதம்!


இப்போதும்
மனைவியுண்டு
மக்களுண்டு
வேலையுண்டு
காருண்டு
காசு உண்டு
ஆனால்,
கண்ணீர்...

காலங்கள் கடந்திடினும்
கண்ணீரில் நிழலாடும்
என் முற்றம்!


முப்பாட்டன் வளர்த்த பனையும்
அப்பன் தோண்டிய கிணறும்
ஆத்தை அவிந்த சமையற் கட்டும்
அள்ளிச் சுவைத்த செம்பு நீரும்
ஓட்டைச் சயிக்கிளும்
புழுதி ஒழுங்கையும்
ஆடும்,மாடும் அந்த வீமாவும்
"உஞ்சு"என்பதற்குள் காலை நக்கும்;
இன்றும்
அழியாத கோலமாய்...


எத்தனை இரவுகள்?...


இடித்துக் கொட்டும் மழையும்
ஐப்பசிப் பெருநாளாய் மலரும் சின்னமடுமாதாவும்
சங்கானை,
சில்லாலை மக்களின் கூடார வண்டிலும்
குயிலின் கூவொலியும்
கும்மாளமிடும் சிறுசுகளும்
குழம்பில் அவியும் மீனும்
குத்தரிசிச் சோறும்
கொடிய வதையாய்
இதயம் வலிக்கும்


சிங்கராஜரின் அடுக்கு மொழியும்
அள்ளித் தரும் அருந் தமிழும்
மாதாவின் வளவுக்குள் அலைய
அம்மாவின் மடியில் தலை புதைக்கும் நான்!


அங்கேயும் இல்லை நான்
இங்கேயும் இல்லை நான்
அகப்பட்டது அகதியாய்...

அந்நியனாய் முகந்தொலைத்த
இந்தப் பொழுதில்
எள்ளி நகையாடும்
ஐரோப்பியக் குடியின் மிதப்பில்
என் தேசத்து வளமும் தாளமிட
கொல்லைப் புறத்து
கேடியரசியலின் கூசாத் தூக்கிகளும்
கேடான யுத்தப் பேரரசர்களும் பேசும் தீர்வுகளோ
நடாத்தும் யுத்தங்களோ
"அகதி"க்கு ஆட்சேர்க்கும்

அப்புவிடம்
குடியிருந்தது சொந்த முகம்
பேரனிடம்
வேருமில்லை விழுதுமில்லை
இதில் முகமிருக்கும் வேளை ஏது?


அகதியாய் ஓடி
அகதியாய் வாழ்ந்து
ஐரோப்பியத் தெருக்களில் சருகாய்ப் பறந்து
அள்ளப்படும் குப்பைகளோடு
முகமிழந்த இந்த முண்டமும்
ஒரு நாள் அள்ளப்படும்


ஜனநாயகம்
27.09.2007


Dienstag, September 25, 2007

எங்கள் தோள்களில் துணையாய் விழுந்து...

பெரியம்மா நீ, நீடூ வாழீ!

பொழுதெல்லாம் ஒளியெறியும் கதிரவனாய்
வாழ்வுலகில் தன்னை ஒளிரவைத்த என் பெரியம்மா
ஆறுதலாய் அறுபது அகவையைக் கடந்தாரா?
அற்புதமான அம்மா அகமகிழவொரு
அன்பாய் நிலைத்த "பெரியம்மா நீடூ வாழீ" என்ற
என் செல்லமொழி உங்களுக்கு!

நலமாய்க் குணமாய் நாளெல்லாம் இன்புற்று
நீங்கள் அகம் மகிழ அந்த ஆண்டவன்
பொழிகின்ற அருளெல்லாம்
அன்பாய்ச் சொரியும் பிள்ளைகள்


அறுபது கண்டது இந்த ஆலமரம்!
விழுதெறிந்து நிழலாய் விரிந்த
எங்கள் பெரியம்மா!
சொல்லும்போதே ஒரு சுகம் நெஞ்சை நிறைக்க
நினைவெல்லாம் உங்கள் நீங்கா நிறைந்த முகம்
எதையும் தாங்கிய இதயம்
என்னத்தைச் சொல்ல!
அம்மாவை,பெரியம்மாவாய்
பொழுதெல்லாம் புகழத்தக்க சீமாட்டி நீங்கள்!

அன்பைப் பொழியும் உங்கள் அகமும்
அதில் இன்புற்ற நாங்களும்
அந்தக் காலத்துக் கதையாய் இன்றும்
இதயத்தில் சுகமாய் விரியும்
அன்புக்கு அறுபது அகவை

ஆலயத்தில் அன்பாய்விரியும் அம்பாள்
என் அகத்தில் உங்கள் முகம்தாங்கி
இனிக்கின்ற பொழுதுகளை
எப்பவும் உங்கள் அணைப்பில்
அமைதியாய் உணர்ந்த அன்றைய பால்யம்

இன்றைக்கு இன்புற நீங்கள்
இனிதே காணும் அறுபது அகவையில்
வாழ்த்தும் என் உணர்வும்
வாயாறப் "பெரியம்மா வாழ்க" என்றே
மெல்லச் சொல்லும் !

அரிதாய்ப் பெரிதாய்
எனக்கு வாய்த்தாய் பெரிய அம்மாவை
பொழுதுகள் தோன்றலாம்
பூக்கள் மலரலாம்
ஆனால்,
உங்களைப்போல் "பெரியம்மா"அரிதாய்,
அரிதிலும் அரிதாய்ப் பெற்றேன்!
அம்மா வாழீ,
அகம் மலர அறுபது கண்ட
அன்புச் சொரூபமே நீங்கள்
நூறாய்ப் பல்லாண்டு கண்டு
பொழுதெல்லாம் ஒளியாய் நிறைந்து
எம் நெஞ்சமெல்லாம் நிறைப்பாய் அம்மா!

வாழ்க நீங்கள்
உங்கள் அன்புக் கரங்களென்றும்
ஓயாக் காற்றைப்போல்
எங்கள் தோள்களில் துணையாய் விழுந்து
உச்சி மோந்து எம்மைத் தழுவும்
பொழுகள் கோடி தோன்றுக!

Sonntag, September 23, 2007

உறவுறுந் தரணம்...

உறவுறுந் தரணம்...

நீண்ட தூரத்துள் உறங்கும் தேவதைகள்
சாளரத்தின் ஓரத்தில் உதிரும் சூரியக் கதிர்கள்
காலத்துள் அமிழ்ந்த என் உணர்வுக் குருவிக்கு
சமாதி கட்டிப் பார்க்கும் தோழி ஒருத்தி

மரத்தில் உதிரக் காத்திருக்கும் ஆப்பிள்
மௌனித்திருக்கும் என் வதைகளிலொன்று
பறித்தெடுத்த ஆப்பிளில் இறங்கும்
தேவதைக் கனவு கூசும் பற்களில்
குதறும் விற்றமீன்களுக்கு பொழுதொரு வதையாய்

அனைத்து நித்தியங்களும் அமிழ்ந்தழிய
அறத்தின் ஓரத்தில் காமக் கலப்பை தாக்கக்
கண்ணீர் வதையுள் கடுப்படக்கும்
காலத்துள் உதிரும் எதிர்ப் பால் வினையும்

























ஒரு வழிப் பாதை இருவருக்கும்
காலத்துள் அறபடக் காத்திருக்கும் ஜீவன்
கைப் பிடி மண்ணுள் இவ்வளவு கண்ணீர் பொழிவா?
இதயம் அதிரும் உயிரது கூத்துள்

குறுகும் பொழுதுகளில் உடைபடும் நாணம்
குவியும் கருப்புக்கு ஒதுங்கும் உறவு
மெய்தர மறுக்கும் கருமை மனது
ஈரஅலை இதயத்திலிருக்க உறங்கும் தாம்பாத்யம்

தொப்புள் கொடியுறவொன்றிணைக்கும் குடும்பம்
குட்டையைக் குழப்பும் கோதாரி மனது
கும்மாளமிடும் காழ்ப்புணர்வு
வதைக்கும் நினைவுகள்
வடுவாய் விரியும் நாவினாற் சுட்ட புண்

எனினும்,
நீண்ட தூரத்துள் உறங்கும் தேவதைகள்
சாளரத்தின் ஒரத்தில் உதிரும் சூரியக் கதிர்கள்
மௌனிக்க முனையும் பாலுறுப்பு

ஓலமிடும் ஒலியின் அதிர்வில்
சுவரில் உரசும் இதழ்கள்
இதயத்தின் அடியில் உலர்ந்த சாம்பல்
நாவிற்கடியுள் நலியும் காதல்

வீசியடிக்கும் குளிர்ந்த காற்றுள்
இதழாள் சுவையும்
நெருங்கி வரும் இரவில்
உடலின் மிடுக்கும் உருவந்தர மறுக்கும்
வலியை மென்று மனது ஒடுங்கும்

துயரத்தின் கொடுவாள்
அறுத்தெறியும் காலத்தின் மரிப்பில்
தொலைவதென்னவோ நீயும் நானுமே
தவித்தென்ன தண்ணியடித்தென்ன
தாழ்வது நமது நலமே!

நேரத்தோடு அறியப்படாத
எனது நிறமாற்றம்
தொலைவதில் வியப்பு என்ன?


22.09.2007

Sonntag, September 09, 2007

போக்கிடம்(புனைவு)

போக்கிடம்(புனைவு)

நான் தனிமையாக இருந்து கொள்கிறேன்.அதுவொரு கல்லாசனம்.ஒரு தொல்லையுமில்லாமல் நான் இருக்கவேண்டும்.ஆனால்,எங்கு போனாலும் தீ எரிந்து கொள்கிறது!,மனம் போக்கிடம் தேடியலைகிறது.வெகுவாக நான் அழிந்துவிட வேண்டும்,முடியவில்லை.

காற்று நன்றாக வீசி,குளிரை நிறைவான வகையில் அள்ளித்தெளிக்கிறது.நானிருக்கும் இந்தக் கல்லாசனம் எனக்கு மட்டுமே பொருத்தமாகக் கட்டப்பட்டவொரு சிம்மாசனம்.இதில்,என் வாழ்வின் நெருடல்கள்,மீட்டல்களில் சிக்கித் தவிக்கவேண்டிய ஒரு நியதிபோலும்

என் வசமுடையவை சிலருக்குச் சின்ன விடயமாகவிருக்கும்,எனக்கும் அப்படித்தாமிருந்தது நேற்று வரையும்.ஒன்றுடனொன்று சேர்ந்து கொல்கின்றன இன்று.
நான் மெளனத்தின் பிரதிநிதியல்லவே,உள்ளம் மெளனத்தின் பிடரியில் ஓங்யோங்கி அடிக்கிறது.

ஒற்றையடிப் பாதையொன்றில் நேற்று நடக்கின்றேன்.கூடவே என் சுயத்திற்கு சங்கேத பாஷையில் சமாதானஞ் செய்கிறேன்.பீறிட்டெழும் உணர்வுகள் என் சுயத்திற்குச் சமாதிகட்டிகொண்டிருக்கின்றன.மொத்து,மொத்தென்று உணர்வுக்கு மொத்த முடியவில்லை.

அந்தப் பாதை தொடர்ந்து கொண்டது.நான் ஏதோவொரு உந்துதலால் தள்ளப்படுவதுபோன்றவொரு உணர்வோடு மேலும் நடக்கிறேன்.

வீடு திரும்பி விடலாமேயென மனது பிராண்டிக் கொண்டது.ஆனால் முடியவில்லை.உணர்வினது அவசியத்துக்கு எதுவுமே முட்டுக்கட்டையிடத் தகுதியின்றி ஒதுங்க,நான் முடியாது திணறிக்கொண்டேன்.

உருக்குலைந்த நியதிகளாய் என் நியதிகள் மாறவேண்டுமென்றிருந்தால் அ·து நடக்கத்தாம் போகின்றது.சரிபோகட்டும்.என் விழிகள் உஷ்ணக் கொதியில் வெந்து,குருதி தோய்ந்த கோலிகள்போல் வெளியில் தோன்றி,உப்பிக்கொண்டன.

யாராவது நம்ம சனங்கள்...அதாவது, இப்போதையப் பையன்கள் கண்ணுற்றால் என் கோலத்திற்கு இன்னுமொரு பட்டத்தைச் சும்மா தூக்கித் தந்துவிடுவான்கள்.ஏற்கனவே,எனக்குக் "காய்ச்சல் மாமா"என்றொரு அருமையான பட்டத்தைத் தந்தாங்கள்-எழுபதுகளில் நான் பட்டம்பெற எத்தனை குத்துக்கரணங்கள்போட்டேன்!

நல்லவேளைதாம்.எந்தத் தமிழ்ப் பயல்களும் காணவில்லை இந்தக் காய்ச்சல் மாமாவை.ஆனால்,ஜேர்மனியர்களும்,வேறு சனங்களுமாக என்னைப் பின் தொடர்வதாகவும்,விலத்திச் செல்வதுமாக இருக்கிறார்கள்? அப்படியொரு உணர்வும் குறுக்கே வந்து தொலைவது இந்தச் சலனப்பட்ட மனதுக்குத் தெரிந்து கொள்கிறது.அவர்கள் எல்லோரும் மேவிக்கொள்ளும் தரணம் என்னைப் படுத்தும் இந்தக் கோதாரிக்கு அபத்தமாக இருக்கிறது.

அந்தக் கோபுர வாசலை நெருங்க இன்னுஞ் சில மீற்றர்களே இருக்கிறது.

கைலாசத்தின் கதவு தானாகத் திறந்து,என்னைப் பச்சைக் கூட்டோடு பரலோகத்துக்கு அனுப்புவதற்காக உள்ளே அழைக்கிறது.அந்தத் தவம் நிறைந்த ஆனந்தம் அற்புதமாக என்னுள் பரவ பிறப்பின் அர்த்தம் புரியும் ஒரு திசையில் இந்தப் புதினம் புண்ணாக்கும் என் ஆன்மாவை.பொழுது சரிந்துகொண்டது.அப் பகுதியல் கால்வைத்ததும் மனத்தின் அதியுச்சக் கிலேஷம் சிலிர்த்து என் சுயமாக விரிந்தது.எனக்குள் முக்காடிட்டிருந்த என் உண்மை முகம் இதுள் தொட்டிலிட்டு ஆடிக்கொண்டது.நான் காலத்தில் வாழும் ஒரு நிலையில் என் பாலீர்ப்புப் படலம் பாய்விரிக்கும் அன்றைய தரணத்தை மனதுள் விரித்தது.மாங்காய் பறித்து நாமிருவர் புசித்த எச்சில் இனித்த பொழுதில், உதட்டில் குருதி கசியும் ஒரு நிலையில்-எங்கள் காதல் உயிர்த்திருந்தது.இது அன்று.இந்த விடாய் பானத்தை நாடிச் செல்லும் தவித்த மனிதனாய் என்னைத் துரத்துகிறது.இந்த விடாய் ஊனமிக்கதான செயலாக எனது பக்க நியாயங்களால் தீர்ப்பெழுதிக் கொள்ளும் எந்தத் தரணமும் இப்போது இல்லை.நான் அந்தக் கோபுரத்துள் நுழையும் இந்தக் கணம்,நீரின்றித் தவித்த மீனின் நிலையாய் இருக்கிறது.அவ்வளவு வேட்கை-வேதனை!
இதுவொரு சாபக்கேடா அல்லது உடலுடன் கூடப்பிறந்த வஞ்சக நெஞ்சத்து நஞ்சா?வடிவமில்லா இந்த வம்பு உணர்வுக்கு வதைபடும் தரணங்களும் உண்டுதாமோ?

எனக்கு வயது அறுபது கடந்திட்டபோதும் உடலின் வலுக் குறைந்தபாடில்லை.அது பதின்ம வயதுப் பேரப்பிள்ளையின் உருவத்தோடு என்னுள் புகுந்து என் மனதின் பொழிவுகளை வலுப்படுத்தியதால் நான் தோற்றுக் கொண்டிருக்கிறேன்.இந்தத் தோல்வி "நான் மட்டும் எப்படி?...,ஏனிந்தப் பிறப்பில் மட்டும்தானே உயிர்த்திருக்க முடிகிறது,நாளை மடியும்போது அந்தப் பழுப்புடல் ஏக்கம் என் கட்டையை வேகாது விடாப்பிடியாய் தீயிலிருந்து மறுத்தொதுக்கினால் என்னதாம் பண்ணுறதாம்"என்று எனக்குள் விரிந்ததும், நான் இதைக்"கொடூரம்,என்னால் சகிக்க முடியவில்லை,ஊரை நினைத்து நான் தினம்,தினம் சாகமுடியாது"என்று சமாதனஞ் செய்தேன்.

புறத்தே என்னைக் கொல்லும் சூழல்,ஜேர்மனியின் கோடைகாலம் என்னைக் கொல்லுந்தரணத்தையும் அப்படியே அழைத்து வந்துவிடுகிறது.இது என்னைக் கொளுத்திச் சாம்பலாக்கும்.நான் இதனை வெல்லத் தவமிருக்கும் ஒவ்வொரு பொழுதும் என் இதயத்துள் முள்ளாய் குத்தும் அந்த உடல்கள் தொப்புள் காட்டிக் கண்ணடிக்கிறது.முடியவே,முடியாது!அந்த மாமுனிவர்களும் அடங்கிய அற்புதத் தொப்புள் குளத்தில் நீரில்லை தெள்ளத் தெளிந்த தேனால் நிறைந்த தேகப் பரப்புள் இந்தக் குளம் தேவலோகத்துக் கனவுகளைக் கூட்டிவந்து என் குருதியைக் குடிக்குந் தர்மத்தை எனக்கு ஒழுங்குபடுத்துகிறது.நான் ரொம்பப் பாவம்.தொப்புளிலிருந்து சாணளவு இறங்கப் போடும் ஒவ்வொரு உடையிலும் உழுத்துப்போகும் உணர்வுக்குள் எனது உணர்வும் அடக்கம்.அந்த உடையைத் தாங்கும் சதைப் பருக்கையும் மானுடம்தாமே?இல்லை என்னைப் போன்றதொரு பாலீர்ப்புப் பிண்டமா?பாவிகள் இரட்சிக்கப் படுவார்கள். நீ,படும் பாட்டில் இதுவும் தேவைதாம்.

இப்போது, நான் இந்த ஈர்ப்பு வலயத்துள் மெல்ல வருகிறேன்.

காலம் மிகப் பின்னோக்கி நகர்கிறது.இளமையும்,பொலிவும் ஒருங்கே ஊஞ்சலிட ஒருத்திக்குப் பின்னால் அலைந்ததில் மூன்று பெண்களும்,இரண்டு பையன்களுமாக எனது வீரியத்தின் பாய்தல் விடாப் பிடியாய் பிடித்துக் கவ்விக் கொண்டது...

இப்போதைய அகதியக் குந்தலில் எனக்கு இஷ்டமில்லையென்றாலும் அள்ளிச் சுவைக்க முனையும் இந்தப் பாற்குடங்களால் பாதி விருப்பும் மீதி வெறுப்புமாக வேளா வேளைக்கு வீணியூற்றிக்கொள்வேன்.என் பேரவாவின் வினைப் பயன்கள் எந்த வேதனையுமின்றி வீராப்பு நிறைந்து அகதியத்தில் பதியம் போட்டுள்ளார்கள்.அவர்களால் இறக்கப்பட்ட எனது வருகைக்கு அர்த்தமொன்று இப்போது தெளிவாகிறது.இது வாழ்வினது அர்த்தமா அல்லது உடலினது உச்சபச்சத் தாகமென்பதா? இனித்தாம் அறிய வேண்டும்!

கால்கள் கூசுகின்ற இந்தக் கணத்தில் உடல் வலுவிழப்பதுபோன்ற மிகுந்தவுணர்வை அவர்கள் அறிவதால் என்னை நெருங்கி வருகிறார்கள்."வயோதிபமென்பது ஒரு பொருட்டல்ல,வாருங்கள்"என்று மென்மைக் காந்தக் கரங்களால் அணைக்கப்படும் என்னுடல், உலகத்தின் எந்தப் பெரிய அழகையும்விட-அற்புதத்தையும்விட இதுள் மிகப் பொலிவானவொரு அமைதியை,பேரின்பச் சுருதியை உணரத் தலைப்பட்டது.அந்தவுடலுள் ஊஞ்சலாடும் உணர்வுக்கு இன்று பாலாபிஷேகம்.

எல்லாம் சங்கமமாகிவிட்டதென்று கூறுவதற்கில்லை.என்னது தோலோடு மோதி நிலைப்படைந்தது.நீண்ட போராட்டத்தின் பின்னானவொரு பொழுதில் மிகப் பொருத்தமாக விரிவடைந்தது அந்தக் கதை. அவ்வளவும்தான் வாழ்வு.ஒரு நுணுக்கமான விரிவு,அசைவு,திரண்டொழுகும் ஒரு குமிழி.

வீடுமீண்டபோது களைப்படைந்தவுடலுக்குத் தீனி அவசியமாகி இருந்தது.விழியில் சோற்றுப் பருக்கை ஒட்டியிருப்பதென்ற உணர்வுக்கு மாறாய் என் மகள் தென்பட்டாள்.தெரிந்துகொண்ட உடலுக்குள் அவள் புகுவதுபோன்றவொரு நினைவால் நான் துரத்தப்பட்டேன்.எனது புறமுதுகில் குத்தும் பிரமைக்கு ஈவு இரக்கமென்பதெல்லாம் அமெரிக்கப் பாணியிலிருந்தது.எல்லாம் வல்லோனே,ஏனிந்தக் கொடுமை எனக்கு?எவர்கெடுத்து உரைக்க!எனது மகளின் உருவத்துள் நினைந்துகொள்ளும் இந்த மனத்தின் குரங்குத் தனத்துள் துள்ளிக் கொண்டபடி கொதித்தெழும் அந்தப் பிசாசுக்கு வயது பதினாறாய் இருக்கவேணும்.இல்லையானால் அது அடங்கிக் கிடக்குமே!அறுபட்டுப்போன பட்டத்து நிலைக்கு நானும் எனது மனமும் எவ்பவோ வந்துவிட்டதென்பதை உணரும் ஒரு துளி நாணயம் எனக்குள் பெருகிச் சிறுத்தது.மகள்வீடு தாண்டி மகனது இல்லத்துள் மிதந்தபோது மருமகளே என்னை வரவேற்றாள்.

"மாமா,வாங்கோ மாமா"என்ற அவளது குரலில் மாமாவுக்கு மோன இலயம் பீறிட்டபடி.மடிப்புக்கழராத அவளது முன்னுடலில் பூக்கள் கொலுவிற்றிருப்பதும் அது என்னைத் தன் வாசத்தால் சுண்டியிழுப்பதும் பொல்லாத பொழுதுகளின் நிந்தனைக் காண்டமாக விரிவதில் நான் வெறுப்படைவதும் பின்பு அதுவேயொரு சுவையான உணர்வாகவும் விரிந்துகொள்வதும் இயல்பாக... நான் அவளைத் தினமும் மனதிலிருத்தி என் மெளனத் தாகத்தைக் கொட்டுவதுமாக எனது கடன்கள் கழிவதுமாகச் செல்கிறது இந்தக் கணம்.என் பேரப் பிள்ளைகள் என் தோளிலும் மடியிலுமாக விழுந்து விளையாடும் உன்னதமான இந்தத் தரணங்கூட அதுகளின் தாயின்மீதான தவித்தெழும் என் அகக் குடைச்சலாக விரிவதில் நான் சிறுத்துக்கொள்கிறேன்.இந்தக் கேடானவுணர்வுக்கு எந்தத் திசையும் தெளிவில்லை.போதையாய்ப்போன பசிக்கு உத்தரவாதமான எந்தவுறமுமில்லை.எத்தனை காலத்துக்கு இந்த ஏகத்தைத் தவிர்ப்பதற்காக ஏங்கித் தொலைவது?முடியவில்லைப் பேரின்பமே!

நான் எனக்குள் அழிவதும் மீண்டும் உருப் பெற்றுக் கொள்வதுமாகச் செல்லும் இந்தப் பொதுப் புத்தியுள் பேரின்பமாக விரியும் அந்தவுருவம் ஒரு பெண்ணுக்குரியதாக இருப்பதில் எந்த நியாயமும் இல்லை.அதுவொரு வடிவம்.எந்தப் பொழுதிலும் பேரிரைச்சலாக விரியும் ஏதோவொரு அசைவில் என்னைக் கட்டிப் போட்டிருக்கும் சக்தி அது.அதை மீறிப் போவதற்கான எந்த உந்துதலும் எனக்குள் பீறிட்டுக்கொள்ளவில்லை.எனது மோனைத் தவம் இந்தத்தடத்துள் எப்பவும்போலவே புதுமைக் கொலுவிற்றுச் செல்கிறது.வானம் இருண்டு முகில் கருமையாகக் குவியுந் தத்துருவமானபோது என் தலைகளில் உருளும் நீருக்குள் நான் உருகிக்கொள்வதும்,இருக்குமிடம் மகனதோ இல்லை மகளதோ என்ற கேள்வியின்றி என் திசையில் எங்கே தோன்றிய ஒரு புள்ளியில் இருப்பதான இந்தக் கூத்துக்கு நான் பொறுப்பேற்க மட்டும் உணர்வு தவித்தது.

"பாளையாம் தன்மை செத்தும்
பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும்
காமுறும் இளமை செத்தும்
மீளும்இவ் வியல்பு மின்னே
மேல்வரு மூப்பும் ஆகி
நாளும்நாள் சாகின்றாமல்
நமக்குநாம் அழாதது என்னோ?"


தெருவிளக்குகள் ஒளிர்கின்றன.அந்தவொளியில் சிதறும் நீர்த்துளிகள் என் மெளனத்தைக் கலைப்பதில் தோற்கின்றன.எனது போக்கிடம் குறித்த ஏதோவொரு பொறி என்னைச் செம்மையாகத் திட்டுகிறது.நான் உறுவுசொல்லிப் போக்கிடம் தேடிய காலம் இனி மலையேறியதாகவே எனக்குள் குப்பையாக விரிகிறது.நான் செம்மையுறும் உணர்வில் ஏதோவொரு அற்பத்தனத்தை அந்தச் செயலுக்குள்ளும் நீட்சியாவதை உணரும்போதே இது அவ்வளவு சீக்கரம் முடியுமொரு அத்தியாயமாக எண்ணத் தலைப்படவில்லை.

அந்தக் கல்லாசனத்தை விட்டகலும் வேளையில் தன்னியல்பாக நான் நடக்கும் இந்தக் கோலம் மனிதனாக இருக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் என்னிடமிருந்து தொடர்ந்து உற்பத்தி செய்கிறது.நான் எவரையும் நினைந்துருகி எனது அவாக்களை மறைப்பிட்டுக் கொள்ளும் பொய்மைக்குள் புகவில்லையென்பதில் எனது திமிர் உண்மையாய் பெறுமானமுடைய உணர்வில் தவித்தது.

என்னைவிட்டகலும் அந்தச் சொற்ப கணத்துள் அவன் எனக்குப் போர்வை தந்தான்.

நீருள் நனைந்த உடலோடு பிடவைகளும் ஈரமாகியதாக எண்ணும் சந்தர்ப்பத்தில் அவற்றைக் களைந்து எங்கோ போட்டேன்.அடிக்கடி இரயில் வண்டிகளின் அதிர்வில் அமைதியிழந்த எனது மனதுக்குத் தூக்கம் ஒரு கேடவென்று தோன்றியபோது எனக்குப் போர்வையிட்ட அந்தக் கரத்தின் வருடலில் விறைத்துக் கொண்ட என் தவப் பயன் மீளவும் கக்கிகொண்ட உயிர்த் தெறிப்புகளில் உலகம் இருண்டு கிடக்கக் கட்டிய எல்லாக் கோட்டைகளும் சரிவதாக எனது பையன் படுத்தியபாட்டில் எனது தெருவாசம் புலப்பட்டும் நான் என்னைத் தொடர்ந்து நகர்கிறேன்.என் போர்வைக்காரனோ என்னுள் தவிப்பை ஏற்படுத்திய அந்தத் தரணத்துள் தன்னைப் பின் தொடர வைத்தபோது என் பையனின் குரல் எங்கோ தொலைந்தது.












Sonntag, März 04, 2007

காதலென்பது...

காதலென்பது...


இளையராஜாவின் மெட்டுக்களை முன் வைத்து...


ஒரு காலத்தில்-பருவ வயதில் எத்தனை விதமான கலர்க் கனவுகள் நெஞ்சில் கூத்தாடும்.அந்தக் கூத்து ஏதோவொரு வகையில் மனதை வளர்த்திருக்கிறது!மனதின் வளர்ச்சிக்கு இந்தக் கலர்க்கனாக்கள் வழி செய்வதை இலகுவில் மறுத்துவிடத்தான் முடியுமா?வாழ்வு.அது ஒரு தேடுதலோடும் அந்தத் தேடுதல் தன்னைச் சுற்றிய பெருவிருப்போடு அசைந்தபடியேதான் அள்ளிவரும் அநுபவங்களை.அந்த அநுபவங்கள் என்றுமே அறிவுத் தேடுதலைக் குன்றப் பண்ணியதாக இருந்ததுமில்லை.அப்படித் தேடுகிற ஒரு உணர்வு எதிர்ப்பால் வினையாகும்.

இந்தப் பாலுணர்வுதான் தன்னைப் பராமரிக்க வைக்கிறது.தான் என்பதன் பொருளுணரப்படும் இந்த உணர்வு தனக்காக ஒருத்தியை-ஒருவனைத் தேடிக் கண்டுகொள்ளும் ஒவ்வொரு தரணத்திலும் தன் கனவுகளைச் தனக்குள்ளே சொரிய வைக்கும் பால் வினையை நம் பெற்றோர்கள் தமது அநுபவத்துள் உள்வாங்கியும் அதைப் பெரிதாக மதித்ததே கிடையாது!அங்ஙனம் மதித்திருந்தால் மனக் கல்லறைகளுக்குச் சாத்தியமே இல்லை!


இந்தக் கல்லறையுள் காணமாற்போன அந்தப் பெருவிருப்பு நம்மை உருவாக்கியதும் அழித்ததும் உண்டு.


ஒரு வயது-அது பருவ வயதே அற்புதமான அறிவின் வேட்கை மிகு வயதாகும்.

இந்த வயதைத் தாண்டுகிறபோது வாழ்வை அதன் இயல்போடு-இயற்கை தகவமைத்த எல்லாச் சுகத்தோடும் நுகர வேண்டும்!அந்த நுகர்வு அழிக்கப்படும்போது சமூகம் ஆரோக்கியமாக உருவாகுவதாக எந்தத் தகவலும் இல்லை.நோயுற்ற சமூகமாக எனது தமிழ்ச் சமூதாயம் இருக்கிறது.அதன் இருப்புப் பலவீனமான-அறிவுக்குப் புறம்பான கற்ப்பிதங்களால் நிரம்ப்பிப் போயுள்ளது.இது மனிதவுறகளை எவ்வளவு கேவலப் படுத்துமோ அவ்வளவு கேவலப்படுத்தி வைத்திருக்கிறது.இதன் இருப்பு வெறும் தகவல்களாலும் அது சார்ந்த பொய்மைப் பண்புகளாலும் நிறைத்து தலைமுறைக்கே ஆபத்தான முறையுள் வைக்கப்பட்டுள்ளது.

காதல்.

வாழ்வின் உயிர்த்துடிப்பான எதிர்ப்பாலுணர்வு!

இந்த உணர்வே சமுதாயத்தின் அதிபெரும் கண்டுபிடிப்புகளுக்கும் தியாகத்துக்கும் காணமாக இருந்திருப்பதை நாம் கண்டுணரமுடியும்.இந்த உணர்வின் பெரு வெளியில் சஞ்சரிக்காத எவரும் உயிர்த்திருக்க முடியாது.அம்மாவைக் காதலிப்பதிலருந்தும் அப்பனை நேசிப்பதிலிருந்தும் பின் எனது மொழியை-தேசத்தைக் காதலிப்பதிருந்தும் எனக்குக் காதல் சொல்லத் தெரிந்திருக்கிறது.என் பாலுணர்வை நான் உணர வைத்தவள் கவிதாஞ்சலி.அவள் ஒரு மகுடம்.அவளைக் காணாத பொழுதுகள் எனக்கு நரகத்துக் கற்ப்பிதமாக இருந்திருக்கிறது.அவளைப் பாடசாலையில் சேட்டை விட்டே பைத்தியக்காரியாக்கி இருக்கிறேன்.ஒரு நிலையில் எடுத்த எடுப்பிலேயே நீ என்ன யங்கி போட்டிருக்கிறாய் என்ற சேட்டையில், அவள் கவிணைக் கிளப்பிய அந்தச் சேட்டையில் அவள் அழுது வீடுவரையும் போய் அப்பனிடம் அள்ளி வைத்தபோது, அந்த அவளின் அப்பன் என்னைக் காணும் போதெல்லாம் நகைக்கும் அந்தச் சந்தர்ப்பங்கள் என் காதலின் கோணங்கித் தனத்தை நெஞ்சில் உரசும்.அந்த உரசலில் உருவான நமது உறவுக்கு நெருப்பள்ளி வைப்பதே பெற்றோர்களேதான் என்றால் அந்தப் பெற்றோரே தமது வாரீசுகளுக்கு கல்லறை அடுக்கக் கற்களை மிக அழகாக வெட்டுகிறார்கள்.

அது ஒரு அழகான பங்குனி மாதம்.

எங்கள் ஊரில் இந்த மாதம் மிக எழிலாக இருக்கும்.



தோட்டத்துப் பயிர்களெல்லாம் தங்கள் கொலுவான வளர்ச்சியால் நம் மனங்களை அசைத்துக்கொண்டிருக்கும் காலம் அது!அந்தப் பயிர்களில் எனக்குப் பிடித்த பயிர் புகையிலை!புகையிலை வளர்ந்து கொழுந்து முறித்து இலை இழுக்கும் காலத்தில் அதைவிட எந்தப் பயிரும் அவ்வளவு அழகாக இருக்காது.அந்தப் பயிருக்கு தண்ணி கட்டும்போதுதான் எனக்கு இந்தப்பாடல் அறிமுகமாகிறது.இது என் நெஞ்சில் குடிகொண்டிரந்த காதல் உணர்வின் எல்லையை விரித்து மிகவும் விரிவாக்கியிருக்கிறது.நான் தவமிருந்த அந்தப் பருவ காலத்தில் பயிர்களோடும் பறைவைகளோடும் பாடிப்பாடியே தவமிருந்திருக்கிறேன்!இந்த காலங்களில்தான் திரையிசையை அடியோடு மாற்றிய அற்புதமான இளைஞன் தன்னைத் திரையுலகில் வீறோடு நிறுவிக் கொண்டவன்.அவன் முன்வைத்த இசை நம்மை என்னவோ செய்திருக்கிறது.பறவைகளோடும் பட்ஷிகளோடும் நம்மைச் சேர்ந்து பாட வைத்தவன் அவன்.அவனது வருகையின் பின்னான ஒவ்வொரு பாடலும் மிகவும் நமது மனசைக் கவ்விக்கொண்டு நமது மகிழ்வின் அனைத்துச் சந்து பொந்துகளிலும் அது நுழைந்து விழையாடிக் கொண்டிருந்தது.

ஒரு கருவி.அது புள்ளாங் குழலாக இருந்தாலென்ன இல்லை மிருதங்கமாக இருந்தாலென்ன அதிலிருந்து மேலெழும் ஒலி நம் செவிகளில் அருவியைக் கொட்டியிருக்கிறது.நமது காதலுணர்வை மென் மேலும் ஒழுங்கு படுத்தியிருக்கிறது.காதலென்பதின் நுட்பத்தை இரசிக்கச் செய்திருக்கிறது.இந்தச் செயலே பின்னாளில் மனதின் ஒவ்வொரு மகிழ்விலும் மனிதனாக இருக்கிறாய் என்று என்னைச் செப்பியுமுள்ளது.நான் யார் என்பதன் முகிழ்ப்பில் விசும்புக்கு அதுவே காரணமானதாக இருக்கிறது.

இளையராஜா!

அற்புதமான இசைக் கோர்ப்பாளன்.நமது காலங்களைக் கடந்தும் இன்றும் பெரு விருட்சமாக இசையோடு இணைந்தவன்.எந்தத் திசையில் சிந்தித்தாலும் அவனது தாலாட்டுக்கள் நமது சிந்தனையைச் சீர் செய்திருக்கிறது.அனைத்துச் சுமைகளையும் அப்படியே சிதைத்தெறிந்து மனதை இளக வைத்து என்றும் பதினாறு வயதாக உணர வைத்தவனின் இசை இன்ப வெள்ளமாக இதுவரை என்னோடு சங்கமாககிறது.

அந்த இசையின் அனைத்து இயக்கமும் காதலில் சுரங்களைச் சொல்லியிருக்கிறது.நான் காதலிக்கத் தெரிந்த காலத்தில் கனவுகளைத் தொடரவும் அதைச் சொல்லத் தெரியவும் பின்னாளில் அதன் ஏதோவொரு ஓரத்தில் குந்தியிருந்து இரசிக்கவும் பின் அதையே வாழ்வின் அத்திவாரமாக்கவும் இந்த இசைக் காவியங்கள் வழி செய்தவை.

தோட்டத்துள் நின்றாடும் கவிதாஞ்சலிக்கு "தந்தனத் தந்தன தாளம் வரும்" நான் தலை குனிந்தபடி புகையிலைக்குத் தண்ணி கட்டுவேன்.அவள் மேலும் குரலெடுத்து,

"மச்சானைப் பார்த்தீங்களா
புகையிலைத் தோட்டுத்துள்ளே
தண்ணி கட்டுமவர்
என் மனசுக்குள் புகுந்து
குடும்பத்தை அமைப்பாரே
புள்ளை குட்டி தருவாரே"

என்று வார்த்தைகளை அடுக்குவாள்.அற்புதமானது என்னவென்று நினைக்கிறீர்கள்?

வாழ்வின் ஒவ்வொரு தளத்திலும் இந்த அற்புதங்கள் மாறுபடலாம்.ஆனால் ஒவ்வொரு மனிதரும் வாழ்வை-தன்னை உணரும் சந்தர்ப்பம் காதலிக்கத் தெரிந்துகொள்ளும் தரணங்கள்தான் என்பேன்.இதைக்கடந்த எல்லா முன்னேற்றங்களும், இறக்கங்களுக்கும் இந்த உணர்வே மிகவும் காரணமாக இருக்கிறது.வயிறுக்குள் விமானம் பறக்க வைக்கும் எதிர்பால் வினை மிக உயர்ந்த மனிதத் தரணங்களைச் சொல்பவை.

மனித ஊக்கம் என்பது தன்னைப் பராமரிக்கத் தெரிந்து கொள்ளும் எதிர்பால் வினையோடு மிகவும் விருத்தியுறுகிறது.இந்தச் சந்தர்ப்பங்களை எமது பெற்றோர்கள் ஒருபோதும் உணர்வதேயில்லை!

"எத்தனைகோடி இன்பங்கள் வைத்தாய் இறைவா!" என்று பாடத்தெரிந்த நமது பெற்றோர்கள் இறைவனுக்குள் இன்பத்தைத் தேடியபோது நாம் எமது மனத்துக்குள் தோகை விரிக்கும் காதலணுர்வுக்குள் இன்பத்தைத் தேடியவர்கள்.எதிர்பால்வினையின்றி எந்த இன்பமும் தோன்றியிருக்க முடியாது.இதைச் சொல்வதும்,என் தலைமுறைக்கு அதை அழகு படுத்துவதும் மிக முக்கியமாகும்.

காதலை அழகாகச் சொல்வதில் வைரமுத்துவுக்கு நிகராக எவரும் தமிழ் மொழிக்குள் இல்லை.

தன் கவிதைகளை அழகு தமிழில் கம்பீரமாகச் சொல்வதில் வைரமுத்துவுக்கு வீரியம் சேர்த்தவள் கண்மணி என்பதை நான் அறிவேன்.

எமது தலை முறைகள் இப்போது கூவிக் கொள்ளும் வயதுக்கு நெருங்கிவிட்டார்கள்.நெறிப்படுத்தும் தரணங்கள் எம் முன் வந்திருக்கிறது.மிக அவதானமாக அணுகுதலுக்கு என் அநுபவம் வழி சமைக்கும்.

இன்றைய தரணத்தில் எத்தனையோ தவறுக்கும் இழப்புக்கும் மத்தியில் சின்னஞ் சிறுசுகள் போராடுகிறார்கள். அவர்களால் போருலா என்றும் இலக்கியம் படைக்க முடிகிறது.தன்னைச் சுற்றியிருப்பவர்களைத் தான் தற்செயலாகத் திறந்த குண்டு கொல்லப் போகுதென்று தெரிந்து அந்தக் குண்டைத் தன்னோடு அணைத்து மற்றச் சக போராளிகளைக் காக்கவும் தெரிந்திருக்கிறது!

எவ்வளவு மகத்தான வினை பாருங்கள்.

இவர்களுக்குக் காதலிக்கத் தெரிந்திருக்கிறது.சக மனிதர்களின் மனித அழகைத் தரிசிக்கத் தெரிந்திருக்கிறது.என்றபோதும் தவறான நடத்தைகளின் பயிற்றுவிப்போடு சக மனிதனைக் கொல்லவும் தெரிவு செய்யப்பட்ட தரணங்கள் அவர்களை வற்புறுத்துகிறது.அற்பத்தனமாகக் கிடந்துழலும் இன்றைய நமது வாழ்வுக்குள் இவ்வளவையும் செய்வது இந்தக் காதற் தரிசனமே!

தானும் தன்னைச் சுற்றிய நலமுமே வாழ்வாகச் சுய நலக் காரர்களாக இருந்த நம் பெற்றோர்களைப் புழுதிதோய்ந்த கல்லொழுங்கைகளுடாக இழுத்துச் சென்று எத்தனையோ கடலேரிகளுடாகக் கடக்க வைத்து, வாழ்வின் ஒவ்வொரு தரணங்களையும் அநுபவிக்க வைத்த இந்தப் போராட்டச் சூழலிலும் எனது யாழ்ப்பாணத்தவர்கள் இன்று வாழும் மிக மோசமான சமுதாயச் சீர்கேட்டில் எங்கோ தவறிருக்கிறது.சுயநலமும்,படாடோபமும்,காழ்ப்புணர்வும் கொண்ட அரை குறை மனிதர்களாக அவர்கள் மீளவும் தமது வாழ்வைத் தரிசிக்கும்போது அடிப்படையில் எங்கோ தவறிருக்கிறது.


எத்தனை வகையான அழிவுகளைப் பார்த்திருக்கிறோம்.ஒரு தலை முறையே தன்னைப் பலி கொடுத்து வருகிறது.

மழலை மொழி மறப்பதற்குள் இந்த மௌனப் போராட்டத்தில் தன் உடலையே வேள்வியாக்கும் அற்புதமான சின்னஞ் சிறார்களை எந்த மதிப்பீடுகளால் நான் வரையறை செய்ய முடியும்?

பல முறைகள் நான் ஏதேதோ சொல்லியிருக்கிறேன்.

காய் அடித்தலென்ற சமூக உளவியலை அளவுகோலாக்கியும் வைத்திருப்பவன் நான்.எனினும் போராடும் தரணங்களில் அவர்களைத் தேச பக்தர்களுள் அடக்குபவனும் நானே!


ஆகக் காதெலென்பது ஒரு உணர்வு என்பதைத் தாண்டி இயற்ககைத் தகவமைப்பு என்பதின் மிக விரிந்த வளர்ந்த படைப்பின் சூட்சுமம் என்பதுதான் மிகப் பொருத்தமானதாக இருக்கிறது!


இளவயதின் இந்தச் செல் நெறி சமுதாயத்தை அதன் உள்ளிருப்போடு இணைக்கும் மிக நேர்த்தியான மனிதவுறவுகளைச் செய்வதின் தொடக்கப் புள்ளியென்பது எதிர்ப்பால் வினையாகும்.அந்த உணர்வு வாழ்வின் மதிப்பீடுகளை உருவாக்கும் கால அவகாசத்தை மனித மூளைக்குள் பல் கலர்களாக் விரித்து வைத்து இந்த உலகத்தை இயக்குவதில் மிக விரித்தியான உணர்வு நிலையாகவும் அதுவே ஒரு கட்டத்தில் அனைத்துமாகச் சிறப்பெய்கிறது.


இளையராசாவின் குரலில் பாடப் பெறும் ஒவ்வொரு பாடலும் ஏதோவொரு விதத்தில் காதலின் சுவையைச் சொல்பவை.அது பருவ காலத்து மொழியையோ அல்லது அன்னையைச் சுட்டி"அம்மாவென்றழைக்காத..."என்றோ அல்லது எனக்கொரு காதலி இருக்கின்றாள்,அவள் பெயர் மூகாம்பாள்"என்ற இறைத் தாலாட்டிலோ இசையின் தொடர்ச்சி காதலைத் தாலாட்டுவதில் மனிதப் பொதுகணத்தைச் செம்மையாக்கும் இசைக் கோலங்களாகவே மிளிர்கிறது.

என் சிறுசுகளுக்குப் பருவ வயதாகிறது.நான் எனது பெற்றோர்களைப் பின்பற்றுவேனா அல்லது என் அநுபவத்தைப் பின்பற்றுவேனா என்பது அந்தச் சூழ்நிலையில்தான் தெரிந்துவிடப் போகிறது.அதுவரையும் எனது பெற்றோர்களைத் திட்டி எனது முதற்காதலைப் பெருமைப் படுத்துவதில் எனக்கு நானே நிகரானவன்.



Get Your Own Music Player at Music Plugin


இந்நோக்கோடு இப்பாடலைக் கேட்போமா? இப்பாடல் முன் எந்தச் "சக்கரை நிலவும்" தேய் பிறைதான்!


ஜனநாகம்
04.03.2007

Samstag, März 03, 2007

அவளையெண்ணியும்...

அவளையெண்ணியும்-அவள் முன்னாலும் பாடிய பாடல் வரிகள் இது.


வணக்கம்!

கொழுவி பின்பற்றிய மாதிரி நானும் அந்த நண்பர்களைப் பின்பற்றித் தொடர்ந்து, இப்பாடலைப் போடுகிறேன்.


இப்பாடலானது என்னை மிகவும் பாதித்த பாடலாகும்.


அன்றைய காலத்தில் எனக்கு ஏற்பட்ட எதிர்பால் வினையில் என்னைக் கவர்ந்த முதல் காதலைக் கொண்டாடுவதற்காகத் தினமும் உச்சரிக்கும் பாடலாக இது இருந்திருக்கிறது.


அவளையெண்ணியும்-அவள் முன்னாலும் பாடிய பாடல் வரிகள் இது.


இன்றும் மறக்க முடியாத பசுமையான பாடலாக இது என் மனவானில் தொடர்ந்திருப்பதற்கான ஒரே காரணம், அவள்தான்.அந்த அவளைப் பின் தொடர முடியாத எல்லையில் இப்பாடலே இறுதித் தஞ்சமாகவும் அன்றிருந்திருக்கிறது.மிக இனிமையானதும்,இளமையானதுமான இந்தப் பாடல் என்னைப் படாத பாடு படுத்தியிருக்கிறது.


காதலித்திருப்பீர்கள்!


கேட்டுப் பாருங்களேன்,செவிகளில் அருவி கொட்டும்-விழிகளுக்குள் அந்த முகம் துள்ளிக் குதிக்கும்.


Get Your Own Music Player at Music Plugin

Samstag, Januar 13, 2007

சிறு புள்ளி

சிறு புள்ளி.


மயானத்தின் மத்தியிலொரு
சிறு புள்ளி
மனித நடமாட்டத்தைச் சொல்வதற்கென
திக்குத் தெரியாத கும்மிருட்டில்
உழலும் பேய்களுக்கான குறிப்பாய் அது இருக்கலாம்


பேய்கள் வலுக்கத் தொடங்கிய
யுத்தகாலத்தில்
எரி பிணத்தின் மார்பில்
வலுக்கரத்தால் பிளந்து இதயம் அகற்றப் பட்டது


இருப்பவர்களுக்கான சூனியப்
பொழுதொன்றைச் செய்து முடிக்கும்
மந்திரக் கரங்களுக்குள் பினைபட்ட இருதயத்துள்
இன்னும் சூடான குருதி



ஓருரி மணிக்குள்ளே
உருவமே தெரியாது
உதிர்ந்துபோன இருள் வெளியில்
மயானம் தனித்து விடப்பட்டது


கருமாரி செய்யும்
கடுமையான இரங்கல் ஒலியில்
காலத்தின் கடிவாளம்
அறுபட்டுக் கிடக்க


மலம் முடுக்கி
விழிவழி வழிய
இதயம் இழந்துபோன எரி பிணம்
ஒரு வழியாகப்
பக்கம் பார்த்துப்
பாய்ந்தும் மயானத்தின் புள்ளியில் புரண்டது



மனித நடமாட்டமென்று
பேய்களுக்குத் தூக்கி வாரும்போது
ஓணான் உருவெடுக்க முனைந்தவொரு
எச்சில் பேய்
எல்லோர் முகங்களையும் குதற
எரி பிணத்தின் மத்தியில்
அந்தச் சிறு புள்ளி சுருங்கியது.


ஜனநாயகம்.
13.01.2007

Freitag, Dezember 22, 2006

எரி பிண்டம்.

எரி பிண்டம்.

தெருக்கோலம் நீக்கி
வீட்டின் முற்றலில் குருதியுறைந்த பிண்டம்
நாயின் எச்சில்பட்ட கறியாக
அடுப்பின் எரிதணலில் மெல்ல வெந்து
மூக்கின் துவாரத்தில் துளையிட்ட
எரி நாற்றம் மெல்ல அடங்கினும்
மோவாய் நக்கிய பெருவெளியில்
துருவத்துக் குளிர்ச்சி

திசையிழந்த பெருவெளியில்
தவமிருந்த பருந்துக்கு
பசியடக்கச் சிரமறுத்த கொக்குகளும்
ஒரு தவப்பயனாய்க் கூடிய கரி நாளொன்றில்
மலம் கழிக்கவுண்ட நிணமும் உருக
கடவாய் பிளக்கப் புழுக்கள் நெளிய
பற்களின் கோரத் தாண்டவம் தொடர் கதையாக...

மலை முடுக்கில் திரண்ட நீர்கூத்து
ஏழு தலைகளையும் தாண்டிப் பற்றைத் துவாரத்தால்
பாக்கியம் செய்தது
பெருங்களிக் கூத்தொன்றில்
கழைக்கூத்தாடி புணர்ந்தொதுக்கிய சிறு குழியும்
பெருக்கெடுக்க மறுத்து முனைவீங்க
முக்காலத்துக்குமான எண்ணிக்கைகள் உயர்ந்தன மெல்ல

ஒவ்வொரு தானங்களும்
சுமை காவும்
சிறுகாட்டில் பெரு நரிக்கு ஒப்பாரி
ஊருக்குள் ஊளைச் சத்தம்
உறக்கம் கலைத்த கணமொன்றில்
நரகத்தின் குரல்வளை நீண்டன நெடில்வீசி
ஊர் மேயும் தெரு நாய்கள் புடை சூழ

எட்டிப் பிடித்துவிடாலாமென்ற
வானத்தின் பொய் முகட்டில்
நெய் வடியுமென்று நெடுநாட் தவமிருப்பும்
சொல்லித் தெரியாமலே உணர்வுத் தெறிப்பில்...
பல்லாக்குத் தூக்கிகளின் எச்சில் நாவும்
எரி நாற்றம் தாங்காச் சோர்ந்தொதுங்க
ஒரு குவளை நிறைந்த இச்சைப் பேய்கள்
வெற்றொலியுள்; அர்ச்சனை பண்ண
புழுக்கள் நெம்பிச் சாக்கடை கண்டன

தெருக்கோலம் கீறிக் கிடப்புக்குப் போட்ட
உலக்கையின் அடிவயிறு உப்பிக் கொண்டேயிருக்கு
மற்றைய பொழுதொன்றில்
எரி பிண்டம் மலர் வதைக்கவும்
மடைதிறந்துருகும் மக்கர்களின் மனங்களில்
தீராத பிணி முற்றவும்
திசையிழந்த ஓலத்தையும்
தெருக்களில் நின்று மலம் கழிக்க!

ஜனநாயகம்
22.12.06

Dienstag, November 21, 2006

பேரப்பூச்சி.

பேரப்பூச்சி.


ஆச்சி அமுக்கிய இறுகிய நெற்றியும்
அப்பு அணைத்த பிஞ்சு நெஞ்சும்
ஆத்தை முலையின் கனவொடு சேர்ந்து
நெடுக அழிந்தது பேரப்பூச்சி


அழலிக்கையோடு அமர்ந்திருந்தவர்கள்
அடக்கிப் பழகிய அர்த்த பொழுதுகளில்
அப்பனின் சாக்குக் கட்டிலுக்குத் தீ வைத்தவர்கள்
அவன் நாட்டிய பயிரரிந்து அப்பால் அள்ளிச் சென்றதும்
அம்மாவின் முலையில் பல்லைப் புதைத்து
அல்குல்லில் துப்பிய இச்சைக் கழிவு
இதயம் சிதைத்துக் கொன்றது அவளை


கச்சை வலிக்கக் கடுந்தவமிருக்கும்
அப்பனின் அசையாத பொழுதுகள்
அள்ளிய சிறு நீர் கைகளில் வற்ற
முகம் தொலைத்தான்
முந்தைய வினையில்


மூப்பாகிய எனது உணர்வுகளுக்கு
அன்னை மண்ணின் அபலைக் கோலம்
ஆத்தையின் கனவில் அள்ளிச் சென்ற
அவள் இதயத்தின் துடிப்பாய்
அடி மனதெங்கும் குடிதுவங்க
வெடிச் சத்தம் ஒடித்தது முகத்தை!


பேரப்பூச்சி பாதியில் இழந்த முகத்தை
இன்னொரு பொழுதுகளில் எங்கோ புதுப்பிக்க
இடியிடியாய் வான் அதிரும் சிங்கக் கனவில்
ஆச்சி காலில் எண்ணை தடவிக் கண்ணை மூடி
மெல்லச் சிதறியது

அல்லகண்டம் தொலையா இலங்கை
இழவோலை வரையும் ஈழம்
அவகடமுடையச் சிங்களச் சினம்
அழிகடை எல்லாம்!


என்ன நம் இழுதை!


ஏங்கிக் கிடக்கும் எம் தாய் முலையும்
எண்ணை பிசிறும் ஆச்சியின் கரமும்
வான் முட்டும் அப்பர்களின் ஏரும்
இன்னொரு வினைக்கும்
மீள் வருகைக்கும் நேரம் குறிக்க
மீண்டும் உருளும் "கொமிசன்" கண்ட குண்டுகள் எங்கும்.

ஊழகம் கண்ட மேனிச் சிலிர்ப்பும்
மெல்ல விரிந்த சில்லறைச் சிரிப்பும்
கபாலத்து வெடிலில்
ஒளியின் வேகத்தோடு மறையும்
யுத்தப் பொழுதாய் மேவிய விடியல் எங்களது!


இன்னொரு பொழுதில்
ஆச்சியின் காலில் மெல்லக் கிடந்து
மேனி வளர்க்கும் பேரப்பூச்சி
ஆத்தையின் முலையில் அருவி கொட்டும்
அப்பன் அடைக்கும் அந்த வெள்ளம்
அள்ளித் தரும் வெள்ளைச் சோற்றை
அடுப்பில் அமரப் பூனையின் தவமும்
கனவில் தொடரும் அகதியின் முகத்தில்.


ஜனநாயகம்
21.11.2006

Sonntag, November 12, 2006

நாட் குறித்தல் நமனைக் கேட்டு!

நாட் குறித்தல்
நமனைக் கேட்டு!


என்னமாய்ப் போகிறது உலகு
இருப்பவருக்கும் இறப்பவருக்கும்
இடையிலிருக்கும் ஒரு நூலிழை
காற்றில் ஒன்றும் ஒரு விசை

கடுமனங்கொண்ட கண்ணீரும்
கற்பதற்கு மறுக்கும் தலைமை விசுவாசமும்
தற்குறியாய்ப் போகும் தலைமுறையும்
தன் நம்பிக்கையிழக்கும் எதிர்காலமும்

தாமரை இலை நீராய் உருண்டுபோகும்
உயிரும், உடலும், உள்ளம் தொலையும் கணமுமாய்
ஒரு நொடிப் பொழுதையாவது இந்தவீழத்தார்
இனிதே நுகரக் கொடுப்பனவற்ற குறையை நீபாடு!


கடுமழையில் கிளையுடையும் வேம்புபோல்
கொடு யுத்தத்தில் சிரசுடையும் சின்னதுகளையும்
கூன் விழுந்த குமரியளையும் பல்லுப்போன பாலகர்களையும்
பாழுமிந்த அரசியல் விட்டு வைக்கா

பாடைகளைக் காணமறுக்கும் தாய் மனசு ஒரு புறமும்
பாடைகளால் பாசறைக்குப் படைகள் சேர்த்தல் மறு புறமுமாய்
இந்தப் பாழுமிலங்கையில் பண்பாடாய்ப் போக- பாருக்குள்
வலியவொரு குருதியாற்றை வடியவிடுமிலங்கை மண்

மெல்லப் பாடும் தென்றலும்
மேனிசிலிர்க்க வைக்கும் மழைக் குமிழும்
மெட்டு விரிக்கும் முல்லையும்
மோதிக்கொள்ளுமொரு புயலாய்ப் பொழுதுகள்

கண்ணைத் திறந்து வைத்துக்
கப்பல் கட்டும் தம்பியும்
கடுப்பாக அவனோடு மல்லுக்கட்டும் தங்கையும்
அடுப்பில் நெருப்பு வைக்கும் அம்மாவும் நிர்க்கதியாய் நினைவில்

நில்லாது போன நிரந்தர யுத்தம்
நினைவைத் துரத்தும் மரணவோலம்
இதுவெல்லாம் வாழ்வென்று
வேளாவேளைக்கு சங்குகொலிக்கும்

சலிப்புத்தான் சாவையும் ஜனனத்தையும்
சகஜமாக்கும் நாட்பொழுதில்
சருமத்தில் நரைபட்ட உரோமம் மேவினும்
சின்னக் குழந்தையாய் ஈழத்தெருவில் குத்தி விழும் மனம்

எல்லாத்தையும் இப்படியே வாழ்ந்து
மெல்ல விலகும் வாழ்வோடும்
வேளைக்குக் கிழடுபடும் மேனியோடும்
மெஷினில் சிறைப்பட்டு மெல்வுடையும் வாழ்வு!


உருத்தெரியாத உறவுகளாய்
ஊரே தெரியாத வம்சங்களாய்
உதிரக் காத்திருக்கும் பெற்றோருடன்
உறவு முறிக்கும் சிறுசுகளாய் ஈழத் தலைமுறை

ஊனுருக்கி உறவறுத்து
ஒருத்தி-ஒருவனோடு உறவுவைத்து
சுற்றம் தறித்து சும்மா வாழும்
அகதித் தமிழர் சுதந்திரமாய் சாவார் நாளை

வேருமில்லை விழுதுமில்லை
வேஷம்போடும் சந்ததியும்
உணர்வு முளைக்கும் ஒரு பொழுதில்
உப்புக்கும் மதியாது பெற்றோரை

புலப்பெயர்வு வாழ்வு
புதுவாழ்வு புகழ் வாழ்வு அல்ல
புலம்பித் திரியும்
பட்ட மரமாய் நலிந்த முகங்கள்

நாங்கள் இன்னுஞ் சில காலத்தில்
நடுத்தெருவில் நிற்பதற்கு
நாலு பெற்று வளர்ப்பதிலும்
உழைப்பதிலும் உலகை மறந்து...

நாலு சகாப்த்தம் நடக்குமிந்த
நாடுகேட்ட "நல்ல யுத்தம்"
நாட் குறிக்கும் நமனைக் கேட்டு
நல்ல வழி நாமடைய!


ஜனநாயகம்

12.11.2006

Samstag, November 11, 2006

மழலைகளைக் கொல்லும்...

மழலைகளைக் கொல்லும்
மந்தைத் தேசம்!


மந்தைகளின் விந்தை மிகு தேசம்
உயிர்த்திருப்பவரை தறித்தெறியும் எந்தப் பொழுதிலும்
இருப்பவரென்றும் இழப்பவராய்
இதயம் தொலைக்கும் இலங்கை மகாவம்சம்


இதற்கும் மக்களாண்மை
மனிதாபிமானம் ஜனநாயகம்
அதன் முதுகில் சோஷலிசக் குடியரசு வேறு
விளக்குமாற்றுக்குப் பட்டுக் குஞ்சம்போன்று...


நாற்று நட்ட விரல்கள் நன்னீரில் விரல் நனைப்பதற்குள்
நட்ட பயிர் களைந்தெறியப்பட்ட வயற்பரப்பைப்போல்
தறித்தெறியப்படும் ஒவ்வொருவுயிரும்
இந்தத் தேசத்தின் எதிர்காலக் கனவுகளன்றோ?


எந்தப் பக்கம் திரும்பிடினும்
மானுடரைப் புசித்திடும் நரிகளாய் அரசியல் மாபியாக்கள்
நல்ல மனிதர் வேடமிட்டு
நடுத்தெருவில் குருதி குடிக்கும் கனவோடு


கொடுங் கரங்கள்
நல்ல வேடமிட்டு நற்கரங்களாயும்
தேசத்தின் அதியுத்தமத்துக்கும்
நன்றிக்கும் பாத்திரமுடையதாகப் பேசப் படுகிறது!


பக்கம் பக்கமாய் வரும் நாளிதழ்களும்
பக்குவமாகப் பரப்பப்படும் வார்த்தைகளும்
பாதகஞ் செய்யுமிந்தத் தேசத்தைப் பார்போற்றும்
தேனொழுகும் தேசமாயும் சொல்லச் சில வானொலிகளும்
போதாக் குறைக்கு மக்களின் விழிகளைச் செவிகளைப் பாழாக்கியபடி


ஒரு தேசத்தைத் தாகமாக்கிய தம்பிமார்களும்
தவறிப்போன மந்தைகளில் ஒன்றாய்த் தடுமாறிய பொழுதொன்றில்
எவரிடமோ ஏந்திக்கொள்ளும் ஒரு நிகழ்வாய்
சமாதானம் பேச யுத்தத்தில் மூழ்கிக் கிடக்க


மூச்சுவிட வழியற்ற நிலப்பரப்பில்
ஒன்றாய்ப் பத்தாய் நூறாய்த் தினமும்
குண்டடிபடும் அந்த"மக்கள்"
எந்தத் தேசத்தையும் கனவுகண்டதாக எவருமுரைக்கார்


சொல்லச் சொன்னபோது சொன்னதைத் தவிர
அடிக்கச் சொன்னபோது அடித்ததைத் தவிர
வேறெந்த விசேஷமும் கைக்கெட்டாத
தரித்திரத்தின் வாரீசுகள் வதைபடும் தேசமிது


இருந்தும்,


புத்தன் வந்த புவியென்பார்கள்
புடுக்கர்கள் செய்யும் போருக்கு
புத்தரின் போதனையும் நன்னாட் குறித்தொதுங்கும்
பொல்லாத தேசமிது!!



ஜனநாயகம்

10.11.2006, மணி:23.58

Dienstag, November 07, 2006

அன்று சொன்னதை இன்றும் சொல்வது...

அன்று சொன்னதை இன்றும் சொல்வது...


நமக்கிருக்கும் ஒரு பெரும் குறையானது நமது சமூகத்தில் அரசியல் அறிவென்பது மிக மிகத் தாழ்ந்த நிலையிலிருப்பதே.இது நமது தமிழ் பேசும் மக்களை ஒரு இனமாகவும்,ஒரு வர்க்கமாகவும்,ஒரே சாதியாகவும் பார்க்கிறது.

இது தப்பு!

நாம் தமிழ் பேசுவதால் ஒரே இனத்தவர்களில்லை.

நம்மிடம் இஸ்லாமிய,மலையகத் தேசிய இனங்கள் இருக்கின்றன.


நம்மிடம் வர்கங்களாகப் பிளவுண்ட மகள் சமூகமாகவும்,சாதி ரீதியாகப் பிரிந்த மக்கள் சிறு,சிறு இனக்குழுக்களாகவும் இருக்கிறார்கள்.



எங்களை இணைக்கும் தமிழ் எனும் மொழியானது அடிப்படையில் நம்மைக் கழுத்தறுக்கிறது.


இது ஒடுக்குமுறையை ஏவி விடும்,துரோகி சொல்லி அழித்துவிடும்.


இந்த நிலையில் நம்மை இன்னொருவினம் அடிமை கொண்டு பல தசாப்தமாகிறது.நாம் நமது மக்களையே பற்பல பிரிவினைகளுக்குள் தள்ளிவிட்டு,அதைக் கூர்மைப்படுத்தி மேய்த்து வந்திருக்கிறோம்.

இந்த நிலையில் நமது மக்களை இனவழிப்புச் செய்து வந்த சிங்கள இனவாத அரச பயங்கரவாதமானது நம்மைக் காவுகொண்ட வரலாறு நீண்டபடியேதான் செல்கிறது.

எதிரி ஆயுதத்தை ஒரு நிலையிலும் பல நிலைகளில் அரசியல் விய+கத்துக்கூடாக நம்மை வெறும் கையாலாக இனமாக்கிவிடுகிறான்(ள்).



இதை எதிர் கொள்வதற்கான எந்த விய+கமும் தமிழ் பேசும் மக்களிடமில்லை.தமிழ் "தேசிய விடுதலை இயக்கமென்ற புலிகள்" தமிழ் எழக-பொங்கு தமிழ் செய்வதால் இந்தப் பொறியை உடைக்க முடியாது.

நம்மக்கள் அனைத்திலும்"தியாகி தர துரோகி"எனப்பார்க்கப் பழக்கப்பட்டுள்ளார்கள்.இது ஆபத்தான உளவியலைத் தோற்றியுள்ளது.


எமது மக்களின் அனைத்துத் தளைகளும் அப்படியேதான் இருக்கின்றன.

அவற்றைக் களைந்துவிடும் புரட்சிகரமான அரசியல் நம்மிடமிருந்து முன்னெடுக்கப் படவில்லை.

சிங்கள இனவாதத்துக்கு எதிராகத் தமிழ் இனவாதம் தூக்கி நிறுத்தப்படுகிறது.இது நமக்கு வெற்றியைத் தரமுடியாது.சிங்கள இனவாத்தை சிங்கள ஆளும் வர்க்கம் மட்டுமல்ல அங்கீகரிக்கப்பட்ட அரசுகளும்,அவைகளின் வர்த்தக-வர்க்க நலன்களும் முன் நகர்த்துகிறது.இத்தகைய நலன் நம் இனத்தின் மத்தியிலுள்ள ஓட்டுக்கட்சி அரசியல் வாதிகளை,இயங்கங்களை தமக்குச் சார்பாக அணைத்தெடுத்து நமக்கு எதிராக முன் நிறுத்துகிறது.


இங்கே புலிகளை ஒருபகுதியும்,மறுபகுதி ஆயுதக் குழுக்களையும் அவர்களின் ஊடககங்களையும்,கூட்டணிபோன்ற ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிக் கட்சியையும் பயன் படுத்துகிறார்கள்.

தமிழ் மக்களின் சுயநிர்ணயவுரிமை ப+ண்டோடு அழிக்கப்பட்டுவருகிறது.இதற்காக இந்தியா முன்னெடுக்கும் "விய+கமானது"ஆனந்த சங்கரியின் வடிவில் நம்மிடம் வருகிறது.நாங்கள் இந்தியாவின் மாநில சுயாட்சி(!?) முறைகளைப் பின் பற்றவேண்டுமாம்.

இந்தியாவில் இனப்பாகுபாடின்றி மக்கள்"அந்தமாதிரி"வாழ்கிறார்களாம்.மிசாரம்,திக்கம்,காஸ்மீரி,

நாகலாந்து,சீக்கியர்களின் தனிநாட்டுப் போராட்டங்கள் எல்லாம் மக்களின்"ஓற்றுமையை"நன்றாகவே எங்களுக்கு எடுத்துரைக்கின்றது.


இந்தியவென்றவொரு நாடு சிறுபான்மைத் தேசியினங்களின் சிறைக்கூடமென்று திரு பணிக்கர்,அசீஸ் நந்தி போன்ற இந்திய சமூவியலாளர்கள் எப்பவோ கருத்துக் கூறியுள்ளார்கள்.இதைக்கூட நாம் நமது அரசியல் பிழைப்புக்காக ஒழித்து மக்களைக் கருவறுக்கத் தயாராகிறோம்.இதை இந்திய நலன் தன்னாலான அனைத்து வழிகளிலும் கச்சிதமாகச் செய்கிறது.


அதன் ஒரு வடிவமாக ஆனந்த சங்கரியை, ஈ.என்.டீ.எல்.எப்பை(ரி.பீ. சீ.வானொலிக்காரர்கள்)மற்றும் புளட்,போன்ற ஆயுதரீதியாக வலுவிழந்த அமைப்புகளையும் கட்டுப்படுத்தித் தமிழ் மக்களின் நலன்களுக்கும்,புலிகளின் நலனுக்கும் எதிராக இந்தியா செயல்படுத்துகிறது.


இந்தி இந்தியாவின் "விருப்பானது" ஆனந்த சங்கரிய+டாக இப்படி நமக்குள் வருகிறது.அந்த மனிதரின் அரசியல் குழிப்பறிப்புகள் இப்படி வருகிறது படியுங்கள்.


நம்மை நடாற்றில் தள்ளிவிட்ட புலிகளின் அரசியல் விய+கமற்ற ஆயுதப் போராட்டம் இந்தியாவின் இந்தச் சதியை ஒருபோதும் வெற்றிகொள்ளமுடியாது தத்தளித்துக்கொண்டேயிருக்கும்.இனியாவது மக்களை ஜனநாயக வழிகளில் இயங்க அனுமதித்து அவர்களை வெகுஜனப்படுத்தி மக்கள்திரள் போராட்டுத்துக்கு வழிகோலட்டும்.

மக்கள் போராட்மின்றி இந்த விய+கத்தை உடைக்க முடியாது.இதற்காகப் புலிகளின் கட்டமைப்பே மாறியாகவேண்டும்.அதன் வெற்றுத் தலைமையே அறிஜீவிகளை,ஜனநாயக வாதிகளை,நிபுணர்களை உள்வாங்கி அவர்களைப் பயன்படுத்தியாகவேண்டும்.உட்கட்சி ஜனநாயத்தைத் தோற்றுவித்து கட்சியை மறுசீரமைப்புச் செய்யவேண்டும்.இதனூடாகப் புரட்சிகரமான அரசியல் முன்னெடுக்கப்படவேண்டும்.

எங்களுக்குள் பல நிபுணர்கள் உள்ளார்கள்,பல தியாகஞ் செய்யும் உளப்பாங்கு இருக்கிறது.எமது வாழ்வு இனவாத,உலக நலன்களுக்காக இனியும் பாழாக முடியாது.


புலிகளே உங்கள் அழிவில் மக்கள் அழிவதும் நிகழும்!

எனவே முந்துங்கள் கட்சியை மக்கள் ஸ்தாபனமாக்குங்கள்.

மக்கள் படைகளாக இராணுவப் படையணி மாறியாகவேண்டும்.தலைமையைப் பாரிய நெறிமுறை வழிப்படுத்தவேண்டும்.

மக்கள் தங்கள் அணிதிரட்சிய+டாக வெற்றியை நிலைநாட்ட முடியும். இது புரட்சிக்கான அறைகூவல்.இதைத் தமிழ் தரப்புத் தரகு முதலாளியம் ஏற்காது.

ஏனெனில் நாம் தமிழைப் பேசினாலும்
பிளவுண்ட மக்கள் இனம்.

நம்மிடம் வர்க்கங்கள் இருக்கு.நம்மிடம் சிறுசிறு தேசியினங்கள் இருக்கு.நம்மிடம் சாதிகள் இருக்கு.

இவற்றையெல்லாம்விட வாக்கச் சமுதாயத்தில் வர்க்க அரசியலே அடிப்படை என்பதைத் தமிழ்த் தேசியப் போராட்டம் தினமும் நிரூபித்தே வருகிறது.


ஜனநாயகம்.

Sonntag, Oktober 01, 2006

"கொப்பராண ஈழமென்பது...

கடுகளவு நிலமும்
உனக்கு நில்லாது!


இன்னும் என்ன?
திரும்பத் திரும்ப
பழைய இடத்திலிருந்தே
பகிடிக்குச் சமாதானம் பேசுகிறோம்
பக்கங்கள் நிறையப் பற்றுவாடா
சொல்வதற்கென்று சில பேராசிரியர்கள்
பார்வைக் கோளாறு
ஆயுதங்களைக் கடவுளாக்கும்.

என்னமாதிரிக் கதைத்தாலும்
நாங்கள் நம்புவது இந்தியாவைத்தானென்று
இதயம் பீறிக் காட்டும்
இன்னுஞ் சில செஞ்சோற்றுக் கடன்கள்!
எதிலுமே உப்பில்லையென்றபடி
பாணுக்கும், சீனிக்கும் மக்கள்
முண்டியடித்துக் "கியுவரிசைக் கட்டி"
எழுபதுகளை நினைத்தபடி...

நாளுக்கு ஆறு வானொலியும்
அதைச் சுமக்கும் அரசும்,
அளந்துவிடும் மகிந்தாவின் மகத்துவங்களை
அதையும் எதிர்த்துக்கொண்டு
தலைவர் பாட்டோடு
இன்னும் வரும் சில வானொலியும், தொலைக்காட்சியும்!
எங்களுக்கென்னவோ உணவுக்கு
உப்பில்லாததுபோலவே
ஈழப்போரும் சப்படிக்கிறது!!!

இறப்பவர்கள் பேராசிரியர்களில்லை
தானைத் தலைவர்களுமில்லை
அல்லது ஜனநாயகக் கொழுந்துகளுமில்லை
ஒருகோடி பரிசுகொடுத்த கோடாரிக் காம்புமில்லை
ஒரு குவளை சோற்றுக்கு நாவாடும் கூட்டத்தின்
குழந்தைகள்தான்...

கொட்டிலிட்டுக் குழந்தை பிறக்கவுமில்லை,
உடம்பு மறைக்க உடு துணியுமில்லை
உடல் நனைக்க உப்பு நீரும் கைக்கெட்டாக் கனியாகி
அந்நியன் கப்பல் வலையை விரிக்கும்.


காணாமற் போவார்,
துரோகிகள் பட்டியல் இன்னும் நீண்டபடி
ஈழம் மலருமென்று இன்னுஞ் சில கரகரத்த கதைகள்.

இதற்குள் நகரும்
இடர்மிகு தொடராய்
சுடர்மிகு கனவு
சின்ன விரலில் மெல்ல...

என்றபோதும் பிச்சைப் பாத்திரம்
கையில் வைத்தபடி
தண்டிய பணத்தில் தமிழர் தலைகளின்மீது
குண்டுகளாகக் கொட்டும் சிங்களக் கனவு,


புத்தரின் போதி மரத்தில்
பொழுதெல்லாம் புரண்டெழும்
மொட்டைச் சிங்களமும்
போதிக்கும் அகிம்சை
"தமிழருக்கென்று தனிநாடு இல்லை"
தண்டைச் சோற்றுக்குத் தாமிர பரணியும்
தபோபனமும்
சிங்களத் தேசமாம்!!!

தம்மைத்தாமே தடியடி நடாத்தி
தும்பிக்கையை இழந்த தமிழர்
துரும்பைப் பிடித்து வீசுவதாலே
எருமைப் பலத்தை ஒருமைப்படுத்திய
சிங்களச் சதியை உடைத்திட முடியா
உள்ளதையும் உதிர்த்தபடி...

கள்ளத்தனமாய் காய்களை நகர்த்தும்
இன்னொரு தேசம் இடியாய் முழங்கி,
எம்மவர் தலையை எம்மவராலே கொய்வதில் வென்று...
இத்தனைக்கும் மத்தியில்
இந்தத் தேசத்தை நட்பாய் நடத்தும்
எந்தையும் தாயும் கொஞ்சிக் குலாவிய
என்ர தேசம் கட்டாக்காலி எருமைகள் கால்களில்
இடர்பட்டுக் கிடக்கும்.

இரப்பவர் வரிசையில்
ஒன்றாய்ப் பத்தாய்
ஒவ்வொரு நாளும் ஓடெடுத்து
ஒதுங்கும் கூட்டமாய்...
உலகத்தின் "அகதி"நாமம்
எனக்கும்
என் ஓராயிரம் தலைமுறைகளுக்கும்
இது தொடர் கதையாக...

சம்மா சும்மா
தாகம் சொல்வதால்
துணைக்கு வந்தவர்கள்
துரத்தியடிப்பதாய் மாற
தூங்கிய முகத்துடன் துரத்திப் பின்தொடர்வது
எதுக்காக?


துன்பப்பட்ட துயரச் சுமையிறக்க
அந்தோ பாரூ
ஒரு கூட்டம் கொட்டும் முரசு ஒலிக்கிறதே!
இமயத்தின் உச்சியில்
விடிவெள்ளி ஒளிர்ந்து விரிகிறது!!

உனக்கா முடியாது?

கோர்க்கின்ற கைகள் கொடும்பாவிகளோடென்றால்
"கொப்பராண ஈழமென்பது கானல் நீர்தான்"
கடுகளவு நிலமும் உனக்கு நில்லாது நாளடைவில்.

ஜனநாயகம்
01.10.06

...செல்லக்கை கொடுப்பு.

சின்னக் கனவின்
செல்லக்கை கொடுப்பு.

தின்பது அவிப்பது,அவிப்பது தின்பது...என்னவொரு வாழ்க்கையடா!

"தம்பி படிப்பை மட்டும் பாத்துக்கொண்டு பேசாமப் போங்கோ உங்கட பாட்டுக்கு,இதை விட்டுட்டு காதல் கத்தரிக்காய் என்றால்...வீட்டுப்பக்கம் தலை வைக்கமுடியாது சரியோ!."என்றோ ஓர் நாள் அமாவாசைத் தினத்தன்று என்ர அத்தான் முகடு பிடுங்க வார்த்தைகளோடு விளையாடினான்.அவன் ரொம்பவும் கெட்டியான தமிழ் ஆசான்.அதையவன் அடிக்கடி உறுதி செய்வதும் வழக்கமாக இருந்தது.

"மழைக்கால் இருட்டென்றாலும் மந்தி கொப்பிழக்கப் பாயுமோ?"

பாயாது.அப்படிப் பாய்ந்தால் அது மந்தியாக இருப்பதற்கில்லை.

இப்படித்தான் நானும் பலவற்றைப் புரிந்து கொள்வது.

"தான் தின்னி பிள்ளை வளவாள்,தவிடு தின்னி கோழி வளவாள்" என்று வளர்ப்பை நாமளே பெண்ணின்ர பொறுப்பில கொடுத்துவிட்ட பின்பு, நம்மட வம்சங்கள் வலு கறாராகக் காதலிக்கத் தெரிந்தளவுக்குத் தலைக்குள்ள எதையாவது சம்பாதிக்கத் தெரியுறதாயில்லை.

"அட போடா புண்ணாக்கா"எண்ட மாதிரி நான் அத்தானை அடிக்கடி சபிப்பது இந்த இலவச ஆத்திர மூட்டல்களால்தான்.

பத்து வயதில் அவன்ர மடியிலிருந்து கொண்டு அடிக்கடி நான் செவி வழி கேட்டு மகிழ்ந்த மகா பாரதத்தில் எனக்குப் பிடித்த பாத்திரம் கர்ணன்தான்.என்னவோ தெரியாது அவன் கொல்லப்பட்ட விதம் எனக்குள் பாரிய பாதிப்பைச் செய்தது.


இப்படி அவன்ர சாவு- எனக்கு வாழ்க்கையில் அர்த்தமில்லையென்றபோது- "அவனே நட்புக்குச் செத்தபோது நான் ஏன் என்ர கவிதைக்குச் சாகக்கூடாது" என்ற பச்சோதாபத்தில்,அன்றைக்குத் தெரிந்த உறவுகளிடமெல்லாம் போய் "அம்மா இருபது ரூபாய் கடன் வேண்டியரட்டாம்" என்றபோது,எவரும் தராதபோது, நான் இப்போது ஒருத்திக்குத் துணைவனாக இருக்கும் பாக்கியத்தோடு பிள்ளைகளுக்கு அப்பாவாகவும் இருக்கிறன்.அன்றைக்கு இருபது ரூபாவால் உயிர் மாய்க்க முடிந்திருந்தது.இதுதான் காலம் என்பதா?கடவுளே!அம்மாவை நம்பி இருபதைத் தந்திருக்கும் ஒரு உறவு என்னைக் கொன்றிருக்கும்!எந்தவுறவும் காசைக் கறக்காத கசவாரங்களாக இருந்ததும் நல்லதுக்குத்தான்.
வில்லுக்கு விஜயன்,மல்லுக்கு வீமன்.சொல்லுக்குச் சகாதேவன்,பொறுமைக்குத் தர்மன்,வாளுக்கு நகுலன்,நட்புக்கு கர்ணன் திரியோதனன்... இப்படி அடுக்கியபடி அத்தான் அவிட்டுவிட்ட மகாபாரதம் சின்ன வயதில் சின்னக் கனவுகளுக்குள் ஏதோவொன்றைத் திணித்து, மனத்திரையில் வலியைத் தந்தது.எதற்காக இந்தக் கர்ணனைக் குந்தி தள்ளி வைத்தாள்.கர்ணனைப் பழிவாங்கும் கண்ணனுக்கு நேர்வழி தோணாது போனதைக் கர்ணனின் மரிப்புச் சொல்கிறதே!

"நண்பா எடுக்கவாடா கோர்க்கவாடா?"

நட்புத்தான்.எம்மாத்திரமான நட்பு!

எனக்கும் என்ர அத்தானுக்கும் இத்தகைய நட்பு நாட்பட நாட்பட உண்டானது.அத்தான் பீஷ்மருக்கு நிகரான பண்டிதன் என்பதை எனது உயர்கல்விக் கேள்விகளில் நான் புரிந்தது.

சின்ன வயதுக்கு அத்தான் கிட்லராகவே இருந்தவன்.அவன்ர கண்டிப்பு அத்துமீறின அதிகாரத்தைப் பிரகடனஞ் செய்வது.எனக்குத் தெரிந்த சின்ன வயது அத்தான் பாரதத்தைச் சொல்லுவதில் இனித்தான்.படிப்புக்கு அடித்தான்.பாழாப் போனவனுக்குப் பாம்பு கடிக்காதோவெண்டு நான் நினைத்த பதின்ம வயது, பின்னாளில் அவனைப் போற்றுவதா அல்லது ஆசான் என்று அடங்குவதா என்று அடிக்கடி அச்சப்பட்டது.

பத்தைக்குள் நின்று பீடி குடித்த சின்னப் பையனுக்கு,"வாடா மைச்சான்,வந்து இந்தக்காசுக்கு பில்டர் சிகரட்டு வேண்டிக் குடியடா"எண்டவன் பேச்சைக் கேட்டு,நானும் அந்தச் சில்லறைக்கு நாலு பிறிஸ்ட்டல் சிகரட்டை வேண்டிக் கொண்டு வந்து,சொண்டில் வைத்துச் சுதியாய் புகைத்தபோது,"எப்பிடிச் சிகரட்டு,ருசியாய் இருக்கோ?"எண்டவனிடம்,"ஓஓஓஓஓஓஓஓஓ....அச்சா."என்ற மறு நிமிடம் உடம்பின் அத்தனை பாகத்திலும் பதிந்த புல்லாந்திக் கம்பு,புரட்டிப்போட்ட கதைகள்தான் எத்தனை!

இவனெல்லாம் ஆரூ?அம்மா எதுக்காக இவனிடம் வீட்டுப் பொறுப்பை விட்டுட்டாள்,இவன் ஆரூ எனக்கு அடிக்க?மனமெல்லாம் இப்படிப் புண்ணாக-ரணமாக மாறிக் கொண்டபோதும்,அத்தானின் பாரதம் இனித்தது.அவனது கம்பீரமான தமிழ் என்னைத் தாலாட்டியது.மகாபாரதம் சொல்லும்போது அவன் அடிக்கடி கேட்கும் கேள்வி"அதன் சாரமென்ன?"என்பதுதான்.அப்போதெல்லாம் எனக்குத் தெரிந்த சாரம் தமிழ்நாட்டுச் சங்கு மார்க் சாரம்தான்.இவன் இப்படிக் கேட்கிறபோது,நான் கதையை மாத்துவதற்காகவே"ஏனங்க அர்ச்சுனனுக்குக் கர்ணனைப்போல நாகாஷ்த்திரம் விடத் தெரியாது"என்பதே!தொடர்ந்து இப்படிக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டுதான் நானும் அவன்ர கேள்விகளைக் கடந்திருக்கிறேன்.

பத்து வயதில்எனக்குப் பாட்டியாக வாய்த்தவன்.பொல்லாத அடிகளுக்குச் சொந்தக்காரன்.புளித்துப்போகாதபடி புகட்டுவதில் ஆசானாய் இருந்திருக்கிறான்.

இப்போதெல்லாம் கண் பார்வை அறவே இல்லாமல் அடியெடுத்து வைப்பதற்கு அக்காளின் தயவு அவனுக்கு அவசியம்.எத்தனை பெரிய பண்டிதர்களையெல்லாம் ஓரங்கட்டினவன் அத்தான்.ஊருக்கு உபதேசத்தை மட்டுமல்ல பிணக்குகளைக்கூடத் தீர்த்துவைப்பவன்,ஆனால் என்னோடு அடிக்கடி பிணக்குப்பட்டான்.

கிட்லர்!

சின்ன வயது.சிரிக்கின்ற பெண்களையெல்லாம் தாமரையில இருக்கிற சரஸ்வதியென்று ஆசைப்பட்ட காலத்தில்தான் எனக்கு கவிதாஞ்சலி எதிர்ப்பட்டாள்.

"கொடியே!
இழைவான் நுதலாள் இடைபோல் இடையே
குழைவாய்,எனது ஆவி குழைக் குதியோ?"

இல்லை,

"மயிலே எனை நீ வலி ஆடுதியோ?"

ஆசைக்கொரு அழகென்றால் அவள்தான் அழகு என்னும்படி அவள் இருந்திருக்கிறாள்.அந்தப் பருவத்தில் சேராத தாம்பாத்தியம் தாம்பாத்தியமாக இருப்பதில்லை.வேண்டுமானால் சமூகக் கடமைக்காக இனப் பெருகஞ் செய்வதென்று எடுத்துக் கொள்ளலாம்.அவளை நான் சேருவதற்கு அவளோ அல்லது நானோ இடைஞ்சல் படவில்லை.அவள் அழகு என்னைப் படாதபாடு படுத்தியது.அத்தான் அந்த அழகை அழித்தானென்றே சொல்லவேண்டும்.

"இந்த வயதில் முருக்கஞ் செத்தலிலும் சேலைகட்டினால் அது உங்களுக்கு அழகுதான்" எண்டான்."முளைத்து மூண்டிலை விடுவதற்குள் பெட்டை வேணுமோ?நாலு வார்த்தை தமிழில எழுத வருவதற்குள்ளேயே நாய்குக் கல்யாணம் தேவையாய் இருக்கு!பிஞ்சில முத்தின மூதேவி."இப்படித்தான் என்ர முதற் காதலைப் போட்டுடைத்தான்.

அத்தான்-ஆசான்!

இப்பவெல்லாம் பார்க்கிறன்.மேற்கத்தைய உலகத்தில் பெற்றோர்கள்தங்கள் பிள்ளைகளின் முதற் காதலை எவ்வளவு கவனத்தோடு,அன்பாக அணுகிறார்கள்!எனக்கு இந்த அன்பும் அரவணைப்பும் கிடைக்கவில்லை.என்ர கவிதைக்கு நிகராக எந்தச் சனியனும் வரமுடியாது.நான் அவசரப்பட்டு அவள் அழுக்குப்பட நேரவில்லை.அது ஏதோவொரு கனவு.அன்புக்கானதாக இருந்தாலும் சரி,இல்லைக் காமத் தீயில் கரிக்கட்டையாக இருந்தாலும் சரி,அவள் நெஞ்சுக்குள் கூடமைத்துக்கொண்ட அந்தக் காலத்தைக் குலைத்தெறிந்த என்ர அத்தான் ஒரு கிட்லர்தான்.கொடியவன்.

ஆசானாய் வந்தவன்,ஆசைக்கு ஆப்பு வைத்தவன்.அவளைத் தாண்டிய அழகி ஆருமில்லை எனக்கு!அற்புதங்களைச் சொரிந்தவள்,ஆராரோ பாடிய அம்மாவுக்கு நிகராக உணரப்பட்டவள்.அரி நெல்லிக்காய் பொறுக்கித் தந்தவள்,ஒரு மாங்காயில் இருவரும் இதழ்பதித்து ஆசைக் கடிகள் பகிர்ந்தவர்கள் நாங்கள்.அப்பப்பா இதுவொரு வாழ்வு.இதயத்தைத் துளைத்த ஓரம்பு ஆயிரம் துளைகளை எங்கள் கனவுகளுக்குள் இட்டபோது,இடையில் குட்டூறாய்க் குடியைக் கெடுத்தவன் இந்த அத்தான்.

ஆசைப்பட்ட நாங்கள் அடுக்களைக்குள் முடங்கியதுபோல அமிழ்ந்தபோது,படிப்பும் போச்சு,பிடிப்பும் போச்சு வாழ்வில்.இதன் பின்னான சில வருடங்களில்,ஏதோ பொதுவாழ்வில் போய்ச் சேர்ந்து புண்களை ஆற்றியது தேசத்துக்குப் போராடியதாகக் காலத்தால் சொல்லிக் கொள்ளும் தகமையில் அத்தானின் பங்கு மிகுதியாக இருந்தது.

இப்போதெல்லாம் ஆசையோடு பார்க்கும் பருவம் இந்தப் பதினைந்து வயதுப் பதின்மப் பருவமே.பாவாடையில் பாத்தவுருவம் "டங்கா தெரியும் கட்டை ரவுசரில்" கற்பனைக்குள் குதிரை ஓட்டும் கவிதாஞ்சலிகள் ஏராளம்.இந்தப் பருவத்தைத் துரத்திப்போட்டு,முப்பதில் மூன்று முடிச்சிட்டு என்னத்த முக்கினாலும் முழுதாய் வாழ்ந்ததாக எனக்குத் தெரியவில்லை.

"அவிக்கிறது தின்கிறது,தின்கிறது அவிக்கிறது!" இப்படித்தான் வாழ்வு நகருகிறது.

"தானுண்டது பேயுண்டது,பிறருண்டது சிவனுண்டது."அம்மா அடிக்கடி சொன்னதுபோல இப்போதெல்லாம் அத்தானுக்கு உதவிக்கொள்ள முடியுறபோதெல்லாம் என்ர கவிதைக்கு நான் துணைவர முடியாத ஏமாற்றம் அத்தானை ஆசான் என்றபோதும் அடிக்கத்தான் தோணுது.

எனினும்,அத்தான் மனத்தளவில் அனுமான்தான்!

"மாருதி வலித்தகைமை பேசி மறவோரும்
பாரிடை நடந்து,பகல் எல்லை படரப் போய்
நீருடைய பொய்கையினின் நீள்கரை அடைந்தார்
தேருடைய நெடுந்தகையும் மேலைமலை சென்றான்..."

இதுதான் என் நிலையும்.

ஜனநாயகம்
01.10.2006

Montag, September 25, 2006

கோயிலும்...

கோயிலும்
கொழுத்த வரும்படியும்!

எந்தத் திசையை நோக்கினும்
மடமையும்,ஏமாற்றும் கோசங்கள்
நிறைந்த கள்ளத்தனங்கள்,
கதைகளாய் நம்முள் கொட்டப்படும்

தீயவர்களின் தெருக் கூத்துக்கள் கோயிலாய் எழ
பல்லாயிரம் ஆண்டுகள் மடிந்தொழிந்து போயினும்
புதுப்பிக்கும் ஒவ்வொரு தரணத்திலும்
எங்கள் சாவின் சாயலே முகத்திரையில் ஓங்கியுதைக்கிறது!

வர்ணத்தைத் தர்மமாக்கிய வதைஞர்கள்
வழிபாட்டுத்தலமென்று
வக்கரித்த அழிவுகளைக் கண்களில் தூவி
வருமானத்தை உறுதிப்படுத்த
வாழ்வு மீண்டும்
வர்ணச் சாணத்தால் நாற்றமெடுக்கும்


அதுவும் பேரானந்தமென்றும்
பேரவாவென்றும்
பாரீசிலும்,இலண்டனிலும்,ஜெர்மனியிலும்
தேரிழுக்கத் தெருப் பார்த்துத்
தமிழரைப் பிடுங்கும் ஒரு கூட்டம்


நேற்றிக் கடனென்று
நெருப்பில் வெந்த சில்லறைகளைக் காவு கொடுத்துத்
தலையில் குட்டு வைக்கும் சீமாட்டியாய்
அகதிப் பெண்டிரும் அய்ரோப்பியத் தெருவில்...

அழிவார்!

ஆறறிவு படைத்ததாய்ச் சொல்லும் அதே பொழுதில்
அடுப்பெரிக்கும் மரக்கட்டையாய்
பார்ப்பானின் காலடியில் சாம்பலாய் மாற
மடி கனக்கும் அவனோ
மாளிகைகள் கட்டி
நடுவீட்டில் ஊஞ்சலில் தவமிருக்கும் பொழுதாய் காலம் நகர


நாமோ இதழ் வெடிக்கும்
பனிக் குளிரைக் குடித்து
விரல் விறைக்கத் தெருக்கூட்டிய பணத்தில்
பார்ப்பானுக்குப் படியளக்க
பாரீசில் தேர்ப்பவனி வருகிறார் கணபதியார்,
காம் நகரில் அம்பாளில் கலையேற
இலண்டனில் ஈழேஸ்வரர் வருடத்துக்கு ஏழு இலட்சம் பவுண்களை
ஜெயதேவரின் பைக்குள் நிறைக்க
எடடா சாமிக்குப் பிரதட்டை என் தமிழா!


ஜனநாயகம்
25.09.2006

Dienstag, September 05, 2006

நில்லாத யுத்தம்.

நில்லாத யுத்தமும்
நினைவகற்றிச் செல்லும் ஈழமும்
சொல்லப்போகும் சேதிகள் என்னவோ?

"......................................."

யுத்தங்கள் வழமையாகவே,
அழிவும்-சாவும் வழமையாகவே...
எனினும்
தந்திரங்களும்,அரசியல் சூதாட்டமும் வழமையாகா!
இதுள்
(தமிழ்) மக்களின் தனியுரிமை-தாயகம்
பொய்மையாகி
அந்நியப் புழுதிக்குள் அழிந்தே போகும்
ம(க்)களின் அழிவைப் போலவே!!


இந்நிலையிலும்
வல்ல பல தமிழ்க்கிழ அரசியல் சகுனிகளும்
அற்பச் சலுகைகளின் பின்னே
அவசரப்பட்டுப் போகின்ற அடியாட்படைகளும்
ஆட்டிப்படைக்கும்
அற்ப ஊடகங்களும்
அப்படியே அடிவருடிக்கொண்டு
ஐயோ "மக்கள் பாவம்"
அமைதி
சமாதானமென்ற அழகிய வார்த்தைக்குள் அழிவைப் புதைத்து
"அட நம்ம ஈழத்தின்" சமாதியில் தவமாய்க் காத்திருக்க,

ஐயா அ(இ)ராஜகபக்ஷ
அடியாய்ப் போடுறார் குண்டுகள் தூக்கித் தமிழரின் தலையில்,
அக்கம் பக்கமும்
திரண்டவருக்கு அள்ளிக் கொடுக்கும்
கொள்ளிக்கட்டைகளால்
எரிவதென்னவோ தமிழர்தம் மனங்கள்தான்!


நித்தமொரு வேட்டு வைத்து
நிதானமாய்த் தமிழர் உரிமையை அழித்துப்
புலிகள் போட்ட முடிச்சும்
அவிழ்த்துப் பார்க்கும்"ஆரிய"தந்திரமும்
கந்தைத் துணியாய்"சமஷ்டி"க் கதையோடு
காரியத்துள் மூழ்க
நித்தமொரு குண்டு சத்தமின்றிக்
காவி வருவான் பாகிஸ்தானின் பங்குக்கென்று!
இதுவும்
அமெரிக்க மாமாக்களின்
மலட்டுத் திமிருக்குத் துணையாய்...

எத்தனை உயிர்கள் அழிய
எத்தனை மனைகள் இடித்து
எத்துணைப் பிஞ்சுக் கரங்கள் உடைத்து
எத்தனை இரணங்கள் எங்கள் தேசத்துள்?


கஞ்சிச் சிரட்டை காவிய தாத்தா
கபாலம் பிளக்க
தேசத்தின் மடியில் வீழ்ந்து கிடக்க,
பெற்றவள் முலையும்
பிறப்பின் வாசலும்
குண்டறத்துத் தசையும் நாருமாய்
இரும்புத் தொப்பிக்குள்!

இனியும் கதைகளைப் பேசி,
இனிதே இந்திய தரகுக்கு
இளிக்குது சிலதுகள் பற்கள் குருதிசொட்ட
இந்தப் பிசாசுகளின்
முந்திய வினையோ"சவுக்குத் தோப்பு"என்று சா பிணத்தோப்பாய்...
"........................."

எத்தனைகோடி
இழிவுகள் செய்து
"இந்திய" இதயம் மகிழ
இவர்களாற்றும் செஞ்சோற்றுக் கடனுக்கு
எங்கள் மக்கள்தம் எத்தனை தலைகள் உருளும் இன்னும்?

05.09.06