Sonntag, November 11, 2012

ஜமுனா ராஜேந்திரன் மீதான விமர்சனத்துள்...

புலி மேல்  மட்டக்  கருத்தியலாளர் கருணாகரன் கூறுகிறார்:

"புலி எதிர்ப்பைவிட "புலிகள்", "ஈழம்", "தமிழ்த் தேசியம்" என்ற பதங்களை உள்ளடக்கிய இதழியலும்,இலக்கியமும் மிகப்பெரிய வியாபாரமாகவிருக்கிறது.எங்களுடைய கண்ணீரும், குருதியும்,அவலமும் நல்ல வியாபாரமாக நடந்துகொண்டிருக்கின்றதென்பதைத் தெளிவாக அறிவோம். ஈழத்து நிலைமைகளை ஈழத்தவர்கள் எழுதியதைவிட வெளியாட்கள் எழுதி இலாபமடையுங் காலமிது.சர்தேஷ் பாண்டே ,நாரயணசாமி ,கோடன் வைஸ்,பழ.நெடுமாறன்,ஹர்ஜித் சிங் முதல் பலரிதுள் அடங்குவர்."-பொங்கு தமிழில் ஜமுனா மீதான விமர்சனத்துள் கருணாகரன்.  

என் சனங்களே, பாருங்கள்!,

ஒரு இனத்தின் விடுதலைக்கான போரையே,புலிகள் அந்நியத் தேசங்களது ஏவலுக்கமையவும்,வழிகாட்டலுடனும் நடாத்தியது மட்டுமல்ல அந்த அந்நியச் சக்திகளுக்கு அடியாட்படையாவிருந்தும் முழுத் தமிழினத்தையுமே அந்நியச் சக்திகளுக்கும்,மாற்று இனங்களுக்கும் விற்று அடிமையாக்கியபோது, அதை விடுதலையின் பெயரால்  ஒத்தூதியப் புலிப்பரப்புரையாளர் இந்தக் கரணாகரன்.புலிகளது அனைத்துக் கலையாக்க முயற்சிக்குள்ளும் [LTTE-Ideologie  ]  தன் ஆளுமையைக் காட்டி அவ்வகைக் குப்பைகளை மக்கள் மயப்படுத்தியதுள் இவரது பங்கு கணிசமானது.நாசிகளது பாசிசத்தைத்[NS-Ideologie] தேசத்தின் பெயராலும்,மொழியாலும்,இனத்தின் மேன்மையாலும் அன்று கோய்ப்பில்ஸ்[Goebbels] ஜேர்மனியர்களை நம்பவைத்தான்.இதைத்தாம் கருணாகரன் இன்னொரு திசையில் புலிகளுக்காக நகர்த்தினார்.




இப்போது அனைத்தையும் காட்டியும்,கூட்டியும்[LTTE-Mystik] கொடுத்த கையோடு "கண்ணீரையும்,குருதியையும்,ஈழத்தையும்,தமிழ் தேசத்தையும்",அந்நியர்கள் எழுதுவதும்,விற்பதும் குறித்துக் கண்ணீர் சொரிகிறார், கருணாகரன்.முள்ளி வாய்க்காலுக்குப் பின் புலிகள் மாமிசம் புசிப்பதில்லை!

பழ.நெடுமாறனைக் கூப்பிட்டு, ஈழத்தில் தலைவரோடு பந்தியிட்டுப் புசித்துக் கைலாகு கொடுத்தவர்களும்,தலைவரது வாழ்க்கை வரலாற்றைப் பழ.நெடுமாறனை வைத்து எழுதியபோதும் இந்த அந்நியத் தன்மையை,பிழைப்புவாதத்தைக் கருணாகரன் உணரவில்லை!

புலிகள் இராஜீவ் காந்தியை இந்திய ரோவினது வேண்டுதலுக்குத் தூண்டுதலுக்கமையக் கொன்றதும்,பின்பு அந்நியக் கைக்கூலிகளாகவே தொடர்ந்து மக்களைக் களத்துக்கனுப்பிக் கொன்று குவித்ததும்,தமிழ்பேசும் மக்களது சுயநிர்ணய விடுதலைப் போரையே மாபியாத் தனமான வியாபாரமாக்கியதையும்[LTTE-clan business culture]மறந்து, இந்த மனிதர்"கண்ணீ,குருதி" விற்றுப் பிழைக்கும் அந்நியரைக் குறித்துக் கவலையுறுகிறார்.

ஏதோ,இன்று நேற்றுத்தாம் இந்தியவூடகங்கள் "ஈழம்,போராட்ட இயக்கங்களை"க்குறித்து எழுதிப் பிழைப்பதாகக் கதைவிடுகிறார்.

அவர்கள் 1980 களிலிருந்தே ஈழப் போராட்டம்,இயக்கங்கள்,அதன் தலைமைகளை ஆயுதங்களுடன் படம் போட்டுக் கதை பின்னி விற்று வந்தனர்.

இந்திய உளவுப்படையான ரோ[Research and Analysis Wing] எப்போது பல இயக்கங்களைப் புலிகள் உட்படத் தமது நேரடியான கட்டுப்பாட்டுக்குக் கொணர்ந்து, இயக்கத் தொடங்கியதோ அன்றிலிருந்து இந்திய வர்த்தகவூடகங்களும் தமது அரசியல் வியூகத்துக்கமைய இவர்களைப் பூதாகரமாக்கிப் போராட்டப் பாதையைத் திசைதிருப்பவும்,சிறு குழுவைப் பெருப்பித்து ஊத வைக்கவும் முனைந்தபோது இத்தகைய வர்த்தகத்தையும் கணித்தியங்கின.1984 ஆம் ஆண்டு,இந்தியவூடகமொன்று, பிரபாகரனுக்கு இராணுவவுடை தரிப்பித்துத் துப்பாக்கியோடு வைத்து விதவிதமான படம்போட்டது.அதுள், ஒரே நிமிடத்துள் ஒரு துப்பாக்கியைப் பிரபாகரன் கழற்றிப் பிரித்துப் பிணைப்பாரென வகுப்பெடுத்தும் இருந்தது.

அந்நியத் தேசங்களது கைப் பாவையாகவிருந்த இந்த "ஈழப்போராட்ட" இயக்கங்கள் அதன் பரப்புரைஞர்கள்,தத்துவவாதிகள்,போராளிகளெல்லாம் இப்போது புதிய கதைவிடுகிறார்கள்.

இவர்களைக் குறித்துச் சந்தேகங்கொள்ளவேண்டும்.

இவர்கள் திட்டமிட்டு மக்கள் நலன்,இலங்கை-தமிழ்த் தேச சுயாதிபத்தியம்,சுயநிர்ணயவுரிமையென வகுப்பெடுப்பதெல்லாம், இதுவரை தாம் செய்த அதே கைக்கூலி வேலையைத் தொடர்ந்தியக்கும் இன்னொரு சதியாகவே இருக்கவேண்டும்.அந்நியத் தேசங்களது உளவு வேலைகள் [External-intelligence agency ]எந்த ரூபத்திலும் வரலாம்.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
11.11.2012

Keine Kommentare: