Sonntag, Februar 09, 2014

வண. சோபித தேரர் -விரிவான நேர்காணலும் எழுந்துள்ள ஆதரவு/ எதிர் கருத்துகளும்…

ண. சோபித தேரர் -விரிவான நேர்காணலும் எழுந்துள்ள ஆதரவு/ எதிர் கருத்துகளும்……நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?? என "எதுவரை?..." இணையவலைஞ்சிகை கேட்டிருக்க ,நானும் கீழ்காணும்  எதிர்வினையொன்றை அதற்கு எழுதியுன்ளேன்.

கருத்துக்களை வரவேற்று ,ஆரோக்கியமானவொரு உரையாடலை நோக்காகக்கொண்டதென்ற தொனியைப் பரவலாக்கும் இந்த வட்டத்திலிருந்து எனது எதிர்வினை இன்னும் வெளி வரவில்லை.

இருந்தும் ,பரவலாகக் கருத்துக்களை முன்வைப்பதும் அதையொட்டிய சிந்தனைக்கு ஊக்கப்படுத்துவதும் எமது நோக்கில் ஒன்று.இன்றைய கட்சி அரசியலையும் ,அதுசார்ந்த ஆதிக்கத்தையும் மதிப்பீடு செய்வது-வரையறுத்துக்கொள்வது அவசியமே!

ஆளுங் கட்சியாக வருபவை மட்டுமல்ல இன்றைக்கு அனைத்துத்  தரப்புமே நிதிமோசடி -வரி ஏய்ப்பு;வளத்திருட்டெனக் கொண்டே நிதியைத் திரட்டும் சட்டத்தை இயற்றுகின்றன.இங்கு ,கட்சித் தலைவர்கள் -அரச தலைவர்களென வரும் பதவிகளனைத்தும் குவிக்கப்பட்ட நிதிகளுக்குச் சட்ட அங்கீகாரத்தை வளங்குவதில் பெரும் பகுதி மக்களது அனைத்து உரிமைகளையும் காலிற் போட்டு மிதிக்கும் சந்தர்ப்பமே தமது நிதயைப் பாதுகாக்க  இன்னொரு அடியாளாக வரையறுக்கப்படும் பாதுகாப்புப் படைகள் ,அரச அதிகாரத்துள்ளும் ;அதன் வன்முறை யந்திரத்துள்ளுங் கூடவொரு வியாபார வளங்கொண்ட தலைமையை  உருவாக்கியுள்ளது.

இது, அனைத்துச் " சிவில் சந்தைப் பொருளாதாரத்தையுங் " கூட இராணுவப் பொருளாதார போக்குள் அமுக்கி, இலங்கையில் பாரிய வர்த்தகத்தை இலங்கை அரச யந்திரமே கையகப்படுத்தியுள்ளது.இதைப் பழைய பாணி அரச முதலாளித்துவமாகப் புரியப்படாது.சுய முரண்பாட்டாலெழாத முதலாளியத்துள் அரச முதலாளியமாகவிருந்த இலங்கை , சமீபகாலத்துப் பல்தேசிய மற்றும் நவ தாரளவாதப்போக்குகளால் [Response to Neoliberalism and Globalization  ]சில குடும்பங்களது கையில் அந்த அரச முதலாளியத்தை வீழ்த்தியுள்ளதென்பதைப் புரியந் தருணங்களையே நாம் விவாதிக்க வேண்டும் என்கிறேன்.





இதுவேதாம் ,கட்சித் தலைவர்கள்;மந்திரிகள்;இராணுவத்தளபதிகள் என ஒவ்வொருவரையும் சொத்துடமைவாதிகளாக்கிய பின் அவர்களே ஆளும் வர்க்கமாகச் சட்டவாத அரசுக்குள் நேரடியான அதிகாரத்தையும்; ஒடுக்குமுறையையும் உழைப்பவர்கள்மீது திணிக்கின்றனர்.இந்த முரண்பாட்டைக் குறித்து விவாதித்தாகவேண்டும்.

இதைவிட்ட அனைத்தும், அதாவது "நிறைவேற்று அதிகாரங்கொண்ட சனாதிபதி அதிகாரத்தைப் பறித்துவிட்டால் இலங்கையைப் பிடித்த சனியன் விடுபட முடியுமென்பது சுத்த மோசடியான விவாதம்.இது, புதிய பொருளாதார வியூகத்தையும் அதன் பன்முக ஆதிக்கத்தையும்  ஓரங்கட்டிவிடுவதோடு மட்டுமல்ல அது சட்டவாத அரசுள் வகிக்குப் பாத்திரத்தையும் மறைத்து, இலங்கையை மேற்குலகத்துக்கு விசுவாசமாக்கும் சந்தர்ப்பங்களைபப் பற்பல புதிய முகமூடிகயோடு கருத்துக்களாக நம்மை அண்மிக்கச் செய்கிறது.இங்கு இதைச் சொல்பவர்கள் மக்களது நலனோடு பின்னப்பட்டவராகவோ அன்றித் தேசத்தின் ஒரு பிரமுகராகவோ அல்லது மதிக்கத்தக்க  கலாச்சாரத் தலைவர்களாகவோதாம் இருக்கின்றனர்.இது தற்செயலானது அல்ல.

 UNP கட்சியோடு மக்களை இணைக்கும் கயமை மேற்குலகத்தின் விருப்புக்குட்பட்டது.அது தனது இழந்த ஆதிக்கத்தை ஆசியாவில்  மீளக் கட்டியமைக்கும் தருணமே ஆசிய முலதனத்தைப் பழிவாங்கத் துடிக்கும் வியூகமாக நம் எழுந்துள்ளது.

 இந்தப் பாதாகமான பக்கமானது கட்சி நிதியோடு போட்டியிடும்போது இரு தரப்புப் பிளவாக கட்சியும் ,இலங்கை வன் முறை யந்திரமும் போட்யெிட்டுக்கொண்டே தமக்குள் சமரசஞ் செய்வதில் ஆசிய -மேற்குலக மூலதனங்களோடு ஒட்டுறைவை வக்கின்றனரென்பதைக் குறித்து நாம் அவசியம் புரிதல்களைக் கொண்டிருக்க வேண்டும்.

இலங்கை மக்களின் உயிர்வாழும் உரிமைக்கு-உயிர்வாழும் வலையம் அமைதியாக இருப்பதும் அந்த வலையம் மக்களின் நலன்களைக் கண்ணாக மதிக்கும் மக்கள் கட்சிகளால் நிர்வாகிக்கப்பட்டால் ஓரளவேனும் முதலாளித்துவ ஜனநாயகத்தன்மையின் பெறுமானத்தைப் புரிந்துகொள்ளமுடியும்.இன்றெமது மண்ணில் தொடரும் கட்சி-இயக்க ஆதிக்கமானது மிகவும் கடுமையான விளைவுகளைச் செய்துவிடுகிறது.கட்சிகளின் அராஜக ஆதிக்கத்தையும்,அவர்களது விருப்புறுதியின் விளைவாக நிகழும் பாரிய அரசியல் வன்முறைக்கும் அது சார்ந்த ஆதிக்கத்துக்கும் கட்சியனது பின்பக்கம் ஒழிந்திருக்கும் வர்க்க நலனையும் மீறிய கட்சித் தலைவர்களின் குடும்ப மேலாண்மை-குடும்பச் சொத்தாக மாறிய கட்சி நிதி,ஆயுட்காலத் தலைமை,வாரீசு அரசியலே காரணமாக அமைகிறது.இங்கு, ஜனாதிபதி ஆட்சிமுறையென்பதற்கு மேலாகக் கண்டடையவேண்டிய இன்றைய இலங்கைபோன்ற தேசங்களது நிதி திரட்சி மற்றும் அத்தகைய நிதியைக்கொண்டியக்கும் சக்தி எவைகள் என்பதைக்குறித்த புரிதல் மிக அவசியமாகிறது!

தமக்குள் ஒன்றுபட முடியாத இனக் குழுக்களோடும், சிதிறிய தலைமைகளோடும்  முட்டிமோதும் மூன்றாம்மண்டலத் தேசங்களுக்கேகுரிய பண்போடு திரண்ட நிதிகள் கட்சித்தலைவர்கள் - மந்திரிகளது குடும்பச் சொத்தாக மாறுவதற்கான சட்ட நியாயங்களைக் குறித்து நோக்குவது அவசியமானதாகும்.நவதாரளவாதப் பொருளாதார நகர்வுக்கும் இலங்கை அரசுக்கும் 1948 ஆம் ஆண்டிலிருந்தே பாரிய தொடர்புகள் இருக்கிறது.யூ.என்.பீ. கட்சிக்கும் அதன் தலைவர்களுக்கும் நிரந்தரமானவொரு மென்பர் சீட்டை மெளன் பெலாரின் சொசைட்டி [Mont Pelerin Society  ]வழங்கிவருவதை இன்றும் நாம் காணமுடியும்.இங்கு,வகைமாதிரியாக வளர்ந்துவிட்ட பொருதார ஆதிக்கமானது முழுக்க முழுக்க மக்களது வரிப்பணத்தையும் ,தேசத்தின் வளங்களை அந்நியத் தேசங்களோடு கொள்ளையடிப்பதையுமே ஆளும் கட்சிக்கும் அதன் தலைமைக்குமான பாத்தியமாகச் சட்டவரம்புகள் வளைக்கப்பட்டுள்ளன.இதுவேதாம் இலங்கைக்குமட்டுமல்ல இந்தியாவை எடுத்துக்கொண்டாலும் உண்மையாக இருக்கிறது.தமிழ் நாட்டையே எடுங்கள் அங்கு என்ன வாழ்கிறது?எதேச்சதிகாரமும் கட்சித் தலைவரையும் கண்முன் நிறுத்துங்கள்.ஜெயலதிதாவின் அதிகார -ஆவணவுச்சம் மகிந்தா குழுவையே விஞ்சும் அளவுக்கு இல்லையா?

ஆக, குறிப்பிட்ட கட்சித் தலைவர்களின் சொத்துக்கள் காலப் போக்கில் பெரும் நிதிமூலதனமாக மாற்றப்பட்டபின் அவர்களே ஆளும் வர்க்கத்தின் தவிர்க்கமுடியாதவொரு அங்கமாக மாறும்போதும், பூர்ச்சுவா வர்க்கமே மிக நேரடியாக மக்கள் சுதந்திரத்தில்,சமூகவுரிமையில்,அடிப்படை மனிதவுரிமையில் இன்னபிற ஜனநாயகத்தின் அனைத்துப் பரிணாமங்களையும் குறுக்கி மனிதவிரோதக் காட்டாட்சிக்குள் தேசத்தை தள்ளும்போது அதுவே இராணுவச் சர்வதிகாரமாக மாறுகிறது.இதுள் முக்கியமாகக் காணவேண்டியவொரு உண்மை என்னவென்றால் ஆளும் வர்க்கமென்பது கட்சியின் பின்னின்று இயக்கும் சூழல் இப்போது மாற்றப்பட்டு,கட்சியே பூர்ச்சுவாக்களால்-அதிகார-ஆளும் வர்கத்தால் நிறைந்து மக்களையும்,ஜனநாயகத்தையும் தமது நேரடியான ஆதிக்கத்துக்குள் கொண்டுவந்துள்ளார்கள்.

பெயரளவுக்கான மேற்குலகத்தின் குறை ஜனநாயகப் பண்புகூட நமது தேசங்களின் கட்சி ஆதிக்கத்துள் நிலவுவதில்லை.இத்தகைய கட்சிகள் மிக இலுகுவாகக் கல்வியாளர்களையும்,செய்தியூடகங்களையும் தமது கருத்துகளுக்கு வலுச் சேர்க்கவும்,பரப்புரை செய்யவும் தயார்ப்படுத்திக் கொள்கிறார்கள்.இன்றைய செய்தி ஊடகங்களின் தனியுடமையில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தனித்துவமான செய்தி ஊடகங்கள் இருக்கின்றன.இவை மக்களின்மீது விரித்துவைத்திருக்கும் ஆதிக்கமானது மிகக் கொடுமையானது.ஜனநாயகத்துக்கு எதிரானது.மக்களின் அனைத்து ஜீவாதாரவுரிமைகளையும் தமக்கு ஏற்றபடி மாற்றியமைக்கும் கயமைவாதிகள்தாம் இன்று ஆட்சியை அலங்கரிக்கிறார்கள்.இவர்களின் தயவில் செய்தி ஊடகங்கள் மட்டுமல்ல அனைத்து ஊடகங்களும் உயிர்வாழும் நிலையை கட்சி ஆதிக்கம் ஏற்படுத்தியதென்றால் ஓட்டுக்கட்சிகளின் மிகப்பெரும் வலு அறியப்பட்டாகவேண்டும்.ஜேர்மனியை எடுத்தோமானால் இரு பெருங்கட்சசிகளே மாறிமாறிச் சிறிய கட்சிகளோடிணைந்து ஆட்சியைக் கைப்பற்றுகிறார்கள்.இதற்கு ஊடகங்களின் பங்கு மிகப் பெரிதாகும்.இத்தகைய ஊடகங்கள் யாவும் இரண்டு பெருங்கட்சிகளுக்குப் பின்னாலும் உள்ளன.சீ.டி.யூ-எஸ்.பீ.டி [CDU/SPD]என்ற இருகட்சிகளும் ஜேர்மனிய ஆளும் வர்க்கத்தின் இருபெரும் பிரிவுகளையும் பிரதிநிதிப்படுத்துகின்றன.அவ்வண்ணமே இரண்டு கட்சிகளும் சக்தி(எரிபொருள்-மின்சாரம்)வர்த்தகத்தில் பெரும் முதலீடுகளைச் செய்திருக்கின்றன.இக் கட்சிகளின் மிகப் பெரும் தலைவர்கள்,கட்சியின் மாநிலத் தலைவர்கள் எல்லோருமே பெரும் தொழில் நிறுவனங்களை நிர்வாகிக்கின்றவர்களாகவும் இருக்கிறார்கள்.

இங்கே ஊடகங்களின் தனியுடையானது ஓட்டுக்கட்சிகளின் நலனை முன்னிறுத்தும் ஊக்கத்துக்கு மிக அண்மையில் இருக்கின்றன.ஜேர்மனிய அரச தொலைக்காட்சிகள் என்று சொல்லுப் படும் ஏ.ஆர்.டி.[ARD] மற்றும் சற்.டி.எப் [ZDF]ஆகிய இரு பெரும் தொலைக்காட்சிகளும் கட்சிகளின் தனியுடமையாகவே செயற்படுகிறது.ஏ.ஆர்.டி.தொலைக்காட்சி எஸ்.பீ.டி.[SPD]யையும் மற்றது சி.டி.யூ.[ CDU]வையும் ஆதரிப்பவை.இத்தகைய ஊடகங்கள் வளர்ச்சியடைந்த முதலாளிய நாட்டில் கட்சிகளின் ஆதிகத்தை குடிசார் உரிமைகளுக்குள் போட்டிறுக்கும்போது நமது நாட்டில் இவை இன்னும் அராஜகமாகவே நம்மை அண்மிக்கின்றன.இது உலக மட்டத்தில் பல்வேறு முனைகளில் திட்டமிடப்பட்டுச் செயற்படுகிறது.எனவே, ஜனாதிபதி ஆட்சிமுறையென்பதும்,நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முநைதாம் இவற்றுக்குக் காரணமென்பதும் ;ழுமையான புரிதலில்லை.பிரஞ்சு தேசத்தை எடுங்கள் ,அத் தேசத்தின் அதிபருக்கு உலகிலுள்ள எந்தத் தலைவருக்குமற்ற நிறைவேற்று அதிகாரமுண்டு.இன்றைய நிலவரப்படி,ஆசிய-ஐரோப்பிய மூலதன முரண்பாடுகள் ஆட்சி மாற்றத்தைக்கோரும் உலகத் தேச நடப்புள் இலங்கையும் அதன் தர்க்கத்துள்,வியூகத்துள் உள் நுழைந்திருப்பதை நாம் இந்த மதத் தலைவரது கருத்துக்களிலிருந்து கவனிக்கமுடியும்.இன்றுள்ள உலக நிலவரங்களைத் தொடர்ந்து கவனித்தால் இத்தகைய நிலவரத்துள் இலங்கையில் மேற்குலகத்துக்கேற்பவொரு அரசியல்வரை படம் அவசியமாகவிருக்கிறது!

மேற்குலக - ஆசிய மூலதனமும் அதன் பங்காளிகளுமாக இலங்கைக்குள் தொடரும் அதே மேற்குலகத் தாரளவாதப் பொருளாதாரப் போக்குள் முற்றுமுழுதுமாக இலங்கைக்குள் ஆதிகப்பரீட்சார்த்தமாகக் கட்சிகளது பின்னாள் மக்களைத் திரட்டுமொரு வியூகத்தைக் கொண்டிருக்கிறது.அங்கே,இத்தகைய உரையாடல்கள் ஏதோவொரு தர்கத்துள் சிக்குப்பட்டு மக்கள் நலனாக வெளிப்படுத்தும் அரசியலானது அரைவேக்காட்டுத்தனமாகும்.



ப.வி.ஸ்ரீரங்கன்
09.02.14

Keine Kommentare: