Freitag, Dezember 04, 2009

அயோக்கியர்களுக்கு அருகினில் இருந்துபடி...

நான் யோசித்துப் பார்க்கிறேன்,நோம் சோம்ஸ்கியின் போராட்டப் பாத்திரம் குறித்து.


ஒரு பெரும் துணிகரமான போராட்டத்தை ஏகாதிபத்தியங்களுக்கெதிராகத் தொடர்ந்து முன்னெடுக்கிறார்.



பாசிசத்தின்முன் அடிபாணியாது, தொடர்ந்து அதை அம்பலப்படுத்துகிறார்.தனது இடைவிடாத பணிகளுக்குள் இவ்வளது செயற்பாட்டையும் மக்களுக்காவும்-ஒடுக்கு முறைக்குள்ளாகும் தேசங்களுக்காவும் முடுக்கிவிடுகிறார்.



எங்களது தேசத்தில்,புலிகளதும்-பாசிச அரசினதும் கொடுமைகளுக்கு எதிராகத் தம்மைத் தாமே "பேராசிரியர்"என அழைக்கும் தமிழ்க்"கல்வியாளர்கள்"எத்தகைய செயலில் இருந்தார்களென இப்போது எண்ணிப்பார்க்கிறேன்.தலைகுனிந்து நொந்துகொள்கிறேன்.



வாய் மூடி மௌனிகளாகவும்,கொடுமைக்காரர்களுக்கும்,அயோக்கியர்களுக்கும் அருகினில் இருந்துபடி,அவர்களை தேசியத்தினது பெயரால் அனுமதித்ததைத் தவிர இவர்கள் என்னதான் மக்கள்சார் அரசியலை-போராட்டத்தை முன்னெடுத்தார்கள்?



கிட்லரிடம் அடிபணியாத ஐயன் ஸ்ரைன், இன்றுவரையும் மக்கள் நல அரசியலால் போற்றப்படுகிறான்.







எங்கள்போராட்ட வாழ்வில், நெடிய கொலைக்கெதிராகக் குரல் கொடுத்த புதியதோர் உலக நாவலாசிரியர் கோவிந்தன்,கவிஞை சிவரமணி,செல்வி,மக்களது நலத்தைத் தனது உயிராகவெண்ணிப் போரிட்ட ராஜனி திரணகம,விஜிதரன் என ஒரு பட்டியல் நமது மக்களது உரிமைக்காகத் தமது உயிரைக் கொடுத்திருக்கின்றனர் அன்று.



எனினும்,இன்று இவர்களைச் சொல்லிப் பிழைக்கும் குள்ள நரிக்கூட்டம், தமது இருப்புக்காகப் பிழைப்புவாத அரசியலை இனியொரு திசையில் கட்டியமைக்கப் பாசிசத்துக்கு முண்டுகொடுத்து மௌனித்திருந்தவர்களுடன் கைகோர்த்துத் தமக்கும், மக்கள்நல அரசியல் பாரம்பரியம் இருக்கிறதென்று பம்மாத்து அரசியலைச் செய்கிறது!



இத்தகைய கயவர்கள்,இப்போது,புலிகள் அழிக்கப்பட்டத்தும்,தம்மையும் செயலாளர்களாகவும்,மக்களுக்காகப் போராடியதாகவும் ரீல் விடுகிறார்கள்.இவர்களுக்குக் குடை பிடித்துத் தமது நரித்தன அரசியலை முன்னெடுக்கிறது பழைய இயக்கவாத மாயைகொண்ட இனியொரு இணையமும் அதன் பின்னூட்டப் புலிகளும்.நாம் போடும் பின்னூட்டங்களை விடுவதற்கு வக்கற்ற இந்தக்கூட்டம் மக்கள் நலத்துக்காககப் போராடுகிறதாம்.எத்தனை பின்னூட்டங்களை நமது தோழர்கள்விட்டும் அதைத்தடுத்து புதைவிட்ட இவர்களைது அரசியல் தார்மீக நியாயம் எத்தகையது?

வரலாற்றை மறைப்பதற்கு இவர்கள் எவ்வளவுதாம் இட்டுக்கட்டினாலும் உண்மை எந்த வடிவத்திலும் வெளிவந்தே விடுகிறது.



நோம் சோம்ஸ்கி,இன்றைய மக்கள்சார் உரிமைப் போராட்டத்துக்கு மிக நல்ல உதாரணமாவார்.இத்தகைய கல்வியாளர்களே நாளைய தலைமுறைக்கு வழி காட்டியாவார்கள்.இவர்களே கல்வியாளர்கள்.இதைவிட்ட எங்கள்"பேராசிரியர்கள்" மக்களது குருதியில் தமது இருப்பை நோக்கி அரசியல் செய்பவர்களே.



நாம்,நோம் சோம்ஸ்கி,சாரா வாகன்கினேக்ற்,ஹாபர் மாஸ் காலத்தில் வாழ்கிறோம்.



எங்களுக்கு, எமது தலைமுறையில் நமது"கல்வியாளர்கள்"குறித்தும் தெரிந்தே இருக்கிறது.



"தோழர்கள்"என்பதற்கு அர்த்தம் புரியாதவொரு இடதுசாரிகள் எல்லாம் புலிகளின் அழிவுக்குப்பின், தம்மையும் மக்கள் நலச் சிந்தனையாளர்களாகக் காட்டுவதில் எத்தனை முயற்சியைச் செய்யினும்,காலம் இவர்களைக் கடந்து சென்றுகொண்டே இருக்கிறது.




காலத்தில் வாழாதவர்கள் கட்டிவைக்கும் கருத்துக்கள் அணுவாயுதத்தைவிட கொடியது.




இதற்கு நம்மிலும் எத்தனை "பேராசிரியர்கள்-தோழர்கள்"தூ...



ப.வி.ஸ்ரீரங்கன்

04.12.09

2 Kommentare:

Anonym hat gesagt…

(please publish this corrected one)

ஆம் சிறீரங்கன். நாம் நோம் சொஸ்கியிடம் செல்ல வேண்டியதில்லை.; 30 வருட கால ஆயுதப் போராட்டம். இடதுசாரிகளின் தலித் போராட்டம், நீண்ட இடதுசாரிய இயக்க இயங்குதளம்... என்றெல்லாம் இயங்கிய இலங்கைத் தமிழ்ச்சூழலினூடு எமக்கெல்லாம் புதிய சிந்தனைகளை, சிந்தனை முறைகளை தர நாம் தமிழக சிந்தனையாளர்களிடமும் தமிழக மாற்றுக் கருத்தாளர்களிடமும்தான் போகவேண்டியிருந்தது. மாறாக அந்தச் சிந்தனைகளை கருத்து ரீதியில் எதிர்கொள்ள முடியாமல் விசனங்களை விமர்சனங்களாக -எமது பேராசிரியர்களிடமிருந்து- கண்டதுதான் மிச்சம்.

புலிகளின் காலத்தில் நேர்மையான சமூகம் சார்ந்த விமர்சனங்களைத் தன்னும் நாம் இந்தவகைப் பேராசிரியர்களிடமிருந்து உருவமுடியாமல்கூட இருந்தது. பயங்கரவாதம் எப்படி எப்படியெல்லாம் அவரவர் அரசியல் சார்ந்து அல்லது உள்ளடக்கம் சார்ந்து வரையறுக்கப்படுகிறதோ, அதேபோல் தனிநபர் தாக்குதல் என்பதும் வரையறை செய்யப்படுகிறது. சிவசேகரமும் அதை வரையறுப்பதில் எதுவும் ஆச்சரியமில்லை. கடந்த சிலபல ஆண்டுகளின்முன் எஸ்வி.ராஜதுரையும் சிவசேகரமும் பரிமாறிய விவாதங்களை வாசித்தவர்களுக்கு தனிநபர் தாக்குதல் என்பதை சிவசேகரமோ எஸ்விஆரோ எப்படி வரையறை செய்து கொள்வார்கள் என்பதில் ஆச்சரியம் எதுவும் இருக்காது. இதானவர்களின் தனிநபர் தாக்குதல் பற்றிய கருத்தை மேற்கோள் காட்டும் நிலையில் நாம் இருப்பது எமது அரசியல் பார்வைகளில் தெரியும் இன்னொரு பரிமாணம். புலிகளை நொந்துகொள்வதுபோல் இதையும் நொந்துகொள்வதுதான் மீந்துபோகிறது. எந்தக் கோபமும் வருகுதேயில்லை. புத்திசீவிகள் புத்திசீவித்தனத்துக்கு எதிராகப் பேசுவதில் எப்போதுமே சந்தேகப்பட வேண்டியும் வருகிறது. -ரவி

P.V.Sri Rangan hat gesagt…

இரவி,நீங்கள் நினைப்பூட்டும்போதுதாம் ஞாபகம் வருகிறது,எஸ்.வீ.ஆர்-சிவசேகரம் விவாதம் மற்றும் மு.பொன்னம்பலம்-சிவசேகரம் விவாதங்கள்.இவர்கள் காலத்தில் நாம் பல இலட்சம் மக்களைப் பறிகொடுத்திருக்கிறோம்.இருந்தும் உருப்படியாகப் பயணிக்கும் நோக்கந்தாம் இன்னும் கைகூடுவதாகவில்லை.கருத்திற்கு நன்றி இரவி.