தமிழக மாணவர்கள் வீதிக்கு இறங்கிப் போராடுகின்றனர்!நம்மில் பலர் பூரித்துப் போய் வீர முழக்கமிடாத குறையாய் விதந்துரைத்து மகிழ்ந்து போகின்றோம்.அப்பாவித்தனமாக மாணவர்களைப் பலியாக்கும் இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரிவுகளுக்குள் சிக்குண்ட கட்சி அரசியல் செய்யும் கிறுக்குத் தனமானது, இந்த மாணவர்களது எதிர்காலத்தைப் பாழாக்குவதென்பது இந்திய-ஆசிய மக்களது படைப்புத் திறனை அழித்து, மேற்குலகத்தில் தங்க வைக்கும் ஏற்பாடாகும்.
உற்பத்தித் திறன்,ஊக்கம்,புதுமைப்படுத்தல் யாவும் மாதாந்தம் மாற்றத்துக்குள்ளாக்கப்பட்டுச் சந்தை,உற்பத்தித் தளத்தையெல்லாம் தக்க வைக்கப் படாத பாடுபடும் மேற்குலகம் மாதக் கணக்கில் மாணவரைத் திசை திருப்பி ,ஆசியாவுக்கான சாவு மணி அடிக்கிறது.
இதற்காக நமக்குள் நிலவும் பல முரண்பாடுகளை நமக்கான பெயரில் அவர்களே தமக்கான ஆயுதமாக எடுக்கின்றனர்.தரித்திர தேசங்களது தறுதலை மாணவர்களே-புரியுங்கோ!!
உங்களது போராட்டத்தை-ஆற்றலை வீணே "விழலுக்கிறைத்து" வறுமையையும்,பட்டுணியையும் உங்கள் பெற்றோருக்கு வழங்காதீர்கள்!இதன்வழி நமது தலைவிதியையும் நம்மைச் சாராது அந்நியருக்குக் காட்டிக் கொடுக்காதீர்கள்.
ஒடுக்கப்படும் தமது சகோதர இனத்துக்காகத் தோழமை கொள்வதென்பதை வரவேற்கவேண்டும்தாம்.ஆனால்,உங்களில் ஒரு பகுதி "உலக ஒடுக்குமுறையாளன் அமெரிக்காவென்ற ஏகாதிபத்தியம்" கொண்டுவரும்இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கச் சொல்கிறது இந்தியாவை. இன்னொரு பகுதி எதிர் என்கிறது!இந்த அரசியலானது சதிகுட்பட்ட கட்சிசார் நலன்களது தெரிவாகிறது.இதை உந்தித் தள்ளும் லொபிகளை இனங்காணாது கோரிக்கைகளின் பின் கண்களைக் கட்டவைத்து உங்களைச் சுடுகாட்டுக்கு வழிகாட்டும் வேடதாரிகளை நம்புவது இன்னொரு "ஈழத்தை"தமிழ்நாட்டில் உருவாக்குவதென்பதே உண்மையாகிறது.
அமெரிக்கத் தீர்மானம் ஆதரிக்கப்படவேண்டும் என்று கொலைக்கார இந்திய அரசிடம்போய் மண்டியிடும் இந்த மாணவர்கள் யாரைக் காக்கின்றனர்?
என்ன சொல்ல வருகின்றனர்?
இந்திய அரசு, ஒடுக்கப்படும் தேசியவினங்களது கோரிக்கைக்குப் போராட்டதுக்குத் துணை நிற்கும் நண்பன் என்கின்றனரா?தங்கள் தேசத்துக்குள்ளே நலிபடும் தேசிய இனங்களைக் குறித்து என்ன பார்வையைக்கொண்டிருக்கின்றார்கள் இவ் மாணவர்கள்?
நாகலாந்து ,காஷ்மீரி,மக்களையும்,பழங்குடிகளையும் கொன்று குவிக்கும் இந்திய அரசுதாம்,இலங்கையில் கூட்டாகத் தமிழ்பேசும் மக்களையும் கொன்றுபோட்டது.இந்திய அமைதிப்படைக் காலத்திலோ இந்திய இராணுவஞ் செய்த மனித மீறல்கள் பல்லாயிரம் குற்றங்களாக இன்னும் இருக்கிறது.இந்திய இராணுவங் கொண்ட வன்புணர்பு - செய்த பாலியல் வதைகள் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு "தமிழச்சிகள்" முகத்தில் ஒட்டி வைக்கப்பட்டிருக்கின்ற காலத்தைக் குறித்து, இந்த மாணவர்கள் அறியாதவர்களா?,போராட்டப் புறப்பட்ட இயக்கங்கள் செய்த கொலைகள்,பாலியல் வதைகள்,மனித வதைகளை நீங்கள் அறியாதவர்களா?,அல்லது அதன்வழி இன்று, வியாபாரிகளாக மாறிய அதே இயகத் தலைமைகளை இன்னுமா நம்புகிறீர்கள்?
தமிழுக்காப் போராடியதென்றும்,மொழிக்காக மறியலில் வாழ்ந்தேன் என்றும் கதைவிடும் திராவிடக் கட்சிகள்,தலைமைகள் இன்று, ஆசியாவின் முன்னணிச் செல்வந்தர்களாக மாறிய கதைகள் உங்கள் விழி முன்னே இருக்கும்போது இன்னும் என்ன வேண்டும் உங்களுக்கு?
"ஈழத் தமழர்களது" மீதமுள்ள வாழ்வும் அந்நியருக்காக விற்கப்பட வேண்டுமா?
சொல்லுங்கள் மாணவர்களே-சொல்லுங்கள்!!
பதிலும் வேண்டாம் ஒரு கத்தரிக்காயும் வேண்டாம்,வீட்டுக்குப் போங்கோ-வீதிக்கு இறங்குந் தருணம் இதுவல்ல!
தமிழகத்தின்விலங்கு இந்தியத் தேசியமாக இருப்பதை உடைக்கும் தருணம் இதுவல்ல!
தமிழக அரசு "ஈழத்த தமிழ்"அகதிகளை அகதி முகாங்களில் கைதியாக அடைத்துக் கண்காணித்துக்"கொன்சன்ரேசன் லாகர்களாக-Nazi concentration camps"அவற்றை வைத்தபடி, "இலங்கைக்குப் பொருளாதாரத் தடைவிதி" என்பது என்ன சீலம்பாய் அறம்?ஆக,ஆளும் வர்க்கங்கள் தமக்குள் பங்குச் சண்டை நடாத்துகின்றன.அதை,ஒழுங்கு முறையாகத் தீர்க்கும்போது நம்மை நடாற்றில் தள்ளிவிட இந்த மாணவர்களும் பலியாகின்றனர்.
"அடேய்,போங்கடா-போங்கடி",போய் ஒழுங்காகப் படித்து வீட்டுக்கு உதவுங்கோ!
வேடிக்கை அரசியல் செய்து இன்னும் நம்மை முட்டாளாக்காது,கொலைக்கார இந்திய அரசைக் காத்து நமது மக்களையும்,இந்தியத் துணைக்கண்டத்துள் இந்தியப் பாசிச இராணுவத்தால் ஒடுக்கப்படும் தேசிய இனங்களது குரல் வளையை அறுக்கும் இந்திய ஆளும் வர்க்கத்துக்கு"நல்ல பிள்ளை" சான்றிதழ் வழங்காமலும், வீட்டுக்குப் போய் படிக்கும் அலுவல்களைப் பாருங்கள் மாணவர்களே!இத்தகை உங்கள் போராட்டம் உங்கள் மண்ணில் இராணுவ வாதத்தைக் கொணர்ந்து நாளை தமிழகத்து விடுதலைக்கு ஆப்பு வைக்கும்.
போங்கோ,போய் வகுப்புகளில் உட்கார்ந்து படியுங்கோ,உலகம் தமது உற்பத்தித் தளத்தைக் காக்க விரும்புகிறது.சீனாவிடம் பறிகொடுத்த மாதிரி இந்தியாவிடமும் பறிகொடுத்துவிடாது தடுக்க மாணவர்களைத் திசை திருப்பிப் படிப்பிலிருந்து விரட்டியடிக்கும் தந்திரமெல்லாம்[ http://www.sozialebewegungen.org/ ] உண்டு.
இதைத்தாம் கெரால்ட் கற்ஸ்மாயர் -Prof.Dr.Harald Katzmair [ http://www.workinprocess.at/pages/MitarbeiterInnen/Katzmair.htm ]தினமும் வகுப்பெடுக்கின்றார்.உலகத்தைப் புரியவேண்டுமா?இந்த நபரையும் கற்றுத் தேறுங்கோ!
இதைப் பல்வகைப் பொருளியல் நலன்சார் உறவுகளோடு பொருத்திப் பார்க்கவும்.படைப்பு-புதுமையை புகுத்தும் கல்வியெல்லாம் [http://blog.gpa-djp.at/socialmedia/kategorie/veranstaltung/ ]ஆசியாவை நோக்கி நகர்ந்ததை மீளக் கையப்படுத்த ஆசிய மாணவரது கல்விக்குப் பல வழிகளில் ஆப்பு வைக்கும் மேற்குலகத்தின் இன்னொரு வடிவம்தாம் உங்கள் இந்தக் கலகமுமாக இருக்க முடியும்.
புரியுங்கோ!
புரிந்து, வீட்டுக்குப் போங்கோ,மீளக் கைகளில் புத்தகங்களைத் தூக்குங்கோ-இதுவேதாம் நீங்கள்"ஈழத் தமிழர்களுக்கு" ச் செய்யும் நல்ல காரியம்.
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
17.03.2013