Sonntag, September 30, 2007

புலிகள் சொல்லுஞ் சில...

புலிகள் சொல்லுஞ் சில சேதிகள்:"சுட்டுவிரல் தொட்டுவிடும் தூரத்தை எட்டிவிடும் எங்கள் ஒலி."

"மென்னுணர்வு இரையாகும் கவிதை மொழிக்குள்
கட்டப்படும் ஏமாற்று வித்தைகள்.இதுள்
வித்தகன்
எங்கள் "புரட்சி"க் கவி புதுவை.
பேரோடு போராடும் பொய்மைப் பொழுதுகள்
புதுமையாகப் பொலிவுறுந் தரணங்களைப்
புரட்டிப்
பார்த்தலும்,போட்டுடைத்தலும்."

பொதுவாக இசைக்கும் மனிதரிடையே இன,மத,மொழி,என்பதைக் கடந்து இசையில் இலயித்திருப்பது எல்லா மனிதருக்குமே சாத்தியமாகிறது.இசைக்கு மொழியென்பது கிடையாது என்பதை உணர்வுக்குள் நிறுத்தும்போது இசைக்கு மொழி உண்டென்பதும் சாத்தியமாகிறது.இதன் மிக நுணக்கமான செயற்பாடு மென்னுணர்வைத் தாக்குவது.அந்தத் தாக்குதலில் அது மனிதரிடையே மகத்துவத்தையும்,மாண்பையும் ஏற்படுத்தலாம் அவ்வண்ணமே கீழ்மைப்படுத்தவும் முனையலாம்.இவ்விரண்டு செயற்பாடுமே மொழியாக உணரும்-தாக்கும் கட்டளையாக உணரக்கடவது.இந்த நிலையில் மொழியானது இசைத்தல் முறைமைக்குள் ஓசை நயத்தோடு,எதுகை மோனையோடு பேசிக்கொள்ளும்போது, ஒலிக்கு இந்த இசையின் செயற்பாடுண்டு.எனவே, இசையென்பது ஓசை என்பதாக... இங்கே, இசையென்பது வாத்தியக் கருவிகளால் இசைப்பதைச் சொல்லவில்லை.இசையென்பது ஓசை நயத்துடன் மொழிவதை-உரைப்பதை,சத்த இலயத்தைச் சொல்கிறேன்."ஒலியே பிரமம்" என்பது அத்வைதத்தின் குறிப்பு.

இங்கே, அத்வைதம் சொல்லும் ஒரு உண்மை இறையோடு ஏற்றமாகிறது.அவ்வளவுக்கு ஒலியின் ஓசை முக்கியமானது.அத்வைதத்தின் அடுத்த கட்டங்கள் நம்மை அடிமைகொள்ளும் அரசியலாக இருப்பது நமது சாபக்கேடு.என்றாலும் இந்தவொரு நிலையை நாம் சில அநுபங்களோடு உணர்வோம்.

இதுவொரு இறுக்கமானவுணர்வு உந்தப்படும் மழைக்கால இரவு.

விடுதலைக்கும்,அடிமைத் தனத்துக்கும் இடைப்பட்ட நிலையில் வாழும் ஈழத்தமிழர்களின் இரண்டுங்கெட்டான் வாழ்வில் விடுதலைக்காகப் போராடும் ஒரு அமைப்பின் எல்லாவகைப்பட்ட(அடக்குமுறை,பாசிசம்,தேசியத்தன்மை-விதேசியத் தன்மை-இன்மை,இறுமை-பெருமை,புண்ணியம்,புண்ணாக்கு,உண்ணாக்கு...)செயற்பாடுகளுக்கும் மத்தியில் நாம் உணரும்,அநுபவப்படும்-ஆத்திரப்படுந் தரணங்களை,அள்ளிப் பருகும்-உருகும் பெருமை,சிறுமைகளைச் சொல்வதற்கு மனம் பிராண்டும் ஒரு நிலையைப் பகிர்வதற்கு முனைவதில் எந்த முத்திரைகளும் எப்படி விழுந்தாலும் அது உணர்வுக்கும்,அறிவுக்குமான இரு நிலைப்பட்ட மனித முயற்சியின் கோணங்கித்தனமென்று கம்மெண்டு கிட கண்மணிகளா!

இடைக்கும்,தொடைக்கும் உருகும் இசைக்கு நடுவில் அந்தவொலி ஓசை நயத்துக்குள் வீழ்ந்து தோயுந் தரணங்களில் கவிதை எழிச்யுறுந் தரணமாக விரியும்போதே, அங்கே சரிவும் வந்து விடுகிறது.இந்த இரவின் மடியில் இசை கேட்குமொரு உணர்வைக்கொண்டு,அதைப் பூர்த்தியாக்கும் தரணத்தில் இசைக்கான தெரிவு எப்பவுமே அநுபவத்திலிருந்து விசும்பு கொள்கிறது.இந்த விசும்பின் முகிழ்ப்பில் எத்தகைய இசையை மனதில் பதியமிட்டிருக்கிறோமோ அது முந்திக்கொள்ளும் பெருவிருப்பாக.எனக்கு இசையோடு உறவென்பது சகலவிதத்திலும் செவிப்புறத் துய்ப்பாகவே இருக்கிறது.அதன் உட்பரிணாமங்களில் அறிவு பெறமுடியவில்லை-முயலவில்லை.என்றபோதும், இசையால் ஏனோ வசமானேன்.இந்த இசையில் மிக விருப்பமாக கேட்கும் இசைவடிவம் சிம்பொனி.மேலத்தேய இசைக்குள் இருக்கும் மிகப் பெரும் ஸ்த்தானம் சிம்பொனியால் இன்றுவரையும் நிலைப்படுத்தப்பட்டு வருகிறது.பீத்தோவனுக்கு(Beethoven) முதலே மொசாட்டால்(Mozart),பக்கால்(Bach)வளங்கண்ட சிம்பொனி பீத்தோவனால் புரட்சிகரமாகத் தொழிலாளிகளுக்காகவும் கீழிறங்கிவருகிறது.மேட்டுக் குடிகளுக்கே அநுபவமான சிம்பனியை தாழ்த்தப்பட்ட தொழிலாளர்களும் கேட்கும் நிலைக்கு-அவர்கள் விடுதலையடையும் நிலைக்கு உந்திய பீத்தோவனின் அட்டகனாசமான சிம்பொனி 9 நம்மை வியப்பிலீடுபடுத்தி, அவனை இசையின் வேந்தனாக்கி வைக்கிறது நமது மனத்தில்.அவனது உணர்வுக்குள் அநுபவமான உலகப்படைப்பாளிகளுக்காக அவனும் ஏதோ செய்ய முனைந்தபோது சிம்பொனி 9 ஐ படைப்பாக்கிறான்.

அற்புதமாக ஓசை நயத்தோடு உரையாடும்-பாடும் எந்த விடையமும் நமது மென்னுணர்வோடு விளையாடும் தரணத்தைக் கணிதத்தால் வகுத்துப் பிரித்துச் சொல்வது கடினம்.ஏன்-எப்படி இந்த நிலை ஏற்படுகிறதென்பது இதுவரை அநுபவமாகவில்லை.பிறகம்ஸ்(Brahms:Violin Concerto-The Symphony series represents a major breakthrough in classical music)வையிலின் கொன்சேர்ட்டில் அமைதியடையும் ஒரு நிலையில் மனது இலயிக்கின்றபோது அங்கே மெளனித்திருக்கும் உணர்வுக்கு மேன்மேலும் பெரு வாழ்வைச் செய்கிறது அந்த ஓசை.இப்படியொரு நிலையானது மனத்தின் எல்லாவித மின்னல்களையும் உணரும்-அநுபவமாகும் ஒரு உயர்ந்த செயற்பாட்டைச் செய்கிறது நமது நரம்பு மண்டலத்துள்.அப்போது மூளையின் எல்லவித ஊக்கமும் ஒரு பொறியுள் அகப்பட்டுப்போய் ஏதோவொரு ஏவலால் உந்தப்படும் நிலையைப் பெறுவதால் நாம் இத்தகையவொரு ஓசை நயத்தோடு-எதுகை மோனையோடு எடுத்து வைக்கப்படும் வார்த்தைகளுக்குக் கட்டுப்படுவதும்,அத்தோடு ஒன்றித்தல் நிகழ்ந்துவிடுகிறது.அங்கே, நாம் நம்மை இழப்பதும் பின் ஏமாறுவதும் நிகழ்கிறது.இங்குதான் இந்தப் புனைவுக்குள் சிக்குணடு போகிறோம்.இது மூடத்தனமா இல்லை மனித உடலின்-உயிரின் சாபக்கேடா எனக்குப் புரியவில்லை!

அற்புதம்!

இசைக்கும் மனிதரிடையே இருக்கும் பொல்லாத தலைக்கனம்,மமதை. இந்த சிம்பொனி இசையின் தெரிவில் பீத்தோவனிடம் இருக்கும் மெலினப்பட்ட உணர்வு அவனைத் தான் வாழும் சமுதாயத்தோடு இணைத்திருக்கிறது.ஒருபொழுதில் நாம் மனித நிலையிலிருந்து விடுபட்டு மோன நிலையால் முடிச்சிடப்படும் தரணங்களில் கற்பிதமாக எமது உணர்வில் எழுந்தருளியிருக்கும் இறை நிலைக்குச் செல்வதுண்டு.அந்த நிலை மனத்தில் பற்பலவானவொரு மகிழும் தரணங்களைத் தந்துவிடுகிறது.அப்படி மகிழுந் தரணங்களை நாம் துறவு நிலை,அனைத்தையுங் கடந்த நிலை,தியான நிலை என்றெல்லாம் சொல்லி வருகிறோம்.ஆனால், எனக்கு அந்த நிலையெல்லாம் அற்புதமான மனித நிலையாக,மனதிற்கிசைவான உறங்கு நிலையாகவும், அதுவே ஒருகட்டத்துள் மனித ஆயற்றலில் பேரெழிச்சியாகவும், மனிதர்கள் உண்மையாக இருக்கும்(இருத்தல்)உண்மையாகவும் இருக்கிறது.மனதில் எழும் சுதந்திரமானவொரு உணர்வின் தெரிவில் கற்பிதங்கள் மறையும் பொழுதாக இது என்னால் உணரப்படும்போது, நான் நானாக இருக்கிறேன்.இந்தச் சுயத்தை நான் எந்தப் புறநிலையிடமுமிருந்து பெறாதவொரு தவநிலையை உணர்வதென்பது மிகைப்படுத்தலல்ல.

நமக்கிருக்கும் ஒரு குறுகிய கால அவகாசத்தில் நான்-நாங்கள் மெளனிக்கப் போகும் இன்னொரு நிலையில் எமது நாணயமான இருப்பை உணரும் நிலையை இந்த இசையுணர்வு எடுத்துப் போட்டு விடுகிறது.முக்கியமற்ற பொழுதாக அல்லது ஓய்வென்றுணரும் இந்தவொரு நிமிடம் எப்போதும் மலசலக் கூடத்தில் இருக்கும்போது, நம்மைத் தொட்டுச் செல்கிறது.இந்த நல்லதொரு உணர்வின் நம்பிக்கை மனிதர்களின் மற்றெல்லா விதத் தேவையையும் பூர்த்தி செய்யும் சக்தியை வளங்கிவரும்-வல்லவொரு உணர்வாய் நமக்குள் வடித்துக்கொள்ளப்படுகிறது.நமக்கே புரியாத நம்மீது ஆதிக்கஞ் செலுத்தும் இந்த சாதகமான உணர்வைத் தீயின் துணைகொண்ட செந்தழலாக்கிச் சிவப்பாக்கி வைத்திருக்குந் தரணத்தில் நம்மீது ஆதிக்கஞ் செய்யும் புற நிலையை மாற்றமடைய வைக்கும் அகவெழிசச்சி வந்தெழுகிறது.நாமதை உணரும் எல்லா வகைகளையும் நம் போராட்ட களத்தில் பார்க்க முடியும்.

ஈழதேசத்தில் இன்றுவரை தொடரும் யுத்தத்தில் எவரெவர் பங்குகள்-பற்றுக்கள்-பாசங்கள்(நலன்கள்)இருக்கிறதென்பதையுங் கடந்து புலிகளிடம் இந்த அகவெழிச்சி அறியும் உணர்வு அற்புதமாகச் செயற்படுவது கண்டு, ஒருபுறம் ஆச்சரியம்.மறுபுறம், அவர்களின் அதீத நிலைப்புக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ என்று சிந்திக்கும்போது அதுதாம் உண்மையென்பதற்குச் சமீபத்தில் புலிகளின்-ஈழத்தின் ஆஸ்த்தான கவி-ஆணவக் கவி புதுவை இரத்தினதுரையால் நடாத்தப்பட்ட கவியரங்கு சொல்லும் சிலவுண்மைகளை.

புதுவை இரத்தினதுரையின் வீச்செறியும் வார்த்தைகளின் பின்னே வந்தமரும் உணர்வு நிலையானது மிகவும் கூரியவுணர்வைத் தரவல்லது.அந்தவுணர்வு நிலையானது மிகவும் நம்மோடு நெருக்கமாக வந்து உட்கார்ந்து நம்மை ஏமாற்றும் பெரியவொரு செயலில் நர்த்தனஞ் செய்வது.அவரது மொழி ஓசையோடும் எதுகை மோனையோடும் நீண்டபடி செல்வது.அங்கே, அவர் தனது நோக்கத்தை நிறைவு செய்யும் மொழி இசையாக மாறிவிடுகிறது.இதுதான் இந்தக் கவிதை மனிதரின் இன்றைய வெற்றியாக இருக்கிறது.கவிதை "யாரது பின்னாலும் செல்லாது,மண்டியிடாது" என்பதை நாம் ஏற்பதற்கில்லை என்று சொல்லவே அவரது மொழி விடுவதாகவில்லை.ஆனால்,இந்தக் கயமையை அவர் செய்யும்-ஒப்பேற்றம் நிலைக்கு அவரைத் தொடரும் கவிஞர்கள் தரும் மெய் நிலை உறுதிப்படுத்தும்போது, அவரது கவிதைக் கம்பீரம் தவிடுபொடியாகிறது.அன்றைக்குக் கூலிக்குக் கவிபாடியவர்கள் எல்லாம் தமது வருமானத்துக்குத் தடையேற்படும்போது"மன்னவனும் நீயோ..."என்று ஓங்கி ஒலிப்பார்கள்.அதை மக்களினது குரலாக எடுக்க முடியுமோ?.இன்றைக்குக் கருணா நிதிக்காக ஓலமிடும் மேத்தா-வைரமுத்துக் கூலிக் கவிஞர்களிடம் இருக்கும் கூனிக் குறுகுதல் இந்தக் கவிஞனிடம் காணாதிருக்கும் சந்தர்ப்பங்கள் அதிகமெனினும் இவன் மண்டியிடும் ஒரு நிலை எப்போது-எங்கே என்பதை இவரது மொழிவுகளே காட்டிவிடுகிறது.

தேசத்தின் வாழ்தல் என்பது நமது படைப்புகளால்தான் என்பதை மிக நேர்த்தியாக அறிந்த இந்த ஆணவக் கவிக்கு எப்போது பொய் சொல்லும் நிலை வருகிறதென்பதை நாம் இவரது படைப்புகளோடு உலாவரும்போது உணர முடியும்."நான் சொன்ன வார்த்தைக்கு வடிவம் கொடுத்தாய் விசாலகா"என வர்ணிக்கும் விசாலகனின் ஓலத்துள் இருப்பது அப்பட்டமான ஏய்ப்புகள்.அப்பாவிச் சிறார்களுக்கு அல்வாக் கொடுத்து,ஆசை காட்டுவதல்ல கவிதையின் பணி.இது புதுவையாருக்குப் புரியாதாவென்ன?மக்களை அரசியல் மயப்படுத்தி,புரட்சிக்கான-தயாரிப்புக்கான மக்களின் சுயவெழிச்சிக்கு ஆப்பு வைக்கும் புலிகளின் குரல்களாக வரும் விசாலன் கொப்பளித்த வார்த்தைகளுக்கும், நுட்பகமாகக் கருத்திடும் புதுவைக்கும் என்னவொரு ஒற்றுமையாகிறது.இயக்கப் பிரச்சாரமிடுவதற்கு பெயர்"கவிதையென்பது எழுதாப் பொருள் கடந்த-அது,கவிதை, அதையெழுதும் அவன்(இங்கே பெண்ணுக்கு எந்த வேலையும் இல்லை.கவிதை என்பது ஆணோடு கூடப் பிறந்தது!-ஆணாதிக்க வரம்பில் நின்று வேட்டைக்கு வித்திட்டவர் புதுவை.)கவிஞன்"பிரபாகரனுக்குப் பட்டுப் போர்த்தாத குறையாகப் "பிரபஞ்சத் தமிழருக்கெல்லாம் பிரபாகரன்தான் தலைவர் என்பதற்கு"கவிதை மொழி எதற்கு?,எதுகை மோனை எதற்கு?வீராவுக்கு மேற்குலகப் பயணம் பல அநுபவத்தைத் தந்திருக்கிறது நமக்காய் நாடகமிடும் நல்ல நண்பராகிறார்.

பொன்.காந்தனின் கவிதை மொழிக்கு வேஷம்-தனிநபர் துதி,வீம்பு அவசியமாக இருக்கிறது. அவர் தன்னை இனம் காணும் சந்தர்ப்பம் அவருக்கு இல்லாதிருப்பதற்கான தரணங்களை அவரே புரிவதால் "கழுதை உனக்கும் காலந்தான்"என்பதும்,தான் பழிவாங்கப்பட்டு விடுவோமோ என்றவுணர்வில்"எழுதி வைத்துக்கொள்ளுங்கள் கரிகாலன் காலத்தில் எவனாலும் இல்லைத் தமிழருக்கு ஏய்ப்பு"என்று தற்பாதுகாப்புச் செய்கிறார்.இத்தகைய கவியரங்குக்குள் கட்டப்பட்டிருக்கும் ஓசை நயங்கள், ஓயாத ஏமாற்றுக்களின் வித்தைகள் வினையாகக் கட்டிவைக்கப்பட்டு,நம் மென்னுணர்வோடு விளையாடுகிறது.இந்த வினையானது எப்போதும் எம்மை ஏமாற்றும் சுழிகளைத் தொக்கிவைத்துப் பொய்மை பேசுகிறது.இது இசையாக-ஓசையாக மெல்லவருடும் தமிழாக நம்மை மொத்தி, நமது உணர்வோடு கட்டிவைக்கும் உணர்வுப் பொதியானது சிந்தனையைத் துரத்திவிட்டு, மீண்டும் மாயைத் தோற்றத்தை-மெளன அங்கீகரிப்பை நமக்குள் விதைக்கிறது.இந்த மொழிவுகளால் ஏமாற்றப்படும் நமது உண்மைத் தரவுகள் எந்தப் பொழுதிலும் தடுமாறித் தமிழின் பெயரால் யாரோ அநுபவிப்பதற்காகச் சிறார்களை மேலும் காவு கொள்ள வைக்கிறது.இந்தப் போலி மொழிவுகளுள் புதைந்துள்ள நமது "அவாக்கள்" மெல்லப் புரியும் தரணம் வெறும் வெற்று வார்த்தையாகிறது.சொந்தமான வான் ஊர்த்தியைப் போற்றுவதலாலோ அல்லது பெரும் ஆச்சரியப்படுவதாலோ அன்றிப் புகழப்படும் தனிமனிதரான பிரபாகரனின் தகமையைப் பற்றிப் பொய்யுரைப்பதால் நாம் பெறுவது விடுதலையல்ல!மாறாக, நாம் பெற்ற இன்றைய நிலையே சாட்சி!புதுவையார்(புலிகள்)உறவுகளிடம் கேள்வி கேட்டுச் சம்மதம்(...) கேட்பது புதிசாக இருக்கிறது.பொய்யில்லை,எல்லாப் புகழும் புதுவைக்கே சேரும்.

நமது உணர்வுகளோடு ஓசையாக வந்த இந்த மொழிக்கு நல்ல இசைச் சாயல் இருக்கிறது.

எமது மனதோடு மெல்லப் பதியம் வைக்கும் கருப்பொருள்களுக்கு மத்தாப்புக் கொளுத்தும் புதுவைக்கு நிகர் புதுவையே!இங்கே, நாம் அவதானமாக இருக்க வேண்டிய தரணங்கள் நம்மை இழக்காது இருப்பதும்,அந்த நிலையில் நம் போராட்டத்தள நிலமை என்ன என்பதை மீளப் பார்த்து அறிவதும்.அப்போது, இவர்கள் கட்டும் மாயைத் தோற்றம் என்ன என்பதை உணர்வது மிகச் சுலபம்.மக்கள் மீளவும் ஏமாறாது புரட்சிப் பயணத்தைத் தொடர்வதற்கான ஜனநாயகச் சூழலைப் பெறுவதற்கான சந்தர்ப்பம் அருகும் இன்னொரு தரணம்-அபாயம் நம்மை இப்படி நெருங்குகிறது என்பதைத்தான் இப்போது சொல்கிறோம்.

"பாடுபட்டவர்கள்(வேதனை,இழப்பு,மரணம்,அகதி நிலை,வீட்டிற்கொரு பிள்ளைப் பறிப்பு,தட்டிப் பேசத் துப்பாக்கித் தடுப்பு இத்யாதியும் இன்னபிறவும்) மக்கள் அவர்கள் முன்வரவேண்டும் இதற்குப் பதில் சொல்ல!"
ஜனநாயகம்.
29.புரட்டாதி 2007

Donnerstag, September 27, 2007

அகதியாகி அழியுங் காலம்

அகதியாகி அழியுங் காலம்


த்தமில்லாதவொரு தெரு முடுக்கில்
தனித்தேயிருக்கும் பொழுதொன்றில்
ஊர்க் கனவு
மனது கனக்கும்


அந்நியன்
எச்சமிடும் நிலையிலும்
கொலை விழும் தரணத்திலும்
எனது தேசத்துக்
கிராமத்தின் துடிப்பில் வலுவிருக்கும்
வாழ்விருக்கும்


ஆத்தையின்
இடுப்பிலிருக்கும் நீர்க் குடமும்
அள்ளிய நீரும்
ஆச்சியின்
சோறூட்டும் சூம்பிய விரல்களும்
அப்புவின்
சுருட்டு மணமும்
அந்தச்
சாக்குக் கட்டில் குட்டித் தூக்கமும்
சித்திரை நிலவும்
சின்னமடுமாதாவின்
பூசை மணியும்
சங்கு ஊதியதற்காகவும்
தேவாரம் பாடியதற்காகவும்
வைரவர் கோவிலில்
ஐயரிட்ட பொங்கலும் அழிந்த காலத்துள்
பதியமிட்ட உணர்வு


புகையிலைச் செடிகளின் மலர்ந்த இலைகளும்
மெளனமாய்க்
கொட்டும் பனியும்
இதற்குள்
மனசைப் பறிக்கும்


அணிலின் பாட்டும்
பனங்காய் வாசமும்
அவற்றைப் பந்தாடும் ஊர் மாடுகளும்
அணைக்க
மாமிமகள் மச்சினிச்சியும்...
இளையராசாவின்"மச்சானைப் பார்த்தீங்களா"ப் பாட்டும்...
என்னத்தைச் சொல்ல?


ஐரோப்பியச் சந்தையில்
அனைத்தையும் பெற்றும்
அம்மாவுக்கு "அடுப்பெரிக்க விறகு பொறுக்கும்"
அந்தச் சுகம் இல்லை


கட்டிய மாட்டுக்குப்
புல் செருக்கும் வலியும்
அன்றைய வதையினுள்
ஓன்றாய் விரியும்
இங்கே
அகதிய அழிவில் அதுவும் சுகமே



கால் நூற்றாண்டு கடந்தாலென்ன
இல்லைக்
கட்டை
வெந்து மண்ணாகினாலென்ன?
கள்ளிக்கும்
ஆமணக்குக்கும்
கதை சொன்ன அந்தக் காலம்
கண்ணீரில் படரும்


பட்டம் விட்டு
அண்ணனும் தம்பியுமாக
அள்ளிச் சுவைத்த அம்மாச் சோறு அமுதம்!


இப்போதும்
மனைவியுண்டு
மக்களுண்டு
வேலையுண்டு
காருண்டு
காசு உண்டு
ஆனால்,
கண்ணீர்...

காலங்கள் கடந்திடினும்
கண்ணீரில் நிழலாடும்
என் முற்றம்!


முப்பாட்டன் வளர்த்த பனையும்
அப்பன் தோண்டிய கிணறும்
ஆத்தை அவிந்த சமையற் கட்டும்
அள்ளிச் சுவைத்த செம்பு நீரும்
ஓட்டைச் சயிக்கிளும்
புழுதி ஒழுங்கையும்
ஆடும்,மாடும் அந்த வீமாவும்
"உஞ்சு"என்பதற்குள் காலை நக்கும்;
இன்றும்
அழியாத கோலமாய்...


எத்தனை இரவுகள்?...


இடித்துக் கொட்டும் மழையும்
ஐப்பசிப் பெருநாளாய் மலரும் சின்னமடுமாதாவும்
சங்கானை,
சில்லாலை மக்களின் கூடார வண்டிலும்
குயிலின் கூவொலியும்
கும்மாளமிடும் சிறுசுகளும்
குழம்பில் அவியும் மீனும்
குத்தரிசிச் சோறும்
கொடிய வதையாய்
இதயம் வலிக்கும்


சிங்கராஜரின் அடுக்கு மொழியும்
அள்ளித் தரும் அருந் தமிழும்
மாதாவின் வளவுக்குள் அலைய
அம்மாவின் மடியில் தலை புதைக்கும் நான்!


அங்கேயும் இல்லை நான்
இங்கேயும் இல்லை நான்
அகப்பட்டது அகதியாய்...

அந்நியனாய் முகந்தொலைத்த
இந்தப் பொழுதில்
எள்ளி நகையாடும்
ஐரோப்பியக் குடியின் மிதப்பில்
என் தேசத்து வளமும் தாளமிட
கொல்லைப் புறத்து
கேடியரசியலின் கூசாத் தூக்கிகளும்
கேடான யுத்தப் பேரரசர்களும் பேசும் தீர்வுகளோ
நடாத்தும் யுத்தங்களோ
"அகதி"க்கு ஆட்சேர்க்கும்

அப்புவிடம்
குடியிருந்தது சொந்த முகம்
பேரனிடம்
வேருமில்லை விழுதுமில்லை
இதில் முகமிருக்கும் வேளை ஏது?


அகதியாய் ஓடி
அகதியாய் வாழ்ந்து
ஐரோப்பியத் தெருக்களில் சருகாய்ப் பறந்து
அள்ளப்படும் குப்பைகளோடு
முகமிழந்த இந்த முண்டமும்
ஒரு நாள் அள்ளப்படும்


ஜனநாயகம்
27.09.2007


Dienstag, September 25, 2007

எங்கள் தோள்களில் துணையாய் விழுந்து...

பெரியம்மா நீ, நீடூ வாழீ!

பொழுதெல்லாம் ஒளியெறியும் கதிரவனாய்
வாழ்வுலகில் தன்னை ஒளிரவைத்த என் பெரியம்மா
ஆறுதலாய் அறுபது அகவையைக் கடந்தாரா?
அற்புதமான அம்மா அகமகிழவொரு
அன்பாய் நிலைத்த "பெரியம்மா நீடூ வாழீ" என்ற
என் செல்லமொழி உங்களுக்கு!

நலமாய்க் குணமாய் நாளெல்லாம் இன்புற்று
நீங்கள் அகம் மகிழ அந்த ஆண்டவன்
பொழிகின்ற அருளெல்லாம்
அன்பாய்ச் சொரியும் பிள்ளைகள்


அறுபது கண்டது இந்த ஆலமரம்!
விழுதெறிந்து நிழலாய் விரிந்த
எங்கள் பெரியம்மா!
சொல்லும்போதே ஒரு சுகம் நெஞ்சை நிறைக்க
நினைவெல்லாம் உங்கள் நீங்கா நிறைந்த முகம்
எதையும் தாங்கிய இதயம்
என்னத்தைச் சொல்ல!
அம்மாவை,பெரியம்மாவாய்
பொழுதெல்லாம் புகழத்தக்க சீமாட்டி நீங்கள்!

அன்பைப் பொழியும் உங்கள் அகமும்
அதில் இன்புற்ற நாங்களும்
அந்தக் காலத்துக் கதையாய் இன்றும்
இதயத்தில் சுகமாய் விரியும்
அன்புக்கு அறுபது அகவை

ஆலயத்தில் அன்பாய்விரியும் அம்பாள்
என் அகத்தில் உங்கள் முகம்தாங்கி
இனிக்கின்ற பொழுதுகளை
எப்பவும் உங்கள் அணைப்பில்
அமைதியாய் உணர்ந்த அன்றைய பால்யம்

இன்றைக்கு இன்புற நீங்கள்
இனிதே காணும் அறுபது அகவையில்
வாழ்த்தும் என் உணர்வும்
வாயாறப் "பெரியம்மா வாழ்க" என்றே
மெல்லச் சொல்லும் !

அரிதாய்ப் பெரிதாய்
எனக்கு வாய்த்தாய் பெரிய அம்மாவை
பொழுதுகள் தோன்றலாம்
பூக்கள் மலரலாம்
ஆனால்,
உங்களைப்போல் "பெரியம்மா"அரிதாய்,
அரிதிலும் அரிதாய்ப் பெற்றேன்!
அம்மா வாழீ,
அகம் மலர அறுபது கண்ட
அன்புச் சொரூபமே நீங்கள்
நூறாய்ப் பல்லாண்டு கண்டு
பொழுதெல்லாம் ஒளியாய் நிறைந்து
எம் நெஞ்சமெல்லாம் நிறைப்பாய் அம்மா!

வாழ்க நீங்கள்
உங்கள் அன்புக் கரங்களென்றும்
ஓயாக் காற்றைப்போல்
எங்கள் தோள்களில் துணையாய் விழுந்து
உச்சி மோந்து எம்மைத் தழுவும்
பொழுகள் கோடி தோன்றுக!

Sonntag, September 23, 2007

உறவுறுந் தரணம்...

உறவுறுந் தரணம்...

நீண்ட தூரத்துள் உறங்கும் தேவதைகள்
சாளரத்தின் ஓரத்தில் உதிரும் சூரியக் கதிர்கள்
காலத்துள் அமிழ்ந்த என் உணர்வுக் குருவிக்கு
சமாதி கட்டிப் பார்க்கும் தோழி ஒருத்தி

மரத்தில் உதிரக் காத்திருக்கும் ஆப்பிள்
மௌனித்திருக்கும் என் வதைகளிலொன்று
பறித்தெடுத்த ஆப்பிளில் இறங்கும்
தேவதைக் கனவு கூசும் பற்களில்
குதறும் விற்றமீன்களுக்கு பொழுதொரு வதையாய்

அனைத்து நித்தியங்களும் அமிழ்ந்தழிய
அறத்தின் ஓரத்தில் காமக் கலப்பை தாக்கக்
கண்ணீர் வதையுள் கடுப்படக்கும்
காலத்துள் உதிரும் எதிர்ப் பால் வினையும்

























ஒரு வழிப் பாதை இருவருக்கும்
காலத்துள் அறபடக் காத்திருக்கும் ஜீவன்
கைப் பிடி மண்ணுள் இவ்வளவு கண்ணீர் பொழிவா?
இதயம் அதிரும் உயிரது கூத்துள்

குறுகும் பொழுதுகளில் உடைபடும் நாணம்
குவியும் கருப்புக்கு ஒதுங்கும் உறவு
மெய்தர மறுக்கும் கருமை மனது
ஈரஅலை இதயத்திலிருக்க உறங்கும் தாம்பாத்யம்

தொப்புள் கொடியுறவொன்றிணைக்கும் குடும்பம்
குட்டையைக் குழப்பும் கோதாரி மனது
கும்மாளமிடும் காழ்ப்புணர்வு
வதைக்கும் நினைவுகள்
வடுவாய் விரியும் நாவினாற் சுட்ட புண்

எனினும்,
நீண்ட தூரத்துள் உறங்கும் தேவதைகள்
சாளரத்தின் ஒரத்தில் உதிரும் சூரியக் கதிர்கள்
மௌனிக்க முனையும் பாலுறுப்பு

ஓலமிடும் ஒலியின் அதிர்வில்
சுவரில் உரசும் இதழ்கள்
இதயத்தின் அடியில் உலர்ந்த சாம்பல்
நாவிற்கடியுள் நலியும் காதல்

வீசியடிக்கும் குளிர்ந்த காற்றுள்
இதழாள் சுவையும்
நெருங்கி வரும் இரவில்
உடலின் மிடுக்கும் உருவந்தர மறுக்கும்
வலியை மென்று மனது ஒடுங்கும்

துயரத்தின் கொடுவாள்
அறுத்தெறியும் காலத்தின் மரிப்பில்
தொலைவதென்னவோ நீயும் நானுமே
தவித்தென்ன தண்ணியடித்தென்ன
தாழ்வது நமது நலமே!

நேரத்தோடு அறியப்படாத
எனது நிறமாற்றம்
தொலைவதில் வியப்பு என்ன?


22.09.2007

Sonntag, September 09, 2007

போக்கிடம்(புனைவு)

போக்கிடம்(புனைவு)

நான் தனிமையாக இருந்து கொள்கிறேன்.அதுவொரு கல்லாசனம்.ஒரு தொல்லையுமில்லாமல் நான் இருக்கவேண்டும்.ஆனால்,எங்கு போனாலும் தீ எரிந்து கொள்கிறது!,மனம் போக்கிடம் தேடியலைகிறது.வெகுவாக நான் அழிந்துவிட வேண்டும்,முடியவில்லை.

காற்று நன்றாக வீசி,குளிரை நிறைவான வகையில் அள்ளித்தெளிக்கிறது.நானிருக்கும் இந்தக் கல்லாசனம் எனக்கு மட்டுமே பொருத்தமாகக் கட்டப்பட்டவொரு சிம்மாசனம்.இதில்,என் வாழ்வின் நெருடல்கள்,மீட்டல்களில் சிக்கித் தவிக்கவேண்டிய ஒரு நியதிபோலும்

என் வசமுடையவை சிலருக்குச் சின்ன விடயமாகவிருக்கும்,எனக்கும் அப்படித்தாமிருந்தது நேற்று வரையும்.ஒன்றுடனொன்று சேர்ந்து கொல்கின்றன இன்று.
நான் மெளனத்தின் பிரதிநிதியல்லவே,உள்ளம் மெளனத்தின் பிடரியில் ஓங்யோங்கி அடிக்கிறது.

ஒற்றையடிப் பாதையொன்றில் நேற்று நடக்கின்றேன்.கூடவே என் சுயத்திற்கு சங்கேத பாஷையில் சமாதானஞ் செய்கிறேன்.பீறிட்டெழும் உணர்வுகள் என் சுயத்திற்குச் சமாதிகட்டிகொண்டிருக்கின்றன.மொத்து,மொத்தென்று உணர்வுக்கு மொத்த முடியவில்லை.

அந்தப் பாதை தொடர்ந்து கொண்டது.நான் ஏதோவொரு உந்துதலால் தள்ளப்படுவதுபோன்றவொரு உணர்வோடு மேலும் நடக்கிறேன்.

வீடு திரும்பி விடலாமேயென மனது பிராண்டிக் கொண்டது.ஆனால் முடியவில்லை.உணர்வினது அவசியத்துக்கு எதுவுமே முட்டுக்கட்டையிடத் தகுதியின்றி ஒதுங்க,நான் முடியாது திணறிக்கொண்டேன்.

உருக்குலைந்த நியதிகளாய் என் நியதிகள் மாறவேண்டுமென்றிருந்தால் அ·து நடக்கத்தாம் போகின்றது.சரிபோகட்டும்.என் விழிகள் உஷ்ணக் கொதியில் வெந்து,குருதி தோய்ந்த கோலிகள்போல் வெளியில் தோன்றி,உப்பிக்கொண்டன.

யாராவது நம்ம சனங்கள்...அதாவது, இப்போதையப் பையன்கள் கண்ணுற்றால் என் கோலத்திற்கு இன்னுமொரு பட்டத்தைச் சும்மா தூக்கித் தந்துவிடுவான்கள்.ஏற்கனவே,எனக்குக் "காய்ச்சல் மாமா"என்றொரு அருமையான பட்டத்தைத் தந்தாங்கள்-எழுபதுகளில் நான் பட்டம்பெற எத்தனை குத்துக்கரணங்கள்போட்டேன்!

நல்லவேளைதாம்.எந்தத் தமிழ்ப் பயல்களும் காணவில்லை இந்தக் காய்ச்சல் மாமாவை.ஆனால்,ஜேர்மனியர்களும்,வேறு சனங்களுமாக என்னைப் பின் தொடர்வதாகவும்,விலத்திச் செல்வதுமாக இருக்கிறார்கள்? அப்படியொரு உணர்வும் குறுக்கே வந்து தொலைவது இந்தச் சலனப்பட்ட மனதுக்குத் தெரிந்து கொள்கிறது.அவர்கள் எல்லோரும் மேவிக்கொள்ளும் தரணம் என்னைப் படுத்தும் இந்தக் கோதாரிக்கு அபத்தமாக இருக்கிறது.

அந்தக் கோபுர வாசலை நெருங்க இன்னுஞ் சில மீற்றர்களே இருக்கிறது.

கைலாசத்தின் கதவு தானாகத் திறந்து,என்னைப் பச்சைக் கூட்டோடு பரலோகத்துக்கு அனுப்புவதற்காக உள்ளே அழைக்கிறது.அந்தத் தவம் நிறைந்த ஆனந்தம் அற்புதமாக என்னுள் பரவ பிறப்பின் அர்த்தம் புரியும் ஒரு திசையில் இந்தப் புதினம் புண்ணாக்கும் என் ஆன்மாவை.பொழுது சரிந்துகொண்டது.அப் பகுதியல் கால்வைத்ததும் மனத்தின் அதியுச்சக் கிலேஷம் சிலிர்த்து என் சுயமாக விரிந்தது.எனக்குள் முக்காடிட்டிருந்த என் உண்மை முகம் இதுள் தொட்டிலிட்டு ஆடிக்கொண்டது.நான் காலத்தில் வாழும் ஒரு நிலையில் என் பாலீர்ப்புப் படலம் பாய்விரிக்கும் அன்றைய தரணத்தை மனதுள் விரித்தது.மாங்காய் பறித்து நாமிருவர் புசித்த எச்சில் இனித்த பொழுதில், உதட்டில் குருதி கசியும் ஒரு நிலையில்-எங்கள் காதல் உயிர்த்திருந்தது.இது அன்று.இந்த விடாய் பானத்தை நாடிச் செல்லும் தவித்த மனிதனாய் என்னைத் துரத்துகிறது.இந்த விடாய் ஊனமிக்கதான செயலாக எனது பக்க நியாயங்களால் தீர்ப்பெழுதிக் கொள்ளும் எந்தத் தரணமும் இப்போது இல்லை.நான் அந்தக் கோபுரத்துள் நுழையும் இந்தக் கணம்,நீரின்றித் தவித்த மீனின் நிலையாய் இருக்கிறது.அவ்வளவு வேட்கை-வேதனை!
இதுவொரு சாபக்கேடா அல்லது உடலுடன் கூடப்பிறந்த வஞ்சக நெஞ்சத்து நஞ்சா?வடிவமில்லா இந்த வம்பு உணர்வுக்கு வதைபடும் தரணங்களும் உண்டுதாமோ?

எனக்கு வயது அறுபது கடந்திட்டபோதும் உடலின் வலுக் குறைந்தபாடில்லை.அது பதின்ம வயதுப் பேரப்பிள்ளையின் உருவத்தோடு என்னுள் புகுந்து என் மனதின் பொழிவுகளை வலுப்படுத்தியதால் நான் தோற்றுக் கொண்டிருக்கிறேன்.இந்தத் தோல்வி "நான் மட்டும் எப்படி?...,ஏனிந்தப் பிறப்பில் மட்டும்தானே உயிர்த்திருக்க முடிகிறது,நாளை மடியும்போது அந்தப் பழுப்புடல் ஏக்கம் என் கட்டையை வேகாது விடாப்பிடியாய் தீயிலிருந்து மறுத்தொதுக்கினால் என்னதாம் பண்ணுறதாம்"என்று எனக்குள் விரிந்ததும், நான் இதைக்"கொடூரம்,என்னால் சகிக்க முடியவில்லை,ஊரை நினைத்து நான் தினம்,தினம் சாகமுடியாது"என்று சமாதனஞ் செய்தேன்.

புறத்தே என்னைக் கொல்லும் சூழல்,ஜேர்மனியின் கோடைகாலம் என்னைக் கொல்லுந்தரணத்தையும் அப்படியே அழைத்து வந்துவிடுகிறது.இது என்னைக் கொளுத்திச் சாம்பலாக்கும்.நான் இதனை வெல்லத் தவமிருக்கும் ஒவ்வொரு பொழுதும் என் இதயத்துள் முள்ளாய் குத்தும் அந்த உடல்கள் தொப்புள் காட்டிக் கண்ணடிக்கிறது.முடியவே,முடியாது!அந்த மாமுனிவர்களும் அடங்கிய அற்புதத் தொப்புள் குளத்தில் நீரில்லை தெள்ளத் தெளிந்த தேனால் நிறைந்த தேகப் பரப்புள் இந்தக் குளம் தேவலோகத்துக் கனவுகளைக் கூட்டிவந்து என் குருதியைக் குடிக்குந் தர்மத்தை எனக்கு ஒழுங்குபடுத்துகிறது.நான் ரொம்பப் பாவம்.தொப்புளிலிருந்து சாணளவு இறங்கப் போடும் ஒவ்வொரு உடையிலும் உழுத்துப்போகும் உணர்வுக்குள் எனது உணர்வும் அடக்கம்.அந்த உடையைத் தாங்கும் சதைப் பருக்கையும் மானுடம்தாமே?இல்லை என்னைப் போன்றதொரு பாலீர்ப்புப் பிண்டமா?பாவிகள் இரட்சிக்கப் படுவார்கள். நீ,படும் பாட்டில் இதுவும் தேவைதாம்.

இப்போது, நான் இந்த ஈர்ப்பு வலயத்துள் மெல்ல வருகிறேன்.

காலம் மிகப் பின்னோக்கி நகர்கிறது.இளமையும்,பொலிவும் ஒருங்கே ஊஞ்சலிட ஒருத்திக்குப் பின்னால் அலைந்ததில் மூன்று பெண்களும்,இரண்டு பையன்களுமாக எனது வீரியத்தின் பாய்தல் விடாப் பிடியாய் பிடித்துக் கவ்விக் கொண்டது...

இப்போதைய அகதியக் குந்தலில் எனக்கு இஷ்டமில்லையென்றாலும் அள்ளிச் சுவைக்க முனையும் இந்தப் பாற்குடங்களால் பாதி விருப்பும் மீதி வெறுப்புமாக வேளா வேளைக்கு வீணியூற்றிக்கொள்வேன்.என் பேரவாவின் வினைப் பயன்கள் எந்த வேதனையுமின்றி வீராப்பு நிறைந்து அகதியத்தில் பதியம் போட்டுள்ளார்கள்.அவர்களால் இறக்கப்பட்ட எனது வருகைக்கு அர்த்தமொன்று இப்போது தெளிவாகிறது.இது வாழ்வினது அர்த்தமா அல்லது உடலினது உச்சபச்சத் தாகமென்பதா? இனித்தாம் அறிய வேண்டும்!

கால்கள் கூசுகின்ற இந்தக் கணத்தில் உடல் வலுவிழப்பதுபோன்ற மிகுந்தவுணர்வை அவர்கள் அறிவதால் என்னை நெருங்கி வருகிறார்கள்."வயோதிபமென்பது ஒரு பொருட்டல்ல,வாருங்கள்"என்று மென்மைக் காந்தக் கரங்களால் அணைக்கப்படும் என்னுடல், உலகத்தின் எந்தப் பெரிய அழகையும்விட-அற்புதத்தையும்விட இதுள் மிகப் பொலிவானவொரு அமைதியை,பேரின்பச் சுருதியை உணரத் தலைப்பட்டது.அந்தவுடலுள் ஊஞ்சலாடும் உணர்வுக்கு இன்று பாலாபிஷேகம்.

எல்லாம் சங்கமமாகிவிட்டதென்று கூறுவதற்கில்லை.என்னது தோலோடு மோதி நிலைப்படைந்தது.நீண்ட போராட்டத்தின் பின்னானவொரு பொழுதில் மிகப் பொருத்தமாக விரிவடைந்தது அந்தக் கதை. அவ்வளவும்தான் வாழ்வு.ஒரு நுணுக்கமான விரிவு,அசைவு,திரண்டொழுகும் ஒரு குமிழி.

வீடுமீண்டபோது களைப்படைந்தவுடலுக்குத் தீனி அவசியமாகி இருந்தது.விழியில் சோற்றுப் பருக்கை ஒட்டியிருப்பதென்ற உணர்வுக்கு மாறாய் என் மகள் தென்பட்டாள்.தெரிந்துகொண்ட உடலுக்குள் அவள் புகுவதுபோன்றவொரு நினைவால் நான் துரத்தப்பட்டேன்.எனது புறமுதுகில் குத்தும் பிரமைக்கு ஈவு இரக்கமென்பதெல்லாம் அமெரிக்கப் பாணியிலிருந்தது.எல்லாம் வல்லோனே,ஏனிந்தக் கொடுமை எனக்கு?எவர்கெடுத்து உரைக்க!எனது மகளின் உருவத்துள் நினைந்துகொள்ளும் இந்த மனத்தின் குரங்குத் தனத்துள் துள்ளிக் கொண்டபடி கொதித்தெழும் அந்தப் பிசாசுக்கு வயது பதினாறாய் இருக்கவேணும்.இல்லையானால் அது அடங்கிக் கிடக்குமே!அறுபட்டுப்போன பட்டத்து நிலைக்கு நானும் எனது மனமும் எவ்பவோ வந்துவிட்டதென்பதை உணரும் ஒரு துளி நாணயம் எனக்குள் பெருகிச் சிறுத்தது.மகள்வீடு தாண்டி மகனது இல்லத்துள் மிதந்தபோது மருமகளே என்னை வரவேற்றாள்.

"மாமா,வாங்கோ மாமா"என்ற அவளது குரலில் மாமாவுக்கு மோன இலயம் பீறிட்டபடி.மடிப்புக்கழராத அவளது முன்னுடலில் பூக்கள் கொலுவிற்றிருப்பதும் அது என்னைத் தன் வாசத்தால் சுண்டியிழுப்பதும் பொல்லாத பொழுதுகளின் நிந்தனைக் காண்டமாக விரிவதில் நான் வெறுப்படைவதும் பின்பு அதுவேயொரு சுவையான உணர்வாகவும் விரிந்துகொள்வதும் இயல்பாக... நான் அவளைத் தினமும் மனதிலிருத்தி என் மெளனத் தாகத்தைக் கொட்டுவதுமாக எனது கடன்கள் கழிவதுமாகச் செல்கிறது இந்தக் கணம்.என் பேரப் பிள்ளைகள் என் தோளிலும் மடியிலுமாக விழுந்து விளையாடும் உன்னதமான இந்தத் தரணங்கூட அதுகளின் தாயின்மீதான தவித்தெழும் என் அகக் குடைச்சலாக விரிவதில் நான் சிறுத்துக்கொள்கிறேன்.இந்தக் கேடானவுணர்வுக்கு எந்தத் திசையும் தெளிவில்லை.போதையாய்ப்போன பசிக்கு உத்தரவாதமான எந்தவுறமுமில்லை.எத்தனை காலத்துக்கு இந்த ஏகத்தைத் தவிர்ப்பதற்காக ஏங்கித் தொலைவது?முடியவில்லைப் பேரின்பமே!

நான் எனக்குள் அழிவதும் மீண்டும் உருப் பெற்றுக் கொள்வதுமாகச் செல்லும் இந்தப் பொதுப் புத்தியுள் பேரின்பமாக விரியும் அந்தவுருவம் ஒரு பெண்ணுக்குரியதாக இருப்பதில் எந்த நியாயமும் இல்லை.அதுவொரு வடிவம்.எந்தப் பொழுதிலும் பேரிரைச்சலாக விரியும் ஏதோவொரு அசைவில் என்னைக் கட்டிப் போட்டிருக்கும் சக்தி அது.அதை மீறிப் போவதற்கான எந்த உந்துதலும் எனக்குள் பீறிட்டுக்கொள்ளவில்லை.எனது மோனைத் தவம் இந்தத்தடத்துள் எப்பவும்போலவே புதுமைக் கொலுவிற்றுச் செல்கிறது.வானம் இருண்டு முகில் கருமையாகக் குவியுந் தத்துருவமானபோது என் தலைகளில் உருளும் நீருக்குள் நான் உருகிக்கொள்வதும்,இருக்குமிடம் மகனதோ இல்லை மகளதோ என்ற கேள்வியின்றி என் திசையில் எங்கே தோன்றிய ஒரு புள்ளியில் இருப்பதான இந்தக் கூத்துக்கு நான் பொறுப்பேற்க மட்டும் உணர்வு தவித்தது.

"பாளையாம் தன்மை செத்தும்
பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும்
காமுறும் இளமை செத்தும்
மீளும்இவ் வியல்பு மின்னே
மேல்வரு மூப்பும் ஆகி
நாளும்நாள் சாகின்றாமல்
நமக்குநாம் அழாதது என்னோ?"


தெருவிளக்குகள் ஒளிர்கின்றன.அந்தவொளியில் சிதறும் நீர்த்துளிகள் என் மெளனத்தைக் கலைப்பதில் தோற்கின்றன.எனது போக்கிடம் குறித்த ஏதோவொரு பொறி என்னைச் செம்மையாகத் திட்டுகிறது.நான் உறுவுசொல்லிப் போக்கிடம் தேடிய காலம் இனி மலையேறியதாகவே எனக்குள் குப்பையாக விரிகிறது.நான் செம்மையுறும் உணர்வில் ஏதோவொரு அற்பத்தனத்தை அந்தச் செயலுக்குள்ளும் நீட்சியாவதை உணரும்போதே இது அவ்வளவு சீக்கரம் முடியுமொரு அத்தியாயமாக எண்ணத் தலைப்படவில்லை.

அந்தக் கல்லாசனத்தை விட்டகலும் வேளையில் தன்னியல்பாக நான் நடக்கும் இந்தக் கோலம் மனிதனாக இருக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் என்னிடமிருந்து தொடர்ந்து உற்பத்தி செய்கிறது.நான் எவரையும் நினைந்துருகி எனது அவாக்களை மறைப்பிட்டுக் கொள்ளும் பொய்மைக்குள் புகவில்லையென்பதில் எனது திமிர் உண்மையாய் பெறுமானமுடைய உணர்வில் தவித்தது.

என்னைவிட்டகலும் அந்தச் சொற்ப கணத்துள் அவன் எனக்குப் போர்வை தந்தான்.

நீருள் நனைந்த உடலோடு பிடவைகளும் ஈரமாகியதாக எண்ணும் சந்தர்ப்பத்தில் அவற்றைக் களைந்து எங்கோ போட்டேன்.அடிக்கடி இரயில் வண்டிகளின் அதிர்வில் அமைதியிழந்த எனது மனதுக்குத் தூக்கம் ஒரு கேடவென்று தோன்றியபோது எனக்குப் போர்வையிட்ட அந்தக் கரத்தின் வருடலில் விறைத்துக் கொண்ட என் தவப் பயன் மீளவும் கக்கிகொண்ட உயிர்த் தெறிப்புகளில் உலகம் இருண்டு கிடக்கக் கட்டிய எல்லாக் கோட்டைகளும் சரிவதாக எனது பையன் படுத்தியபாட்டில் எனது தெருவாசம் புலப்பட்டும் நான் என்னைத் தொடர்ந்து நகர்கிறேன்.என் போர்வைக்காரனோ என்னுள் தவிப்பை ஏற்படுத்திய அந்தத் தரணத்துள் தன்னைப் பின் தொடர வைத்தபோது என் பையனின் குரல் எங்கோ தொலைந்தது.