Sonntag, Mai 31, 2009

பிரபாகரனின் இன்னொரு வருகை.

ன்றைய உலகத்தின் பொருளாதார வியூகத்தைக் குறித்து எந்த ஆய்வுமின்றிப் "பேராற்றல்"மிக்கப் பிரபாகரனால் தமிழீழம் விடுதலையாகுமெனக் கனவுகண்ட புலம்பெயர் தமிழ் மனதுக்கு, இன்னும் தமது தலைமையின்மீது அளப்பாரிய மயக்கம் இருக்கிறது.புலிகளின் தோல்விக்குச் சர்வதேசத்தின் கூட்டுக்காரணமாவதற்கு எது உடந்தையாக இருந்ததென்பதைக் கேள்விக்குட்படுத்தாமல் வெறுமனவே மேலும் இயக்கவாத அரசியல் செய்பவர்களை என்னவென்பது!


இவர்களே,இப்போது இன்னொரு பிரபாகரனது வரவுக்காகக் காத்திருக்கிறார்கள்.



>>இன்னொரு பிரபகாரன் அவதரிக்கும் வரை நாம் அமைதி காத்து நிதானமாகச் செயற்பட வேண்டும்.ஒற்றுமையே பலம்.அறிவார்ந்த செயற்பாடும், அரசியற் தெளிவும் , மன உறுதியுமே எம்மை வாழ்விக்கும். <<



எதற்கு இன்னொரு பிரபாகரன்?


மக்களையும் புரட்சியையும் காட்டிக்கொடுத்து எதிரியிடம் சரணடைந்து கேவலமாகப் படுகொலையாகவா?-அல்லது தனக்குப் பின்னுள்ள புலிகளது புதிய ஆளும் வர்க்கம் மக்களது செல்வத்தோடு அந்நியத் தேசங்களில் சொகுசாக வாழ்வதற்கும் அவர்களது குழந்தைகள் மேலும் அடிமைப்பட்ட தமிழ் மக்களை மேய்ப்பதற்கா இன்னொரு பிரபாகரனை அவரது அநுதாபிகள் தேடுகிறார்கள்?



முதலில் போராட்டத்தையும்,சமூக இயக்கத்தையும் புரட்சிகரமாகப் புரிந்துகொண்ட
வரலாற்றில் பிரபாகரனது பாத்திரம்குறித்து விவாதியுங்கள்.அதுவே உண்மைகளைக்
கண்டடையும் முதலாவது படி.இதிலிருந்து மீளத் தகவமைக்கும் மக்கள் திரள் மேலும்
வரலாற்றில் முன்னேறுவதற்குத் தமது தவறுகளிலிருந்து பாடங்கற்றாகவேண்டும்.

ஒரு நிறுவனத்தின் உற்பத்தித் திறன் சந்தை வாய்ப்புக் குறித்து மிக நுணுக்கமாக மதிப்பிட்ட வியூகம் அமைக்கும் அதன் வியூக வகுப்பாளர்கள் அந் நிறுவனம் தோல்வியடையும்போது மிகத்தெளிவாகத் தமது தவறுகளை மேலும் ஆய்வுக்கிட்டு அதிலிருந்து தவறுகளைக் களைந்து புதியதான தெரிவுகள்-வியூகத்தோடு அந் நிறுவனத்தை மேலும் வெற்றிக்கிட்டுச் செல்லத் தீர்மானிக்கிறார்கள்.இங்கே ஒரு சிறிய நிறுவனத்துக்கே இந்தக் கோலத்தில் செயற்படவேண்டுமெனும்பொழுது,ஒரு பெரும் இயக்கம்,பல இலட்சம் மக்களது தலைவிதியைத் தீர்மானிக்கும் போராட்டத்தைத் தோல்விக்குள் வீழ்த்தியபோது அதைக் குறித்து ஆய்வுகளைவிட்டுவிட்டு-அல்லது அதுகுறித்துப் பேசாது இன்னொரு பிரபாகரனுக்காக காத்திருப்பதன்று கருத்துக்கட்டுவது மீளவும் அதே தனிநபர் வழிபாடு,தனிநபர் சாகசத்துக்குள் நமது மக்களை வீழ்த்தும் தறிகெட்ட தறுதலைத்தனமானது.


தமிழ்ச் சமுதாயமே மிக மோசமான அறிவுவறட்சிக்குள் தள்ளப்பட்டுள்ளது.அதனிடம் சரியான உலகப் பார்வை கிடையாது.சமூகத்தை விஞ்ஞானபூர்வமாக அதனால் விளங்கமுடியுதில்லை.இன்றைய புலிகளது தலைமையின் துரோக அரசியலின் தொடர்ச்சியில் சரணடைவாக அது தமிழ்பேசும் மக்களைக் காட்டிக்கொடுத்துத் தான் படுகொலையாகிப் போயுள்ளது.இத்தலைமையை இயக்கிய சர்வதேசப் புலி ஆளும் வர்க்கங்கள் தம்மை மேலும் பலப்படுத்துவதற்குப் பிரபாகரனது அழிவையே மறுத்தபடி நமது மக்களை மேலும் காட்டிக்கொடுப்பதற்காக உலகத்தில் பற்பல வடிவங்களில் இயங்குகிறார்கள்.இவர்கள் குறித்த சரியான புரிதலின்றி கூட்டத்தோடு கோவிந்தா போடும் கயவர்கள் இன்னொரு பிரபாகரனது வரவுக்காகக் காலத்தைப் போக்குவதற்குக் கருத்து எழுதுகிறார்கள்.காரணமே இன்றிப் புலித்தலைமை சரணடையவில்லை.அது தனது மோசடியான பேரங்களுடாகவே தமது சரணடைவுக்கு முன்வந்துள்ளது.அங்கே, அந்தப் பேரம் என்னவென்பதை ஊகிக்கமுடியாதவொரு கூட்டம்,மீளவும் பிரபாகரன் அரசியலைத் தேடியலைகிறார்கள்.இது ஆரோக்கியமானதில்லை.



இலங்கையை நோக்கி அசையும் ஆசிய மூலதனத்தோடு அது நட்போடு இயங்குவதற்கான
ஒப்புதலுக்காகத் தமிழீழப் போராட்டம் கைவிடப்பட்டுத் தாம் ஒதுங்குவதென்ற ஒப்புதல்
இங்கே பெரும்பாலும் பேசப்பட்டிருக்க முடியும்.அதுவும்,போராட்டத்தில் தலைமை வகித்த
பிரபா மற்றும் தளபதிகள் இலங்கையைவிட்டு வெளியேறிக் கண்காணாத இடத்தில் காலத்தைப்
போக்குவதற்கான மனமுவந்து கோரப்பட்ட கோரிக்கையை, சதியினூடாகச் செய்ய முன்வந்த
தலைமையை நம்ப வைத்துக் குழுத்தறுத்தவர்கள் பிரபாகரனை இயக்கிய புதிய தமிழ் ஆளும்
வர்க்கமும் இலங்கை மற்றும் அவர்களது சர்வதேசக் கூட்டுமாகும்.இதைக்குறித்து நீண்ட
ஆய்வுகள் தேவையாக இருக்கிறது.


புலிகள் இதுவரை செய்த அரசியல் தவறுகளைக் கள்ள மௌனஞ் செய்து மறைத்தவர்கள் எல்லோரும் இன்றைய புலிகளின் தோல்வியிலிருந்து பேயடிச்சவர்கள்போல் பிதற்றுகிறார்கள்.புலிகளின் போராட்டம் தோல்வியைத் தழுவும் என்பதற்குப் புலிகளின் பாரிய அரசியல் தவறுகள் காரணமல்ல.மாறாக, அவர்களது வர்க்க ரீதியான உறவே காரணமாக அமைவது.இது,தமிழ் வலதுசாரியத்திலிருந்து தன்னைக் தற்காத்துக்கொள்ளும் போராட்டச் செல் நெறியோடும் "தேசிய" விடுதலையைச் செய்யமுடியுமெனும் கோசத்தோடும் இதுவரை மக்களை வேட்டையாடியது.இந்த வேட்டை பல தளங்களில் விரிந்தது.இதற்கு ஆதரவாக அன்றுமுதல் புலிகளின் எஜமானர்களே காரியமாற்றிப் பிரபாகரனை உசுப்பி விட்டவர்கள்.இன்று அவரைக் கொத்திக்கொன்று கூத்தாடுகிறார்கள்!



புலிப் பாசிசக் கோமாளிகள் செய்த "ஈழப்போராட்டம்" மக்களையும்,அவர்களது வாழ்வாதாரத்தையும் அழித்து, அவர்களை நடுத்தெருவில் விட்டதைவிட வேறென்னத்தைக் கண்டது?



புலிகள் சாரம்சத்தில் வலதுசாரியப் பாசிசச் சக்தி.



அந்நிய தேசங்களுக்கு அடியாட்படையாகத் தமிழர்களை வேட்டையாடியவொரு எதிர்ப் புரட்சிகரமான சக்தி.எனவே,அதன் பாத்திரத்தில் அது செய்ய வேண்டியதைச் செய்து,எஜமானர்களுக்கானவொரு இலங்கையைத் தகவமைத்துக்கொடுத்தபின் தனது எஜமானர்களாலேயே அழிக்கப்பட்டுவிட்டது.


இங்கே,நாம் மிகக் கவனமாக இனங்காணவேண்டியது ஒன்று உண்டு.



அது,புலிகளின் அப்பாவி அடிமட்டப் போராளிகள் அனைவரும் புலித் தலைமையின்
அந்நியச் சேவைக்கு அடியாளாகச் செயற்பட்டாலும்,இலங்கையில் நிலவிய
சிங்களவொடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தின் வாயிலாகவே அணிதிரண்டவர்கள் என்பதே.இதன்
காரணத்தால், அவர்கள் தமது குடும்பத்தவர்கள்மீது சிங்களப் பாசிச அரசும்,சிங்கள ஆளும்
வர்க்கமும் தொடுத்த இனவொடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தைச் செய்வதிலேயேதாம் தமது
தலைமையின் அந்நியச் சேவையைச் செய்தார்கள்.எனவே,புலிகளின் அடிமட்டப் போராளிகள்தாம்
தற்போது எமக்குத் தேசபக்தர்களாகிறார்கள்.


இந்த அடிமட்டப் போராளிகள் சரணடையவில்லை!


இறுதிவரைத் தலைமையின் கட்டளைக்குப்பணிந்து சிங்கள இராணுவத்தை எதிர்த்துப் போரிட்டு மரணித்தார்கள்.இவர்களது தியாகம் புலித் தலைமையிலிருந்து வேறுபட்டது.போற்றத்தக்கது-பூஜிக்கத்தக்கது.வரலாற்றில் இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்குள் தமிழ்க் குழந்தைகளது வீரம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டும்.துரோகத் தலைமைகளை நம்பித் தமது இன்னுயிரைமாய்த்த அந்தப் பாலகர்கள் எதிரியிடம் உயிர்ப்பிச்சை கேட்கவில்லை.உறுதியோடு போராடித் தமது வீரத்தை நிலைநாட்டினார்கள்.அவர்கள் தோற்கவில்லை.சிங்கள இராணுவம் அவர்களது தலைவரைக் கொத்திக்கொன்று கூத்தாட முடிகிறது.இது இப்பாலகர்களுக்கு இழுக்கானதல்ல.துரோகத்துக்குக் கிடைத்த பயனாகவே இது வரலாற்றில் பேசப்படவேண்டும்.இத் துரோகத்துக்கு அடிபணிந்த புலித்தலைமை தனக்குப் பின்னாலிருந்து இயக்கியத் தமிழ்ப் புதிய ஆளும் வர்க்கத்துக்குப் பணிந்து, தமது உயிரைச் சரணடைவினூடாகப் பலிகொடுத்து எமக்கு வரலாற்றில் படிப்பினைகளைத் தந்து போய்விட்டது.


வன்னியில் எல்லாம் முடிந்துவிட்டது.



இந்நிலையில்,வன்னி நிலைமையோ அப்பாவி மக்களையும்,அடிமட்டப் புலிகளையும் பலிகொடுத்த பலிப்பீடமாக மாறியுள்ளது!இதுவரை பிராபாகரன் செய்த அத்தனை வேள்விகளும் சேர்ந்து, இப்போது மக்களைச் சிங்களப் பாசிச இராணுவத்திடம் பெருந்தொகையாகப் பலிகொடுத்து அவர்களைச் சிங்களப் பாசிச இராணுவத்துக்கு அடிமைச் சேவகஞ் செய்யும் ஒரு அநாதைக் கூட்டமாக்கிவிட்டுள்ளது.ஒவ்வொரு இரவும் தமது உடலில் சிங்கள இராணுவத்தின் மேற்பார்வையிலேயேதாம் அவர்கள் உயிரைத் தொடர்ந்து தேக்கிவைக்க முடிகிறது.


சிங்கள இராணுவம் அனைத்து வளங்களையும் புலிகளிடமிருந்து பறித்துவிட்டது.இருக்கும் போராளிகளையும் ஒருத்தர்விடாது கொன்றுவிட்டது.அல்லது கொன்றதன்பின்புதாம் புலித்தலைமை துரோகச் சரணடைவுக்கு முன்வந்திருக்கிறது. இந்த நிலையில் "பிரபாகரன் சாவில்லை" அல்லது இன்னொரு பிரபாகரனது வரவுக்காகக் காத்திருப்பதெனும் வாதம்-கருத்துக் கடைந்தெடுத்த மோசடி.புதிய புலி ஆளும் வர்க்கத்தினது அரசியல் தெரிவுகளாகமட்டுமே இவற்றை நாம் பார்த்தாகவேண்டும்.இது மிகக் கெடுதியாக நம்மை அழித்துவிட்டு இப்போது தமது மோசடியான மாபியத்தனமான துரோக அரசியலைமறைக்க முனைகிறது.அதற்காக இன்னொரு பிரபாகரனை அது உருவாக்கக் கனவு காண்கிறது.இதுதாம் "பிச்சை வேண்டாம் நாயைப் பிடி"என்று தனக்குள் உள்ள மனிதத்தோடு பேசமுற்படும் நியாயத்தைக் கொலை செய்ய முனைகிறது.


இப்படியாக எவ்வளவோ நியாயத்தைத் "துரோகம்-துரோகி"என்று கொன்றவர்களது கோழைத்தனமான சரணடைவுத்துரோகம் இங்கே "வீரமரணமென்று" ஒருபகுதியாலும் இன்னொரு பகுதியால் "தலைவர் பாதுகாப்பாக உயிர்வாழ்வதுமாக"ச் சொல்கிறது.இந்த இரண்டு கருத்துகளுக்கும்-புனைவுக்கும் எதிராகக் குரல் கொடுத்து மனிதத்தைத் தேடுபவர்களை அது மீளவும் அனுமதிக்காது அவர்களை வேட்டையாட முனைகிறது.அதில் உள்ள கோஷ்டிகளை சயந்தனின் தளத்தில் இனங்காணமுடியும்.அல்லது அற்புதன் என்ற சதிகாரனிடமிருந்து இவற்றை இனங்காணமுடியும்.இவனே"எழுதி வைத்துக்கொள்ளுங்கள் புலிகள் வெற்றி பெறுவார்கள்"என்று பொயயு;ரைத்தவன்.மேற்குலகத்தில் வாழும் புதிய ஆளும் வர்க்கப் புலித் துரோகிகளுக்கு வால்பிடித்துண்ணும் இத்தகைய துரோகிகளை நாம் தோலுரித்து மக்களிடம் அம்பலப்படுத்தியாக வேண்டும்.



மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் இந்தக்கூட்டம்,புலம்பெயர் மக்களை ஒட்டச்
சுரண்டுவதற்காகப் "போராட்டம் புலிகளோடு" முடியாதென்கிறார்கள்.அட நாசமாப்
போவான்களே!மக்களையும் அளப்பெரிய தேசபக்த இளைஞர்களையும் உலக-இந்திய
ஏகாதிபத்தியத்துக்குக் காட்டிக்கொடுத்த இலங்கைக்கு வெளியிலுள்ள புலித் தலைமை தனது
ஈனத்தனத்துக்கு மொட்டாக்கிட அற்புதன் வகையறாக்களை மட்டுமல்ல இன்னும் எத்தனை
ஒட்டுணிகளைப் பயன்படுத்துமோ அதுவரை இந்தக் கயவர்களை அம்பலப்படுத்திப் புலிகளுக்குள்
உருவாகிய துரோகப் புதிய தமிழ் ஆளும் வர்க்கத்தை அம்பலப்படுத்தியாகவேண்டும்.
இவர்களிடமுள்ள அப்பாவி மக்களது சொத்தை வன்னியில் வதங்கும் மக்களுக்குப் பயன்படுத்தும்படி இந்தத் துரோகிகளை முற்றுகையிடணும்.இவற்றையெல்லாம் தெரிந்து வைத்துள்ள இந்தக் கயவர்களே இன்னொரு பிரபாகரன் வருகை என்றும்,தலைவர் பாதுகாப்பாக இருப்பதென்றும் கூற இன்னொரு பிரிவு தலைவருக்கு அஞ்சலிக்க முனைகிறது.இவர்கள் எல்லோருமே கூட்டுக் கொள்ளையில் ஈடுபட இங்ஙனம் பிளவுபட்டுத் தமிழ்பேசும் மக்களையும் அவர்களது குழந்தைகளையும் புலம் பெயர் மண்ணில் ஏமாற்றுகிறார்கள்.



இது முறியடிக்கப்பட வேண்டும்.



ப.வி.ஸ்ரீரங்கன்
31.05.2009

Freitag, Mai 29, 2009

மக்களது பணத்தில் புலிப்பினாமிகள் சொகுசு வீடுகளும்...

வன்னியில் பசியால் வாடும் மக்களைக் காப்பதற்கு இன்றே புலிப்பினாமிகள்-பிரமுகர்கள் வீடுகளை முற்றுகையிடுங்கள்.



க்களின் ஆன்ம விருப்பைப் புறந்தள்ளிய புலிவழித்தேசியமானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் "மக்களை"மதிக்கத் தக்க அரசியல் ஸ்த்தானத்தை வந்தடைய வாய்ப்பின்றியிருக்கத்தக்கபடி, அந்தப் புலி அமைப்புக்கு முண்டுகொடுத்தவர்கள் பலர்.இவர்கள்,இப்போது புலிகளது "பூண்டோடான அழிப்புக்கு" ஆசிய மூலதனத்தோடு ஒத்திசைவாகிப் புலித் தலைமையை நயவஞ்சகத்தின் மூலஞ் சாகடித்த வெளியுலகப் புலிப் பெரும் பணக்காரர்களைக் காத்தபடி, தமது தவறுகளைப் "பெருந்தலைவரின் வீர மரணத்தில்"மறைத்துக்கொள்ள முனையும்போது,எல்லாமே முடிந்தபின் தமது தவறுகள் குறித்து ஒப்புதால் வாக்கு மூலம் தருகிறார்கள்.இவர்கள் இன்று கூறித் தவிக்கும் "தப்புகள்"குறித்து நாம் ஏலவே பலவருடங்களாகச் சொல்லி முடித்தாச்சு.இந்த நிலையில்,நாம் இவர்களிடமிருந்து இத்தகையதை எதிர்பார்த்துக் கிடக்கவில்லை!



மாறாகப் புலிகளது தோல்விகுறித்து மிகக் கராராகவும்,அறிவியல் ரீதியாகவும் ஆய்வுகளையே கோரிக்கொண்டோம்.புலிகளது இராணுவத் தலைமையை வழிநடாத்திய புலிகளுக்குள் உருவாகிய புதிய ஆளும் வர்க்கமானது பிரபாகரனையே கொன்று, குவிக்கும் ஓரவஞ்சனையினூடாகத் தமது நலனை எட்டுவதற்கு எடுத்த முயற்சிகள் வெறுமனவே கவனிப்பாரற்றுக்கிடக்கிறது.இது, பெரும்பாலும் சமூக விரோதிகளுக்குடந்தையானவொரு சூழலை மீளவும் வற்புறுத்தி, புலம்பெயர் மக்களை மேலும் மொட்டையடிக்கும் இன்னொரு தொடர்ச்சிக்குக் காரணமாக முடியப்போகிறது.



"புலிகளுக்குப் பின்னாலுள்ள ஆளும் வர்க்கம்-ஆளும் வர்க்கம்"
என்று நாம் கூறியபோது,அது என்னவென்று கேலி பேசிய "புலிப்பொடியள்"இப்போது தலைவரது
படுகொலையை செய்வித்து,அதை மறைப்பவர்களது வீடுகளுக்குள் இதை இனங்காணலாம்.
இதைவிட்டு நாம் பேசவேண்டிய விடையத்துக்கு நேரடியாகச் செல்லுவோம்.


பிரபாகரனைப் படுகொலை செய்வித்த, புலிகளுக்குள் உருவாகிய புதிய ஆளும் வர்க்கம்,இது குறிப்பிட்ட எல்லைப் படுத்தல்களை பொருள்வயப்பட்ட குவிப்புறுதிவூக்கத்துக்குள் ஏற்படுத்திக்கொண்டு, தமிழ்ச்சமூகத்துக்குக் குறுக்காய் மக்கள் உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கத் தயாராகிறது.இது, எந்த மக்களுக்கான அடையாளத்துக்காகக் குரலெறிய முற்படுவதாகச் சொல்கிறதோ அதை உதாசீனப்படுத்துவதையே தனது அக்கறைக்குரிய முன்னெடுப்பாகச் செய்கிறது.



இங்கேதாம் நமது மரபு ரீதியான புலி இயகக் அரசியல் புரிவானதின்
இயலாமை நம்மைப் போட்டுக் குழப்பிக் கொள்வதை நாம் அநுமதிக்கிறோம்.இத்தகையவொரு
விருப்புறுதியானது நம்மால் விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்ட
"எதிர்பார்ப்புகளால்"ஆனதாகா! இது காலாகாலமாக புலிகளது அழிவு அரசியல் பண்பாட்டுத்
தகவமைப்புகளால் வார்க்கப்பட்டவொரு வடிவமாக நம்முன் வேறொரு காரணத்தைக்
கற்பிக்கும்படியும்,மீளவும் "ஈழக் கனவு" காணத்தக்கக் கலவையைத் தயார்ப்படுத்தி நமது
நோக்கத்தையே திசை திருப்புகிறது.

கடந்தகாலத்தில் புலிகளது இராணுவத் தலைமைக்கான மையக்கனவுகள் இன்று தகர்ந்து நொருங்கியபின்,புலம்பெயர் தமிழ்மக்களது குருதியில் திரட்டப்பட்ட பெரும் மூலதனம் புலிகளது பினாமிகளிடம்,இலங்கைக்கு வெளியே உலாவரும் புலிப்பிரமுகர்களிடமும் முடங்கிப் போகிறது.

"தமிழருக்கு ஈழமே தாயகம்,போராட்டம் தொடரும்,தலைவர் வருவார்,நாங்கள் இன்னும் வீச்சாகப் புலிகளது கரங்களைப் பலப்படுத்த வேண்டும்"என்ற-இத்தகைய மனவிருப்புக்களால் புலிப் பிரமுகர்கள் தப்பித்து மக்களது செல்வத்தோடு கோடிஸ்வரர்களாகக் கும்மாளம் அடிக்கிறார்கள்.இவர்களே,பிரபாகரனைக் கொன்று குவிக்க இலங்கைக்கு-உலகத்துக்கு உடந்தையாக இருந்தவர்கள்!

இதை எத்தனை பேர்கள் புரிந்துள்ளோம்?அல்லது, இன்றைய இளைய தலைமுறை இதைப் புரிந்துள்ளதா?







வன்னியில் அவதியுறும் மக்களுக்குக் காசு சேர்க்க முனையும் மனது புலிப்பினாமிகளிடம் குவிந்துள்ள செல்வத்தைக் குறித்து என்ன மதிப்பீடு வைத்திருக்கிறது?


இப்போது,இந்தத்தருணத்திலும் வன்னியில் இராணுவத் தடுப்பு முகாங்களுக்குள்
முடக்கப்பட்ட வன்னி மக்களுக்கு உதவுவதற்காக "புலியல்லாத மாற்றுக்
கருத்தாளர்கள்,புரட்சி பேசுபவர்களைக் காசு சேர்த்து வன்னியில்கொண்டுபோய்
கொடுக்கும்படி"கூச்சலிடும் புலிப்பொடிப்பசல்கள்-புலி அனுதாபிகள் இணையங்களில் ஒரு
வலம் வருகிறார்கள்.எங்கேயும் வன்னி மக்களுக்கு ஒரு நேரவுணக்கான கதையும்,அந்த
மக்களுக்கான இரங்கலுமாக இருக்கிறது.
தலைவர் உயிரோடு மக்களுக்குள் மறைந்திருந்தபோது அது(புலிகளால் செய்யப்பட்ட தடுப்பு யுத்தம்) மக்களது விடுதலைக்கான போராகவே இவர்களால் உரைக்கப்பட்ட நிலையில், தலைவரது படுகொலைக்குப் பின்னான காலத்தில் மக்களது ஒருநேரக்கஞ்சிக்கு வழிதேடுகின்றார்கள்,புலி அனுதாபிகள்.


இஃது நல்லதே.இது குறித்து எந்த விமர்சனமும் எமக்கு அவசியமில்லை!


ஆனால்,"காசு சேர்த்து-உணவுசேர்த்து" வன்னிக்குக் கப்பல்
அனுப்புவது,கொண்டுபோய்க் கொடுப்பதென்பதைக் குறித்துப் பேசுபவர்களால் இன்னொரு
முயற்சியும் நடந்தாகவேண்டும்.இது குறித்து இவர்களது புத்திக்கு இன்னும் உறைக்காத
விஷயம் ஒன்றுண்டு.அது குறித்து நாம் மிகவும் கவனமாகவே இருக்கின்றோம்."தமிழீழ
விடுதலை"ப் போர் செய்து, பல பத்தாயிரம் போராளிகளையும் அவர்களது
பெற்றோர்களையும்,முழுமொத்தத் தமிழர்களையும் நாசமாக்கியவர்களின் பின்னே, இன்னுமொரு
துரோகம் நிறைந்திருக்கிறது.உயிர்களைக் குடித்த "ஈழக் கனவு"தமிழ்பேசும் மக்களது
குருதியினால் குவிந்த செல்வங்களையும் குவித்துக் கொண்டுள்ளது.இதைத் தமதாக்கும்
முயற்சியில் தலைவரையே சாகடித்துவிட்டு மறைப்புக் கட்டுவதுதாம் இன்றைய கடைந்தெடுத்த
துரோகம்.

இத் துரோகத்தை மறைக்க"மார்க்சியம்,மார்புக் கச்சை,புரட்சி"எல்லாம் பொய்.வன்னி மக்களுக்கான மனிதாபிமான முயற்சிகள்,இலங்கை அரசை அம்பலப்படுத்துவதுதாம் முக்கியம்"என்பதும் காணக்கூடிய எதிர்வாதந்தாம்.

முப்பது வருடமாகப் புலிகளது அம்பலப்படுத்தல்கள்போய், இப்போது தனி நபர்களது அம்பலப்படுத்தலால் இலங்கையில் தன்னைத் தகவமைக்கும் ஆசிய மூலதனம் மிரண்டுவிடப் போகிறது.பாருங்கள் இதுதாம் இன்றைய புலிகளது புதிய வார்ப்பு!


ஈராக்கில் நடந்த சதாம் அழிப்பில்,
மேற்குலகத்திடமும்,அமெரிக்காவிடமும் தனது மூலதனத்தை,நலத்தைப் பறிகொடுத்த
சீனா-இருஷ்சியா போன்ற நாடுகள், இலங்கையில் மேற்குலகத்துக்கு வால்பிடித்த புலிகளது
கதையை முடித்து மேற்குலகத்தைப் பழிவாங்கும் ஆசிய மூலதனமாக இலங்கையில் தகவமைக்கும்
அரசியலானது, பற்பல தொடர் நடவடிக்கைகளை முடுக்கிவிடப்போகிறது.இதன் தெரிவில் புலிகளை
முடித்துப் புதிய கதை வரைவுக்கு இன்னொரு முன்னோட்டம் மகிந்தா குடும்பமாகும்.

இது, இப்போது இப்படியிருக்க-நாம் மக்களைக் காக்கும் நிதி பற்றிச் சிந்திப்போம்!


இலங்கைக்கு வெளியே புலம்பெயர்ந்து குடியேறிய மக்களை அச்சமூட்டிப் பெறப்பட்ட கப்பம்-நிதி என்ற போர்வையில் புலிப் பிரமுகர்களாகத் தம்மை உருவாக்கிய கயமைமிகு தமிழர்களிடம் குவிந்திருக்கிறது.இவர்கள் மக்களிடம் பெறப்பட்ட நிதிகளை அசையும்-அசையாச் சொத்துக்களாக மாற்றித் தமது உடமையாகக் குவித்துள்ளார்கள்.மக்கள் வன்னியில் ஒரு நேரவுணவுக்கு இரங்கும்போது,இவர்கள் தமது சொகுசான வாழ்வுக்காகப் புலம்பெயர்ந்த மக்களிடம் திரட்டிய நிதியோடு ஒடித்தப்பிவிடுவது நியாயமாகுமா?




இன்றைய அண்ணளவான கணப்பீட்டின்படி,இலங்கைக்கு வெளியே புலிகளால் திரட்டப்பட்ட நிதி 16 பில்லியன்கள்(மில்லியன்கள் அல்ல.1000.மில்லியன்கள் 1 பில்லியன் என்பது ஒரு குறிப்புக்காக...) டொலர் வரை புலிப் பினாமிகளிடமும்,புலிப்பிரமுகர்களிடம் தேங்கிக்கிடக்கிறது.இது,இலங்கை இரூபாயில்160 இலட்சம் கோடிகள் இரூபாயாகும்.இலட்சக்கணக்கான கோடிகளைச் சொந்தமாக்க முனையும் புலிப் புதிய ஆளும் வர்க்கத்துக்கு இவைகள் எந்தப் பொழுதிலும் சொந்தமில்லை!அங்ஙனம், ஆக்கவும் விடக்கூடாது!!

இப்பெரும் தொகையான செல்வம் இலங்கையிலுள்ள-வன்னியில் வதைபடும் மக்களுக்கு அபிவிருத்திக்காகப் பயன்படுத்தப்படவேண்டும்-அவர்களது பசிக்கு இவை உணவாக வேண்டும்.இதைத் தட்டிக்கேட்பதற்காகவும்,அச் செல்வங்களை மக்களுக்காகப் பயன்படுத்தும்படியும் புலம்பெயர் நாடுகளிலுள்ள ஒவ்வொரு புலிப்பிரமுகர்களது வீட்டு வாசலையும் முற்றுகைப் போராட்டத்தின்மூலம் திறந்தாகவேண்டும்.


செய்வது யார்?


இன்றைக்குப் புலம்பெயர் தமிழ்மக்களது குழந்தைகள் வீதிக்கு வந்து போராட முனைகிறார்கள்.எமது மக்களுக்காக இலங்கை அரசபயங்கரவாதத்துக்கு எதிராகக் குரல்கொடுத்துப் புலம்பெயர் மக்கள் தாம் வாழும் நாடுகளையே தட்டிக் கேட்டார்கள்.இது, வீரம் மிக்க செயல்.இத்தகைய இன்னொரு வீரம் மிக்க போராட்டமாகப் புலிகளது வெளியுலகப் பிரமுகர்களை முற்றுகையிடும் போராட்டம் வெடித்தாகவேண்டும்.


எமது இளையோர்களேதாம் இதையும் இப்போது நடாத்தியாகவேண்டும்.


தாமதமாகும் ஒவ்வொரு கணமும், மக்களிடமிருந்து திரட்டப்பட்ட
நிதிகளோடு கம்பி நீட்டிவிடும் கயவர்களாகப் புலிப் பிரமுகர்கள் மாறி
விடுவார்கள்.வன்னியில் வாழ்வாதார-அடிப்படை வசதிகளை இழந்து தவிக்கும் மக்களது
நல்வாழ்வுக்காகப் புலிகளிடம் திரண்டுபோய்க் கிடக்கும் அனைத்துச் செல்வங்களும்
மக்களுக்காகப் பயன்பட்டாகவேண்டும்.இது மனித நேயமுள்ள ஒவ்வொருவரும் யோசிக்கும்
விடையம்.


ஜெயலலிதாவின் தேர்தல் செலுவுக்காக கோபாலசாமி ஊடாக 500 கோடி நிதியளித்த புலிப் பினாமிகள், எமது மக்களது வயிற்றுப் பசிக்காகத் தம்மால் பயமுறுத்தித் திரட்டப்பட்ட மக்கள் பணத்தை வன்னியில் வதைபடும் மக்களுக்காகப் பயன்படுத்த நேர்மையோடு முன்வரவேண்டும்.ஆனால்,இந்த நேர்மையைப் புலிப்பினாமிகளிடமோ அல்லது புலிப் பிரமுகர்களிடமோ நாம் எதிர்பார்க்க முடியாது.இவர்கள் தமது சதியால் கொல்லப்பட்ட தமது தலைவருக்கே தண்ணிகாட்டியவர்கள்.இப்போது, வன்னியில் வதைபடும் மக்களுக்காக இரங்குவார்கள்?


ஆகவே,இளையோரே இலங்கைக்கு வெளியே புலிப்பிரமுகர்களாக வாழும் புலிகளைது இல்லங்களை முற்றுகையிடுங்கள்-முடிந்தால் அவர்களிடம் அனைத்துக் கணக்கு விபரங்களையும் பெறுங்கள்.இதை நீங்கள் வாழும் தேசங்களது சட்ட எல்லைக்குள் மிக இலகுவாக நீங்கள் செய்துவிட முடியும்.இத் தேசங்களது காவற்றுறையூடாக-இறைவரித் திணைக்கழகங்கட்கூடாகவும் இவற்றைச் செய்து முடிக்க முடியும்.மக்களது நல்வாழ்வுக்காகவே புலிகளிடம் முடங்கியுள்ள மக்களது நிதிகள் பயன்பட்டாகவேண்டும்.


இதைவிட்டுத் தனிநபர்கள் இவ்வளவு பெருந்தொகை பணத்தையும் கையாடித் தமது
குழந்தைகளுக்காகப் பயன்படுத்த முனைவது சமூகக் குற்றமாகும்.


வன்னி மக்களுக்காகத் தெருவில் இறங்கிப் பிச்சை எடுப்பது இப்போது இருக்கட்டும்!


புலிகளது வீடுகளை முற்றுகையிடுங்கள்.


திரட்டப்பட்ட நிதி,எங்கே,எவ்வகையில் மூலதனமாக மாற்றப்பட்டு இயங்குவதென்று துருவித் தேடுங்கள்.



அத்தகைய நிதியைக்கொண்டு நமது மக்களை வாழவைக்க முனையுங்கள்.


வீதிக்கிறங்கிப் போரிடும் இளையோரே!, இதுவும் உங்கள் கடமையே.


புலம் பெயர் தேசங்களில் ஒருவர் வேலை செய்து சம்பாதித்துச் செல்வத்தைத் திரட்டுவதென்பது குதிரைக்கொம்பாகும்.


தனக்குச் சொந்தமில்லாத, மக்களது பணத்தில் புலிப்பினாமிகள் சொகுசு வீடுகளும்,கார்களும் வைத்திருப்பதற்கு அனுமதிக்காதீர்கள்!


அவர்களிடம் உள்ள செல்வம் உங்களது பெற்றோர்கள் குருதி சிந்தி உழைத்த செல்வம்.விட்டுவிடாதீர்கள்.


அவர்களது துரோகம் பிரபாகரனது மரணத்தோடுமட்டும் போகட்டும்.


மக்களது செல்வத்தையும் அது சூறையாட அனுமதிக்காதீர்கள்.


இவர்களிடமுள்ள அனைத்துச் செல்வமும் புலிகளது பெயரால் மக்களிடம் தட்டிப் பறித்தெடுக்கப்பட்டதென்பதை மறக்காதீர்கள்.இனி என்ன தயக்கம்?


போராட்டத்துக்கு துணையில்லையா?


அதை உங்களது பெற்றோர்களைக்கொண்டே நிறைவு செய்யுங்கள்.
ஊரார் பணத்தில் புலிகளது பினாமிகளும்,பிரமுகர்களும் இனியும் தின்று கொழுப்பதை அனுமதிக்காதீர்கள்!!!


அங்கே-வன்னியில் பசியால் வாடும் மக்களைக் காப்பதற்கு, இன்றே புலிப்பினாமிகள்-பிரமுகர்கள் வீடுகளை முற்றுகையிடுங்கள்.இதுவே இன்றைக்கு உங்கள் முன்னுள்ள அவசியமான பணி!-மறுக்காதீர்கள்-மறந்திடாது போராடப் புறப்பிடுங்கள்-புயலாக,உங்களைத் தடுக்க எவராலும் முடியாது.ஏனெனில், உங்களிடம் நியாயமும்,உண்மையும் இருக்கிறது.


வாய்மையை வெல்லும்!வழிதொடருங்கள்-வீதிகளில் தோழமையும் பெறுவீர்கள் இளையோரே!


ப.வி.ஸ்ரீரங்கன்
29.05.2009

Sonntag, Mai 03, 2009

உண்மைகளைக் கண்டடைவது குறித்து...

நாம் நிறையக் கேள்விகளைக் கேட்டாகணும்.


நிலவுகின்ற அமைப்புக்குள்-அதனால் வழங்கப்பட்ட"சுதந்திரத்துக்குள்"வாழ்பவர்கள் அந்தச் சுதந்திரத்தை கையிலெடுப்பது அந்த அமைப்பைச் சீரழிப்பதாகவும்,அதன்மீது எல்லையற்ற தாக்குதல்களை நடாத்திக் குடிசார் உரிமைகளை இல்லாதொழிப்பதாகவும் பரவலாகப் பேசப்படுகிறது.ஆனால்,இது,எதன்பொருட்டுக் கையிலெடுப்பதென்பதை-சமுதாயத்தில் நிலவும் அமைப்புக்கு எதிரானதென்ற அர்த்தத்தில்-அது பயங்கரவாதமெனப் பூர்ச்சுவாச் சமுதாயத்தில் கருத்துக்கள் கட்டியமைக்கப்படுகிறது.நிலவும் ஒடுக்குமுறை அமைப்பை மாற்றும் சமுக முரண்பாடுகளின்வழி மேலெழும் அரசியல் அமுக்கமும் இத்தகைய நடாத்தையில் பயங்கரவாதமெனும்போது,பூர்ச்சுவா வர்க்கத்தின் பேரளவிலான ஜனநாயகத் தன்மையே வரையறுக்கப்பட்டு,மட்டுப்படுத்தப்படும் இன்றைய சூழலில், தமிழீழக் கோசங் குறித்து நீண்ட கேள்விகள் எழுகின்றன.இதன் வாயிலாக நாம் பெற்ற அரசியல் நிலை பற்றிப் பற்பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ள வரலாறு, பரிசீலனைக்கு உட்பட்டாகவேண்டும்.கோகர்ணன் இது குறித்துச் சிந்திக்கிறார்.நாம் மேலும் அதைத்தாண்டிச் செல்லவேண்டும்.


"தலைவர் வல்லவர்.

தலைவர் அனைத்தையுஞ் செய்து தமிழீழம் காண்பார்.

தலைவர் கரத்தைப் பலப்படுத்தினால் போதும்.

தலைவர் காலத்தில் தமிழீழம் கிடைக்கும்-நம்புங்கள்."

தலைவருக்கு அனைத்தையும் ஒப்புக்கொடுத்த ஒரு இனம், தனக்குள்ளேயே உள்ளக ஒடுக்குமுறையை மட்டும் "துரோகத்தின்"பெயரில் நடாத்தி முடித்தது.இத்தகையவொரு இனத்தின் சிந்தனையாளர்களில் ஒருவர் உண்மைகளைக் கண்டடைவது குறித்துத் தினக் குரலில் மறுபக்கம் வடிக்கிறார்.இதைக்கொண்டு மேலுஞ் சிலவற்றை நாம் பார்த்தாகவேண்டும்.


நமது போராட்டவாழ்வில்,கடந்த 25 ஆண்டுகளாக நமது சமுதாயம் தனது ஆற்றலை,சமூக இருப்பை,படைப்பாற்றலை,மனித வளத்தைப் பரவலாக இழந்துவிட்டது.போராட்டத்தாலான சமூகச் சிதைவு மனித சீவியத்தைத் தொலைத்துப் பூர்வீக வாழ்விடத்திலிருந்தே தமிழ்பேசும் மக்களைத் துரத்தியடித்துவிட்டுள்ளது.இயக்க-அரச ஆதிக்கத்தின் விளைவாக நிகழ்ந்த இவ் நடாத்தைகள் ஏலவே இலட்சம் முஸ்லீம்களில் ஆரம்பிக்கப்பட்டு இன்று, அந்த மக்களை விரட்டியடித்த பொதுமைப்பட்ட சமூகவுளவியலுக்குச் சொந்தக்காரர்களான தமிழ்பேசும் மக்களையுமே மெல்ல வாழ்விடங்களைவிட்டுத் துரத்தியடித்துள்ளது.தமிழீழம் என்ற அரசியல் சூதாட்டம் எத்தனை ஆயிரம் தலைகளை உருட்டியும் தனது தவறைக்குறித்து மிதப்பாகவே பதிலளிக்கிறது.இதன் பின்னாலிருந்து மீளவும் அரசியல் செய்யமுனையும் தமிழ் தேசியத்தின் போலி முகங்கள் தமது வர்க்கத்தின் நலனைப் பிரதானப்படுத்தித் தமிழ்பேசும் மக்களைக் குறித்தான எல்லாவகை நியாயங்களையும் தமிழ் தேசத்தின் விடுதலை என்ற பதத்துக்குள் விளக்க முனைகிறது.இது, கடந்தகாலத்துத் தவறுகளின் அறுவடையாக நிகழ்த்தப்படும் இன்றைய யுத்த அழிப்பைக்குறித்துப் பொத்தாம் பொதுவாகத் தீர்ப்புக் கூறுகிறது.அது, பெரும்பாலும் அரசியல் தவறென்பதை"எட்டப்பன்,துரோகி,காக்கை வன்னியன்"எனும் ஆதிக்க வர்க்கத்தின் திமிர்த்தனமான கருத்தியற் பாசிசத்துடன் மெல்லத் தமது நலன்களையும், அதுசார்ந்த அழிவு அரசியலையும் நியாயப்படுத்துவதில் மற்றவர்களைச் சொல்லித் தப்பிக்கிறது.


இதைக் குறித்துக் கேள்விகளைக் கேட்டாக வேண்டும்:

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் மொழியப்பட்ட வெறும் வாய் வீச்சுத்"தமிழீழக் கோசம்"எங்ஙனம் போராட்டத்துக்கான காரணமாக மாறியது?

இத்தகையவொரு கோசத்தக்குள் மறைந்திருந்த அரசியலின் தெரிவு என்ன?


இதை முன்னெடுத்த அரசியல் தலைமையின் பின்னால் இருந்த அரசியலின் தொடர்ச்சி எது?


தமிழீழம் என்ற கோசத்துக்கு ஏதுவான பொருளாதாரச் சூழல் தமிழ்பேசும் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த நிலப்பரப்பில் நிலவியதா-நிலவுகிறதா,இது சார்ந்த சுயநிர்ணயம் சாத்தியப்படுமா?



சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களுக்குள் தமது பொருளாதார இலக்குகளைக் கண்டடைந்தவொரு வர்க்கம் அவ்வண்ணமே சிங்கள அரச பீடத்தில் தமது சேவைத் துறைசார் அதிகாரத்தைக் கையகப்படுத்தியபடி எங்ஙனம் தமிழீழஞ் சொல்ல முனைந்தது?

இத்தகைய "தமிழீழ"க்கோசத்தை முழுமொத்தத் தமிழ்பேசும் மக்களது அபிலாசையாக்குவதில் எத்தகைய சக்திகள் உடந்தையாக இருந்தன,அவை இலங்கைக்குள் மட்டும் தமது இருப்பைக்கொண்டவையா அல்லது இலங்கைக்கு வெளியில் இருந்தும் வெளிப்பட்டவையா?

இக் கேள்விகளது அடுத்த நிலையில், சிந்தப்பட்ட குருதிக்குக் காரணமான அரசியலுக்குத் தார்மீகக் காரணம் ஏதாவது உண்டா?

அது, தமிழ் பேசும் முழுமொத்த மக்களையும் இவ்வளவு பாதிப்புக்குள் உட்படுத்தித் தனது மூர்க்கமான அழிவு யுத்தத்தைத் தமிழினது பெயராலும் அது நிலவும் நிலப்பரப்புக்கடந்தும் நடாத்துவதில் எத்தகைய அரசியல் முதன்மையுறுகிறது?


இது,தமிழ்பேசும் மக்களது விடுதலையைத் தமிழீழத்தின் திசைவழியில் வென்றுவிட முடியுமென்று ஊக்கப்படுத்திய "மாவீரர்கள்"பட்டியலின் தெரிவில் எவரது நலன்கள் முதன்மையுற்றுக் கொலைக் களத்துக்குச் சிறுவர்களைப் பிடித்தனுப்பியது?


இது, குறித்த கேள்விகளோடு,கொல்லப்பட்ட மக்களுக்கு எத்தகைய அரசியல் நடாத்தைகள் சிங்கள-தமிழ் ஆளும் வர்கத்தின் தரப்பிலிருந்து இப்போது முன்வைக்கப்படுகிறது?


இவை மிக அவசியமாகக் கேட்கப்பட்டு விடைகாணவேண்டிய மிகச் சாதாரணக் கேள்விகள்.


மக்களது இன்றைய இழி நிலைக்கு மேலும் "தமிழீழத் தாயகம்" எனும் சமூகவுளவியல் அனைத்தையும் மொழியினதும்,தேசத்தினதும் பெயரால் சமமப்படுத்தி,தலைவரது தியாகத்துக்கு முன் குறுக்கிவிடமுடியாது.

இது குறித்து,தினக்குரலில் இன்று ஞாயிற்றுக் கிழமைக்கான மறுபக்கக் கட்டுரையைக் கோகர்ணன் எழுதுகிறார்.நாம் ஏமாற்றப்பட்ட போலிக் கோசங் குறித்து மிக விரிவாகச் சிந்திக்க வேண்டிய சூழலின் ஒரு பக்கத்தை அவர் சுட்டிக்காட்டுகிறார்.தமிழ்த் தேசிய இனத்தின் இருப்பு இலங்கையில் கேள்விக்குள்ளான அரசியலில் புலிகளினது போராட்டச் செல்நெறி-அரசியற்பாதை மற்றும் அதன் பாத்திரம் குறித்து நாம் நிறையக் கேட்டாக வேண்டும்.இது,அடுத்தகட்டத்தைத் தகவமைப்பதற்கும் நமது சமுதாயத்தைத் திடகாத்திரமான சமுதாயமாக்குவதற்கும் இது அவசியமான ஆரம்பக்கட்டம்.இதை எவரும் மறுத்தொதுக்கிவிட்டுத் தமிழீழம் என மீளவும் கூட்டாகக் கோசமிடமுடியாது.


புலிகளைச் சுற்றிக்கட்டியமைத்த பிரமைகள் நீர் குமிழி போன்றதென்பதைப் புரட்சியாளர்கள் அன்றும்,இன்றும் கூறியுள்ளனர்.புலிகளது அரசியலைத் தொடர்ந்து தாங்கிப்பிடித்து,அதில் தொங்க முனைவது நம்மை ஒடுக்கும் சிங்களப் பேரினவாதத்துக்கு இன்னும் சாதகமான அரசியல் ஊக்கத்தை வழங்குவதாகவே இருக்கும்.


நாம்,எமது அரசியல் தலைமைகள் குறித்து ஆய்வுகளைச் செய்தாகவேண்டும்.

இதுள், அவர்களது அனைத்து மூலங்களையும் கண்டடையவேண்டும்.இதற்குக் கோகர்ணன் சில தரவுகளைத் தருகிறார்.அதன் அடிப்படையிலாவது நாம் நம்மைக் கண்டடையவேண்டும்.இதுவே, அடுத்தகட்டத்துக்கு நம்மைத் தயார்ப்படுத்தும் அரசியல் விவேகத்துக்கான முதற்படி.இதை மறுத்தொதுக்கும் ஒவ்வொரு பொழுதும் நாம்,நமக்கே குழி வெட்டுகிறோம்!


அந்தவகையில் கோகர்ணனின் கட்டுரையை முழுமையாக உள்வாங்கி, நமது பொய் முகங்களைத் தொலைத்து உண்மைகளைக் கண்டடையவேண்டும்.


இங்கே,தலைவர்-தேசியத் தலைவருக்குப் புகழ் மாலை போட்டது போதும்.அவர் தமிழ்பேசும் மக்களது அரசியலில் அரிச்சுவடியைக்கூடப் புரிந்துகொண்டவரல்ல.ஆதலாற்றாம் ஆதிக்க வர்க்கத்தால் ஆட்டிவைக்கப்படக் கொலை அரசியலைத் தொடர்ந்தார்.இதன் சாதகத்தைப் பலமாகக் கருதிய சிங்கள இனவாத அரசு, தமிழ்பேசும் மக்களது இருப்புக்கே இப்போது வேட்டுவைத்து வருகிறது.இதற்கான அரசியல் தெரிவைப் புலிகளதும் அவர்களது முன்னோர்களும் போட்டதாகக் கொண்டோமானால், இதை வலுப்படுத்தித் துரோக அரசியலுக்குக் களம் அமைத்த சக்திகள் எவை?

இது குறித்த ஆய்வுகள் அவசியம்.


இதன் வழி நாம் சிந்திப்போமா?

உண்மைகளைக் கண்டடைவோமா-போலித் "தமிழீழக் கோசத்தை"இலட்சம் மக்களைது சாவின்வழி புரிந்து கொள்ள நமது அகக் கதவைத் திறந்துகொள்வோமா?


கேள்விகள்.


இவையே எமக்கு அவசியமானது இப்போது.


உண்மைகளைக் கண்டடையக் கேள்விகளே அவசியம்.இதைக் கோகர்ணன் மிகவும் குறிப்புணர்த்துகிறார்.இப்படத்தைக் கிளிக் செய்து வாசித்துத்தாம் பாருங்களேன்.





ப.வி.ஸ்ரீரங்கன்.
03.05.09

மே தினவூர்வலத்தில்...

"ஈழப் பச்சை மண்ணே,
எம்மைக் கொன்றவர்கள் எல்லோரும்
கூடிக் களிக்கட்டும்!
எமது ஊர்கள்தோறும் அவர்கள் கொடிகள் பறக்கட்டும்,
கும்பிடும் ஆலயங்கள் அழிந்தே போகட்டும்
நீ,தவழ்ந்த முற்றம் உன் குருதியில் சகதியாகட்டும்
தவறுகளை நீ புரிந்து மேலெழுவாய் ஓர் நாள்!
அப்போது,
என் தடத்தில் இன்னொரு உலகம் இருப்பதையும் நீ அறிவாய்,
இழந்ததை நீ மீட்க
உனக்கென்றொரு உறவும் இருக்கக் காண்பாய்.
அது,உலகெல்லாம் விரிந்து மேவுவதையும் நீ உணர்வாய்!"



இலங்கைப் பாசிச அரசினது தமிழ் மக்கள் மீதான இனவழிப்பு யுத்தத்தை அம்பலப்படுத்திய ஒரு ஊர்வலமாகவே இவ்வருடத்துக்கான ஊர்வலம் மையங்கொண்டது.சிங்கள இனவாத அரசை அம்பலப்படுத்துவதோடு, பல்வேறு முற்போக்கு அமைப்புகளோடு விவாதமும்,விளக்கம் எம்மால் அளிக்கப்பட்டது.

இலங்கையில் சமாதானமாக வாழ்வதற்கும்,தமது வாழ்வை அடிமைத் தளையறுத்த அரசியலுடாகத் துய்ப்பதற்குமான அனைத்து உரிமையும் உடையவர் நாம் என முழங்குவதிலும் நாம் வெற்றியடைந்துள்ளோம்.சில அமைப்புகளோடு தொடர்பாடல் இருக்கின்றதெனினும்,இன்றையவூர்வலத்தில் பல்வேறு அமைப்புகளோடு,மக்கள் சமுதாயங்களோடு எமது அவல நிலை குறித்து உரையாடத்தக்கதாகவே நாம் கவனத்தைக்கொண்டோம்.


விவாதத்தில் பரவலாகப் புலிகளது பிற்போக்குத்தனமான நடாத்தைகளை அவர்கள் எம்மைவிட நன்றாகவே அறிந்திருப்பது அறியத்தக்கதாகவே இருக்கிறது.குறிப்பாக குர்த்தீஸ் மக்களிலிருந்து,இத்தாலிய மற்றும் கிரோக்க மக்களும் மிக நேர்த்தியாகப் புலிகளது அரசியல் பாத்திரத்தை விளக்கினார்கள்.ஜேர்மனிய மார்க்சிய-லெனியக் கட்சியான எம்.எல்.பீ.டி. புலிகளது பாத்திரத்தை விவாதித்துக்கொண்டு,இன்றைய எமது நிலைக்காகத் தமது கோசங்களோடு நமது மக்களுக்குச் சார்பான-யுத்தத்துக்கு எதிரான கோசங்களையும் இணைத்தார்கள்,எமது குரலூடாகவும் யுத்தத்துக்கு எதிரான குரல் வெகுஜன மட்டத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.


தமிழ்பேசும் மக்களது இதுநாள் வரையான அழிப்பு யுத்தத்துக்கெதிரான ஆர்ப்பாட்டவூர்வலங்கள் ஜேர்மனிய ஊடகளால்மட்டுமல்ல அரசியல் ரீதியாகவும் கவனிப்புக்குள்ளாகிறது.


இதன் முழு உழைப்பும் இன்றைய இளைய தலைமுறைக்கே போய்ச் சேர்ந்தாகவேண்டும்.


மிகவும் அளப்பெரிய உறுதியோடு அவர்கள் குரல் கொடுக்கின்றார்கள்.ஆனால்,இவர்களது குரல் முற்போக்கு அமைப்புகளிடம் இன்று எடுத்துரைக்கப்பட்டதன் விளைவாகவேதாம் தொழிற்சங்கத் தலைவர்கள் முதல் அமைப்புகள்வரை எமக்காவும் தமது உரையில் குறிப்புணர்த்திச் செல்லுந் தருணம் உருவாகிறது.


எத்தனை ஊர்வலங்களையும் நடாத்திமுடிக்கலாம்.


எனினும்,அவை சரியான தெரிவோடு முற்போக்கான அமைப்புகளின் துணையோடு முன்னெடுக்கப்படும் பட்சத்தில்,அதன் தாக்கம் பரவலாகிறது.ஜேர்மனிய நகரமான டுசுல்டோர்ப்பில்(Düsseldorf)மே,1. நடைபெற்ற மேதினவூர்வலத்தில் பல்வேறு அமைப்புகள்,தொழிற்சங்கங்கள்-கட்சிகளெனக்கூடிய ஊர்வலச் சூழலில் தமிழ்பேசும் மக்களும் புலிகளது பதாதைகளின்பின்னே அணி திரண்டனர்.


புலிக்கொடியும்,தேசியத்தலைவர் பிரபாகரனென எழுதப்பட்ட அவரது நிழற்படங்களும் கைகளில் ஏந்திக்கொண்ட நமது மக்களுக்கு பல்வேறு சந்தர்ப்பங்கள் இருந்தது முற்போக்கு அமைப்புகளுடன் விவாதங்கள் செய்து,நம் மக்கள்மீதான இனவழிப்புக்கெதிரான குரல்களை முற்போக்கு அமைப்புகளோடு இணைப்பதற்கு.பெரியவர்கள் எல்லோருமே தமக்குள் முடங்கிக்கிடந்தபடி,குழந்கைள் மூலமாக நோட்டீசுகளை அவர்களிடம் வழங்கியதைத்தவிர வேறெதையும் செய்யவில்லை.நாம்,எம்மால் முடிந்தவரை அமைப்புகளோடு விவாதித்து,அவர்களது ஒலிபெருக்கியில்(Verschiedene Beiträge gingen über das offene Mikro der MLPD bei der Demo: die Mobilisierung zur Demonstration am 16.5. nach Berlin; die Schaffung einer internationalen Arbeitereinheit bis hin zu Protesten gegen den Völkermord in Sri Lanka an den Tamilen. )எமது குரலையும் இணைப்பதற்கு வழிகள் செய்தோம்-விவாதித்தோம்,ஒலிபரப்புஞ் செய்தோம்.இளையோர் அமைப்புகள் பெயரில் புலிகள் போட்ட துண்டுப் பிரசுரங்களையும் இளைஞர்களிடமிருந்துவேண்டி, முற்போக்கு அமைப்புகளிடம் கொடுத்து எமது அவலத்தைப் பகிர்ந்து விவாதத்தை ஆரம்பித்தோம்.


மேதினத்துக்கான இந்த நிகழ்வகளின் பின்னே பாரிய மக்கட்டொகைக்குள் எமது மக்களின் அவலம் குறித்து,டி.ஜீ.பி.(D.G.B)தொழிற்சங்கத்தினது மாநில தொழிற்சங்கத் தலைவர் கிளவுஸ் றொய்ரர்(Klaus Reuter) எமது மக்களது அவல நிலையும்,அதற்காக ஜேர்மனியில் வாழும் தமிழ்பேசும் மக்களது இடைவிடாத ஆர்பாட்வூர்வலம்-உண்ணாவிரதம்,மாநில சட்டமன்றங்களுக்கு முன்னால் இரவுபகல்பார்க்காத அவர்களது ஆர்பாட்டங்கள் குறித்து நீண்டவொரு கவனத்தைக் குவித்த கருத்துக்களைச் சொன்னார்.ஜேர்மனிய அரசு ஐரோப்பியக் கூட்டமைப்போடு ஆலோசித்து இப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வு குறித்து-யுத்த நிறுத்தங்குறித்து அழுத்தங்கொடுக்கத் தாம் உதுவுவதாகவுஞ் சொன்னார்.அவர் செய்கிறாரோ இல்லையோ ஆனால்,அவரது குரலின் மூலம் நமது மக்கள்மீதான இலங்கை அரசினது இனவழிப்பு அரசியல் பலமாக அம்பலப்பட்டு அங்கிருந்த பற்பல அமைப்புகளும் தமது ஆதரவைத் தமிழ்பேசும் மக்களுக்காகத் தெரிவித்தனர் என்பது பாரிய வெற்றி.




எம் குழந்தைகளது மிகத் துணிந்த ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னே-முன்னே புலிகள் இருப்பினும் இளைஞர்களது மிகவும் போற்றப்படவேண்டிய மனவலிமையே இதன் சாதகமான வெகுனத் தன்மைக்குக் காரணமாகும்.அவர்கள் சரியான வழிகாட்டலின்றிப் புலிகளால் நடாத்தப்படுகிறார்கள்.அவர்களுக்கு முற்போக்கு அமைப்புகள் குறித்த சரியான தெரிவில்லை.போராட்டத்தின் வெற்றிகள் சரியான பாதைகளின்வழி வெற்றியை அடைகின்றன.இதைப் புரிவதற்கு நம்மை முன்நகர்த்திப் பின்னால் இருப்பவர்களைச் சரியாக விளங்கிக்கொண்டாக வேண்டும்.அவர்கள் தமது பழையபாணி அரசியல் நடாத்தைகளையே மீளவும் கடைப்பிடிப்பவர்களாகவே இருக்கின்றார்கள்.இதிலிருந்து அவர்கள் மீளவும் முடியாது.இந்த அரசியல் நடாத்தைகளைத் தீர்மானிக்கும் வர்க்க நலன் தமிழ் மேட்டுக்குடிகளின்-அவர்களது மூலதனத்தோடு சம்பந்தப்பட்டது.இதைக்கடந்தவொரு ஆர்ப்பாட்டவூர்வலங்களை அவர்கள் அனுமதிப்பதில்லை என்பதற்கு,அவர்கள் முற்போக்குச் சக்திகளை நெருங்க மறுத்துக்கிடந்தபோது நாம் மிகத் தெளிவாகவே இதை உணர்கிறோம்.எமது பகிரங்கமான குரலை முற்போக்குச் சக்திகளிடமிருந்து கேட்டதன் பின்னே இளைஞர்கள் மூலம் துண்டுப் பிரசுரங்களை மட்டும் முற்போக்குச் சக்திகளின் கைகளில் திணித்தார்கள் இளைஞர்கள்.


நாம் நமது அரசியல் நடாத்தையைக் கேள்விக்கு உட்படுத்தாமால் நமது விலங்கை ஒடித்துவிட முடியாது!


இன்றைய நிலையில்,
வர்க்கங்களாகப் பிளவுப்பட்டுள்ள மக்கள் சமுதாயத்தில்
வர்க்க அரசியலே அனைத்தையும் தீர்மானிக்கிறது!


தமிழ் மேட்டுக்குடியின் வர்க்க நலன்சார்ந்த புலிகள்வழித் "தமிழீழப்போராட்டம்" தமிழ்பேசும் மக்களை இலட்சக்கணக்காகக் கொன்றுகுவித்து,அவர்களது சமூக சீவியத்தையே சிதைத்துவிட்டது.இன்று, அகதிகளாகவும்,இலங்கைப் பாசிச இராணுவத்தின் மனோவியல் யுத்தத்துக்குள் அள்ளுண்டுபோயும், திறந்தவெழிச் சிறைச் சாலைகளுக்குள்ளேயேதாம் நமது மக்களது வாழ்வும்-சாவும் நிகழ்கிறது.

இஃது, எதன்பொருட்டு நிகழ்ந்ததென்பதைக்குறித்துச் சரியான தெரிவற்ற புலம்பெயர் இளைஞர் சமுதாயம், வெற்றிகரமாக அரசியலை முன்னெடுக்க முடியாது.


இந்தச் சூழலிலும்,"புலிகளை விட்டுவிடுங்கள்"என்ற மிகவும் அபாயகரமான சந்தர்ப்பவாத அரசியலை முன்தள்ளி, முற்போக்குச் சக்திகள் நித்திரை செய்வதாகப் புலுடாவிடும் ஒரு கூட்டத்துக்கு எத்தனை முற்போக்குப் போராளிகளை,ஸ்தாபன ஆற்றலுடைய அறிவாளிகளைப்-போராளிகளை அவர்களது அமைப்புகளைப் புலிகளும் இந்திய ரோவுஞ் சேர்ந்து வேட்டையாடினார்கள் என்பது கணக்கிற்குவராத கள்ளப் பணமாகவே மறைக்கப்படுகிறது என்பது பற்றி அக்கறையில்லை!இலங்கையில் சிங்கள அரசானது தனது வர்க்க நலனுக்கிசைவாக எத்தனை ஆயிரம் சிங்கள முற்போக்குச் சிந்தனையாளர்களை கொன்று களனியாற்றில் போட்டதென்பதும் வரலாற்றில் மறைக்கப்படுகிறது.

இதையெல்லாம் மறைத்தபடி "செய்யவேண்டிய நேரத்தில் செய்யாது நித்திரை கொண்டதனாற்றாம்"புலிகள் போராட்டத்தைக் கையகப்படுத்தியாதாகக் கள்ளர்கள் கதைவிடுவது யாரைக் காப்பதற்கு?இதையெல்லாம் புலம் பெயர் இளைஞர்கள் புரிந்துகொள்ளும்போது நிச்சியம் அதிகாரவர்க்கத்தின் ஆணவம் சிதையும்.இதை நாம் வரலாற்றுக்குமுன் எழுதி வைப்போம்.


இப்போது,இலங்கை அரசு சர்வதேச மட்டத்தில் தொடர்ந்து அம்பலப்பட்டு வருவதென்பது உண்மை.என்றபோதும்,அதன் இன்றைய கொடூரமான இராணுவவாத அரச தன்மையை இதுவரை எவரும் கேள்விக்குட்படுத்தவில்லை.இலங்கை அரசிடம் மன்றாடுவது என்றவரையே மேற்குலகங்களின் அரசியல் போக்கு நிலவுவதென்பது அவர்களது பொருளாதார வியூகங்களது போக்கிலிருந்தே உருவாகிறது.இதுதாம் வர்க்க நலன்.இதைமீறி அவர்களாற் செயற்பட முடியாது.எனவே,இதைத்தவிர்த்து நாம் முற்போக்குச் சக்திகளை நாடி அரசியல் உறவுகளை வலுப்படுத்தவேண்டும்.இந்த "முற்போக்குச் சக்திகள் யாரூ"என்றுகூட இந்தப் புலுடாக் கோஷ்டி கேட்டாலும் கேட்கும்.ஏனெனில்,இவர்களே எமது மக்களைக் கொல்லும் அரசியலுக்கு வலுச் சேர்த்தவர்கள்.இதன் அழிவு அரசியலை வெறும் வார்த்தைகளால் தட்டிக்கழித்துவிட்டு மீளவும்"தமீழீழஞ்"சொல்லித் திரிகிறார்களே,இவர்களை இனிமேலும் நம்பினால் அவர்களில் சிலர் பெருமூலதனவாதிகளாக மாறமுடியுமேயொழிய மக்கள் விடுதலையடைய முடியாது.இதைப் பரிவதற்கு நமக்குத் தமிழீழக் கனவு முட்டுக்கட்டையாக இருக்கிறதா?அப்படியானால் வரலாற்றைத் திரும்பிப் பாருங்கள், கடந்த கால் நூற்றாண்டுப் புலிகளது போராட்டத்தில் "நாம் பெற்றுது என்ன-இழந்தது என்ன?"என்பது குறித்து.


இத்தோடு இதையும் பாருங்கள்,மேற்குலக அரசுகளைக் கடந்து,முற்போக்கு அமைப்புகளிடமும்,அவர்களின் ஊடகங்களிலும் பரவலாக எமது பிரச்சனை-அவலம் மற்றும் இலங்கையினது இனவழிப்பு அரசியல் குறித்து கடுமையான விமர்சனங்கள் பதியப்படுகிறது.வாரத்தில் நான்கு கட்டரைகளையாவது ஜேர்மனிய இடதுசாரிய இதழான யுங்கவேர்ல்ட் எழுதுகிறது.அது,எழுதுவதோடு நிறுத்தாமல் அரசியல் மட்டத்தில்,பல்கலைக்கழகமட்டத்திலும் எமது பிரச்சனைகளைக் கவனப்படுத்துகிறது.இது,முற்போக்குச் சக்திகளது பணியிலிருந்தே தொடர்கிறது.இளைஞவர்கள் ஒன்றை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.அதாவது, உலகு தழுவிய சமாதானத்துக்காக ஆய்வுகளை மேற்கொள்ளும் அறிவுசார் மட்டங்கள்-பல்கலைக்கழகங்கள்கூட முற்போக்குச் சிந்தனைவழி சிந்தித்து எழுதப்பட்ட கட்டுரைகளையேதாம் தமது ஆய்வுக்குப் பெரும்பாலும் பயன் படுத்துகின்றன.இதை இங்கே சென்று பாருங்கள்.இத்தகைய தருணத்தில்தாம் வர்க்க அரசியலைக் கேள்விக்குட்படுத்திப் புலிகளது வரலாற்றுப்பாத்திரத்தையும் அதன் வர்க்கத் தளத்தையும் புரிந்தாகவேண்டும்.


வரலாற்றில் வெற்றியடைந்த புரட்சிகள் யாவும் வர்க்கங்களுக்கிடையிலான போராட்டங்கள்தாம்.ஒடுக்கும் வர்க்கத்துக்கும், ஒடுக்கப்படும் வர்க்கமான உழைக்கும் வர்க்கத்துக்கும் இடையில் நடாத்தப்படும் யுத்தம்தாம் இவைகள்!


ஒருகட்டத்தில் மக்கள் இனங்களாகவும்-மொழிவாரியாகவும்,மதவாரியாகவும் பொருளாதார ஆர்வங்களுக்காகக் கூறுபடும்போது, அத்தகைய முகமூடிகளுக்குள் ஒளிந்துள்ள மேட்டுக்குடிகள்(ஓடுக்குபவர்கள்) தமக்குள் நடந்தேறும் அதிகாரத்துக்கான பங்குச் சண்டையில், இனத்தை,மதத்தை,மொழியை முதன்மைப்படுத்திப் போராட்டத்துக்குப் போராளிகளை அப்பாவி மக்களிடமிருந்து தட்டிப் பறித்தெடுக்கின்றார்கள். இதன் தர்க்கால நடாத்தையைப் புலிகளது போராட்டத்தில் குழந்தைகளைப் பறிகொடுத்த குடும்பங்கள் மிக நன்றாகவே அறியும்-புலம் பெயர்ந்த தமிழர்களைவிட(இங்கே,இவற்றை இலங்கை அரசிடம் சரணடைந்த புலிகளது ஊடகத்தலைவர் தயா மாஸ்டர் வாயிலாக அறியமுடியும்.அவர் கூறுவதற்கு முன்பே தமிழ்பேசும் மக்கள் அறிவார்கள்.எனினும்,தமக்கு ஆபத்து வரும்போது ஒடுக்குமுறையாளர்களும் சில வேளை உண்மைகளைச் சொல்லித் தமது தவறுகளை இன்னொருவனிடம் சுமையாக்குவது வழமை.தயாவும் அதையே செய்கிறார்).


உழைப்பவர்களே!,
இனம்,மொழி,மதங்கடந்து ஒன்றுபடுவதில்
நீங்கள் இழப்பது என்ன?இவைகளைக் கட்டிப்பிடித்துக்
கிடக்கும்போது பெற்றவைகள் என்ன?


சிந்திக்க வேண்டும்!


இந்தியத் தேசியம் பேசும் மேட்டுக்குடிகளுக்கு
தேசத்தின் வீதியோரத்தில் பழையபேப்பர் பொறுக்கி
வயிறு வளர்ப்பவர் பற்றி அக்கறையில்லை,
நடுவீதியில் அநாதையாக வான்பார்த்துறுங்கும் மாடுகளுக்கும்
இந்த மனிதர்க்கும் வித்தியாசம் அவர்களிடம் இல்லை.
எனினும்,
நாம் இந்தியர்கள் என்பதனூடாக
இவர்களை மலம் அள்ளுவதற்காகவது பயன்படுத்த முடியுமாவென
அவர்கள் தமது கழிவுகளை உழைப்பவர்கள்மீது கொட்டுகிறார்கள்!


ஆம்,
நாம் கடக்கவேண்டிய தூரம் மிக நீண்டது.



ப.வி.ஸ்ரீரங்கன்
03.05.2009

Freitag, Mai 01, 2009

தமிழ் சிங்கள முற்போக்கு புத்திஜீவிகள் சாதித்தது ...

>>>சிறிரங்கன்!புலிகளை விட்டுவிடுங்கள். இலங்கையில் 1948 முதல் 2008 வரையில் தமிழ் சிங்கள முற்போக்கு புத்திஜீவிகள் சாதித்தது என்ன? புலிகள் சரிவரப் பலம் கொண்டது 1985க்குப்பின்னரே. அதற்கு முன்னர் இலங்கை மக்களிடம் இந்த தெளிவினைப் புரிய வைக்காதது யார் தவறு? ஏன் புரிய வைக்க முடியவில்லை?<<<

- மலைநாடான்



பெரும்பாலும் ஈழத்தமிழ் மக்கள்தம் சமூக அறிவு மிக மட்டரமாக இருப்பதற்கான திசை வழியில் சென்ற புலிகளது போராட்டச் செல்நெறி,இன்று எமது எமக்களது தலையில் மீளவும் மிளகாய் அரைப்பதான கேள்வியோடு திரு.மலைநாடன் மேலே "புலிகளை விட்டுவிடுங்கள்" என்று முற்போக்குச் சக்திகளது சாதனைகளைக் கேட்கிறார்.

நல்லது மலைநாடான்.

கேள்விகள் அவசியமானது.

அறிவினது முதற்கட்டம்-ஆரம்பமே அதன் சாத்தியத்தால் எழுந்தது-இல்லையா?

ஆக-நாம் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டோம்!

அச்சமில்லை-நிச்சியம் வெல்வோம்!!

இனிமுதற்கொண்டு, இக் கேள்விகளைப் புலிகள்மீதும் கேட்டாக வேண்டும்.ஆனால்,மிக வசதியாகப் "புலிகளை விட்டுவிடுவோம்"எனும் சந்தர்ப்பவாதமே மீளவும் நம்மை நடாற்றிலிருந்து காப்பதற்கான வழிகளை அடைக்கிறது.இதுதாம் ஆபத்தின் அறி குறி.

மலைநாடன்,கொஞ்சம் கவனமாகச் சிலவற்றைக் கேட்போமா?

மனித சமுதயத்தில் ஒரு நடாத்தை எங்ஙனம்"சரி-பிழை"எனக் கணிக்கப்படுகிறது?

அக்கணிப்பினது தர்க்கம் அநுபவவழியினது தேர்விலேதாம் கருக்கொள்கிறதா?
"தேன் இனிப்பா?-அப்போது இனிப்பெல்லாம் தேனாக இருக்கணுமே?-அங்ஙனம் ஏன் ஆவதில்லை?"

இதை- புலிகள் விடுதலைப் படையென்றால்-விடுதலைப்படைகள் எல்லாம் புலியாகுமா?-இல்லை அல்லவா?ஆனால்,புலிகளுக்கு விடுதலைப்படைகளெல்லாம் புலிகளாகத்தாம் இருக்க வேண்டுமாம்.எனவே,தம்மை அல்லாத அனைத்தும் துரோகம் என்று துப்பாக்கி மொழியில் நமது மக்களுக்குப் பாடஞ் சொன்னார்கள்.அந்த வழியில் நீங்களும் செல்லாது இப்போது முற்போக்குச் சக்திகள் என்று ஒன்றிருப்பதாகவும்,அதன் சாதனைகளை அறிவதில் ஆவலாக இருப்பதும் உங்களது கேள்வியினதுவழி அறியத்தக்கதில் மகிழ்ச்சியே!

இப்போது,புலிகளை எங்ஙனம் விட்டுவிடவேண்டும்?அவர்கள் தொகையாகச் சேர்த்த நிதிகளோடு பெரும் கோடிஸ்வரர்களாக மேற்குலத்தில் வியாபாரந் தொடங்கித் தமிழீழம் மேலுஞ் சொல்லவா?


தமிழீழப் போராட்டத்தில் இலட்சம் மக்களை அழித்தவொரு திசைவழியை கேள்விக்குட்படுத்தாது விட்டுவிட்டு,முற்போக்குச் சக்திகளது சாதனையை அறிவதில் அவசரப்படுவதன் புள்ளி என்னைத்தைச் சொல்ல முனைகிறதென்பதைத் தீர்மானகரமான முற்போக்குச் சக்திகள் குறித்த பார்வையினூடாக மலைநாடன் வழியாக நம்மை எதிர்கொள்ளும் பொதுப் புத்தியைப் புரட்டிப்போடுவது அவசியம்தாம்.தொடர்வோம்.


முதலில் முற்போக்குச் சக்திகள் தமிழீழம் கேட்க வில்லை.

ஏன்?

அது அதிகார வர்க்கங்களது அபிலாசை.

அதிகாரப் பங்கீட்டுக்கான அழிவு அரசியலென்பதை வர்க்கச் சமுதாயத்தில் வர்க்க அரசியலை அடிப்படையாகக்கொண்ட சிந்தனையின்-சித்தாந்தத்தின் வழி, இக் கோரிக்கை(தமிழீழம்)பரந்தபட்ட தமிழ் மக்களுக்கானது அல்ல என்பதும்,அது அவர்களை ஒடுக்கும் சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு மாறாகத் தமிழ் பேசுகிற இன்னொரு ஒடுக்குமுறை வர்க்கத்தினது கோரிக்கையானதென்பதும்,இதனூடாகத் தமிழ்ச் சமுதாயம் இன்று வந்தடையும் நிலையை ஏலவே கணித்ததன்வழி புலிப்பாணி தமிழீழப் போராட்டஞ் செய்யவில்லை!-இது சாதனையே!

இதுவொரு மகத்தான சாதானை!
ஏனெனில்-
1):முற்போக்குச் சக்திகள் என்ற முற்போக்குச் சிந்தனை இலட்சம் மக்களைக் கொல்லவில்லை.

2):தமிழ்பேசும் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்த நிலப்பரப்புகளிலிருந்து அனைத்தையும் இழந்து(...)அகதிகளாக்கப்படவில்லை.

இது,ஒரு வரலாற்றுச் சாதனை.

ஆனால்,இந்த முற்போக்குச் சக்திகளை தமிழீழம் கேட்ட தமிழ் ஆளும் வர்க்கம் தமது எஜமானர்களோடிணைந்து புலிகளெனும் ஒரு அடியாட்படையைக் கட்டி,அதன் துணையோடு தேடித் தேடி அழிக்கின்றார்கள்.வரலாற்றுக் கணிப்பின்படி 1985 ஐக் கடந்து 1948 என்று மலைநாடன் சுட்டியதை அண்மித்தால் இலங்கையினது வர்க்கச் சமுதாயத்தில் மிக முற்போக்கான பணிகளை என்.சண்முகதாசன் என்ற சண் தலைமையில் தாழ்தப்பட்ட தமிழ்பேசும் மக்கள் மத்தியில் ஆற்றப்படுகிறது.

இலங்கையின் ஆளும் வர்க்கம்,தனது வர்க்க நலனின் அடிப்படையில் முற்போக்குச் சக்திகளை பல பத்தாயிரக்கணக்காக இருதடைவைகள் இராணுவ முன்னெடுப்புகளின்வழி அழிக்கிறது.இலங்கை ஆளும் வர்க்கத்தின் தேர்வுக்கு இந்திய ஆளும் வர்க்கமும் துணையாகியதும் வரலாறு.

இதை விளக்குவது அவசியமில்லை.

முதலாளிய வர்க்கத்திடம் வந்து சேர்ந்து உற்பத்திச் சக்திகளை அது மிக நேர்த்தியாகக் காப்பதற்கும் அதனூடான அனைத்து உறவுகளையும் அது தனது கண்காணிப்பின் கீழ் கொணர்கிறது.முதலாளித்துவ உற்பத்திப் பொறிமுறை என்பது இன்றைய பொருளாதார அடிப்படையாக இருப்பதால் அதைக் காப்பதற்காக,மேல்மட்டப் பாதுகாப்புக் கவசம் தேவையாகிறது.

அந்த அத்திவாரத்தின்மீது கட்டப்பட்ட சுவருகள்,கூரை என்பவையாகப் பாதுகாக்க வருகிறது கருத்தியல் கட்டுமானங்கள்.

இதுள், வன்முறை சார்ந்து நீதிமன்றத்தின் தலைமையில் இராணுவ-பொலிஸ் ஜந்திரங்கள் நிறுவப்பட்டுச் சிறைச்சாலைகள் உருவாகிறது.

வன்முறையற்ற கருத்தியலது பாத்திரத்தில் நாம் கற்கக் கல்வியும் முதலாளியத்தின் மேன்மை சொல்ல, மெல்லப்"பலனை எதிர்பார்க்காது கடமையைச் செய்"என மதங்களும் வந்துவிடுகிறது.

அது, "முற்பிறப்பில் செய்த வினை இப்பிறப்பு அவஸ்த்தையென" முதலாளிகளால் ஓடுக்குமுறைக்குள்ளாகும் மக்களைப்பார்த்துச் சொல்லியபடி, முதலாளிகள் நலமாக வாழ்வதை-அவர்கள் "முற்பிறப்பில் செய்த நன்மை" எனவும் கூற வன்முறையில்லாமலும் நமது மூளையை முதலாளிகளுக்குத் தார வார்த்த இந்த வர்க்கச் சமுதாயத்தில், பற்பல முடிச்சுகளை அவிழ்க்க வேண்டிய பணி முற்போக்குச் சக்திகளுக்கு இருக்க,அவர்களும் அதைச் செய்துவரும்போது இடையினில் வருகிறது இன்னொரு பூதம் புலிவடிவில்-இலங்கை மக்கள் மத்தியில்-அதாவது உழைப்பவர் மத்தியில் என்று கொள்வதில் சிரமம் இல்லைத்தானே?

இந்தப் பூதம்...

மலைநாடன் இதைத் தொடர்கட்டுரையாக எழுதிக்கொள்வோம்,இப்போது நித்திரைக்குப் போவோம்.

ப.வி.ஸ்ரீரங்கன்
01.05.2009