Donnerstag, März 15, 2012

சனல் 4: ஆவண விவரணமும்,மறைக்கப்படும்அரசியலும்-என்ன?

சனல் 4: ஆவண விவரணமும்,மறைக்கப்படும்அரசியலும்-என்ன?


லங்கையைவிட்டுப் புலம் பெயர்ந்து மேற்குலகில் வாழும்நாம் யார்?, தமிழர்கள்?, போதுமா இந்த அடையாளம்-" புலிகளுக்குப் பின்னால் கோசம் போடுவதுகூட எமது மக்களுக்கானதாகாதா?" - கேட்பீர்கள்!

அப்போ, நிறுவனங்களின்,இயக்கங்களின்,அரசுகளின் அடிமைகளா?

அல்லது, நம்மைப் புரிந்துகொண்டு நமது விடுதலைக்குகந்த கல்வியின்,கேள்வியின்மூலம் நம்மை வளர்த்தெடுத்து ,இத்தகைய நிறுவனங்களுக்கெதிராகப் போராடப் போகின்றோமா?

இவை கேள்விகள்.ஆனால், நாம் சிந்தித்துச் செயற்படும் காலமே நமது விழிகள்முன் நிழலாடுகிறது.

சனல்4 மிக நேர்த்தியாகப் போர் குற்றத்தைக் குறித்தான அனைத்து வழிகளிலும் சேகரிக்கப்பட்ட தரவுகளை நமக்குமுன் கொட்டியுள்ளது.அப்பாவி மக்களது துயருள் சம்பந்தப்பட்ட இரண்டு இராணுவ ஜந்திரங்களுக்கிடையிலான பலப்பரீட்சையில் தோற்கடிக்கப்பட்ட தமிழ்ப் பாசிச இராணுவமானது சிங்கள இராணுவ ஜந்திரத்தால் நிர்மூலஞ்செய்யப்பட்டபோது,சிங்கள இராணுவமானது ஜனநாயகப் படுகொலையைச் செய்துள்ளது.சுமார் 60 ஆண்டுகால அரச நிர்வாகக் கட்டமைப்புடைய இலங்கைப் பாராளுமன்றச் சட்டவாதிக்கமானது இவற்றைத் திட்டமிட்டு நியாயப்படுத்தும் சந்தர்ப்பத்தில் சனல் 4 ஆவணப்படமாக இலங்கைப் படுகொலைக் களத்தையும் மீள,மீளக் கொணர்கிறது!


வழமைபோலவே,புலி அநுதாபிகளுக்கு இது ஏற்புடையதாக இருக்கவில்லை!தமது மதிப்புமிக்க சேனைத் தலைவரது மூளையைக் குடைந்து பரிசீலிக்கும் சிங்கள வன்கொடுமை இராணுவத்தின் திமிரை உள்வாங்குவதில் அவர்களுக்கு மனத்தளவில் பல தடைகள் இருக்க முடியும்.அதுவும்,அவமானமாகவும் இருப்பதற்கானவொரு புள்ளியில் பிரபாகரனது பிணத்தை அவர்கள் அம்மணமாக்கியும் வைத்திருக்கிறார்கள்.இது,சிங்கள வரலாற்று மனவியல்புக்கொப்ப நிகழ்ந்தவொரு பாசிசச் சேட்டையாகவே இருக்கிறது."கனக விஜயனின் முடித் தலை நெரித்துக் கல்லினை வைத்தான் சேர மகன்" என்றும்,"அநுராதபுரத்துள் சிங்களத்து உச்சி பிளந்து எல்லாளனைக் காட்டினேன்"என்றும் தமிழ்த் தரப்பு வீரம் பேசியது. இது மாற்றுச் சமுதாயத்தோடு இசைந்து வாழத் தகமையற்ற உச்சாடனங்களாகவே மேலும் விரிந்துகொண்டன. இத்தகைய உச்சாடனங்களுக்குப் பின்னால் நிகழ்ந்த ஊக்கமானது உயர்தட்டு வர்க்கத்தின் அதிகாரப் போட்டிக்கேற்க மக்களைத் தயார்ப்படுத்தும் மிகக் குறுகிய நலன்களைக் கொண்டியங்கிக் கொள்கிறது. இது,புலிகளது கடந்தகால ஆயுதப்போராட்டத்திலும் கணிசமாகவே இனங்காணத் தக்கதாகவிருந்தது!புலம் பெயர் மக்களிடத்திலும் இது தொடர்கதையாகவேண்டுமா?

புலிகள் தோற்றுக்கொண்டிருந்தபோது,அது சொந்த மக்களுக்குச் சவக்குழிவெட்டி ஓய்ந்தபோனவொரு அராஜகக் குழுவாக மங்கிக்கொண்டிருந்ததை வரலாற்றின் வெளிச்சத்தில் உரசிப்பார்த்தால் தெளிவு பெறலாம்.இந்தச் சனல் 4 வெளிப்படுத்தும் ஆவணப்படங்கள், காட்சிகள் அனைத்தும் ஏலவே நாம் பார்த்தவை.எனினும்,அதையிட்டுப் புலிவிசுவாசிகள் நம்பத் தயாரில்லாதிருந்தார்கள்.எனவே,தமது சரிவுகளை நியாயப்படுத்தும் முகமாகப் புலிகளது பேரவாவாகப் புலிகளின் தலைவனை உயிருடன் காத்துப் பதுக்கி வைத்திருப்பதாகவும்,அத்தகைய படங்கள் போலியானவையென்றும்கூறி இலங்கைப் பாசிச அரசின் படுகொலை அரசியலை வெளியுலகில் நியாயப்படுத்தும் காரியத்தில் அறிந்தே செயற்பட்டனர்.

இப்போதைய இந்த ஆவணப்படமானது இலங்கையில் இனவழிப்பு நிகழ்ந்துள்ளதென்பதைச் சொல்லாமற் சொல்கிறது. அதுள்,சரணடைவுகொண்ட புலித் தலைமை யுத்த விழுமியங்கட்கு அப்பால் படுகொலை செய்யப்பட்டுக் கடலில் வீசி எறியப்பட்ட மிகப் பிற்போக்குச் செயலையும் கண்டிப்பதில் மக்களைக் கைகோற்கக் கோரிக்கொள்கிறது.

தமிழர்கள் புலம் பெயர்ந்து மேற்கில் ஒரு ஒட்டுண்ணிச் சமூகமாக வாழும் இந்தச் சந்தற்பத்தில் கருத்துக்களைக் காவிக்கொள்ளும் தனிநபர் தனது வளர்ப்பு முறைமைகளை அறியாதிருக்கும்வரை இன்றைய நிறுவனங்களின்,அரசியல் இயக்கங்களின்-கட்சிகளின் பொய்மைகளைக் காவும் சுமை காவியாகவே வலம் வருகின்றார்களென்பதற்கு நமது புலி அரசியல்-போராட்ட நம்பிக்கைகளை-இயக்கவாதமாயைகளை,தனிநபர் துதிகளை,போலித்தனமாகத் தனிநபரைத் துதித்துக் கொண்டு, தமிழ் பேசும் மக்களை ஒடுக்கும் செயலூக்கத்தை ஆதரிப்பவர்களை வைத்தே புரிந்து கொள்ளமுடியும்.இவர்கள் வழமைபோலவே பிழைப்புவாத அரசியலுக்கேற்பச் சனல்நான்கினது ஆவணப்படத்தைக் கண்டுகொள்ளாதிருக்கின்றனர்.அல்லது, அதை அங்ஙனம் தவிப்பதால்(அது குறித்துப் பொது வெளியில் உரையாடாது)தமது புலிகளது எச்சங்களுக்கு மீளவுமொரு முண்டுகொடுத்துப் புலம்பெயர் தேசத்தில் மக்களை முட்டாளுக்கும் அரசியல் சதிக்கு உடந்தையாகிக்கொள்கின்றனர்.

புலியினது அப்பட்டமான மக்கள் விரோதக்கருத்துக்களைக் காவிக்கொண்டு திரிகின்ற "கருத்தின்பால் உந்தப்பட்ட" மனிதர் தமது இருப்பின் விருத்தியாகவுணர்வது மொழிசார்ந்து சிந்திப்பதையும் அதனூடாகப் புரிந்துகொண்ட பண்பாட்டுணர்வையுமே.இங்கே, நெறியாண்மைமிக்க உள வளர்ச்சி மறுக்கப்பட்டு, செயற்கையான-இட்டுக்கட்டப்பட்ட சமூக உளவியற்றளம் பிரதியெடுக்கப்படுகிறது.இவர்களுக்குப் புலிவழி புனையப்பட்ட அல்லது இட்டுக்கட்டபட்ட "தமிழ்சமுதாயம்-விடுதலை" என்பது தமது விருப்பத்தின் கருவாக இருப்பதை எப்பவும்போலவே"தமிழீழ விடுதலை"என்று, கனவுலகத்தைத் தயார்ப்படுத்தி உண்மைகளை ஏற்பதில் சிக்கலாகிறது!இது ஒருவகை உள நோய்!

ஈழத்து அரசியலில் ஒவ்வொருவரும் ஏதோவொரு இயக்கஞ்சார்ந்து உரையாடுவதும்,எழுதுவதும் அவரவர் உணர்திறனுக்கொப்பவே நிகழ்கின்றது.உதாரணமாக:அன்று,புலிகள்மீது பாரிய நம்பிக்கை வைத்தவர்கள் அனைவரும் அந்த அமைப்பின் ஆதிக்கத்துக்குள் தமிழ்ப் பிரதேசங்கள் கட்டுண்டபோது,அந்தச் சூழலுக்குள் வளர்வுற்றவர்களே.இவர்களே,புலிகள் தோற்றுக்கொண்டிருந்தபோது வயிற்றிலடித்து,புலித் தலைவனைக் காக்க வீதிக்கு இறங் கினார்கள். அப்போதும், மக்களைச்சாட்டி ஒரு விவேகமற்ற கபட அரசியல் வீதிக்கு வந்தது.அது,உண்மையற்ற புலிக் கூட்டத்தின் அரசியலென்பதை உலகம் உணர்ந்தபோது தோற்றுக் கொண்டது.

இப்போ,இந்தவுலகம் தனது நலங்கட்கு அமைய இந்த ஆவணப்படங்களது மூலமாக இலங்கை அரசின் பாசிசத்தை வெளிசமிட்டுக் காட்டுவதற்கு எங்கள் மக்கள்மீது இலங்கை அரசு-புலிப்பாசிசம் ஏவிய இராணுவ யுத்தம் காரணமாகிறது.இந்த யுத்தக் குற்றமானது இலங்கை அரசு மேற்குலகத்தைச் சார்ந்திருந்தபோது எப்பவும்போலவே மறைக்கப்பட்டிருந்தது.இப்போது,ஆசிய-மேற்குலகப் பொருளாதாரச் சந்தைப் பிளவுகளது நெருக்கடியுள் தோற்றமுறும் புதிய முரண்களுக்கமையத் தமது நலன்களது தெரிவாக நமது மக்களது அழிவுகள் அரசியலாகிறது.இதை வெளிப்படையாக இனங்கண்டு, அதன் உண்மைகளது திசைவழியில் நாம் பயன்படுத்தும் அரசியல் என்ன?

இது, குறித்து விரிவாக விளங்கிக்கொள்வது அவசியமில்லையா?

அல்லது,வழமைபோலவே இந்த மேற்குலகச் சார்பு அரசியல் வழித் தனிநபர் இலாபங்களுக்கமைய எமது மக்களது அழிவையும்,அந்த அழிவின்வழி பெறப்பட்ட அடிமை வாழ்வையும் பயன்படுத்திச் சொந்த இலாபங்களைக் கண்டடையப் போகின்றோமா?

சனல்4 ஆவணமாகத் தயாரித்த எமது மக்களது யுத்தவாழ்வு கற்பிக்கும் பாடமென்ன?புலிகளது வரலாற்றுக் கொடுமையிலிருந்து வெளிப்படும் குருதிக்குச் சரியான-நியாயமான அரசியல் அர்த்தம் உண்டா? இக் கேள்விகளைத் தட்டியுதைத்தெறிந்துவிட்டு,மீளத் தலைவருக்கு ஆலவட்டம் காட்டும் மனப்பாங்கானது தனித்தன்மை அபிவிருத்தியை(உண்மைகளைக் கண்டடையத்தக்க ஆய்வு மனம்) வெறும் ஒத்தூதும் கும்பல் மனப்பாண்மைக்கு இட்டுச் செல்கிறது.இங்கே, நடக்கின்ற ஒவ்வொரு கருத்துக் கட்டுமானம், பரப்புரைகளும் தனிநபரது தனித் தன்மையைக் காவு கொள்கின்றபோது, அந்தச் செயலூக்கம் பொதுவான தளத்தில் ஒரு பாசிச அமைப்பை முன்நிறுத்தும் கைங்காரியத்தை இந்தச் சமுதாயத்துள் எந்தக் குறுக்கீடுமின்றிச் செய்கிறது.

அமைப்பாண்மையுடையவொரு இயக்கமாக வளரும் குறிப்பிட்டவொரு நலன்-அது சார்ந்த வர்க்கம் இத்தகைவொரு வெற்றுச் சூழலைத் தக்கபடி உபயோகிக்கும்போது அங்கே மனித மூளை,மனம் காய் அடிக்கப்படுவதாக நாம் பல முறை கூறுகிறோம்.இதுவே இன்றைய புலிகளின் புரளிகளை நம்பும் தனிநபர் விருப்பாகவும்-அறிவாகவும் உருவாக்கப்படுகிறது.இந்த இயக்கப்பாட்டில் தமிழ்பேசும் மக்கள் தமது வரலாற்றுப்பூர்வமான ஜீவாதாரவுரிமைகளை இயக்க நலனுக்குத் தாரவார்ப்பதில் போய்முடிகிறது! சனல் 4 காட்டும் ஆவணமானது இத்தகையவொரு சூழலில் மேற்குலக அரசியலுக்கேற்ப,அவர்களது நலனுக்கானதெரிவுகளில் சில வினையாற்றல்களைக் கோரிக்கொண்டிருக்கிறதேயொழிய நமது மக்களது அழிவுக்கும்,அதுசார்ந்த நியாயமான அரசியல் தீர்வுகளுக்கும் இதைச் சாத்தியமாக்கும் வலு நமது புலம் பெயர்ந்த மக்களாற்றாம் முடியும். இதைப் பயன்படுத்தும் முறைமைகளில் புலிகளைக்கடந்தவொரு மகள்திரள் அமைப்பு உருவாகுமானால் அதுவே, பாசிசப் புலிப் புரளிகளைப் பின் தள்ளி நிலத்திலுள்ள மக்களுக்காக உண்மையாக அரசியல் செய்யும் ஒரு அறத்தை நமக்கு வரலாற்றில் தரும் சந்தர்ப்பத்தைக் காலம் கனிய வைக்கும்.

எனவே,புலம்பெயர் மக்கள் பிழைப்புவாதப் புலிகளைத் தவிர்த்து இயங்கும் தேவை அவசியமானது.

ஏனெனில்,புலம்பெயர் பினாமிப் புலிகளுக்கும்,பாசிசத்துக்குமான நெருக்கம் இந்த முறைமையிலேயே விளங்கிக் கொள்ள முடிகிறது.இங்கே நிறுவனப்பட்ட புலிச் சிந்தனைப்பொறிமுறையானது தமிழ் மக்களின் அனைத்து உரிமைகளையும்தமது இயக்க நலனுக்காகக் கட்டுப்படுத்துவதும்,அதன் சாரம்சமாக இருக்கும் பன்மைத்துவ நிகழ்வுப்போக்குகள் புலம்பெயர் மக்களை அடிமைப்படுத்தும் தறுவாயில் (சுயமாக மக்களை இயங்க அனுமதிக்காமை) அந்த அமைப்பில் பிரத்தியேகமான எந்தக் கருத்தியல் மற்றும் முறைமைகளும் ஜனநாயகப் பண்பைக்கொண்டிருப்பதற்கு வாய்பே இல்லை.எனவே,புலிகளது பரப்புரைகளைக்கடந்து பிரபாகரன் மரணத்தையும்,அவர் கொலை செய்யப்பட்டதையும்விட,மக்களது அழிவுகளைக் குறித்து வெளிப்படையாகப் பேசப்பட்ட இந்தச் சனல் 4 ஆவணத்தின்வழி ஒரு மக்கள் திரள் அரசியலூக்கம் கருக்கொண்டு,வெளியுலக மக்களரங்குக்கு வருமானால் அதுவே,தமிழ்பேசும் இலங்கை மக்களுக்கானவொரு அரசியல் உந்துதலையும், போராட்டவுணர்வையும் மீளத் தகவமைத்துக்கொள்ளும். இது,நிலத்திலுள்ள மக்களே தமது அடிமை விலங்கை ஒடிக்கும் எழிச்சிக்கு உந்துதலாகவெழவும் முடியும்.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
16.03.2012

Sonntag, März 04, 2012

சலிப்பூட்டும் இவ்விடியதிர்வின் தாலாட்டில்....

வாசு,இன்று எனது காரினது இரயரை ஆணி பதம்பார்த்துவிட்டது.அதை மாற்றியாகவேண்டும்.காசு பெரும் முடை, நான்கு இரயர்களையும் மாற்றியாகவேண்டிய நிலையிலேயே வின்ரர் இரயரது நிலை.அதை இணையத்தில் மலிவாகத் தேடுவோமென வந்தால் உனது மொழியாக்கம் பெரும் தாக்கத்தையும்,பொருத்தப்பாட்டுடன் தரும் வலியும்-உண்மையும்,எதையோ எழுதிவிடத் தூண்டுகிறது.

எனது நிதி நிலையோ கிரேக்கத்தைவிட மோசம்.பட்ட காலிற்படும் என்பது என்வாழ்வில்சரியாகக் கிடக்கிறது.

இந்த நிலையுள்ளும் உனது மொழி எவ்வளவு உண்மையாக இருக்கிறது!அஃது,மூலத்தின் வீச்சைவிட வலிமையானது.இதை எவரால் உண்மையாகப் பொருத்த முடியுமெனில்-அஃது,நம்மாற்றாம்!புலம் பெயர்ந்த நம்மால் மூலத்தைவிட மொழியாக்கத்துள் பல வலிமையான உணர்வுகளைப் பெறமுடியகிறது.

அதையும் பார்த்தோமானால்:
>> குளிர் மண்டிய கொடுமிருளுள்
விரைவில் நாம் அமிழ்ந்து விடுவோம்,
குறுகிச் சென்றுவிட்ட எம் கோடைகளின்
வெயில் ஒளியே சென்று வா !
கொல்லைப் புறத்தின் கல்லுப்பாதையில் சாவின் அதிர்வுகளுடன்
பேரிரைச்சலிடும் மரம் சாய்து வீழ்வதை இப்போதே கேட்கிறேன்.<<
" குளிர் மண்டிய கொடுமிருளுள்..." மூலத்தை உருவகப்படுத்தியவனுக்கும் எமக்குமான பொருத்தப்பாடு வேறாகவிருப்பினும்,ஒரு நிலையுள் அவை பொருத்தமாகியும் விடுகிறது.


ஊரைவிட்டு,தேசம் தொலைத்து,கொடுமிருள் குவிந்து போர்த்திருக்கும் இருண்ட ஐரோப்பாவுக்குள் நுழைந்தோம்.இந்தக் குளிர் தின்றக் கொடுமிருளில் நாம் அமிழ்ந்தே போய்விட்டோம்.இப்படியாகவின்று கால் நூற்றாண்டைத் தொலைத்தோம்-கண் இமைக்கும் நேரத்துள்!

"குறுகிச்சென்றுவிட்ட எம் கோடைகள்..." ஆம்!நமது கோடைகள் எப்பவுமே நீண்டவை!அவை இதப்பானவை!இனிமையானவை.எமது முகற்றில் வந்தமரும் மணல் கலந்த சோழகத்துள்(தென்காற்றுச் சோழகம்) சொல்லாத சூரியக்கதிர்கள் தொலைந்து போனதிசையுள்- " வெயிலொளியே சென்றுவா"என்பதைத்தவிர வேறெதுவும் விசும்ப முடியாது தத்தளிக்கும் நமது புகலிட வாழ்வில், கொல்லைப் புற கல்லுப்பாதையாய் வாழ்வில் வடிவமைப்புச் சந்தித்துக்கொள்கிறது.

ஜந்திரமயமான உற்பத்திச் சக்திகளுக்குள் மாட்டிய நமது உறவானது சாவின் அதிர்வுடன்பேரிரைச்சலிட்டு ஈனக்குரல் ஒலித்தபடி சாய்ந்து போவதை நாம் தினமும் சந்திக்கிறோம்.நேற்றுப் பூராகவும் இந்த வலி என்னைத் துரத்தியபடி...
>> சினம், வெறுப்பு, நடுக்கம், பயங்கரம் கடினமானதும் தவிர்க்கமுடியாததுமான உழைப்பு என, குளிர்காலம் முழுவதுமாக என்னிருப்பினுள் நுழையப்போகிறது.
தன் துருவ நரகத்துள் துலங்கும் சூரியன்போல்என்னிதயமும் உறைந்ததோர் செந் தசையாகவேயிருக்கும் <<
கடினமானதும்,ஆன்மாவைக் கொல்லுவதுமான இந்த ஐரோப்பாவினது அவசரத்தனமான படைப்புருவாக்க எல்லை தினமும், புதியதைக் கேட்கிறது-புதுமைப்படுத்தலையும்,புத்திப் பிழிவையும் கோருகிறது.
முடியவில்லை!

நேர அழுத்தம்,நினைவில் வைத்துக்கொள்ளமுடியாத உழைப்பினது அநுபவத்தை மறுந்துபோக வைக்கிறது.மறு நாள் விட்ட குறையை நிதானமாகத் தொடரமுடியவில்லை!

என்ன செய்ய?

எனக்குச் சினம்,வெறுப்பு,நடுக்கம்.இதனால் எனது உழைப்பும்,அதை நல்கப்பட நான் உறவுகொண்ட உற்பத்திச் சக்தியும் அழகானதும்,சந்தோஷமானதுமான நாட்களை எனக்கும்,என்னைச் சுற்றியிருப்பவருக்கும் எப்பவுமே தரவில்லை!அதனால்,அந்த உழைப்பு எனக்கும் உண்மையிலேயேவொரு கொலைக்களமாக இருக்கிறது.எனினும்,அந்த உழைப்பை நிராகரிக்க முடியவில்லை!


நான் கூலியுழைப்பில் தங்கி உயிர்வாழ்வதாலும்,என்னைச் சுற்றி இன்னுஞ் சிலவுயிர்கள் தங்கியிருப்பதாலும் இந்தப் "பயங்கரமானதும்,கடினமானதுமானதும் என்றான தவிர்க்கமுடியாதானாகிப் போன இந்தக் கூலி உழைப்பு, கோடையென்ன குளிரென்ன அனைத்துப் பொழுதுகளிலும் எனக்குள் நுழைந்து எனது சுயத்தை அழித்தே விட்டது.நான் சுயாதீனமுள்ள உயிர் ஜீவியா உலாவரவில்லை!

எனது விலங்கே,எனது உடலாகிப்போனது.அது,உழைப்பான எனது படைப்பாற்றலைக் கொள்ளையிடும் இந்த ஜந்திரோத்தோடு பொருத்தப்பட்ட தற்செயல் நிகழ்வால் அது நரகமாகிப் போய்விட்டது!ஆன்மா நித்தியத்தைத்தேடுகிறது.திரண்ட திசையெங்கும் தேங்கிப்போன ஆன்மாவினது வலியுள் மூப்படையக் காத்திருக்கும் காலத்தை மறுத்து, என் ஆன்மா சிதைந்து போகிறது.அது, தனது காலத்தைத் தேடியபோது இருப்பை இழந்த காலத்துள் நித்தியத்திலிருந்து விலிகிக்கொண்டது! இந்த அந்நியப்பாடே எனக்கு இதயமொன்றிருப்பதென்று சொல்லிக்கொண்டிருக்கிறது.

இந்த நரகத்துள்இதயமிடும் ஓலம் இருப்பற்ற பொருளின்றியமைந்த ஏதோவொரு இயக்கமாய் உலாவுறும் மூலதனச் சுழற்சியுள்சிக்கிப் பிழியப்பட்ட வலிகளால் துருவ நரகத்துள் துலங்கும் சூரியன்போல்(கவனிக்க அது இன்னும் சூரியனே) என் இதயமும் உறைந்து ஓர் செந் தசையாகவே இருக்கிறது.அதனிடம் அனைத்தும் தொலைந்து போய்விட்டது!ஈய்வு,இரக்கம்,பரிவு-பாசம் என்பதெல்லாம் அதனிடம் பொய்த்துப் போய்விட்ட பொழுதில் அது வெறும் உறைந்துபோனவொரு செந் தசையாகவே இருக்கிறது.

அற்புதவமான வரிகள் வாசு!
>> விறகின் ஒவ்வொரு துண்டும் வீழ்வதை
அச்சத்துடன் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
நாம் நிர்மாணிக்கும் தூக்குமேடைகூட இத்தனை
செவிடான ஒலி கொண்டதல்ல.
கொழுப்பேறிய செம்மறியாட்டின் களைப்பற்ற இடிகளால்
சாய்ந்து வீழும் கோபுரம் போலிருக்கிறது என் மனம்.<<
வாசு,நானும் இந்தப் பொழுதுவரை விறகின் ஒவ்வொரு துண்டின் வீழ்ச்சியிலும் எனது கவனத்தைப் புதைத்தே வந்திருக்கிறேன்.இந்த வீழ்ச்சி பேரிரைச்சலானது.அஃது,வீழும்போதும் பெரு விருட்சத்திலிருந்து பட்டுப்போய் விறகாகி வீழ்வதாகவே இருக்கிறது.சமீபத்துள் பதினான்கு வயதுப் பாலகன் விறகாய் வீழ்ந்து போனதன் ஒலி பேரிரைச்சலை எனக்குள் தந்தபடியேதாம் இருக்கிறது.எனக்குள் இது அச்சத்தைத் தருகிறது.எனது குழாம் நிர்மாணித்த தூக்குமேடைகூட இத்தனை செவிடானதும்,வலிமைகொண்டதுமான ஆன்மக்கொலையை இட்டுக்கொண்டதல்ல.அதுவொரு வெளியுள் விடிவெனக்கொண்டவொரு பாதையுள் இன்னொரு கொழுப்பேறிய செம்மறியாட்டின் களைப்புற்ற இடியாகவும்இருந்து வருவதை நாம் புரிந்தபோது வீழ்ந்து சிதைந்த விறகுகள் ஏராளம்.அதன் செவிட்டொலியோ சொல்லிய சேதிகள் என்ன?

நான் அறியேன்-புரியேன்!

என் திறப்பு என்னிடம் இல்லை!என்னைப் பூட்டிவைத்துச் சித்திரவதை செய்யும் காலத்தை நான் வென்றுவிடப்போவதில்லை.எனினும்,எனது மனம் சாய்ந்து வீழும் கோபுரம் போலிருப்பதில் எனது ஆன்மா நித்தியத்தைத் தேடியதால் மட்டுமே காலத்துள் தோற்கிறது.அதிலிருந்து அது நித்தியத்திலிருந்து விலகுகிறது.
>> சலிப்பூட்டும் இவ்விடியதிர்வின் தாலாட்டில்
மிக அவசரமாய் எங்கோவொரு சவப்பெட்டிக்கு
ஆணியடிப்பதுபோல் எனக்குக் கேட்கிறது.
யாருக்கு ? நேற்று கோடையாயிருந்தது. இதோ இலையுதிர்காலம்.
இந்த மர்மச் சத்தம் ஒரு புறப்படலுக்கான மணியாக அடிக்கிறது.<<
அவலம் மிக்கதும்,அருவருப்பானதுமான இந்த உழைப்பு விடியல் எனக்கும் சலிப்பூட்டுகிறது.இந்தச் சலிப்பூட்டும் விடியதிர்வானதன் தாலாட்டுக் கேட்டுக்கொண்டிருக்கும்போதே காலம் என்னைக் கழுமரத்துக்கழைத்துச் செல்லும்போது எனக்குமுன் இன்னொருவன்-இன்னொருவள் அதில் தொங்கவைக்கப்பட்டுச் சவப்பெட்டியுளிட்டு ஆணியடிக்கும்போது நானும் இடைவிடாத அந்த ஒலிக்குத் தீனிபோட இரையாக்கப்படுகிறேன்.எனது இந்த ஊனத்துள் வரும் காலமாற்றம் எல்லாம் ஒரு சுழற்றிசைவெளியுள் சந்திக்கும் கணமாகிக்கொண்ட மாயையுள் நேற்றுக் கோடையாகிய கணமோ இதோ இலையுதிரும் இன்னொரு கணத்தைப் புதைக்கிதே இது மர்மமானதும்,மகத்தானதுமானவொரு பயண ஆயத்தத்தின்தேவையைச் சொல்லிக்கொண்டிருப்பதாற்றால்தாம் இஃது,மர்மச்சத்தமாகி ஒரு புறப்படலுக்கான மணியொலியாக ஒலிக்கிறது!

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
04.03.2012