Donnerstag, Dezember 25, 2008

Sri Lanka(Abu Grab )videos

An Appeal
to
The United Nations
Commisson on Human Rights


Honoured Sirs/Mesdames,



We would like to submit our appeal to you,with deep sorrow which comes from the bottom of our hearts.


http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4693:2008-12-24-07-58-02&catid=74:2008




//இதில் இணைத்துள்ள வீடியோ இணைப்பு, மகிந்த சிந்தனையிலான சிங்களப் பேரினவாதத்தின் ஆபாசத்தை எடுத்துக்காட்டுகின்றது. செத்த பிணத்தைக் கூட, ஆணாதிக்க வெறியுடன் ரசித்து அனுபவிக்கின்ற சிங்கள இராணுவத்தின் வக்கிரம். இந்த வீடியோ காட்சி, பொதுவாக ஆணாதிக்க வக்கிரத்துடன் தான் பரவிவருகின்றது.

இருந்தபோதும் யுத்த முனையில் எப்படிப்பட்ட வக்கிரங்கள் அரங்கேறுகின்றது என்பதை, இது அம்பலமாக்குகின்றது. சமூக விரோத குற்றவாளிகள் எப்படிப்பட்ட ஒரு யுத்தத்தை நடத்துகின்றனர் என்பதை, மனிதம் எப்படி அவமானப்படுத்தப்படுகின்றது என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது. புலிப்பாசிசத்துக்கு பதில் சிங்களப் பேரினவாத பாசிசம் மூலம் எப்படிப்பட்ட சமாதானத்தை அவர்கள் தர முனைகின்றனர் என்பதை புரிந்துகொள்ள, இது உதவுகின்றது.

பேரினவாதம் வெறும் புலிகளுடன் மட்டும் சண்டை செய்யவில்லை. மாறாக சண்டை செய்யும் பெண்களின் உறுப்புகளைக் கூட கடித்துக் குதறுகின்றது. இராணுவத்துக்கு ஆட்களை திரட்டக் கூட இது போன்ற ஆணாதிக்க வக்கிரங்கள் உதவுகின்றது.

சமாதானம், விடுதலை என்பது, மக்கள்விரோத யுத்தத்தின் மூலம் இப்படித்தான் நிர்வாணமாகின்றது. //-Tamilcircle

Donnerstag, November 13, 2008

சென்னை அம்பேத்கார் சட்டக் கல்லூரிச் சாதியக் கலவரம்!

சட்டக்கல்லூரியும்,சாதியும்,தமிழக அரசியல் நடாத்தையும்

-சிறு குறிப்பு: பார்ப்பனியம்சார்ந்த வியூகங்களின்வழி.




மிழகத்தையும் அதன் அரசியல் நடாத்தையையும் குறித்துச் சிந்திப்பவர்களுக்குத் தெரியும் அங்கே நிலவுகின்ற கட்சி அதிகாரத்தினதும்,அதுசார்ந்த சாதிய ஆதிக்கத்தினதும் கண்ணிகள் தமிழக மக்களை எங்ஙனம் பிரித்தாளுகின்றன என்று.மிகவும் வருந்தத்தக்க இந்தச் சாதியக் கலவரத்துக்குப் பின்னே நடந்தேறும் அரசியல் சதியானது முழுமொத்தத் தமிழக மக்களுக்குமே எதிரானது.சென்னை அம்பேத்கார் சட்டக் கல்லூரியில் நடந்தேறியதான சாதியக்கலவரம் வெறும் சாதிய முரண்பாட்டின் "உணர்ச்சிவசமான"தாக்குதலைக் கொண்டியங்கவில்லை.அது,தமிழ்ச் சமூகத்தின் முழுமொத்த அணித்திரட்சியையும் ஆணிவேறு அக்குவேறாக்கித் தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட உந்தித்தள்ளப்பட்ட தூண்டுதல்களால் அப்பாவித் தலித்து இளைஞர்கள்-மாணவர்கள் மீண்டும் குருதி சிந்த வழிகோலியுள்ளது தமிழ ஆளும் வர்க்கம்.


இந்தப் பாப்பனிய-மார்வாடி ஆளும் வர்க்கத்தின் திமிர்த்தனமான பார்ப்பனியப் பண்பாடு நாள்தோறும் தமிழக மக்களைக் கேவலப்படுத்தும் ஆத்மீக(மதம்) ஊடக மற்றும் கேளிக்கை(சினிமா-சின்னத்திரை) நிகழ்வினூடாகச் செய்துவரும் மானுட அவமானமானது மிகவும் தந்திரமாக உழைப்பவர்களை வேட்டையாடி ஒடுக்கி வருவதில் மிகச் சாதுரியமாகத் தமிழ் தேசியவுணர்வைச் சிதைத்து வருகிறது.இது,ஒவ்வொரு அரசியற் சூழலிலும் ஏதோவொரு வடிவத்தினூடாகச் சாதியக் கலவரமாக மேலே உந்தித் தள்ளப்படுகிறது.இந்தச் சதி சாதியக் கலவரத்துக்கு இந்திய மத்திய அரசியல் கட்சிகள்வரை லிங்குகள் இருக்கின்றன.இது குறித்துக் கிஞ்சித்தும் கவலையின்றிச்"சாதியக் கலவரம்"எனும் போர்வையில் கருத்தாட முடியாது.இது சாரம்சத்தில் தவறானது.


சென்னை அம்பேத்கார் சட்டக்கல்லூரியுள் மையங்கொண்ட இந்தச் சாதியக் கலவரமானது தந்திரம் மிக்கது, இனிவரும் நாட்களில் தமிழக மக்களின் இயல்பான அரசியல் வாழ்வில் வேறொரு பிரக்ஜையைக் கிளறி விடுவதற்கானவொரு சூழலை மிகவும் தந்திரத்தோடு தடுக்கும் நரித்தனமான அரசியலோடு இஃது சம்பந்தமுடையது.


அடுத்துவரும் தேர்தல், அதன் வழியாகத் தமிழகத்தில் மேலெழும் தமிழ்மொழிசார்ந்த பிரக்ஜையை, அன்றாடம் சிங்கள இராணுவத்தால் கொல்லப்படும் ஈழத்து மக்களின்மீதான இலங்கைச் சிங்கள அரசுக்கெதிரான தமிழகத்து மக்களின் உணர்வுரீதியான அனைத்து எழிச்சிகளும், தமிழகத்தைத் தமது வேட்டைக்காடாக்கி வைத்திருக்கும் பார்ப்பனிய-பனியா ஆளும் வர்க்கத்துக்குச் சகிக்க முடியாத அச்சத்தையிட்டு வந்தது.இந்த அச்சத்தை ஜெயலலிதாவின் ஈழ மக்களுக்கான ஆதரவு-புலி எதிர்ப்பு எனும் அரசியல் சூதாட்டத்தில் மிக இலகுவாக இனங்காண முடியும்.கூடவே,தமிழுணர்வுமிக்க கலைஞர்கள் சீமான் மற்றும் அமிர் கைதுகளின் பின்னே தன்னைப் பார்ப்பனியத்துக்கு ஒப்புக்கொடுத்த தி.முக. ஆட்சியையும் கவனிக்க.


தமிழகம்(தமிழ் மக்கள்) ஒரு குடையில் திரண்டு நின்று ஈழ மக்களின் துயருக்கான தார்மீக எழிச்சியுறும்போது அதுவே தமிழகத்தை ஆளும் வர்க்கத்தினது இருப்புக்கு எதிராக மாறும் என்பது மிக இலகுவாகப் புரியத்தக்க அரசியல்தாம்.இதைக் குறித்தான அரசியல் சூழ்ச்சிகளை மிக இலகுவாகச் செய்து வந்தது பார்ப்பனியத் தந்திரமானது, தமிழகத்தின் தமிழணுர்வுக் கட்சிகளினது ஈழத்துக்கான போராட்டங்களால் தமிழ்த் தேசியவுணர்வு மேலும் விரிந்த தளத்துக்கு வளர்ந்து செல்லுமென்பதைக் குறித்து மிகவேகமாக எடைபோட்ட பார்ப்பனிய ஆளும் வர்க்கமானது, ஓட்டுக்கட்சிரக அரசியலிலிருந்து விலத்திய ஆதிக்கப் பிற சாதிகள்சார்ந்த ஆளும் வர்க்கத்தோடான அரசியல் வியூகத்தோடு, தனக்கான இருப்பைக் குறித்து மிகக் கவலையோடு காத்திருந்து இந்தச் சதிச் சாதியக் கலவரத்துக்குக் காரணிகளை உருவாக்கியுள்ளது.


மக்களின் எதிரிகள் எப்பவும் பற்பல இரூபங்களில் இருந்து கொள்வார்கள்.தமிழக மக்களின் தார்மீக ஆதரவுப் பெருந் தீயில் தன்னையும் பிணைத்தக்கொண்ட பார்பனியக் கட்சிகள்,குழுக்கள்,மடாலயங்கள்,கலைத்துறைப் பிரமுகர்கள்,சினிமாத் தயாரிப்புப் பெருச்சாளி நிறுவனங்கள் யாவும் தமிழக மக்களின் எந்த அணிதிரட்சியையும் சகிக்க முடியாதவர்களாகவே இருக்கிறார்கள்.எனவே,உள் நுழைந்து கருவறுத்தல் அவர்களுக்குக் கைவந்த கலை.இப்போது அதைக் கட்டவிழ்த்துக் காட்டியுள்ளார்கள்!இத்தகைய ஆதிக்க அரசியல் சூழ்ச்சிகளை அரசியல்ரீதியாக முறியடிக்க முடியாதளவுக்குத் தமிழகத்தை ஆளும் கட்சி பாப்பனியத்தோடு கைகோர்த்துக் கட்சியாதிக்கத்தையும் மூலதனத்தையையும் காக்க வேண்டிய நிலையில், கருணாநிதியின் குடும்ப அரசியல் பெரும் மூலதனத்தோடு சீரழிந்து ஒடுக்குமுறை வர்க்கமாகத் தமிழகத்தில் நிலவுகிறது.இதையே தமது மூலதனமாகக் கருதும் தமிழகத்துக்கு எதிரான பாப்பனிய-மார்வாடி ஆளும் வர்க்கங்கள் முழுமொத்தத் தமிழக மக்களையும் எந்த அரசியல் பிரக்ஜையுமற்ற வெறும் மந்தைகளாக்கும் சினிமாவைக் கருத்தியல் யுத்தமாகவும் பயன்படுத்தியபடி, மறுபுறத்தில் பார்ப்பனிய வர்ண அதர்மத்துக்குச் சார்பான சாதிய வேறுபாட்டைத் தூண்டிச் சாதியக் கலவரத்தூடாக வன்முறைவடிவிலும் தமிழக மக்களை ஒடுக்கி, அவர்களின் குருதியை உறுஞ்சிக் குடிக்கின்றன.

இன்றைய தமிழகமானது வெறுமனவே ஓட்டுக் கட்சிகளின் வாய்ச் சவடால்களின்வழி புரியத் தக்க அரசியல் சமூக வாழ்வைக் கொண்டிருக்கவில்லை.அது மிகவும் கொடிய பார்ப்பனியச் சூழ்ச்சியின் அதர்மத்தனமான கருத்தியல் மற்றும் வன்முறை ஜந்திரத்தால் தகவமைக்கப்பட்ட சூழ்ச்சிமிகு வாழ்நிலைகளைக் கொண்டியங்குகிறது.இங்கே,தமிழ்-தமிழ்த் தேசிய உணர்வு மேலோங்குவதை மிகத் துல்லியமாகக் கவனப்படுத்தி அதற்கெதிரான பார்ப்பனியச் சதி அரசியல் கட்டவிழ்த்து விடப்படுகிறது.அதன் முக்கியகூறாக இருக்கும் இந்தச் சாதியக் கலவரங்கங்கள் யாவும் ஆட்சியதிகாரத்தையும்,பொருளாதார ஆதிக்கத்தையும் நிலைப்படுத்த முனையும் பார்பனிய-மார்வாடி ஆளும் வர்க்கத்தின் இருப்போடு மிகவும் சம்பந்தப்பட்டது.எனவே,சென்னை அம்பேத்கார் சட்டக் கல்லூரியுள் நடந்தேறிய சாதிக்கலவரம் என்பது மிகவும் சதி நிரம்பிய அரசியலோடு சம்பந்தப்பட்டது.


தமிழகத்தைத் தொடர்ந்து சாதிய வேறுபாட்டால் பிரித்துத் தமிழர்களை ஒடுக்கி, அவர்களின் தேசத்தைத் தொடர்ந்து திருடும் பார்ப்பனியச் சதியின் இன்றைய தொடர் நிகழ்வுகள் யாவும் தமிழகத்து மக்களுக்குள் அரசியல் செய்ய முனையும் தமிழ்த் தேசியவுணர்வுடைய கட்சிகளால் மிகவும் கவனமாக ஆராயப்பட்டு, மக்களிடம் விழிப்புணர்வைத் தூண்டி, இந்தக் கேடான சதிகள் முறியடிக்கப்பட்டாக வேண்டும்.இதைக் கடந்தவொரு எந்தத் தேர்வும் தமிழ்மக்கள் மத்தியில் இருப்பதற்கான சாத்தியக்கூறை இந்தப் பார்ப்பனியச் சதிவிட்டுவைக்கவில்லை.

சமீபகாலமாக நடந்தேறும் தமிழகத்தின் சாதியக் கலவரங்களுக்கு எங்ஙனம் அரசியல் கட்சியாதிக்கத்தின் தொடர்புகள்-சூழ்ச்சிகள் இருக்கின்றதோ அதைவிட இந்தக் கலவரத்துக்கு(அம்பேத்கார் சட்டக் கல்லூரிச் சாதியக்கலவரம்) இந்திய மத்திய அரசியல் கட்சிகளின்வரையான சதி அரசியல் சூழ்ச்சிகள் பிற்காரணமாக-உந்துதலாக இருக்கிறது.இது,தமிழக மக்களின் சகோதரங்கள் ஈழத்தில் பலியெடுக்கப்படும் இந்திய மத்திய அரசின் சூழ்சிக்கு மிக அண்மையாக இருக்கிறது.இதைக் கவனப்படுத்துவதுதாம் இக் கட்டுரையின் மிக முக்கியமானசாரம்.

நாம்,ஐரோப்பிய நாடுகளில் நிலவும் நிறவேற்றுமை மற்றும் அந்நிய எதிர்ப்பையிட்டு மிகவும் வேதனையோடு இந்த மக்கள் சமுதாயத்தைக் குறித்துக் காறி உமிழ்கிறோம்.அன்றாடம் இந்தக் கேடுகெட்ட இனவாத அரசியலை எதிர்த்துக் கருத்தாடுகிறோம்.ஆனால்,நமது தேசத்தில் ஒரே மொழியைப்பேசுபவர்கள் பார்ப்பனியச் சாதிய அதர்மத்துக்குப் பலியாவதையும்,தமது தேசத்தைத் தமது குருதியால் சிவக்க வைப்பதையும் தடுத்து நிறுத்தும் அரசியலை முன்வைக்க முடியாது திண்டாடுகிறோம்.

எம்மை வேட்டையாடும் இந்தப் பாசிசப் பார்ப்பனியத்தை எங்ஙனம் வீழ்த்துவதென்ற வியூகம் குறித்த அரசியலைப் புரட்சிகரச் சக்திகள்மட்டுமே தீர்மானிக்க முடியும்.இதைக் கருணாநிதி தலைமையிலான-பாணியிலான எந்த ஓட்டுக்கட்சியும் செய்துமுடிக்கும் தகமையற்றுக் கிடக்கின்றன.இத்தகையவொரு சூழலை விரும்பும் பார்பனியச் சதி அரசியல், புரட்சிகரச் சக்திகளைக் கடந்த காலத்தில் பயங்கரவாதிகளெனும் போர்வையில் பொலிஸ் நாய்கள் மூலம் என்கவுன்டர் செய்து கொன்றழித்ததையும் தமிழக மக்களும்,புரட்சிகரச் சக்திகளும் மறக்க முடியாது.இதன் தொடர்ச்சியாக இன்று களமிறங்கியுள்ள பார்ப்பனிய அரசியல் தனது வர்க்க-சாதிய நலனுக்காகத் தமிழகத்தை மீளவும் சாதியக் குழறுபடிகளுக்குள் தள்ளி, அந்த மக்களின் தேசிய-மற்றும் தமிழ்த் தன்னடையாளங்களுக்கெதிரானவொரு பாதையில் அவர்களை வீழ்த்தித் தமிழ் தேசியவுணர்வுக்கெதிரான ஆட்சியை மெல்லத் தகவமைக்கும் தந்திரத்தோடு அடுத்த நடவடிக்கைகளைச் செய்வதற்குத் தயாராகிறது.இதற்குத் தக்க பதிலடியைப் புரட்சிகர அமைப்புகள் செய்தாகவேண்டும்.

சாதிய வெறிக்குள் தலையைப் புகுத்தித் தனது சொந்தச் சகோதரர்களைப் பலியெடுப்பதைத் தமிழ்பேசும் எவரும் அனுமதிக்க முடியாது!இது,முழுமொத்த மனிகுலத்துக்கே எதிரானது.இதைச் சாத்திர சம்பிரதாயத்தோடு கண்ணியமான கலவரமாகக் கோவில்களில்,சமூகமட்டத்தில் சாதியத்தைக் கௌரவமாகப் பார்ப்பனர்கள் செய்வதும்,அதையே கலவரமாக்கித் தமிழர்களை அழிப்பதும் இனியும் பொறுக்கத் தக்க செயலல்ல.இத்தகைய கலவரத்துக்குப் பின்னே மொத்த இந்தியப் பாப்பன-பனியா ஆளும் வர்க்கமுமே உடந்தையாக இருக்கிறது.இவர்கள்,தமிழக மக்களின் இன்றைய தமிழுணுர்வு எழிச்சிகளை விரும்பவில்லை.அதன் பயனாக இன்னுஞ் செய்யப்போவது பல.இதன் வெள்ளோட்டமே சென்னை அம்பேத்கார் சட்டக் கல்லூரிச் சாதியக் கலவரம்!

ப.வி.ஸ்ரீரங்கன்
13.11.2008.
வூப்பெற்றால்
ஜேர்மனி.

Donnerstag, Oktober 16, 2008

இதயத்தின் தரிசனம் இது!

டானியலின் உலகம்:அது இதயத்தின் மொழியாக...





"பூமி அதிர்ந்தது
இந்து சமுத்திரம் பொங்கி எழுந்தது
இதயம் சிதையச் சுனாமி நிகழ்ந்து
எங்கள் கரைகள் அமிழ்ந்து போயிற்று
எஞ்சியதெல்லாம் மயானம் ஆகின".-டானியல்(ஆனந்தப்பா)


ஈர விழியோடு எம்மையெல்லாம் கூவி அழைத்து,சுனாமியின் வலியைத் தன் உணர்வோடும்-வலியோடும் சொன்ன டானியல்-எமது மண்ணின் துயருக்காக எந்தப் பொழுதிலும் சிலுவை சுமப்பதில் தன்னைப் பிணைத்துக்கொண்டவன்-போராளிக் கவிஞன்-கலைஞயன்!.மனிதத் துடிப்புடைய சிந்தனைமிகு இசைஞன்.இலக்கியச் சந்திப்பினது அரங்குகளில் மக்களின் வலிகளைப் பாட்டாகப் படித்துக் காட்டியவன்,தனக்குள் கவிந்திருக்கும் இசைக்கோலங்களை எமது மண்ணின் வலியோடு குழைத்துத் தந்து, எமது விழிகளை அன்றே ஈரவிழிகளாக்கியவன்.சுனாமி அனர்த்தம் கண்டு, உலகின் எந்தக் கவிஞனக்கும் அநுபவமாகாத மொழியைச் சாகா வலியின்மீது கட்டி ஈரவிழிகளாக எமது விழிகளை என்றும் வைத்திருப்பவன்.இன்றோ,அவன் மேலே சொன்னமாதிரி,எம்மிடம் எஞ்சியதெல்லாவற்றையும் நாம் மயானம் ஆக்கிவரும் இன்றைய சூழலில்,ஆனந்தப்பாவின் சிந்தனையின் இசைக்கோலஞ் சொல்லும் இந்தப் புதிய இசைக்கோர்வை பன்னிரெண்டு பாடல்களோடு இணையத்தில் நமக்காகக் காத்திருக்கிறது.



இந்தப் பாடல்களை நாம் எல்லோருமே மிகவும் உள்வாங்கி,அதற்குள் நமது மனக் கோலத்தைத் தரிசிக்க முடியும்!இது புதுமையல்ல.தமிழ்ச் சினிமாவின் பாடல்களைத் தாண்டி நாம் எமது இரசனையை வரிவுப்படத்த அந்தச் சினிமாவிட்டுவைக்கவில்லை.இன்று, இந்தப் பாணியைத் தாண்டித் தரும் எந்தத் தமிழ் இசைக்கோலமும் நம்மிடம் எடுபடுவதில்லை.இதை மிக நேர்த்தியாக உணர்ந்த டானியல் தனது புதிய பாடற்றொகுப்புக்குள் இதைத் தாண்டிக் கடக்கவிரும்பவில்லை!



ஆனந்தப்பா தனது கவியாற்றலை மிகத் துள்ளல் இசையோடிணைத்து உருவாக்கிய பன்னிரு பாடல்களும் நம்மோடு,நமது காதல் மனதைப் புதுப்பித்துக் கொள்கிறது.



இப்போதெனக்கு 46 வயது கடந்துவருகிறது.எனினும்,எனது காமத்தினது காதல் விருப்புக்குக் கன்னிக்கோலம் 16 உம்,17உம் படுத்தும்பாடு பெரும்பாடு.இறக்கைகட்டிப் பறக்கும் எனது ஆசைக்கு என்றும் பதினாறு. இந்தவொரு விஷயத்தில் எல்லையென்பதை என்னால் இட்டுக்கொள்ள முடியாதுள்ளது.நான் பார்க்காத உலகத்திலெல்லாம் என் மனம் பாய்ந்து,என்னை அந்தப் பதினாறு வயதுப் பருவத்துப் பொலிவுகளுக்குள் மீளவும்,மீளவும் தள்ளும் இந்த உலகம் மிகவும் உண்மையானது.இதுதாம் உயிரின் இருத்தல்.நித்தியத்தோடு பிணைவதில் எனது உள்ளொளி உருவங்கொள்கிறது!




இன்றையப் பௌதிகப் புரிதலில், ஜேர்மனிய இளம் பௌதிக விஞ்ஞானி மார்க்கோவ் நீம்;(Physiker und Bestsellerautor Prof. Dr. Markolf NIEMZ)கைடில்பேர்க் யூனிவெர்சிட்டியில் பௌதிகம் மற்றும் மருத்துவத் தொழில் நுட்பப் பேராசிரியராக இருக்கிறார்.ஒரு பௌதிகவாதி அனைத்தையுமே தரவுகளோடு எடுத்து வைக்கும்போது,இந்த இளம் பேராசிரியர் ஜேர்மனியப் பௌதிக ஆய்வுவட்டத்துக்குள் தனது ஆய்வுகளால் ஒரு பெரும் தாக்கஞ் செய்பவர்.இவர் சொல்கிறார்"ஆன்மாவானது மரணத்தின்பின் ஒளியின் வேகத்தை எடுத்து நித்தியத்தோடு கலந்து விடுகிறது"(Lucy mit c-Mit Lichtgeschwindigkeit ins Jenseits.ISBN 978-3-8334-3739-7).



"ஆன்மா-மரணம்..."



மரணம் குறித்து ஆய்வுகளைச் செய்பவர் மார்க்கோவ் நீம்.ஆன்மா என்பது உயிர்தாங்கிய உடலினது கருப்புப் பெட்டி-Black Box என்கிறார்.அதாவது, விமானத்திலுள்ள பிளக் பொக்ஸ்!



இது குறித்து நான்:


"................."




மரணம்.


இதற்கும் ஆனந்தப்பா பட்டுகளுக்கும் என்ன சம்பந்தம்?


சம்பந்தம் உண்டு!



"ஏய் ஏய் பெண்மணி, வாழ்வு ரொம்பப் பொய்யடி"பாடலில் இந்தக் கோலத்தை நாம் மிக உயர்ந்த கவிதை நயத்தோடு தரிசிக்கலாம்.இங்கே உயிர்வாழ்வின் அற்ப ஆயுளை நாம் அழகுற்ற "அவளிடம்"எடுத்துச் சொல்லி அவளை ஏமாற்றி அநுபவித்தலின் உண்மையில் உலகத்தின் தொடர் படைப்பு நிகழ்ந்து இந்தவுலகத்தை இயக்குவதில் நமது அர்த்தங்கள் மேலும் அழகுடையதாகிறது-ஆன்மா கொலுவுறுகிறது.பொழிவுகள் இங்கே புதுமையுறும் உயிரின் நீட்சியே தவிரக் குறைபடலல்ல-ஊனமும் அல்ல.





மார்கோ நீம் சொல்வதுபோல்"ஆன்மாவின் தவிப்பு"என்னிடம் உதிர்வு நிலையுள் ஓடுகிறது.அது எப்பவுமே மகிழ்ச்சியைக் கோலமிடும் விழிகளுக்குள் போட்டுடைக்கிறது.குமிழிபோன்ற அந்தப் பேரிரைச்சல் என்னைத் தொலைக்கின்றபொழுதுகளில் எங்கோவொரு மூலையிற்கிடந்து நெஞ்சில் என்னைதொடுகிறது.இத்தகைய தொடுபொழுதுகளில் நான் புறவுலகத்தோடு தொடர்பாடுகிறேன்.அது என்னையும் மற்றைய மனிதர்களையும் ஒன்றோடொன்று பிணைக்கிறது.இது எனக்குள் நித்தியமானவொரு நிகழ்வோட்டமாகவே தொடர்கிறது.இது பெரும்பாலும் எதிர்பால்வினையோடு தனது நித்தியத்தின் எல்லைதேடிச் செல்ல முனைதலில் புதியதைத் தோற்றுவிக்கிறது.இது எனது நித்தியத்தின் நெருங்கிய உலகு.




இந்த ஆனந்தப்பாவோ உண்மையின் தளத்தில் நின்று, மரணம் என்பது நிச்சியமானது,இத்தகைய குறுகிய காலத்துள் காழ்ப்புணர்வினது இருண்ட பக்கங்களுக்குள் மனித ஆசைகளைத் தொலைத்து, உயிரின் பெருவிருப்புக்கு எல்லையிடுவதைத் தனது பாடலில் சொல்லாமல் விடவில்லை.மிக இனிமையாகவும்,அழகாவும் பாடல்களைக் கட்டிவைத்து எனது மனதின் இரகசியங்களைச் சுகத்தோடு பாடுகிறார்.இசையின் மிக இயல்பான ஏற்ற இறக்க நிலைகள் மனிதவுணர்வின் மூலைமுடுக்கெல்லாம் இதயத்தின் அழகைப்பாடவைக்கிறது."மனமதானோ மாயவனோ மாலைத் தேச மன்மதனோ"பாடல் வரிகள் இந்த அர்த்தத்தில் பாடப்படுகிறது.



"மெரினா பீச்சிலே குயிலாப் போகுது,மைனா யாரது,லைலா பெயரெது?"எனும் பாடலின் சுகம் தாலாட்டும் எனது விருப்பை-எனக்குள் இழையோடும் பெரு விருப்பை.சின்ன இடை சொல்லும் அர்த்தம் கோடி.சுகத்தின் அழகு அங்கே அடுக்கிவைக்கப்பட்ட கற்பனைகளை உதிர்க்கும்போது இதயத்தின் உன்னதமான இருப்பு மேலெழும் இரத்த ஓட்டத்தின் கட்டுக்கடங்காத பாய்தலில் புரிந்துபோகிறதா? அதுதாம் உண்மை நெஞ்சே!


இதுவொரு தியான நிலை.


என்னையும் எனதும் இருப்பையும் சதா உணர்த்துவது எனது எதிர்பால்வினையே!இதைக்கடந்தவொரு பெரும் அழகு உலகத்தின் எந்த மூலையிலும் இல்லை என்பதை நான் அறிவேன்!இதை மறுத்துவிட்டு பிரமத்தோடு கதைவிடுவதில் பெரும் தவத்தடிகள் நம்மை முடக்கியுள்ளார்கள்.இங்கே, ஊசியில் நூலாய் என்னைக் கோர்த்துவிடும் டானியலின் இந்தப்பாடல்கள் எனது வாழ்வினது மிக உன்னதமான அந்த முதற்காதற் காலத்தைத் தரிசித்துக்கொள்வதற்கும்,இன்றைய இளநங்கையின் உடற்பாங்கின் அழகுகண்டு, உளக்கிளர்ச்சியை எனது அகத்தில் பெரூவூற்றாய்த் தோற்றுவித்துக்கொள்வதில் வெற்றிக் கொடிநாட்டுகிறது!நான் தவிப்போடு இருக்கிறேன்.எனது குழந்தைகளும் காதற்கீதம் இசைத்தபடி தமது உலகத்தில் தவழும்போது நானும் அத்தகைய நிலையில் இன்னும் இருக்கிறேன்.எனது காதலின் மொத்தவடிவவுமே காமத்தால் கட்டிப்போடப்பட்டது.இதை நானாக எங்கிருந்தும் பெற்றதில்லை.அதை மிகப்படுத்தும் எந்தக்கோலமும் எனக்குள் நித்தியமாக இருந்ததும் இல்லை.என்றபோதும், இந்த அழதைத் தரிசிப்பதில் நான் எனது முன்னோடிகளை மிக நன்றாகவே அறிவேன்.


"ஊர்வசியின் பெண்ணா,மேனகியின் கண்ணா,பூர்வீகம் என்ன?" டானியல் இப்படிக் கேட்டுவைக்கிறான்!



கவிஞர்கள் பெண்களை ஊர்வசிக்கு மேனகைக்கு ஒப்பிட்ட தலைமுறைபோய்,இப்போது இந்தக் கவிஞனோ தலைமுறை இடைவெளியைத் தனக்குள் உணர்ந்து ஊர்வசியின் பெண்ணா என்று அடுத்தகட்டத்துக்கே போய்விட்டான்!என்னவொரு கற்பனை?இவன் காலத்தில் வாழும் கவிஞனல்லோ!இது புகழ்தல் அல்ல-வியப்பு.எனக்குள் வசமாகும் அவன் மொழியினது அனுபவப் பிரதி, என்னில் உலகத்தின் பொதுத் தன்மையைக் காணத் தவறவில்லை.




"சோனா,சோனா சொல்லாமற் போனா"எனும் பாடலில் பிரிவின் துயரைப் "புதுப்பொலிவோடு"சிதறடித்து, வலியைக்கூட வாழ்வின் அடுத்த தரிசனமென அறிந்து அந்த வாழ்வின் அழகோடு இனம் காண்கிறது கற்பனையாற்றல்.பின்பு,வாழ்வின் குறை ஆயுளோடு தனது வலியைச் சரிவு நிலைக்கிட்டுச் செல்வதில் மனித இருப்பை மேலும் உறுதிப்படுத்த அடுத்த கட்டத்தைச் தரிசிக்கச் செய்வதில் ஆனந்தப்பாவின் பாடல் வெற்றிகொள்கிறது.இந்தத் தெரிவு மனிதத் தொடுநிலையை உண்மையாக உருவமாக்கிவிடுகிறது!




இஃது, அர்தங்கள் சொல்லிப் புரிவதில்லை.ஒரு அனுபவமாக நமக்குள் விரியும் இசைத் தொகுப்பு.



என்றும் வலிகளைச் சொல்லி மனித விருத்தியைத் துண்டித்துப் படைப்பாற்றலைச் சிதைக்கும் குறைகளோடு வலம்வராது,தான் காணும் குறைப்பாடுடைய உலக நிதர்சனத்தில் "அழகு அவலட்சணம்" எனும் எதிர்மறை அர்த்தத்தில் எடுத்துப்போடும் நிலைதாண்டிப் பாடல்களைக் கட்டுகிறார்.நெஞ்சின் வலிகளை நிசவுலகத்தில் வைத்து உடைத்துப்பாக்கிற டானியல் "விருத்தியாகச் செல்லும் உலகம் மனிதப் பெருவிருப்பான வாழ்தலில் தன்னைத் தொலைத்தல்" எனும் கோட்பாட்டில் அமிழ்கிறது.இதுகூட ஒருவகையில் தேவைதாம்.நெடுக,நெடுக நாம் விட்ட ரீல்களைத் தாண்டி வாழ்வினது விருப்பம் எழிச்சி கொள்வதில் நாம் அமைதியை மனித வாழ்வின் நித்தியத்தில் காண்பது சாத்தியமே.


தமிழ்க் கதையுலகத்தின் முடிசூடா மன்னன் ஜெயகாந்தனது எந்தக் கதைகளை எடுத்தாலும் அது மனித அழகைச் சொல்வது.அங்கே,எதிர்மறையான பல தன்னிலைகளின் வாழ்வும்,இருத்தலும் அங்கீகரிக்கப்பட்டு அங்கேயும் ஒரு உன்னத மனம் இருப்பதைப் புரிய வைப்பது.


இத்தகையவொரு நிலையை ஆனந்தப்பாவின் ஒரு பாடலில் இனம் காணமுடியம்.அந்தப் பாடல்தாம்"ஐ ஆம் இந்தியன்,ஐ லவ் இந்தியா"எனும் பாடல்.


இங்கே,இந்தியாவின் இன்றைய கோலத்தை நாம் தரிசித்து வருபவர்கள்.அந்த இந்தியா கொடுமைமிகு இந்தியா.சாதி சொல்லி மனிதரை அடக்கும்,உழைப்பவர்களை நடு ரோட்டில் சுட்டுத் தள்ளும்.உரிமை கேட்டுப் போரிடுபவரை குண்டாந்தடிப் பொலிசைக்கொண்டு மண்டையைப் பிளக்கும்.மிகக் கொடுமையான இந்த இந்தியாவை அவன் தனது விருப்பத்தின்படி அழகாக்க விரும்புகிறான்.தான் காணும் இந்தியா இப்படி வருவதில் அவன் ஆசைப்படுகிறான்.இந்த அவனது பெருவிருப்பு இந்தியாவின் அழகாக,உச்சமாக விரிகிறது.


இத்தகைய விருப்பு எமது மனத்தின் தவிப்புதம்தாம்.

இந்தியா உலகுக்கே எடுத்துக்காட்டானவொரு உலகாகத் திகழ்வது எமது விருப்பு.ஆனால்,இந்திய ஆளும் வர்க்கம் இதற்கு மாறானது.எனினும்,இந்தியா ஒரு நாள் இதை உடைத்து முன்னேறும்.அந்தளவுக்கு அதன் உழைக்கும் மக்கள் அழகுடையவர்கள்.அந்த மனித அழகு நிச்சியம் இந்தியாவை விடுவிக்கும்.இதை ஆனந்தப்பா மிக நேரத்துக்கே இனம் காண்கிறார்.போற்றிப் பாடுகிறார் தான் காணும் தரிசனத்தோடு.இவனல்லோ உன்னதமான கவிஞன்!


இதயத்தின் தரிசனம் இது!


கேட்கத்தக்க இசையோடு பிணைக்கப்பட்ட ஆனந்தப்பாவின் கவிதைகள் மிகச் சாதாரணமான மனிதத் தொடு கணங்கள் என ஒதுக்கப்பட முடியாதவை.அவை,மனித உந்து சக்தி.இத்தகைய தரிசனங்களேதாம் இதுவரை இந்த உலகத்தை மாற்றித் தகவமைக்கிறது.அது அடக்கு முறைகளை உடைக்கக் களத்திலும் நிற்கும் அதுபோல காதலிலும் நிற்கும்.இந்த இரு நிலைகளும் அந்தப் பெரும் ஊற்றான எதிர்ப்பால் வினையின் இரண்டு பக்கமே.வாழ்க, சிக்மன் பொரைட்!


இப்போது,பாடல்களை அமைதியாக இங்கே சென்று கேளுங்கள்.


http://www.a4anandappa.com/


கேட்கும்போதே காலத்துக்கேற்ற இதயத்தின் மொழியை உணர்வீர்கள்!


அந்த மொழி நம் எல்லோரதும் மொழியே!.அதைப் பாடலாக்கிய என் அருமை டானியலை-கவிஞனை-அழகுடைய அந்த இசை மனதை நான் மதிக்கிறேன்.வியந்து பெருமிதம் கொள்வதில் என் இதயத்தோடு நெருங்குகிறேன்.


(பிற்குறிப்பு: இப்பாடல்களை நிச்சியம் டி.ஜே.தமிழன் கேட்டுக் குறிப்பு எழுதணும்.இது எனது பெரும் அவா!)


நட்போடு,


ப.வி.ஸ்ரீரங்கன்.12.10.2008

Freitag, Juli 18, 2008

டி.ஜே.சொல்லும் நாடற்றவனின் குறிப்புகள்:(3)

மனிதக் கணம்"கவிதை"ஆகிறது.

"இன்றைய பொழுதில்
ஒரு போரிலிருந்து
இன்னொரு போரைத் தொடக்குதல் குறித்து
எல்லாத் திசைகளிலிருந்தும்
ஆர்ப்பரித்துப் பேசுகிறார்கள்

ஒரு மனிதனை
சிதைக்காமல் தடுக்கும்
மிக எளிய சமன்பாடுகள்
ஒவ்வொரு அழிவின்
தீராநடனங்களிடையே
சுடர்விட்டொளிர்வதை
நிசப்போரின் கொடூரமறியாக்கண்கள்
கவனிப்பதேயில்லை."

டி.ஜே.தமிழனின் கவிதைகளைக் கவிதையென்றழைக்க மனதுக்கு முடியவில்லை-அது வாழ்வு.ஒரு பொழுதேனும் நாம் துய்க்கக் காத்திருக்கும் சாந்த வாழ்வை-தோழமையை-நெருக்கத்தை உணர்வது ஒரு தவ நிலை.எங்குமே அநுபவித்திருக்கமுடியாத மனிதக் கனவைக் கொண்டியங்கும் இளங்கோவின் மொழியைக் குறித்துக் "கவிதை-உணர்வு நறுக்கு-அநுபவம்-வாழ்வு" என்றெல்லாம் சொல்லிப் பார்க்கிறேன்.ஆனால்,எதுவுமே இந்த இயங்கு நிலையைச் சரியாகப் பொருட்படுத்துவதாக நான் உணரவில்லை.

மரபுசார்ந்த கவிதை என்ற வடிவத்துக்குள் நியாயப்படுத்தப்பட்டிருக்கும் தர்ம நியாயங்கள் பல.மரபுக் கவிதையென்றும்,புதுக் கவிதையென்றும் இன்னும் பி.ந.கவிதையென்றும் தொடரும் மெத்தப்படித்தவர்களின் புரட்டு வித்தகத் துண்டுகளின் பின்னே, குறும்பா-கைக்கூ என்று தொட்டுக்கொண்ட இந்தக் கவிதை இன்று உவமையிழந்த அநாதையாகப் பல வடிவில்.

"உவமையும் பொருளும் தம்முள் ஒத்தன என்று உலகம் அறிந்து ஒப்புமாறு உவமை அமையவேண்டும்"-இல்லையா?

மிக நெருக்கமாக உவமையணியைத் தனது அநுபவத்துக்குள் நுழைத்துக் கவிதை சொல்ல இளங்கோவால் முடிகிறதே."யாதும் ஊரே யாவரும் கேளிர் ஒற்றைவரியில் உயிர்த்திருக்கும் கணியன்"என்று மிகச் சாதாரணமாகச் சில உண்மைகளை உவமையாக்கி வைக்கும் பக்குவம் எல்லோருக்கும் அமைவதில்லை.இன்றைய மனித அவஸ்த்தையில் இந்த வடிவம் எப்போதோ செத்தழிந்துவிட்டது.கவிதை அநுபவமான காலத்தில் தேவராம்,திருவாசகம் என்னைப் பாதித்தது.பின்னாளில் கம்பனது கவிதை மொழி பிடித்துக்கொண்டது.ஆனால்,

"இளங் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து
விளங்கு ஒளி மேனி விரி சடையாட்டி
பொன் திகழ் நெடு வரை உச்சித் தோன்றி
தென் திசை பெயர்ந்த இத் தீவத் தெய்வதம்
சாகைச் சம்பு-தன் கீழ் நின்று"

என்று, மனிதம் செறிந்த மணிமேகலை என்றோ அறிமுகமாச்சோ-அன்றிலிருந்து இன்றுவரையும் எனது மனதில் பற்பல ஒளிக் கோலங்களை சாத்தனார் காவியம் ஏற்படுத்திக்கொண்டேதாம் இருக்கிறது.

எளிமை
மனித அழகு
எவரையும் ஒழுங்குபடுத்தமுடியமெனும் நம்பிக்கை
மொழியின் ஆளுமை
இலக்கணக் கட்டு
இடரேயில்லாத உவமைகள்
உருவகம்
உள்ளுறை
இறைச்சி...என்றெத்தனையோ அணிகள்கொண்டு சாத்தனார் என்னைப்படுத்திய பாடு மிகநேர்த்தியானது.


மணிமேகலைக்கான பதிகம்-முன்னுரையே சம்பு என்பவள்,கதிர்களைக்கொண்ட இள ஞாயிற்றின் ஒளியை இகழும் தோற்றமுடையவள் எனும் எதிர்மறையானவொரு உவமையாக எடுதாளப்பட்டு,எழில் மிகு மேரு மலையின் உச்சியில் தோன்றுவதுமாகவும்,பின்பு தென் திசை வந்து (நாவலந்) தீவின் காவற் தெய்வமாக விளங்குகிறாள் என்பதாகவும் ஆரம்பிக்கும் இந்த மணிமேகலைப் பதிகம் உண்மையில் எனக்குள்"ஒளியாக-அறிவுறும் ஒரு தியான நிலை"என்பதாகவே அநுபவமாகிறது.இது அறிதலை உவமையாக்கிற ஒரு பண்பைக் கொண்டியங்குகிறது.சம்பு ஒரு பெண்ணாக-தெய்வமாகக் காட்டப்படினும்,எனது கணிப்பின்படி அவள் அறிதலின் படி நிலைகளைக் கொண்ட சிந்தனையாகவே இருக்கிறது.

இந்த நிலைக்குள்ளே மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளைப் படைப்பு என்ற நிலைக்குள் கட்டுப்படுத்தும் வித்தக நிலையை நான் மறுத்துவிடுவதால்,கவிதை என்பதை நீங்க வைத்து "உணர்வினைச் சிதைக்கும் மொழிக்கு"கவிதை வடிவம் சொல்லிக்கொள்ள விரும்பவில்லை.இதன்மீது கட்டிவைத்துக் கதைவிடும்"யாப்பு இலக்கணம்"பண்டிதர்களின் பல்லாக்காகவே எனக்குப்படுகிறது.நான் உணர்வதைச் சொல்ல முடியாத மொழிக்கு பட்டுக் குஞ்சம் வைத்துப் பல்லாங்கு பாடும்போது அங்கு "யாப்பு இலக்கணம்"இருக்கலாம்.ஆனால்,மனித வாழ்வு-அதன் அநுபவம்,சிந்தனை இருப்பதாக எவருஞ் சொல்ல முடியாது!

இந்த மணிமேகலை சந்தங்களாக விரிகின்றதும்,யாப்புக்குள் அமைய வருடிய எளிய மொழியைக் கொண்டிருப்பதும் ஒரு புதிய வகையிலான மரபோடு(மனித அழகைப் பிரதானப்படுத்தும் மொழி)விரிவதும் இலக்கியச் சிறப்பில்லை.மாறாக,மனிதம் நிறைந்தது என்றே நான் சொல்வேன்.

இப்போது இளங்கோவிடம் வருவோம்.அதாவது,நாடற்றவனின் குறிப்புச் சொன்ன இளங்கோவைச் சொல்கிறேன்-நீங்கள் சிலம்புக்காரனை எண்ணிக்கொள்ள வேண்டாம்.மனிதம் நிறைந்த அநுபவங்களாகவேதாம் டி.ஜே.யின் உணர்வினது மொழிகள் நம்மோடு ஒலிக்கின்றன.மிக எளிமையான மொழி.ஆனால்,இறுகிய வார்த்தைகள்.மிகத் தாரளமற்ற மிகச் சுருங்கிய சொற்களைக்கொண்டு உணர்வதைக் குறித்திருக்கும் பண்பு இளங்கோவின் வாழ்வுக்குள் சிக்குண்டுள்ளது.

ஈழத்துக் கதையாளர்களை-கவிதையாளர்களை மிகச் சமீபத்தில் வைத்து வாசிக்கும்போது,அவர்களிடத்தில் விருத்தியாகி வந்த பாண்டித்தியக் காய்ச்சல் இந்த இளங்கோவிடம் அறவே இல்லாது போகிறது.உணர்வை மொழிக்குள்ளிருந்து விடுவிக்கும் நீண்ட போராட்டத்தில் இளங்கோ மெல்ல இணைகிறார்.முடிந்தவரை எகிறித் தவிக்கும் உணர்வைத் தான் கொண்டியங்கும் மொழிக்குள்ளிருந்து பிரித்தெடுத்துத் தந்ததே டி.ஜே.யின் சிறப்பு.

இந்தச் சிறப்புக்கான உதாரணமாக "இருத்தல்களின் மீது கவியும் இன்மைகள்" எனும் நறுக்கை எடுத்தால் பொருந்தும்.

"செம்மஞ்சளாய்
இலைகள் உதிர்ந்து கொண்டிருந்த பருவத்தில்
முன்பொரு முறையும் சென்றிராத
சிறு தீவுக்குப் பயணித்திருந்தேன்

ஒரு மதுபான விடுதியின்
இருட்டு மூலையில்
என் கோப்பையை நிறைக்கும்
மதுவினைப்போல்
பரவியிருந்தது வெறுமை

அந்நியமான சூழலின்
தோலின் நிறத்தை நிராகரித்து
மொட்டவிழ்க்கும் தோழமை
அழகு நிறைந்தது

இப்போது
நமது உதடுகளில்
நுரைத்துத் ததும்புகின்றன
வார்த்தைகளும் மதுவும்

திடீரென
நடன அரங்கிற்கு இழுத்துச்சென்று
ஆட்டத்தின் எந்தவிதியும் அறியாவென்னை
soca நடனம் இணைந்தாடச் சொல்கிறாய்

மதுவும் இசையும்
நரம்புகளைத் துளைக்க
தளும்பாதிருப்பர் அறிவுஜீவிகள்
நான் உன் பிரியத்துக்குரியவன்
ஆடுகின்றேன்

வாரமொன்று கழிந்து
புறப்படுகையில்
பேரூந்து யன்னலில்
அலைந்து திரிந்த தேக்கமிலை
காலம் முழுவதற்குமான
நமது பிரிவுத் துயரை
காவிச் செல்கிறது

இந்நள்ளிரவில்
நீ சமைத்துப் பரிமாறிய
உன் கலாச்சாரத்துக் கார உணவும்
soca நடன அசைவுகளும்
ஒரு கடிகாரத்தின் முட்சப்தத்தைவிடவும்
அதிகம் தொந்தரவு செய்கின்றன

நீயும் எழுத்தக் கூடும்
தென்னை சூழ்ந்த கடற்கரையில்
ஊரின் ஞாபகம் வந்து
விழிகளிரண்டில் ஈரஞ்சுமந்த
ஒரு நாடற்றவனின் குறிப்பினை."


இலகுவானவொரு மொழியுள் தேக்கி வைத்திருக்கும் மிக நேர்த்தியான மனிதமொழியை பிரித்தெடுத்து நான் சிதைக்கின்ற வேலைக்குள் வதைபடுவதற்கு இந்த அநுபவம் என்னை இதுவரை துரத்துகிறது- முடியவில்லை.அன்பு-நட்பு என்பது மிக உண்மையான மனித நிலை.இந்த உண்மை என்பதை பொதுப்புத்தியுள் திணித்து எவரும் விளங்க முற்படுமிடத்து எனது உண்மை உண்மையில்லை.எனக்கு நண்பர்கள் எவருமில்லை.தெரிந்தவர்கள்-பழக்கமுள்ளவர்கள் உண்டு.நட்பு-நண்பர் என்பதை நான் வடிவத்துள் அடக்கங்கண்ட அர்த்தப்பாட்டோடு சொல்வதில்லை.அத்தகையது நட்புத்தாமா என்று நான் எனக்குள் கேட்டு வைப்பதுண்டு.

மேலே இளங்கே மனித உணர்வினது உச்சமான நட்பு நிலை-அன்பு நிலை-பாசம் குறித்து உணர்வதை வெளிப்படுத்துகிறார்.சிக்கமன் பொறைட்டின் உளவியற் பகுப்பாய்வைக்கடந்து ஆய்வற்ற-அறமற்ற மனிதப் பொது நிலைக்குள் நான் சஞ்சரிக்கிறேன்.அங்கே,எனக்காகக் கட்டிவைத்துள்ள இந்தப் பாசத்துக்குள் எந்த "ஆய்வும்"வந்து குடுமியில் பிடித்து அர்த்தஞ் சொல்ல முனைதல் என்னையும்,எனது மனிதக் குணத்தையும் கொச்சைப்படுத்துவதை அந்த நவீனத்துவம்-இந்த நவீனத்துவம் என்பதையோ அல்லது யதார்த்தவாதம்-ரியலிசம் என்றதைப் புனித்தப்படுத்தும் நோக்கங்கட்கமைய விளக்க முற்படுவதையோ எனது அநுபவம் மறத்தொதுக்கிறது.ஒரு தொகுப்புக்குள் அநுபவமான வாழ்வைக் கவிஞனது உள்ளத்தைக் கண்டு வாழ முற்படுவதே எனது குறிப்பின் நோக்கம்.

என்னைப் பொறுத்தவரை மெய்ப்பாடு என்பது உடம்பினது வழியாக(அடிக்காதீர்கள்.அது புலன்களின் வழியாகவென்று வித்துவான்கள் சொல்வார்கள்)உணர்ச்சியை-அநுபவத்தை-மனித நிலையை-உயிரின் தவிப்பைப் புலப்படுத்துவதாகும்.இந்த நிலையை ஒத்த இளங்கோவின் உயிரின் தவிப்பைப் பாருங்கள்:

"மதுவும் இசையும்
நரம்புகளைத் துளைக்க
தளும்பாதிருப்பர் அறிவுஜீவிகள்
நான் உன் பிரியத்துக்குரியவன்
ஆடுகின்றேன்"


பிரியத்துக்குரியவனாகும் இளங்கோ மனது துள்ளித்திரிகிறது.காடுமேடெல்லாம் இறக்கை விரிக்கும் இந்த மனதுக்கு உலகத்தின் அனைத்து எல்லைகளும்,எல்லைகள் அல்லவே.இது,


"அந்நியமான சூழலின்
தோலின் நிறத்தை நிராகரித்து
மொட்டவிழ்க்கும் தோழமை
அழகு நிறைந்தது"

என்று தனக்கான புதிய தத்துவத்தைத் தனது வாழ்நிலையிலிருந்து பாடமாகக்கொள்கிறது.இதன் உலகம் மிகவும் விரிந்தது.ஒரு சிறு தருணத்தில் தன் உயிரையே வழங்கக் காத்திருக்கும் இந்த ஆற்றல்மிக்க மனித நிலை மிக உயர்ந்த நட்போடு வாழ்வைத்தினம் புதிப்பிக்கிறது.இன்றைய முட்கள் நிறைந்த நவீன அடிமைத்தனமிக்க சமூக அமைப்புள் இதுவொரு கலகக் குரலாக-உயிராக இந்த மனித சமுதாயத்தின் அடித் தளத்திலே ஊற்றெடுத்தபடி நம்மையெல்லாம் வியாபிக்க, நமக்குள் அண்மிக்கிறது புதிய வேதம்.தோழமையின் உயிர்த்திருப்புக் காமத்தோடு கைகுலுக்கும்-வீரத்தோடும் கை குலுக்கும்.இதுதான் பொருள்வாழ்வில் நமக்கு அநுபவமானது.ஆனால்,இதைக் கடந்தவொரு உலகம் உயிரின் தவிப்பில் உலாவருகிறது.இதுதான் மோன நிலை-தியான நிலை என்றெல்லாம் முற்றும் துறந்தவர்கள் சொல்வார்கள்.இந்த முற்றையும் திறக்காத என் பரதேசி நிலையுள் இது வாழும் ஆசை என்றாக விரியும்.இந்த ஆசை தன்னைச் சுற்றிய பெளதிக உலகத்தைப் புரிவதிலும்-நேசிப்பதிலும் தன் மோனத் தவதைக் குவிக்கிறது.அங்கே,



"இந்நள்ளிரவில்
நீ சமைத்துப் பரிமாறிய
உன் கலாச்சாரத்துக் கார உணவும்
soca நடன அசைவுகளும்
ஒரு கடிகாரத்தின் முட்சப்தத்தைவிடவும்
அதிகம் தொந்தரவு செய்கின்றன"


என்று நான் உணரும்போது, மனிதவாழ்வு விருப்பின் அதி உச்சமான தருணம் உயிரின் ஓசையாக எனக்குள் பிரதி செய்யப்படுகிறது.இது, என்னைத் தொந்தரவும் செய்கிறது.நான் சார்ந்து வாழ்பவன்.எனக்கு மற்ற உயிரோடு கலக்கும் அவா எனது மனத்தில் சதா கசிந்தபடியேதாம் இருக்கும் .இதை மேன் மேலும் மெருகுப்படுத்தும் எதிர்ப்பால் வினை எனது மறு உற்பத்தியை நோக்கிய வரம்பில் காதற்கீதம் சொல்லும்.அது, மனிதம் தளர்ந்து சோம்பிய நிலையுள் புத்துணர்வுக்காக ஏங்கும் நிலை.இதை நானோ நீயோ தகவமைத்துத் தரவில்லை.இது இயற்கையின் கொடை.இதை இன்னொரு மாகாக் கவிஞனான கையின்றிக் கையின(Heinrich HEINE)சொல்லும் மொழியினு}டாக நான் உறுதிப்படுத்தமுடியும்.இவனும்,டி.ஜே.தமிழனும் நெருங்கி வரும் நல்லதொரு இடம் மனிதத் தவநிலையாக இருக்கிறது.இருவரது பாடலும் ஒரு சமாந்திரமான மனிதத் தேர்வை நோக்கிச் செல்கின்றன.


Drei und Dreissig Gedichte

(Die Loreley)

Ich weiss nicht,was soll es bedeuten,
Dass ich so traurig bin;
Ein Maerchen aus alten Zeiten,
Das kommt mir nicht aus dem Sinn.

Die Luft ist kuehl und es dunkel,
Und ruhig fliesst der Rhein;
Der Gipfel des Berges funkelt
Im Abendsonnenschein."-என்று கையின பாடுவதும் மனிதத் தவநிலையாகும்.முப்பத்தி மூன்று கவிதைகளுக்குள் கையின கட்டிவைத்திருக்கும் மனிதம் இயற்கையோடு,சமூதாய வாழ்வோடு-வெறுமையோடு-தனிமையோடு,பிரபஞ்சத்தோடு-தன்னைச் சுற்றிய அனைத்தோடும் உறவாடும் தவநிலையாக விரிகிறது.

"எனக்குப் புரியவில்லை,அதற்கான அர்த்தம்,
மிகவும் கவலையோடு இருக்கிறேன்,
பண்டையக் காலத்துப் புனைகதை ஒன்றினால்,
இது எனது மனதிலிருந்து விலகுவதாகவில்லை.

காற்றுக் குளிருகிறது கூடவே இருட்டாக இருக்கிறது
ரையின் ஆறு அமைதியாகப் பாய்ந்தோடுகிறது
மலையுச்சியின் முனை ஒளிருகிறது
மாலைச் சூரிய ஒளியுள்..."


கையின கலக்கமுறுவதும்-களிப்புறுவதும்பின்பு வெறுமைப்பட்டுக்கிடக்கும் வீட்டினது முன் ஆகாயத்தைப் பார்க்கும் பொழுதுகளும்,நாடற்றவனின் புரிதலுக்குள் சிக்குப்படும் நேசமும்-பாசமும்,வெறுமையும் ஒன்றின் தொடர்ச்சியாக எனக்குள்ளும் விரிவதின் தருணம்தாம் எமக்கான மனித இருத்தலும்-இன்மையுமாகும்.எனவே,


"நீயும் எழுத்தக் கூடும்
தென்னை சூழ்ந்த கடற்கரையில்
ஊரின் ஞாபகம் வந்து
விழிகளிரண்டில் ஈரஞ்சுமந்த
ஒரு நாடற்றவனின் குறிப்பினை."


பண்டைய இலக்கியத்துள் காதலன்,தன் காதலியின் அல்குலையும்,இடுப்பையும் உவமை வாயிலாக வர்ணிப்பான்.

"அவாப் போல அல்குல் அகன்றது,சான்றோர் கேள்வி அறிவுபோல இடுப்பு நுண்மையானது"என்றும் வர்ணிக்கின்ற சூழலில் காதலனின் உணர்வுநிலை-வாழ்வு,நெருக்கமுற முனையும் ஆசைக்குப் பின்பான வாழ்தல் வெளிப்படுகிறது.இத்தகைய நிலைமையானது எல்லாவகை நியாயங்களுக்கும்,எல்லைப்படுத்தல்களுக்கும் உட்பட்டுக்கிடக்க முனையாது தனது சுய தெரிவை மிக இலகுவாகத் தேர்ந்து கொள்கிறது.இது இடம்,பொருள்,ஏவல்-காலம் என்ற தர்க்க நிலைமைகளைப் பொருட்படுத்துவதில்லை.இங்கே,

"திடீரென
நடன அரங்கிற்கு இழுத்துச்சென்று
ஆட்டத்தின் எந்தவிதியும் அறியாவென்னை
soca நடனம் இணைந்தாடச் சொல்கிறாய்"


என்று கூறும் நான்.அதே கணத்தில் எல்லையில்லாப் பறவையாக எனது சிறகை விரித்து ஆடுவேன்.அது என்ன பெயரிட்டு அழைத்தாலும் நான் ஆடும் நாட்டியம் மனிதத்தின் வாழும் விருப்பு.இந்த விருப்பே என்னைச் சகலவிதத்திலும் அசைக்கிறது.இதுள் நாம் மகிழ்ந்திருக்கிறோம்,அன்று எனது மண்ணில் இதே மகிழ்வு எனக்குள்ளும் ஊருக்குள்ளும் பாயும் நதியாகத் தடம் புரண்டோடிய காலவெளியில்,நினைவு குத்திநிற்கிறது.இதோ அந்த வாழ்வின் சுவடு:

"மகிழ்வின் சாயல் கலந்துருகிய அக்கணத்தில்
புத்தரையும் காந்தியையும் குழைத்துப் பூசியபடி
அந்நியமான சிலர்
எங்கள் தேசத்தில் பரவினர்
எந்தக் கேள்வியுமில்லாது

சிரித்தபடி வந்தவர்கள்
முகங்கள் இறுகியபடி
முள்ளுக் கம்பிகளுக்குள் புதைந்ததற்கு
காலம்மாறி வீசிய
அமைதியின் புயலும் காரணமெனலாம்"

-அமைதியின் மணம்.இப்படியாக நம்மை நடாற்றில் தள்ளிய நெடும்பொழுது இன்னும் விடிந்த பாடில்லை!நெருப்புக்குள் தேடிக்கொண்டிருக்கும் குளிர்மைக்காக நெருங்க மறுக்கும் உண்மை, ஒரு பொழுதாவது நம்மை அண்மித்தாகவேண்டும்.இளங்கோ மிக அழகாகவே அந்த உண்மைகளின் பின்னே அணிவகுத்துத் தனது நாடற்ற நிலைக்குள் உணர்ந்தவற்றைக் குறிப்புகளாக்குவதில் மிக நேர்த்தியாகத் தன்னையும் புறவுலகத்தையும் உணர்ர்ந்துகொள்கிறார்.இந்த உணர்வின் வெளிப்பாடுகள், மனித நிலையை மறுத்தொதுக்கித் தனிநபர் வாதத்தின் பாரிய உச்சபச்சக் கணைகளை அள்ளியெறியவில்லை.மாறாகத் தன்னையிழந்த பொது மனிதக்கூட்டில் தானும் ஒரு குஞ்சு என்று கீதம் இசைக்கிறது,டி.ஜே.யின் கவிதைகள்.

கழிந்தது பொழிந்தென வான் கண் மாறினும்
தொல்லது விளைந்தென நிலம்வளம் கரப்பினும்
எல்லா உயிர்க்கும் இல்லால் வாழ்க்கை
இன்னும் தம்என எம்மனோர் இரப்பின்
முன்னும் கொண்டிர்என நும்மனோர் மறுத்தல்
இன்னா தம்ம
-புறம் 208.

(தொடரும்,தொடராமலும் போகலாம்.)


ப.வி.ஸ்ரீரங்கன்.
18.07.2008

Samstag, Juli 12, 2008

டி.ஜே.சொல்லும் நாடற்றவனின் குறிப்புகள்:(2)

நம்மை நாம் தொலைத்தோம்...?



விளாமரத்துக் காய்களுக்காய்க்
கல்லடித்த பள்ளி வாழ்வு
மாதாகோயில் படிக்கட்டில் தொலைந்தது தோழமை
தூரத்துக்கு வந்தபின்
தொலைந்தான் சன்னதி தோளோடு நிமிர்ந்து!


கூடித் திரிந்து,குளம்கண்ட மாத்திரத்தில் துள்ளிக் குதித்து நீராடிய பொழுதெல்லாம் தொலைந்திருக்கு.இன்றோ சிறுபகுதி சிறாரிடம் கேம் போயும்,நெற்றோன்டோ டி.எஸ்.சும் மகிமை பெற்றுவிட்டபோது,இந்தப் புவிப்பரப்பில் பெரும் பகுதி மழலைகள் தம்மைத் தொலைத்து உலக விளையாட்டு வீரர்களுக்காக உடை,பாதணி பின்னுகிறார்கள்.தான் பிறந்த குடும்பத்தின் ஒரு நேரக்கஞ்சிக்கு உழைக்கும் மழலை அதே கதியில் தேசத்துக்காகவென்ற கோதாவில் சிறார் இராணுவமாக்கப்பட்டு பலிக்கடாவாக ஆயுதம் தரித்திருக்க,

"எழுதி முடிக்கும்
ஒவ்வொரு வாக்கியத்திலும்
தெறித்திருக்கிறது துயரம்..."

எதைப்பற்றிச் சிந்தித்திருப்பினும்,நாடற்றவர்களின் வாழ்வுக்குள் நிலுவுகின்ற வலியிருக்கிறதே-அது சொல்லி மாளாதது!மழைபொழியலாம்,பறவைகள் பேசலாம்.பாடும் மீன்களும் துள்ளிக்குதிக்கலாம்.ஆனால்,நமது மனம்மட்டும் மெளனத்தால் வருடப்பட்ட வலியைத் தினம் மறப்பதற்காய் இவற்றை இரசிப்பதாகச் சாட்டை செய்யும்.எமது வலிகள் எம்மைத் தினம் பதம்பார்த்திருக்கத் தேசத்தில் எமது சிறார்கள் எவருக்காகவோ-எதுக்காகவோ செத்துமடிகிறார்கள்.இங்கே, இளங்கோவின் கவிதை மனம்மட்டும் எல்லாவகை மெளனத்தையும் மிக நுணுக்கமாக உடைத்துவிட்டு,மரணசாசனம் எழுதப்பட்ட உலகப்பரப்பில் மடிந்துவிடும் சிறார்களைக் காணுவதற்காக-காப்பதற்காகத் தனது உணர்வுகளோடு உறக்கமற்று இருக்கிறது.இந்த மனதின் பிழிவு இயற்கையின் பொழிவோடு உறவாடும் புவிப்பரப்பை நனைத்துவிடும் குருதியாக இனம் காணுகிறது.ஆம்!இன்று மழை பொழிகிறதோ இல்லையோ தினமும் சிறார்கள் குருதி சிந்துகிறார்கள்.அது,தேசத்துக்காகவோ அல்லது தெருவில் படுத்துறங்கும்போது மேட்டுக்குடி வாகனத்தின் சில்லுகளின் திமிர்த்தனத்துக்கோ அல்லது அன்னையின் வயிற்றை நிரப்புவதற்காகவோ குழந்தைகள் குருதி சிந்திக்கொண்டே சாகிறார்கள்.மிக யதார்த்தமாகச் சொல்லுகின்ற இந்த மொழி, கவிதைக்கான புதியவொரு தெரிவைக் கொண்டியங்குகிறது.அது குழந்தைகளின் அழிவை ஒப்புவமைக்குட்படுத்தும்போதே அவர்கள் வாழும் வாழ்விட நிலப்பரப்பை அவர்களது குருதியே கரைப்பதாகச் சொல்லிக் குமுறுகிறது.இது,ஒருவகையில் புதியதொரு அத்தியாயத்தை நமக்குள் திறந்துவிடுகிறது.நாம் தரிசிக்கவேண்டிய மனிதம் குறித்து சொல்லிவிடும் மிக நேர்த்தியான அழகை கீழ்வரும் உணர்வு நறுக்கின் வீச்சில் பொலிந்து மேவுவதைத்தாம் மனிதத்தொடுதல் என்பது.இளங்கோவிடம் காணும் கவிதைக் கருக்களெல்லாம் மிக ஆழமாக நாம் உணரும் மனிதத்தைக் குறித்த தெரிவுகள்(பொதுப்புத்தியகற்றிய மாற்றுச் சிந்தனை)-பரிவுகள்-வாழும் ஆசைகள் என்ற தளத்தில் வைத்துச் சிந்திக்கக்கூடிய உணர்வு நிலைகளாகவே நாம் உணர்கிறோம்.


"மழை பொழிந்து
குழந்தைகள் குதூகலிக்கவேண்டிய
நிலப்பரப்பை
குருதியலைகள் மூர்க்கமாய்
கரைத்துக்கொண்டிருக்கின்றன..."

சுடுகலம் சுதந்திரத்துக்காகப் பிறந்திருக்கிறதாகவே தாங்கிக்கொள்ளும் தோளும்,மனமும் எண்ணிக்கொண்டிருக்க,இளமையைத் திருடுகிறது ஆயுதவியாபாரம்.அதன் நடுவே நொந்துபோன இனத்தின் விடுதலை சூழ்ச்சிகளோடு பின்னப்பட்டிருக்கிறது.வாழ்வினது ஆதாரமாக இருக்கும் நிலம் உயிரோடு உரிமைகட்டிப் பேசுகிறது.உப்பற்ற உடலுக்கு ஒருவேளை ஆகாரந்தர மறுக்கும் அரசு-அமைப்பு கட்டிவைத்திருக்கும்"பொதுப் புத்தியில்"குருதி அலைகள் வாழும் அத்தனை ஆதாரங்களையும் மூழ்கடிக்கிறது.மனம் நொந்துவிடுவதல்ல இந்தக் குறிப்புக்குள்.ஏனெனில்,

"ஒரு முத்தத்தையும்
இன்னொரு முத்தத்தையும் பிரிப்பது
வினாடிகள் அல்ல
விரலிழுக்கும் துப்பாக்கி விசை."

மனித மனம் சுகத்துக்காக ஏங்கியிருப்பதும்,தன்னைக் குறித்தான பாதுகாப்பு உணர்வினாலும் தினமும் சாகா வரம் வேண்டிக் கொள்கிறது.இது இயல்பு.என்றபோதும்,இயற்கையின் விதிகளுக்கு மாறாக மரணத்தைக்காவிவரும் புறவுலகத்துப் பொதுத் தேவையானது எப்பவும் பொருளுலகத்தின் புதியபாணிக் கவர்ச்சி வாதத்தோடு"தேசம்-தியாகம்"பற்றிக் கதைவிடுகிறது.இறுதியில் இழக்கப்படும் மனித இருத்தலோ எந்த மகத்துவம் வேண்டிக் குருதி சிந்துகிறதோ அது வர்த்தகத்தினது வியூகத்தின் மகிமையாகிறது.பொல்லாத வாழ்வு.சின்னஞ்சிறாரைக்கூட வேட்டையாடும் ஒரு உலகை இந்தப் புவிப்பரப்புக் கொண்டிருக்கிறது.எனினும், இந்த இடர்விட்டு இடம் தேடியலைந்து உயிர்த்திருக்க இந்தச் சிறார்களால் முடிவதில்லை.திறந்த வெளிச் சிறையில் கட்டாயமாகக் கடத்தப்பட்டு ஆயுதம் தரிக்கப்பட்டு பலிக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு சூழலிலும் இந்தச் சிறார்களின் மனது, வலசைபோய் தகுந்த இடம் தேடும் பறவைகளைக்கண்டு ஏங்குகிறது!ஒரு கட்டத்தில் பசுமையான புவிப்பரப்பு என்னைக் கொல்கிறது.இது, எதற்காகப் பசுமையோடு விரிந்து மேவுகிறது?நான் ஆயுததாரியாக்கப்பட்டுக் கட்டாயமாகக் கொல்லப்படும் கணம் வரை எனது மனதில் ஏதோவொரு மூலையில் எல்லைகள் இழந்த புவிப்பரப்பின் இருத்தல் ஏக்கமாகிறது-இது உயிரின்மீதான நேசம்,வாழ்வுமீதான பற்றுப் பாசம்.நான் தடையின்றி எனது உயிர்த்திருப்புக்காக இந்த எல்லைகளை உடைத்தாக வேண்டும்-முடியுமா?


இங்கே,

"பசுமை விரித்த புல்வெளியில்
மஞ்சளாய் பூத்திருக்கிறது
நேசம்
வலசைபோய்
மரங்களில் வந்தமரும் பறவைகளின்
சிறகில் மிதக்கின்றன
எல்லைக் கோடிலில்லா நிலப்பரப்புகள்..."

வாழ்சூழல் பாதிக்கும்போதோ பறவைகள் கண்டம்விட்டுக் கண்டம் தாண்டுகின்றன,அவைகளைக் கைதுபண்ணிக் கஷ்ரடியில் இட்டுவிடுவதற்கு இந்த மனிதர்களுக்கு எவரும் பட்டயம் எழுதிக் கொடுக்கவில்லை அவைகளின் வாழும் வலயத்தை.சுதந்திரமாகவே வாழுகின்றன பறவைகள் என்று மனித மனம் எண்ணுகிறது.நினைத்த பொழுதுகளில் பாதுகாப்புத் தேடிக்கொள்ளும் அவை.அதுபோன்று நானோ அல்லது நீயோ ஆகமுடியாது.கடைக்கோடி யுத்தத்துள் மூழ்கித் தவிக்கும்போதும் உயிரைக்காத்துக்கொள்ளும் மனதுக்கு தேசங்களின் சட்டங்கள்-எல்லைகள் பெரும் மதில்களாகத் தடைகளைப் பிணைத்திருக்க மனிதம் குற்றுயிரோடு ஏங்கிச் சிதைகிறது.ஆப்பரிக்கக் கண்டத்த மனிதர்கள் மகத்துவமான வளங்கள் நிறைந்த தமது பூர்வீக நிலத்தை இழந்து கடல்தாண்டி ஐரோப்பிய நுழைவாயிலான ஸ்பெயினுக்குள் குற்றுயிரோடு கால்பதிக்கக் கடலில் மூழ்கிறார்கள் நேற்றுவரை.மாண்டுபோனவர்கள் கடலோடு அள்ளுபட்டுப்போனபின் ஒருசிலரைக் கைது செய்த எல்லைகள்,எனக்கும்-உனக்கும் சுதந்திரஞ் சொல்கின்றன.இந்த எல்லைக்கோடறியாப் பறவைகளின் சிறகைக் கனவுக்குள் திணித்துவிட்ட இந்தப் பயணம் மனிதர்களுக்கு வசமாவதில்லை.ஒரு புள்ளியில் மனிதம் சிறையுண்டு கிடக்கிறது.இது மனிதர்களே மனிதர்களுக்கான தடைக் கற்களாக இருப்பதற்கு எடுக்கப்பட்ட உடமைகளின் தெரிவில் தோன்றிய வரலாறு.எனினும், வாயினுள் மென்று தொண்டைக்குள் திணிக்கப்படும்வரை சுதந்திரம் இருப்பதென்ற இந்தத் தேசங்களின் வரைவிலக்கணத்தில்தாம் எத்தனைவகையான தடைக்கற்கள்?மனிதம் சிறகுகொண்டு விடுதலைக்காகப் பறந்துவிடுவதில் தோல்விகண்டுவிடுகிறது!

"மதியப் பொழுதில்
பெயரறியா நிலப்பரப்பை
உதிர்க்கும் பறவை
எனக்காய் விட்டுப் போகின்றது
நெடுந்தூரப் பிரிவின்
வாதையை."

நாடுதாண்டி உயிர் தப்பினேன் அல்லவா?எனது வலி நெடியது.அது நெடுந்தூரத்துத்துக்குத் தள்ளப்பட்ட எனது இருப்போடு உறவாடும் தாயகத்தின் மடியில் எனது நீண்ட மனதைக் காவித்திரியும் தென்றலுக்குத் தெரியும்.இந்தப் பெயரறிந்திருக்க முடியாத புதிய நிலப்பரப்பை வந்தடைந்த எனது உயிர்ப்புக்குப் பறவையின் சிறகடிப்பில் உதிர்ந்துபோகிறது காலம்!காலத்தில் தவித்திருக்கும் எனது மனதுக்குக் கூட்டு வாழ்வு மட்டுமே கைகூடவில்லை.சுற்றுஞ் சூழலிழந்தும் சொந்தக் குடிலையிழந்த நெஞ்சுக்குப் பிரிவினது வலி நெடியகதையாகிறது.அதை எனது இயல்புக்கு மாறாக இந்தப் பட்ஷி தனது சிறகு விரிப்பில் வாதையைச் செப்பிச் செல்கிறது.

இங்கே, நான் பாடுகின்றதும் ஒருவிதத்தில் என்னை மீடெடுத்து மறு வார்ப்புச் செய்திடவே.எனது பிரிவின் தொடர்ச்சியான வலி எனது உறவுகளை விடுவதில்லை.அவர்களும் சொந்த நாட்டுக்குள்ளேயே நாடற்றவர்களாக இருக்கின்ற ஈழத்துப் போர் அரசியலில் எனது ஓலம் ஒரு நாடோடியைப்போல அல்ல-அது நானேதான்,இப்போது இந்த நாடோடியின் இதழ்கள் முணுமுணுக்கின்றன:

"எனக்கான
எல்லாப் பாடல்களும் தீர்ந்துவிட்டன
சிலிர்ப்பூட்டும் இசைக் கோர்வைகளற்று

முதலாம் பக்கம் விரிக்கும் முன்னரே
முடிவை வாசித்துவிடும்
வாசிப்பனுபவமாய் அலுப்புடன் படபடக்கின்றன
வாழ்வின் பக்கங்கள்

எல்லை கடந்த கடல் நீரேரியில்
மண்ணைப்பிரிந்துவிடா வைராக்கியத்துடன்
இறுகப் பற்றிய மண்ணின் மணம்
கரைந்து
மறுகரத்தில் அகப்படாது விழிந்தோடிய
நீரைப்போல ஆயிற்று
இன்று,
ஊரின் நினைவுகள்

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
எனும் ஒற்றைப்பாடலில் உயிர்த்திருக்கும் கணியனுக்கு
எப்போது திரும்பினாலும் காத்திருக்கும்
ஓர் ஊர் வாய்த்திருக்கலாம்

பிரியமுற்று
காதல் சொல்லத் தயங்கிய
இந்தப் பெண்ணின் விழிகள் பார்த்து
விடைபெறல் இயலாது

அன்பைத் தவிர
எதையும் பிரதிபலிக்கத் தெரியாத அம்மாவுக்கு
எழுப்ப எழுப்ப
நத்தையைப் போலச் சுருண்டுகிடக்கும் போர்வை
ஞாபகப்படுத்தக்கூடும்
எனது இல்லாமையை

தடயங்களின்றி
இந்த ஆண்டு இப்படி இறப்பு
இன்னபிற குறிப்புகளின்றி
பெயரறியா வனாந்தரத்தில்
கொண்டாட விரும்புகிறேன்
எனது மரணத்தை."

பிரிவு-தொலைவு,இல்லாமை-வெறுமை.இத்தனையும் ஒருங்கே பெற்றவர்கள் நாம்.ஓரத்தில் உழன்று வாழ்வு நாறிப்போகிறது!

சவக்கிடங்குகள் நிரம்பி வழியும் தேசத்தில் இல்லாமை என்பது இருவகைப்பட்டது.

ஒன்று உயிரற்றுப் போய் இருப்பிழத்தல் மற்றது முகம் தொலைத்துப்போன திசையில் சவங்களாக வாழ்வைத் தேடுவது.

இந்த இரண்டும் சாரத்தில் ஒன்றெனினும் செத்தவர்கள் செத்தவர்களே.

சாவதற்காக அதைத் தினம் தேடுவதில்தாம் சாவினது வலி அதிகமாகிறது.

இந்தப் பூமிக்கு நான் வரக் காரணமாகவிருந்தவளுக்கு எனது இல்லாமை போர்வையின்வழி ஞாபகப்படுத்தும் நான் உண்மையில் அன்பையும்,அரவணைப்பையும் மீளப்பெறும் எதிர்பார்ப்பில் தவிப்பதன் தொடர்ச்சியாகவே அங்ஙனம் முணுமுணுக்கிறேன்.அன்னையின் அகத்துக்குள் நான் இருக்கிறேன்.அவள் வாழ்வின் பெரும்பகுதி எனக்குள்ளே விரிகிறது.

ஒருவகையில் நான் அவளை மனதில் காதலியாகச் சுமக்கிறேன்.
அவளைப் பிரியும்போது என்னால் விழிகளோடு வழிகள் பொருத்த முடியவில்லை.நான் இந்த வலிக்காக நொந்து தொலைகிறபோது எனது மரணங்குறித்து எந்தத் தடயமும் இருக்கக்கூடாது.இது எனது நிலைத்த இருப்பை இல்லாதாக்கும் கயவர்களை நோக்கியே நான் பாடுகிறேன்.நான் இருப்பதாகவே அன்னை எண்ணிக்கொண்டாகவேண்டும்.

எனது அழிவில் திணறும் பெத்தமனம் என்னை வருத்தும்.அவளது பூரிப்புக்கு எனது மரணம் குறுக்கே நிற்பதை நான் ஒருபோதும் அனுமதியேன்!

நான் வாழ்வினது எல்லாப் பக்கங்களையும் வாசிக்கிறேன்.அது இயல்பான எனது சுயத்துக்குச் சுகமான சங்கீதமாகிறது.எனினும்,இந்த வாழ்வு அலுப்பூட்டுகிறது.போர்,அழிவு,தேசம் தொலைத்தல்,குண்டடிபட்ட குருதி சிந்தும் உடலம்,ஊனம் மிக்க தேசத்தின் ஓழுங்கின்மீதான எனது விருப்பு எள்ளளவும் விட்டுப்போகாத திசையில் நான் மரணிக்கின்றதைத் தவிர வேறு வழி எனக்கில்லை.


(தொடரும்.)
ப.வி.ஸ்ரீரங்கன்
12.07.2008

Freitag, Juli 11, 2008

டி.ஜே.சொல்லும் நாடற்றவனின் குறிப்புகள்

தேசம் தொலைத்தோம்...


மக்களே,உங்களது இராச்சியத்தின் மீது
விசுவாசமாக இருக்கும் நான்
எல்லாம் வல்ல உங்கள் கிருபையின் தயவால்
சத்தியத்தைத் தரிசித்து,
என்னால் கண்டடைந்த உங்கள் ஒளியை
உலகுக்கு ஒப்புவிக்கிறேன்:

ஓரத்தே நீரின்றித் தவிக்கும் தவளைபோல் நான் ஊரின்றித் தவிக்கிறேன்.

என் பிள்ளைகளுக்கோ அப்பா,அம்மா தேசம் புரிந்திருக்க மனமாகினும்-இந்தத்தேசத்தை நிசத்தில் பார்க்க முடியவில்லை-ஈழம் எனது தாயகம்!


நாளைய பொழுதுக்கும் வேலைக்கு வருவதற்காக மட்டும் படியளக்கும் என் வேலைத்தல உரிமையாளர்கள் இந்த வகைக்களுக்கான தேவைகளை எப்படிக் கவனிப்பார்கள்?இந்தாண்டு விடுமுறையானது பியர் போத்தலோடு போகிறது.பொழுதுபோக்குத் தோட்டத்தில் அமர்ந்துள்ள நான் ஒரு கவிதைத் தொகுப்புக்குள் வாழ முற்படுவதுகூட ஒரு விசித்திரமான உணர்வினாற்றாம்.தேசம்-தாயகம்.உயிரினுள் உறங்கும் ஏதொவொரு வலி மேலெழுகிறது.நாடற்றவனின் குறிப்புகள் எனது வலியையும் தனக்குள் இணைத்துவிடுவதால் அது பொதுவானவொரு தளத்தில் நமது குறிப்புகளாகிறது.

கடனில் மூழ்கித் தொலையும் பொழுது. சும்மா தருவதுபோன்று பணம் தந்த சிட்டி பாங்(நாளை இன்னொரு பெயரோடு என்னைக் கொல்லும் இந்த வங்கி.பிரான்சின் பகாசூரக்(;(Crédit Mutuel)கடனளிக்கும் வங்கி சிற்றி பாங்கை இன்று வேண்டுகிறது.) என்னை முழங்காலோடு முறித்து விட்டகொடுமையிலிருந்து மீண்டுவிடுவதற்குள் ஐந்தாறு கவிதைகளோடு-கண்ணீரோடு நான் கரைந்து விடுவேன் போலுள்ளது.

"நகரம் பிதுக்கித் தள்ளுகிறது
தனக்கான அவதிகளினு}டு
என்னையும்

ஒரு செர்ரிப் பூ
உதிர்ந்து
நிலத்தை வந்தடைவதற்குள்
மலைபோல குவிகின்றன
கட்டவேண்டிய கடன் பில்கள்..."

மார்பு தட்டும் மண்டையும்,தானென்ற அகங்காரமும் நிறைந்த மனிதர்களை நாம் தமிழகத்துச் சின்னத்திரைகளில் அனுபவிக்கின்றோம்.ஓரத்தில் மிக நொந்துகொள்ளும் ஆணவத்து அதிகாரத்தால் மனதுடையுந்தருணங்கள் பல.இங்கே, மனிதர்கள் நிசத்தை மறைத்துக்கொண்டு கோடிகளில் வாழும் தருணத்தில் நாம் கடன்களோடு வாழுகின்ற உண்மை முகத்துள் ஒரு அதிசயமான வாழ்வாதாரத்தைக் கனவுக்குள் உள்வாங்குகிறோம்.பணம் மட்டும் போதுமாக இருந்தால் வாழ்வு சுகமாக இருக்கும்.

நினைத்தவுடன் எதனையும் ஆட்கொள்ள அதுதானே அவசியமானது?

இதனாற்றான் வள்ளுவனும்"பொருளில்லாருக்கு இவ்வுலகம் இல்லை"என்றான் போல்.

"நகரம் ஏற்றுக் கொள்வதில்லை
வீடற்றவர்களை மட்டுமின்றி
மனதில் ஈரலிப்புள்ளவர்களையும்..."


எனது சுயம் நெஞ்சில் ஈரத்தோடு,தனது தேசத்தையும்,குடும்பத்தையும் தாங்கிக் கனவோடு எதிர்காலத்தை எதிர்கொள்கிறது.வானம் முட்டும் ஈரமனம் தோன்றிக்கொண்டே உலகத்தின் வலியைத் தனதாக்கித், தான் மட்டும் அதிகாரத்திலிருந்தால் இந்தக் கொடுமை எனக்கு- "இவர்களுக்கு"நிகழாதென்கிறது மனம்.என்னை தூக்கி இந்த உலகத்தின் விளிம்பில் வைத்துக் கொள்கிறேன்.இப்போது நான் விளிம்பு மனிதானாகிவிட்டேன்.எனக்குள் வலிகளும்-வேதனைகளும் உங்களைப் போலவேதாம் உண்டு.இதனால்தாம் நான் பொதுவாக இருக்கிறேன் என்ற உணர்வோடு வருகிறேன்.மிகச் சமீபத்து நடாத்தைகள் என்னனுள் பாரிய தாக்கத்தைச் செய்திருக்கிறது.இதனால் எனது மனதில் ஈரம் அதிகமாகிறது.ஏனெனில், நான் தேசம் தொலைத்தவன்.அந்த வலிகள் நம்மை அடிமைகொண்ட முறைமைகளோடு தினமும் ஒரு கனவுக்காலத்தை நமக்குள் தோற்றிக் கொள்ளும்போதெல்லாம் நெஞ்சில் ஈரலிப்பான கனிவும் மற்றவர்களை மனிதர்களாக உணரும் ஒரு தியான நிலையை எனக்குள்ளும் இந்த டி.ஜே.க்குள்ளும் தோற்றிவித்துள்ளது.நாம் மனிதர்கள்.


நகர்ப்புறத்து வாழ்வியல் மதிப்பீடுகளால் தகர்ந்துபோகும் மனிதம் மற்றுமொரு புறமாக மகத்துவத்துக்கான தேர்வை செய்கிறது.இந்தத் தேர்வு தேவாலயங்களில் செபஞ் சொல்வதிலிருந்து தன்னை மீடெடுக்க முனைவதில் மட்டுமே ஆர்வமாக இருக்கிறது-பக்கத்தில் மனிதர்கள் உயிரோடு எரிக்கப்படும்போது.


ஆம்!தேசத்தைத் தொலைத்தவர்களில் பலர் தமது இருப்புக்கு எதிரான பலவிதமான விளைவுகளை எதிர் கொள்வதில்"தீயினால்"சுடுதலும் ஒன்று.நகரங்கள் இனவாதத்தைத் தள்ளிக்கொண்டே மனித நேயம் பற்றிய புதுக்கவிதையும் பாடுகிறது.அத்தகைய தருணத்தில் நெஞ்சில் ஈரலிப்போடு இருக்கும் விளிம்பு மனிதர்கள் வாழ்வுக்கான தேடலோடு பாதுகாப்புத்தேடி நகரத்தை அண்மிக்கும்போது அங்கே உதிரி மானுட வாழ்வு அவர்களை-எம்மை எட்டிப்பார்கிறது.நாம் உயிர்வாழ்வதற்காக உழைத்து உருக்குலைகிறோம்.

"நீயொரு
மரம் நட முயல்கின்றாய்
எனக்குள்..."


இது இலகுவானது இல்லை.நான்-நாம் சலனப்பட்டவாழ்விலிருந்து என்னை-எம்மை மீட்பதற்காக எத்தனையோ தவங்களில் உலாவருகிறோம் இ.ல்லையா?


இதிலொன்று ஓடாய் உழைத்துச் சாவதில் நான், என்னைப் புனரமைக்கிறேன்.இங்கே, எனது மனதும் வெறும் புல் பூண்டே முளைக்க முடியாத தரிசு நிலத்தைப்போல் காய்ந்து வெந்துலர்ந்து விடுகிறதே!இங்கே இன்னொரு பசுமையை நீ வரவழைப்பதற்காக மரம் நாட்டுவது தகுமா?

"தரிசாகிக் கொண்டிருக்கும் மனிதில்
அவ்வளவு இலகுவல்ல
தளிரொன்று அரும்புவது."


நடப்பில்லுள்ள ஒழுங்கின்மீது கைகளை நீட்டிக்குற்றுஞ் சொல்லும் மொழியைத் தகர்த்துவிட்டு குறியீடுகளால் சுட்டப்படும் இந்த மொழிக்குச் சொந்தக்காரன் "நாடற்றவனின் குறிப்புகள்"சொன்ன இளங்கோ.மிகவும் கவனத்தோடு வாசிக்கப்பட வேண்டிய உணர்வுகளை எழுத்தில் வடித்துவைத்துவிட்டு ஓரத்தில் ஒதுங்கிவிடும் புதிய கவிதை மரபுக்கு இளங்கோவும் சொந்தக்காரனாக இருப்பது ஆச்சரியமானது.புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வாழ்வின் அனைத்துச் சங்கதிகளையும் மிக இலகுவாக அனுபவிக்கக் கூடிய நிலையில் இருக்கும் இளைஞனிடம் அடி நாதமாக மனிதம் இழையோடுவது மிக ஆச்சரியமானதாகும்.இந்த ஆச்சரியமான உந்துதலுக்கு ஈழத்துப் போரின் மிக யதார்த்தமான தாக்கம் உந்து சக்தியாகும்.

தன்னையும்,தான்சார்ந்த புறவுலகத்தையும் மனித முகத்தோடு தரிசிக்கும் எழுத்துக்கள் நமது சமுதாயத்தில் அருகி வரும்போது இன்றைய நாடற்றவனின் குறிப்புகள் இதை உடைத்து இதோ எனது வாழ்வு உன்னையும்,என்னையும் இணைத்ததே என்று தனது இருப்பை எனக்குள் பிரதியிடுகிறது.இது,அபாரமான மனிதத்தொடுதலே!

இளங்கோவின் உணர்வு வரிகள் மிகம் மனிதத்தோடும் மனித உந்துதலோடு மிடுக்காகப் பயணிப்பவை.இவரது தொகுப்புள் உள்ள பல்வேறு உணர்வு நறுக்குகள் மிகவும் மனிதவிருப்புகளோடு நம் முன் எழுந்து நடைபயில்பவை.நாம் ஒன்றித்தே செல்வதற்குத் தயாராகும் வாழ்வின் விருப்போடு மிகவும் நெருங்கி நம்மீது பரிவாகவும் பழக முற்படுபவை.தோளில் கரம்பதித்துக்கொண்டே மிக நெருக்கமாக நமது அந்தரங்கத்தை நம் கண்முன் கொணர்ந்து நம்மை எச்சரித்துவிட்டுச் செல்லும் பற்பல மனிதத் தெறித்தல்களை நாடற்றவனின் குறிப்புக்கள் நாம் இனம் காணமுடியும்.

"குழந்தைகள்
காணாமற் போகின்றார்கள்
கடத்தப்படுகின்றார்கள்
காவும் கொள்ளப்படுகின்றார்கள்."

வரிகள் மெல்லியவை.ஆனால், இவற்றுக்குள் உள்ள வலி மிக வலியது.இன்றைய இளையவரின் வாழ்வைச் சிதிலமாக்கும் பொருளுலகத்தில் நாமும் சிறார்களாய் இருந்தோம்.நமது மழலைகளும் அவ்வண்ணமே இருக்கிறார்கள்.எங்கள் வாழ்வில் தரிசித்திருக்கக்கூடிய உலகை இன்றைய சிறார்கள் தரிசித்திருக்க வாய்ப்பில்லை.சிறார் பருவம் திருடப்படுகிறது.ஒருபுறம் கல்விக்காக மறுபுறம் போருக்காக-நாட்டிற்காக.குடும்பங்கள்-பாடசாலைகள் குழுந்தைப் பருவத்தைக் கொன்று குவித்துவிட்ட வெறும் ஜந்திரங்களை உருவாக்கத், தேசமோ தனது விடிவுக்காகச் சிறார்களைப் போரில் இறக்கிக் கொன்று தள்ளுகிறது.இரண்டும் ஒரிடத்தில் சேரும்போது நிகழ்வு ஒன்றேதாம்.

"87களில்
கொடுமிருளாய்த் துரத்திய
சம்பங்களில்
எனது பிராத்தனை
என்றுமே வளர்ந்துவிடக் கூடாது
என்பதாய் இருந்தது

இன்றும்
எத்தனை குழந்தைகள்
பாயில் மூத்திரம் பெய்தபடி
இரவுகளை வெறித்துப் பார்க்கின்றனவோ...?"


மனிதவிருத்தி,மனிதவிருத்தி என்று கூறுகிறோமே அது என்ன?

மனித இருத்தல் வெகுவாகப் பொருள் நலனோடு பிணைக்கப்பட்டபின் அந்த இருத்தலை உறுதிப்படுத்துவது அல்ல சிதைப்பது இன்னொரு சக்தியினால் என்றாகிறது.நான் நாளை உயிரோடு இருப்பதும்,இல்லாதிருப்பதும் நிலவும் அதிகாரத்தினாற் தீர்மானிக்கப்படும்போது எனக்குள் நிலவும் சுதந்திரம் மாயைகிறது.எனது சுயத்தில் எங்கோவொரு வெளியில் உயிர்த்திருத்தல் என்ற ஏக்கம் ஒட்டிக்கொள்கிறது.நான் கனவுகாணும் பட்டாம் பூச்சி உலகம் என்னிடமிருந்து பறித்தெடுக்கப்படுகிறது.அத்தகைய உலகத்தைப் போரினால் கருக்கியபடி நான் இன்னொரு உலகுக்குள் திணிக்கப்படுகிறேன்.அங்கே,நான் மகத்துவமான ஒரு உலகத்தின் கதா நாயகனாக வர்ணிக்கப்பட்ட இன்னொரு உலகம் ஜந்திரத்தனமான எனக்குள் பிணைக்கப்படுகிறது.இது கொடூரமான உளவியல் தாக்கத்தை எனக்குள் நிகழ்த்திக் காட்டியிருப்பினும் பொது மனிதக் கதையாடலில் எனக்குள் இன்னொரு உலகம் கட்டியமைக்கப்படுகிறது.


(தொடரும்.)

ப.வி.ஸ்ரீரங்கன்
11.07.2008

பீ.கே.கே.நகர்த்தும் ஆட்கடத்தல் அரசியல்

பீ.கே.கே.நகர்த்தும் ஆட்கடத்தல் அரசியல்:விடுதலை அமைப்புகள் கற்கவேண்டிய பாடம்?


"feindliche Politik gegenüber dem kurdischen Volk und der PKK" beenden, verlangten die Rebellen am Donnerstag.-Bericht:Spiegel .



"கூர்தீஸ் அமைப்புக்கும் அந்த மக்களுக்கும் எதிரான ஜேர்மனிய அரசியல் நிறுத்தப்படவேண்டும்." என்பதற்காக கூர்தீஸ் விடுதலை அமைப்பான பீ.கே.கே.கடந்த மூன்று தினங்களுக்கு முன் ஜேர்மனியர்கள் மூவரை தென் துருக்கியிலுள்ள அரார்ற் மலைத்(;(Berg Ararat: Legendäre Bergsteigerregion im Osten der Türkei)
தொடரில்வைத்துக் கடத்தியுள்ளது.கடத்தப்பட்ட ஜேர்மனியர் மூவரும் மலை ஏறும் குழுவினராகும்.கடந்த 19.06.2008 அன்று ஜேர்மனிய அரசால் இடை நிறுத்தப்பட்ட கூர்தீஸ் அமைப்பின் தொலைக்காட்சி சேவையான ரோஜ்(Roj TV) தொலைக்காட்சிமீதான தடைக்கு எதிராகவும், அத்தகைய நிகழ்வைத் தொடர்ந்து அனுமதிக்கப்போவதில்லை என்பதற்காகவும் ஆட்கடத்தல் நாடகத்தில் ஈடுபட்ட பீ.கே.கே அமைப்பானது தன்னையும் கூர்தீஸ் மக்களையும் இன்னும் சர்வதேசத்திடமிருந்து அந்நியப்படுத்தும் அரசியலுக்குள் வீழ்த்தியுள்ளது.


இது, மிகவும் வருந்தத்தக்கது!


டென்மார்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் ரோஜ் தொலைக்காட்சியானது ஐரோப்பிய வலயத்துக்கான சேவையையே நிறுத்தியிருக்கிறது இப்போது.கிழக்கு ஈராக் மற்றும் அரேபிய வலயத்துக்கான சேவை தொடர்ந்து இயங்கி வருகிறது.துருக்கிக்கும் டென்மார்க் அரசுக்குமான அரசியலில் விரிவை ஏற்படுத்திய இந்தத் தொலைகாட்சிச் சேவை வழங்கலால் 2005ஆம் ஆண்டு டென்மார்க் விஜயத்தைத் துருக்கிய அதிபர் தவிர்துத் தனது விசனத்தைத் தெரிவித்திருந்தபின் அவர்களுக்கிடையிலான பேச்சுவார்தை, இன்று ரோஜ் தொலைக்காட்சியின் தடைக்கு வித்திட்டுள்ளது.


"மக்கள் சுதந்திரமாகக் கருத்துச் சொல்லுதல்" என்னும் ஜனநாயகப் பண்பை தமது அரசு கடைப்பிடிப்பதாகச் சொல்லி நவ நாசிகளை இயங்க அனுமதிக்கும் டென்மார் அரசோ இத்தகைய தடையை எந்த நலனினின் அடிப்படையில்-ஜனநாயத்தின்படி செய்தார்களோ அதே ஜனநாயமானது வெறும் பித்தலாட்டம் என்று நாம் சொல்வதை இத்தகைய நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன.உலகம் தமது அதிகாரத்துக்கு எதிரான எந்தச் சிறு பொறியையும் அனுமதிக்கப் போவதில்லை என்பதை இத்தகைய நடாத்தைகள் கற்பிக்கின்றன.தமிழ் தேசியத்துக்கு-சிங்கள இனவெறிக்கு எதிரான ஊடகவியலாளருக்கு இலங்கையில் நடக்கும் இத்தகைய அரசியலை நாம் ஏலவே அறிவோம் இல்லையா?


பீ.கே.கே.யின் இன்றைய பண்பானது விடுதலை அமைப்புக்குள் உட்புகுந்த குட்டி முதலாளிய சக்திகளின் நலன் மேலோங்கிவருவதையே இந்த "ஆட்கடத்தல்"நாடகம் உறுதிப்படுத்துகிறது.சரிந்துவிழும் அதன் அரசியலிலிருந்து அந்த அமைப்பு தன்னை விடுவிக்கப் புலிப்பாணியிலானவொரு அரசியலைத் தேர்ந்தெடுத்திருப்பது உலகத்தில் ஒடுக்குமுறைகளுக்காகப் போராடும் விடுதலை அமைப்புகளுக்கு மேலுமொரு சரிவையே இட்டுச் செல்கிறது.



இத்தகையவொரு விவேகமற்ற அரசியலை பீ.கே.கே.செய்திருக்கமுடியுமாவென்று சிந்தித்திருந்தவேளையில்,பீ.கே.கே.யின் ஆட்கடத்தலுக்கான காரணமும் அதன் வேண்டுகோளும் தற்போது ஜேர்மனிய ஊடகங்களால் வெளியிடப்பட்டுள்ளன.


ஜேர்மனிய ஊடகங்கள் இத்தகைய நடாத்தையை மிகவும் முக்கியத்துவம்கொடுத்துப் பிரசுரிப்பதோடு நின்றுவிடாது, ஜேர்மனிய மக்களிடம் கூர்தீஸ் மக்களின் நியாயமான போராட்டத்தைப் பயங்கரவாதமாகச் சித்தரிப்பதற்கான காரணிகளை பீ.கே.கே.செய்துமுடித்துள்ளது.பித்தலாட்டத்தனமான இந்த அரசியல் வியூகம் அந்த அமைப்பை ஏலவே,1993 இல் ஜேர்மனியில் தடைப்படுத்தும் அரசியலாகவே தொடர்ந்தது.இதற்கான அகக் காரணங்கள் ஐரோப்பிய மற்றும் துருக்கிய அரசிய நலன்களோடான எதிர்பார்ப்பிலிருந்து கணிக்கத் தக்கது என்பது மறுபகுதி உண்மை.


ஒரு விடுதலை அமைப்பானது இன்றைய உலக நடப்புகளில் எதைச் செய்யக்கூடாதோ அதைச் செய்வதில் அதன் வியூகம் இழுத்துவிடப்படுகிறது.இன்றைய உலகத்தின் அரசியல்-பொருளியல் நகர்வுகள் அனைத்தும் பொதுவாக மக்களின் நலனுக்கானதாகச் சொல்லப்பட்டு அது யுத்த்தின் மூலமாகவோ அன்றி ஒரு நாட்டைப் பொருளாதாரரீதியாகவோ தாக்கித் தமது நலன்களை முதன்மைப்படுத்தப்படும் அரசியலாக இருக்கும்போது இந்தப் பீ.கே.கே. போன்ற அமைப்புகளின் அரசியலோ அத்தகைய மக்கள்விரோத அரசியலை நியாயப்படுத்தும் செயலாகவே விரிகிறது.


சர்வதேச மக்களின் தார்மீக ஆதரவைப் பெறவேண்டிய ஒடுக்கப்படும் இனங்கள் தத்தமது தலைமையாக ஏற்றிருக்கும் அமைப்புகளின் குட்டி முதலாளிய நலன்களால் தமது எதிர்காலத்தைப் பறிகொடுக்கும் இந்த வகை அரசியலை ஆர்ப்பாட்டம்,ஊர்வலமெனச் செய்து அங்கீகரிக்கும் இழி நிலைக்குள்ளிருந்து விடுதலை பெறுவது அவசியமானது.


இந்த ஐரோப்பிய-அமெரிக்க அரசியல் நலன்கள் ஒடுக்கப்படும் மக்களுக்கு எதிரானதுதாம்.எனினும்,சர்வதேச மக்களின் மிகத் தோதான தார்மீக ஆதரவானது எப்பவும் இந்தத் தேச அரசுகளின் நலன்களுக்குக் குறுக்காகவே இயங்குகிறது.இதையும் உடைத்தெறிந்து தத்தமது மக்களின் அரசியல் எதிர்காலத்தையே நாசப்படுத்தும் மிக இழிந்த"ஆட்கடத்தல்"அரசியலை இந்த அமைப்புகள் செய்வது தமது பிரச்சனைகளை சர்வதேச அரங்குக் எடுத்துவருவதைவிட ஒடுக்கப்படும் மக்களின் விடுதலைப்போராட்டத்தைப் பயங்கர வாதப்போராட்டமாக வர்ணிப்பதற்கும்,அதையே நியாயமற்ற யுத்தமாகப் பிரகடனப்படுத்துவதற்கும் ஏதுவாகவே போய்முடிகிறது!


கூர்தீஸ் அமைப்பினது அரசியலை மிகவேகமாக உள்வாங்குவது கடினமானதாகும்.அந்த அமைப்பின் அரசியல் நடாத்தையானது ஒருவகையில்-கட்டத்தில் சரியானதாகவும் காலவோட்டத்தில் மிக விவேகமற்ற அரசியலாகவும் இருக்கிறது.அந்த அமைப்பின் தலைவர் ஒச்சுலானின் கைதோடு அந்த அமைப்பின் அரசியலை மிக நேர்த்தியாக விளங்கிக்கொண்டாலும் அந்த மக்களின் நியாயமான விடுதலையை இத்தகைய குட்டிமுதலாளிய அமைப்புகள் சிதறடிப்பதை எண்ணிய நாம் நொந்துகொண்டோம்.


இன்று நமது விடுதலை என்பதை நரவேட்டையாகக் குறுக்கிய "ஈழவிடுதலை"அமைப்புகள் எங்ஙனம் நம்மை நடாற்றில் தள்ளிச் சர்வதேசத்தில் நமது விடுதலையைப் பயங்கரவாதமாகப் பிரகடனப்படுத்தினார்களோ அதே பாணியில்தாம் பீ.கே.கே.யினது அரசியல் நகர்வும் நடந்தேறுகிறது.மக்களின் கால்களில்தங்கித் தமது மக்களைக்கொண்டே போராட்டத்தை முன்னெடுக்க முடியாத அமைப்புகள், வெளி நாடுகளுக்கு இடம்-புலம்பெயர்ந்த தத்தமது மக்களின் நிதிப்பங்களிப்பைப் பெறுவதற்கான அரசியலை முன்னெடுக்கும்போது இத்தகைய தொலைக்காட்சி-வானொலிச் சேவைகளையே தங்கியிருக்கின்றன.இத்தகைய ஊடகங்களின் தந்திரமான பிரச்சாரங்கள் கோடி கோடியாகப் பணத்தைச் சம்பாதிப்பதற்கும் அத்தகைய பணத்தைக்கொண்டு ஊடகங்களை உரிமையாக்கி வர்த்தகஞ் செய்வதற்குமானவொரு அரசியலை "விடுதலை"அமைப்புகளுக்கு அவசியமாகிறது.இது புலிகளுக்கோ அல்ல பீ.கே.கே.போன்ற அமைப்புக்கோ விதிவிலக்கற்ற தேவையாகிறதென்றால் இவர்களின் அரசியலானது குட்டிமுதலாளிய நலன்களோடு பிணைந்திருப்பதென்றேகொள்ளத்தக்கது.


"Außenminister Frank-Walter Steinmeier wies alle Forderungen umgehend zurück: "Die Bundesrepublik lässt sich nicht erpressen." Steinmeier forderte die sofortige und bedingungslose Freilassung der Geiseln."-Steinmeier in Spiegel.ஜேர்மனிய வெளிநாட்டமைச்சர் ஸ்ரையின் மாயர் கூறுவது தற்செயலான வார்த்தைப் பிரயோகமல்ல.அது ஜேர்மனிய அரசு உலகத்துக்குக் கூறும் வாக்கியம்தாம்"தம்மை எவரும் மிரட்டுவதற்கோ அன்றி வற்புறுத்துவதற்கோ தகுதியற்றவர்கள்"என்பதே ஜேர்மனியர்களின் அரசியல் உளவியல்.


இந்த ஜேர்மனிய அரசோ"எம்மை எவரும் கட்டாயப்படுத்தித் தமது பயங்கரவாத அரசியலை நியாயப்படுத்த முடியாது."என்கிறது.ஆட்களைக் கடத்தி அதற்காகத் தண்டப்பணத்தைக் கோராதுபோயினும் பீ.கே.கே.யின் கோரிக்கை என்பது நகைப்புக்கிடமானதாகும்.ஒரு அரசு தத்தமது நலன்களைக ;கடந்து ஒருபோது செயலாற்றமுடியாது.அத்தகைய அரசுகளை மக்களுக்கு அண்மித்த நலன்களைக்கொள்ளும்படி வற்புறுத்திக்கொள்வதற்கு மாறாக அந்தந்த அரசுகளின்கீழ் வாழும் மக்களை அண்மித்த அரசியலை ஊக்கப்படுத்தியாகவேண்டும்.சர்வதேச மக்களை அண்மித்து அவர்களை நமது தேசங்களின் விடிவுக்காக வென்றெடுக்கும் அரசியலை ஆட்கடத்தலூடாக வற்புறுத்திச் செய்துமுடிப்பதன்பது வெறும் மாபியாத்தனமான அரசியலற்ற குட்டிமுதலாளிய அமைப்புகளின் செலாகவே இருக்கும்.


கடந்த பல தசாப்தமாகக் கூர்தீஸ் இனமக்கள் ஐரோப்பாவினதும்,அமெரிக்காவினதும் காற்பந்தாகவே கிடந்து அடிவேண்டுகிறார்கள்.


இத்தகைய அரசியல் நடாத்தையினால் அந்த மக்களைக் கொன்றுகுவிக்கும் துருக்கியப் பயங்கரவாத அரசியலும் அந்த நாட்டின் இராணுவமும் மிக மோசமாக கூர்தீஸ் மக்களை அழித்தொழித்தபோது கணிசமான மக்கள் ஐரோப்பியக் கண்டத்துக்குள் அகதிகளாக(நம்மைப்போல்)புலம் பெயர்ந்துள்ளார்கள்.அவர்களின் கிட்டத்தட்ட150.000.பேர்கள் ஜேர்மனுக்குள் வாழ்கிறார்கள்.இந்த மக்களின் தார்மீகப் போராட்டங்களைக்கூட இனிவரும்காலங்களில் ஜேர்மனிய மக்களால் உதாசீனப்படுத்தப்படும்.ஆட்கடத்தல் நாடகத்தால் அழிந்துபோகும் மக்களின் எந்தவுரிமையையும் வென்றெடுத்ததாக வரலாறில்லை.சரியான தெரிவுகளுடாகச் செய்து முடிக்கப்படும் அரசியலை இழந்த அமைப்புகள் தமது இயக்க நலனுக்காகச் செய்யும் எந்தப் போராட்டமும் வெற்றியளிக்காதென்பதற்குத் தமிழர்களாகிய நமக்குப் புலிகளின் அழிவே சாட்சியாக இருக்கிறது.இந்த அரசியலையே மேன்மேலும் குட்டிமுதலாளிய அமைப்புள் செய்துகொள்ளும் என்பதற்குப் பீ.கே.கே.யின் ஆட்கடத்தல் அரசியலும் சாட்சி பகிர்கிறது.


ப.வி.ஸ்ரீரங்கன்
11.07.2008


P/S:படங்கள் ஸ்பீகல் ஒன் லைனிலிருந்து எடுக்கப்பட்டது,அதற்கு நன்றி.

Samstag, Juni 28, 2008

ஊழ்வினை வந்து உயிர் உண்டு கழிந்தது

எழுக
என எழுந்தாய்த் தமிழ் தேசம்!


நீல மேகமும்
நெடும் பகற் பொழுதும்
இடுமுள் வேலிதாங்க
தெருவெங்கும் இருண்டு கொடுவரி மறுகும்
கால் வலிக்கும் ஜந்திரம் ஓயாது:யுத்தம்!

"போய் வா"என் கோ,பெருந்தகையே!
பார்த்திருப்பதற்குள்ளே விரிதிரைக் கடலொடு
முதிரக் காத்திருக்காது உதிரக் கண்டேன் கனா!
இங்கு ஓடாய் உழைத்தவர் உறக்கம் தொலையும்

மதிலொடு ஒட்டிய ஓணானுக்கும்
ஒரு வயிறுண்டு
ஓரத்தில் கொட்டும்
தூசி மேகம்

எதற்காகவோ இருப்பழியும் காலம்
யானுளம் கலங்கி
யாவதும் அறியேன்
ஓதுவதற்கு ஒப்பாருமில்லை
ஒழிக என் கூதற் காலம்!

நெடும் புனல் நீக்கிய மறைப்பில்
துயிலிழந்த தெருவோரத்துக் கண்மாய்
பெரு நரிக்குக் கொண்டாட்டம்
துள்ளிக் குதிக்கும் மீனுக்கு அழிவு
இளநிலாக் காயும்
இருளாற் கவ்வும் இயக்கமும் அதுவாய்


எழுக என எழுந்தாய்த் தமிழ் தேசம்
எங்கேயும் கெந்தகப் புகையுண்ட குறை முகங்கள்
வல்லூறு வட்டமிட
ஊழ்வினை வந்து உயிர் உண்டு கழிந்தது

பொன் திகழ் மேனியொடு பலர் தோன்றி
செங்கோல் காட்டிச் சொல்லிய கதைகளும் ஆறிய கஞ்சி
இருளிடை புகுந்த ஒளிமுதற் கடவன்
கோன்முறை வெடிபட வருபவர்
அடுபுலி அனையவர்
படுகடன் இது?

Freitag, Juni 13, 2008

இட்டுக்கட்டப்பட்ட சமூக உளவியற்றளம்

சமூக மனிதர்கள்!


"நேர்மையாய் வாழவேண்டுமாயின்
வதைபடுதலும்,
குழம்பிக்கலங்குதலும்,தொடங்குதலும்,தூக்கியெறிதலும்
எந்நேரமும்
போராடுதலும்,இழப்புக்கு உள்ளாகுதலும்
இன்றியமையாதவை..."-டோல்ஸ்டோய்.


நடக்கின்ற இந்த நூற்றாண்டில் எங்கு பார்த்தாலும் யுத்தம்,மனித அழிவு- பயங்கரவாதம்,பேச்சுவார்த்தைகள் என்ற கதைகள்...நாம் இவற்றுக்குள் வாழ்ந்து,போராடி, முகம்கொடுத்து உயிர்தப்பி...அகதியானபின் இவைகள் தினமும் நமது விழி, செவியோரம் வந்து போகின்ற கதையாகியாகி...
என்னதாம் நமது பிரச்சினை?

எதனால் யுத்தம்- பயங்கர வாதம் என்ற கதைகள் அரங்கேறுகின்றன?எது பயங்கரவாதமென்று எந்தத் தேச அரசாவது வரையறை செய்திருக்கா?
எதனால் நாம் அகதிகளானோம்? எப்போது நமது அகதிவாழ்வுக்கு முடிவு வரப்போகிறது-எங்கள் குழந்தைகள் அகதி முகமிழந்து வாழ்வது?

மனித சமூகத்தின் உயிர்நாடியே உழைப்பைச் சுற்றியே இயங்கிக்கொண்டிருக்க,அந்த உழைப்பை நல்கும் உடல்கள் தினமும் ஒருபகுதி மரணித்தபடியும்,மறுபகுதியோ ஒரு குவளை சோற்றுக்கு அல்லாடும் நிலை மூன்றாம் மண்டல நாடுகளில்மட்டுமல்ல.மாறாகச் செல்வம் கொழிக்கும் மேற்குலகத் தொழில்வள நாடுகளிலும்தாம்!என்றபோதும் இந்த உழைப்பால் சேர்ந்த செல்வமானது கடந்த நாற்பது ஆண்டுகளுக்குமுன் சேர்ந்த செல்வத்தைவிட, 23 பங்கு அதிகமாகச் செல்வம் சேர்ந்துள்ளது இன்று.எனினும் அன்று கட்டிய கட்டங்களை,சமூகச் சொத்துக்களை மறுசீரமைக்கக்கூட இன்றைய அரசுகளால் முடிவதில்லை.அப்போ சேர்ந்த செல்வமெல்லாம் எங்கே?

தமிழ் மக்களுக்கு எதற்காக யுத்தம் அவசியமாகிறது?

போரின்மூலம் நமக்கு எது வந்து சேருவதாகச் சொல்கிறார்கள்?

தமிழீழம் என்ற தனியரசானது தமிழ்பேசும் மக்களின் உழைப்பை நியாயமாகப்; பங்கிட்டும்,அவர்களது வாழ்வை எந்த வகையிலும் சுரண்டாமல் பாதுகாப்பதற்கும் நிச்சியம் உண்டா?இதைவிட இத்தகைய அரசு சாத்தியமானதா? நாம் எந்தத் தளத்திலிருந்து கருத்தாடுகிறோமென்பதை எல்லோரும் அறிந்தோமா?

தனி நபர்களை வழிபடுவதும்-தூற்றுவதம் அற்புதமான மனித- தேசப்பண்பல்ல.எனவே மீளவும் கேட்போம்:
எதற்காக யுத்தம்?

எதற்காப் பேச்சுவார்தை?

எதன்பொருட்டுச் சமாதானம்?

உழைத்தோய்ந்து வீடுமீளும் நம் கனவுகளுக்கெட்டாதபடி உலகத்தில் நிகழ்வுகள் நடந்து முடிகின்றன!நாம் காணும் உலகானது நமது கற்பனைகளுக்கெட்டமுடியாதவொரு திசையில் நகர்ந்தபடி.எத்தனையோ சிக்கல் நிறைந்த புனைவுகளால் இந்த உலகத்தை நாம் எதிர்கொள்வதாக இருக்கிறது.அந்தச் சிக்லை "உற்பத்தி,உபரி"-உழைப்பு,உழைப்புச் சக்திகள்"எனும் பொறிமுறைகளே உருவாக்கின்றன.மனித உழைப்பின் திறனே உபரியாகி அந்த உழைப்பை நாறிடிக்கின்ற சிக்கலில் நாமெல்லோரும் நலிந்து போகின்றோம்.இந்த நலிவானது உபரியின் திரட்சியில் பலரைப் பட்டுணிச் சாவுக்குள் தள்ளிச் சிலரைப் பிரபுக்களாக்கின்றபோது அங்கோ அந்தப் பிரபுக்களே நமது வாழ்வைத்தீர்மானிக்கின்றார்கள்.

இவர்களின் இருப்பில் நமக்கென்றொரு நிறுவனப்பட்ட சமூக இயக்கம் சாத்தியமாகிறது.அது கிரமமாக நமது உழைப்பைத்திருட வெளிக்கிடுகின்றபோது அங்கே பல கூறுகளாகச் சமுதாயக்கட்டுமானங்கள் எழுகின்றன:


இந்த நிலையில் ஒரு மனிதர் தாம் கொண்டுணரும் அறிவானது திட்டமிட்ட நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட அறிவென்பதை முதலில் உணர்தல் அவசியமாகிறது.அங்ஙனம் உணர்ராதவரை தான் சார்ந்துகொள்வதும் அதனு}டாகத் தனது நகர்வை அத்தகைய சார்பு நிலைக்குள் அடைவு வைத்தலும் நிகழ்கிறது.இங்கேதாம் நமது உருவாக்கம் அவசியமாகிறது!

நாம் யார்?

நிறுவனங்களின்,இயக்கங்களின்,அரசுகளின் அடிமைகளா?

அல்லது நம்மைப் புரிந்துகொண்டு நமது விடுதலைக்குகந்த கல்வியின்,கேள்வியின்மூலம் நம்மை வளர்த்தெடுத்துப் இத்தகைய நிறுவனங்களுக்கெதிராகப் போராடப் போகின்றோமா?

இவை கேள்விகள்.ஆனால் நாம் சிந்தித்துச் செயற்படும் காலமே நமது விழிகள்முன் நிழலாடுகிறது.

மனித சமூகத்தில் கருத்துக்களைக் காவிக்கொள்ளும் தனிநபர் தனது வளர்ப்பு முறைமைகளை அறியாதிருக்கும்வரை இன்றைய நிறுவனங்களின்,அரசியல் இயக்கங்களின்-கட்சிகளின் பொய்மைகளைக் காவும் சுமை காவியாகவே வலம் வருகின்றார்களென்பதற்கு நமது ஈழத்து அரசியல் நம்பிக்கைகளை-இயக்கவாதமாயைகளை,தனிநபர் துதிகளை,போலித்தனமாகத் தனிநபரைத் துதித்துக் கொண்டு, தமிழ் பேசும் மக்களை ஒடுக்கும் செயலூக்கத்தை ஆதிரிப்பவர்களை வைத்தே புரிந்து கொள்ளமுடியும்.இந்தக் கருத்துக்களைக் காவிக்கொண்டு திரிகின்ற "கருத்தின்பால் உந்தப்பட்ட" மனிதர் தமது இருப்பின் விருத்தியாகவுணர்வது மொழிசார்ந்து சிந்திப்பதையும் அதனு}டாகப் புரிந்துகொண்ட பண்பாட்டுணர்வையுமே.இங்கே நெறியாண்மைமிக்க உள வளர்ச்சி மறுக்கப்பட்டு, செயற்கையான-இட்டுக்கட்டப்பட்ட சமூக உளவியற்றளம் பிரதியெடுக்கப்படுகிறது.

ஈழத்து அரசியலில் ஒவ்வொருவரும் ஏதோவொரு இயக்கம்சார்ந்து உரையாடுவதும்,எழுதுவதும் அவரவர் உணர்திறனுக்கொப்பவே நிகழ்கின்றது.உதாரணமாக:இன்று புலிகள்மீது பாரிய நம்பிக்கை வைத்துள்ளவர்கள் அனைவரும் அந்த அமைப்பின் ஆதிகத்துக்குள் தமிழ்ப் பிரதேசங்கள் கட்டுண்டபோது,அந்தச் சூழலுக்குள் வளர்வுற்றவர்களே.இவர்களுக்கு மிஞ்சிப்போனால் முப்பது வயதே நடக்கின்றது.கருத்தியல் தளம் உருவாகிவிடும் "மனத்தளத்திலிருந்து" நோக்கின் இது மிக நேர்த்தியவுணரத்தக்க ஆரம்பப் படிமங்களை உள்ளடக்கியதாக, அந்த மனிதத் "தனித்தன்மையை" நாம் அறிவது சுலபம்.

தமிழர்களின் சமுதாய வளர்ச்சிநிலையானது அவர்களது பண்பாட்டு வளர்ச்சியிலிருந்து அணுகத்தக்க முறைமைகளில் பொருள்வளர்ச்சி உருவாகவில்லை.இந்தக் காரணத்தால் தமிழினம் ஒழுங்கமைந்த சமூக வளர்ச்சி நிலையை இன்னும் எட்டவில்லை.இந்தச் சமுதாயமானது வெறும் வீரப்புடைய நலிந்தவொரு இனக் குழுவாகும்.இதன் பாத்திரத்தை விளக்குவதற்கு அதன் அடிப்படையான பொருள் வாழ்வை உற்று நோக்கியாகவேண்டும்.இதன் அடிக் கட்டுமானம் வெறும் குறைவிருத்தியுடைய பழைய உற்பத்தி அலகுகளைக்கொண்ட ஆரம்பகாலச் சமுதாயத்தின் உள்வயப்பட்ட வளர்ச்சி நிலையிலிருப்பதை ஒரு பொருளியல் மாணவர் வெகு இலகுவாகக் கண்டடைவார்.

இந்தவகைப்பட்ட இனக் குழுவிடம் உயரிய மனிதவுருவாக்கம் நிகழ்வது கிடையாது.அதன் கொள்ளளவு மிகக் குறுகியது.வரைபடத்தில் குறிப்பிட்டபடி பொருளாதார,நுட்ப,சமூக கலாச்சாரக் கட்டுமானமானம் தீர்மானிக்கின்ற சமூக இயக்கமானது அதன் முகிழ்ப்பு நிலையிலிருந்து விடுபடப்போகும் படிமுறை வளர்ச்சியை வெறும் "விசும்பு"நிலைக்குள்ளேயே மட்டுப்படுத்துகிறது.இதன் தாக்கமானது நமது சமுதாயத்தின் மனிதவுருவாக்கத்தில் பாரிய தாக்கம் செய்கிறது.இந்தவொரு இக்கட்டான மந்தப்போக்கானது ஈழத்து அரசியல் முன்னெடுப்பில் அறிவுபூர்வமான விரிந்த சமூகப் பார்வையை கோரமுடியாது சிறுமைப்பட்டுக் கிடப்பதனால் பல வகைப்பட்ட அராஜக இயக்க சாகசங்கள் நம்மைக் கட்டிப் போடுகிறது.இந்தவொரு நிகழ்வூக்கமானது நமது அன்றாட சமூக வாழ்வை மிக நெருக்கடிக்குள் தள்ளி சுமூகமானவொரு ஜனநாயகச்சூழலைச் சுவாசிக்காதவொரு இனமாக நம்மை புறத்தியாருக்குக் காட்டிக் கொள்கிறது.இந்தவொரு சமூக யதார்த்தமானது நமது பண்பாட்டுத் தளத்தில்,கல்வியில் பாரிய தாக்கஞ் செய்வதைத்தாம் நாம் வரை படுத்தில் சுட்டிக் காட்டுகிறோம்.

இது தனித்தன்மை அபிவிருத்தியை வெறும் ஒத்தூதும் கும்பல் மனப்பாண்மைக்கு இட்டுச் செல்கிறது.இங்கே நடக்கின்ற ஒவ்வொரு கருத்துக்கட்டுமானம்,பரப்புரைகளும் தனிநபரது தனித் தன்மையைக் காவுகொள்கின்றபோது அந்தச் செயலூக்கம் பொதுவான தளத்தில் ஒரு அமைப்பை முன்நிறுத்தும் கைங்காரியத்தை இந்தச் சமுதாயத்துள் எந்தக் குறுகீடுமின்றிச் செய்கிறது.அமைப்பாண்மையுடையவொரு இயக்கமாக வளரும் குறிப்பிட்டவொரு நலன்-அது சார்ந்த வர்க்கம் இத்தகைவொரு வெற்றுச் சூழலைத் தக்கபடி உபயோகிக்கும்போது அங்கே மனித மூளை,மனம் காய் அடிக்கப்படுவதாக நாம் பல முறை கூறுகிறோம்.இதுவே இன்றைய புலிகளின் புரளிகளை நம்பும் தனிநபர் விருப்பாகவும்-அறிவாகவும் உருவாக்கப்படுகிறது.இந்த இயக்கப்பாட்டில் தமிழ்பேசும் மக்கள் தமது வரலாற்றுப் பூர்வமான ஜீவாதாரவுரிமைகளை இயக்க நலனுக்குத் தாரவார்ப்பதில்போய்முடிகிறது!

பெளதிக மற்றும் மனோபாவ அடிப்படைக் கட்டுமானம் சிதிலமடைந்தவொரு வெளியில் உருவாகும் மனிதர் எத்தனை கருத்துக்களை, உண்மையைச் சொன்னாலும் அதை உள்வாங்கி ஒப்பீடு செய்து, ஆய்ந்தறியும் மனத்தைக் கொண்டிருப்பதில்லை.இதை நாம் தெளிவாகத் தமிழ் சமுதாயத்திடம் உணரமுடியும்.இந்தச் சமூகத்தின் அண்ணளவான தனித் தன்மையானது தொங்குநிலையானது.அதாவது ஒரு அதீத மனிதருக்கு விசுவாசமாக அல்லது அவரைக் கடவுளாக ஏற்கும் மனநிலைக்குள் கட்டுண்டுகிடப்பதாகும்.குறிப்பாக எதுவுமே அறியாத அல்லது அறிவினில் தாழ்சியானவொரு தலைவரைத் தெய்வமாகவும்,பெரும் ஆசானாகவும் ஒருவர் உணர்வாரானால் அவரது நிலை அந்தத் தலைவரைவிட மோசமாக இருக்கவேண்டும்.இன்றைய ஈழத்துமனிதர்களிடம் இந்த நோய் மிகமிகப் பரவலாகி வருவதை நாம் கண்ணுற்று வருகிறோம்.எனவே நமது சமூகத்தின் வளர்ச்சியை ஒரு கட்டத்தில் முடக்கிவிட்டிருக்கும் இயக்க ஆதிக்கமானது சமுதாயத்தின் பொருளியற்கட்டுமானதையும் அதன்மீதான முரண்பாட்டையும் திட்டமிட்ட முறையில் ஸ்தம்பிக்க வைத்துத் தமிழ் மக்களின் பொருள் வளர்ச்சிக்குக் குறுக்கே நிற்கிறது.இங்கே ஒட்டுப் பொருளாதாரப் பொறிமுறையை மேற்குலக எஜமானர்களின் துணையுடன் இறக்குமதியாக்கும் அமைப்பைத்தாம் நாம் "தரகு"முதலாளியமென்கிறோம்.

ஒரு முறைமையின் கட்டுமானமானது வளர்வுறுவதற்கு அடிப்படையில் அந்த முறைமையைக் கொண்டிருக்கும் மனித சமூகத்தின் வளர்ச்சியோடு தொடர்புடையது.அந்த மனித சமூகமானது தனது வளர்ப்பு முறைமையில் பின்தங்கிய நெறிகளைக் கொண்டதாயின் அதன் மொத்தக் கட்டுமானங்களும் பின்தங்கியதே!இங்கே மனிதவுருவாக்கமானது எந்தப்பக்கம் திரும்பினாலும் அடிக்கட்டுமானமான பொருளாதாரத்தை கொண்டே-சார்ந்திருப்பதை நாம் நுணுக்கமாக அறியலாம்.இந்தப் பொருளாதாரக் கட்டுமானத்தை காப்பதற்கான மேற்கட்டுமானம் எப்பவும் அந்தப் பொருளாதார நெறியாண்மையின் விருத்தியின் பலாபலனைக்கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.இதுவே நிறுவனத்தளத்தில் மனிதர்களைக் கட்டிப்போடுவதும்,அத்தகைய நிறுவனங்களைக்கடக்க முடியாது மனித மனோவளர்ச்சி முடங்குவதையும் அன்றாடம் நாம் பார்க்கமுடியும்.

நிறுவனத் தளமானது தனது தாயான சமுதாயத் தளத்தைப் பிறிதொரு முறையில் மட்டுப்படுத்த முனையும்போதே சமூகத்தில் அமுக்கம் ஏற்படுகிறது.இந்த அமுக்க நிகழ்வுகளை மனித சமூகத்திலுள்ள சிறுசிறு தன்னார்வக் குழுக்கள் முன்னெடுக்கின்றனர்.இதைப்புரியாத தனிநபர் இயக்கவாத மாயையில் கட்டுண்டு இத்தகைய தன்னார்வச் செயற்பாட்டைத்"துரோகம்"என்ற அடைமொழியில் நிறுவிக்கொள்கிறார்.

புலிகளுக்கும்,பாசிசத்துக்குமான நெருக்கம் இந்த முறைமையிலேயே விளங்கிக் கொள்ள முடிகிறது.இங்கே நிறுவனப்பட்ட புலிஅரசப் பொறிமுறையானது தமிழ் மக்களின் அனைத்து உரிமைகளையும் கட்டுப்படுத்துவதும்,அதன் சாரம்சமாக இருக்கும் பன்மைத்துவ நிகழ்வுப்போக்குகள் மக்களை அடிமைப்படுத்தும் தறுவாயில் அந்த அமைப்பில் பிரத்தியேகமான எந்தக் கருத்தியல் மற்றும் முறைமைகளும் ஜனநாயகப் பண்பைக்கொண்டிருப்பதற்கு வாய்பே இல்லை.இதைத்தாம் அராஜகமென்கிறோம்.இங்கோ கொலையும்,பொல்லாத அடக்கு முறைகளும் மக்களின் அமைப்பாண்மையை உடைத்து மக்களின் ஐக்கியத்தை-வலுவை, ஆத்மீக உறுவுகளை இல்லாதொழிக்கிறது.இங்கே மக்களின் கூட்டுச் சமூகச் சீவியம் சிதைந்து உதிரிகளாகிவிடுகிறார்கள்.இவர்களிடம் உயிர்த்திருப்பதே மேலெனப்படும் ஒரு குறைவிருத்தி மனோபாவம் இவர்களது பெளதிக மற்றும் மனோநிலையில் வலுவாக ஊன்றப்படுகிறது.



ப.வி.ஸ்ரீரங்கன்

Sonntag, Mai 18, 2008

இலங்கையில் நடந்து முடிந்த கிழக்கு மாகாணத் தேர்தலும்...

பிள்ளையான் வாழ்க-பிரபாகரன் வாழ்க.




"கிழக்கு மண் முன்னாள் குழந்தைப் போராளியை முதல்வராக்கியதோ
அல்ல மகிந்தாவின் பேரில் இந்திய நலன்கள் ஆக்கியதோ என்ற பட்டிமன்றத்தை"க் கடந்து...




லங்கையில் நடந்து முடிந்த கிழக்கு மாகாணத் தேர்தலும் அதை அண்டிய மகிந்தாவின் கட்சியாதிக்கப் பிடிவலுக்கின்ற தமிழ் மக்கள் சமுதாயத்தில் புலிகளுக்கு நிகரான பாசிச அடக்குமுறை ஜனநாயமெனுங் கருத்தாளுமையோடு கட்டியமைக்கப்பட்டு வருகிறது.யாழ்மாவட்டத்தில் புலிகளை அடித்து வெருட்டிய இலங்கை அரச ஆதிக்கமானது மிக நிதானமாகவே இந்தியத் திருவிளையாடலுடன் சிங்கள ஆளும் வர்க்கத்தின் நலனை முன்னெடுக்கிறது.அங்கோ,எந்த"சபையையும்" உருவாக்காது கிழக்கில் மட்டும் திடீர் தேர்தல்-திடீர் முதலமைச்சர்-திடீர் மாகாணசபை,அமைச்சர்களென ஒரே அசுர வேகத்"தீர்வு"அம் மாகாண மக்களுக்கு ஒப்புவிக்கப் படுகிறது.அங்கே, சகோதரத்துவமும்,மனித கெளரவமும் செழித்தோங்கி வளரும் சூழலைப் பிள்ளையான்-ஞானம் கைக்கூலிகள் கொணருந் தருணத்தில், கிழக்கு மாகாணம் வடக்குக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும்.இத்தகைய சந்தர்ப்பம் மெல்லத் தோன்றும்போது திரு.டக்ளஸ் அவர்களும் வடக்கு மாகாணசபைக்கான தேர்தலைச் சந்திக்கத் தயாராகி, இலங்கையில் வாழும் முழுமொத்தத் தமிழ்பேசும் மக்களுக்கும் சமாதான வாழ்வை வழங்கும் பொற்காலமொன்று புலம்(ன்)பெயர்ந்த அரசியல் நோக்கர்களிடம் முன்தோன்றி, முயற்சியில் இறங்க வைக்கின்றது!-வாழ்க இ-இ அரசியல் தெரிவுகள்-தீர்வுகள்,தாங்கும் தகுதி தமிழருக்கானது.விதையும்,விதைப்பும் எம் மண்ணிலாக இருக்கும்.



எமது மக்களின் அனைத்துத் தளைகளும் அப்படியேதான் இருக்கின்றன.அவற்றைக் களைந்துவிடும் புரட்சிகரமான அரசியல் நம்மிடமிருந்து முன்னெடுக்கப் படவில்லை.சிங்கள இனவாதத்துக்கு எதிராகத் தமிழ் இனவாதம் தூக்கி நிறுத்தப்படுகிறது.இது நமக்கு வெற்றியைத் தரமுடியாது.சிங்கள இனவாத்தை சிங்கள ஆளும் வர்க்கம் மட்டுமல்ல அங்கீகரிக்கப்பட்ட அரசுகளும்,அவைகளின் வர்த்தக-வர்க்க நலன்களும் முன் நகர்த்துகிறது.இதற்கு நல்ல எடுத்துக்காட்டு கிழக்கு மாகாணம் பிரித்தெடுக்கப்பட்டுத் தனியான அரச ஆதிக்க அலகு ஏற்படுத்தப்படுவது.இது எல்லாக் காலத்துக்குமானவொரு அரசியல் வியூகமாக இருக்காது.குறிப்பிட்டவொரு புறநிலையை(வடக்கையும் கிழக்கையும் நிரந்தரமாகப் பிரிக்கும் முரண்பாடு-பிரதேச வாதம்) உருவாக்கியபின் அது முழுமொத்த இலங்கைச் சிங்கள ஆளும் வர்க்கத்தின் ஆளுமைக்குள் உள்வாங்கப்பட்டுவிடும்.இத்தகைய நலன் நம் இனத்தின் மத்தியிலுள்ள ஓட்டுக்கட்சி அரசியல் வாதிகளை,இயங்கங்களை தமக்குச் சார்பாக அணைத்தெடுத்து நமக்கு எதிராக முன் நிறுத்துகிறது.இப்போதைக்குப் பிள்ளையான் அன்ட் ஞானம் முகவர்கள்.



அந்நியச் சக்திகளுள் பற்பல நலனகளைப் பேணும் தேசங்கள் தத்தமது முகவர்களுக்கூடாக இலங்கையில் எடுத்திருக்கும் யுத்தம் குறிப்பிட்ட தெரிவுகளில் யுத்தமாகவும்-தீர்வாகவும் மக்களரங்குக்கு வருகிறது.அதிலொன்று கிழக்கை நெருங்குகிறது.மற்றது, யுத்தமாகப் புலிகளால் நடாத்தப்படுகிறது.ஒன்றின்னொன்றை வேட்டையாட வைப்பதே அந்நியச் சதிகளின் தெரிவாக இருக்கிறது.இதற்குக் கிழக்குக்கு "ஜனநாயகம்" எனுங் காரணத்தைக் கூறுவதும் அத்தகைய அரசியலின் தெரிவே.புலிகளை ஒருபகுதியும்,மறுபகுதி ஆயுதக் குழுக்களையும் அவர்களின் ஊடககங்களையும்,கூட்டணிபோன்ற ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிக் கட்சியையும் பயன் படுத்துகிறார்கள்.தமிழ் மக்களின் சுயநிர்ணயவுரிமை பூண்டோடு அழிக்கப்பட்டுவருகிறது.இதற்காக இந்தியா முன்னெடுக்கும் வியூகமானது "கிழக்குக்குத் தனி நிர்வாக அலகு-ஜனநாயம்"வடிவில் நம்மிடம் வருகிறது.



கடந்த காலத்தில் ஆயுதக் குழுக்களிட்ட-குறிப்பாகப் புலிகள் உறுமிய "மக்களின் உரிமையென்பது தனியாட்சிச் சுதந்திரமென்றும்,தமது பகுதிகளைத் தாமே ஆளவேண்டும்" என்ற கோசங்களும், இலங்கைத் தமிழர்களிடம்"ஆண்டபரம்பரை மீளவும் ஆளத்துடிக்கிறது"என்ற ஆதிக்கவாதிகளின் ஆசையை மட்டுமே சுட்டிக்கொள்வதாக இருக்கிறது.எனவேதாம் மக்கள் போராட்டமின்றி,வெறும் இராணுவவாதமாகக் குறுகிய நிலையைத் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் எய்திருக்கிறது! அது,முற்றுமுழுதுமாகவின்று சீரழிந்து ஆயுதக் குழுக்களின் பாசிசமாக வளர்ந்து தம்மையழிப்பதன் தெரிவில் மக்களைப் பலியெடுத்து வருகிறது.இதை, இன்னும் ஊக்கப்படுத்தும் உந்துதலைச் செய்வதற்கான அரசியல் காய் நகர்த்தலை இந்தியா மிக நேர்த்தியாகச் செய்து வருகிறது.இதற்கு மகிந்தா தலைமை தாங்குகிறார்.




இலங்கையின் இன்றைய படுகொலைப் பண்பாட்டு அரசியலுக்குச் சொந்தக்காரர்கள் இந்தியாவும்,ஏகாதிபத்திய நாடுகளுமே காரணமாக இருக்கிறார்களென்பதை நாம் பலமாக நிறுவ முடியும்.இன்றுவரை நடந்தேறும் படுகொலை அரசியலுக்கு இலங்கையை ஆளும் கட்சிகளுக்குப் பின்னாலும்,தமிழ் மக்களின் விடுதலைப்படைகளென்ற குட்டி முதலாளிய இயக்கங்களுக்குப் பின்னாலும் நிற்கும் இந்திய-ஏகாதிபத்தியங்களே முழுமுதற்காரணமாகும்.கடந்த கால் நூற்றாண்டாகத் தமிழ்பேசும் மக்களை யுத்த வாழ்வுக்குள் முடக்கி அழித்துவரும் அரசியல் இலங்கைக்குச் சொந்தமானதல்ல.அது, முற்றுமுழுதும் இந்தியாவின்-அமெரிக்காவின் சதியோடு சம்பந்தப்பட்டது-இலங்கையின் ஆளும் வர்க்கத்தின் அந்நிய உறவோடு மிகவும் பிணைந்தது.



இந்திய-அந்நிய அரசியல் சதியை-சூழ்ச்சியை முறியடிக்கும் வலு தமிழ் மக்களின் பக்கம் இல்லாதிருக்கிறது.அவர்களுக்காக எவரெவரோ தீர்ப்பெழுதும் தரணங்கள் இன்று அவர்களை நோக்கி,நெருங்கி வருகிறது.புலிகளென்பவர்கள் இன்று முடக்கப்பட்டுவரும் ஒவ்வொரு களமுனையிலும் அவர்களின் படுபாதகமான அரசியல் கபடத்தனமே அம்பலமாகி வருகிறது.குறுகிய "தீர்வுகள்"(கிழக்குக்கு மாகாணசபை,தனி மாகாணம்...)எப்பவுமே இலங்கை மக்களுக்கு எந்த விடிவையும் தராது மீளவும் யுத்தவாழ்வுக்குள் இருத்தி மெல்லச் சாகடித்து, இலங்கையை அந்நிய வேட்டைக் காடாக்கும்.இதைத்தாம் இன்றுவரையான எமது போராட்ட வாழ்வு எமக்கு உணர்த்தி நிற்கிறது.இதற்கு ஜனநாயகச் சாயம் பூசப் பாரீசிலிருந்து ஞானமும் இன்னும் எத்தனையோ கொடூமுடிகளும் முனையலாம்.ஆனால்,மக்கள் வெறும் மண்ணாங்கட்டிகள் இல்லையென்பதைக் காலம் உணர்த்தம்.



"இந்தியாவின் தயவில் இலங்கையிலொரு தீர்வு சாத்தியமெனும்" தேவரமானது எப்பவும் போலவே இந்தியத் திருவிளையாட்டே.இது, கைவிலகிப் போகும் இந்தியப் பிராந்திய நலன்களின் அதீத தேய்வில் இந்தியா கவலையுறும் ஒரு நிகழ்ச்சி நிரலாக இப்போதிருப்பதற்கானவொரு முன்னெடுப்பாக நாம் உணரலாம்.இதற்காகக் கிழக்கு மாகாணம் பிரித்தெடுக்கப்பட்டு அங்கே செயற்கையான முரண்பாடுகளை உருவாக்கித் தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணயவுரிமை என்பதையே கேலிக்குரிய கோசமாக உணர வைக்கப்படுகிறது.இத்தகைய உணர்வு,கிழக்கைத் தனித்த மக்கட்டொகுதியுடைய மாகாணமாக்கிக் கிழக்குக்கான தனி இன அடையாளத்தைப் போர்த்துகிறது.இதைப் பிள்ளையானு}டாகச் செய்து முடிக்கும் தகுதியிலேயேதாம் பிள்ளையானின் அரசியல் வரலாறிருக்கிறது.அவரை நீடூழி வாழப் புலிகள் பிராத்தனை செய்யலாம்.அங்ஙனம் பிள்ளையான் இருக்கும்போது புலிகளின் "தேசிய விடுதலை"க் கோசம் தமிழ் மக்களிடம் மறுவுருவாகஞ் செய்தக்கதே.



தற்போது அந்நிய ஆர்வங்களால் தடுதாட்கொள்ளப்பட்ட கட்சிகள்-இயக்கங்களாக இருப்பவை பெரும்பாலும் "ஜனநாயகம்" பேசிய நிலையில்,அதையே முகமூடியாகவும் பாவித்து அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களின் எதிர்கால வாழ்வையே திட்டமிட்டபடி சிதைக்கும் காரியத்தில் தமது நலன்களை எட்ட முனைகின்றன.இதற்குத் தோதாகச் சொல்லப்படும்"அரசியல் தீர்வு-சமஷ்டி-மாகணசபை-அரசியல் யாப்பு"என்பதெல்லாம், இன்றுவரை மக்களின் உயிரோடு-வாழ்வோடு விளையாடும் இந்தப் போர்களுக்கு எப்போதும் தோதானவொரு அரசியலையே முன்னெடுக்கிறது.இத்தகைய "தீர்வுகள்"இலங்கையின் இன முரண்பாட்டை ஒருபோதும் முடிவுக்குக் கொணர முடியாது.ஏனெனில், யுத்தமில்லையெனில் இலங்கை அரசும், புலிகளின் இருப்பும் ஆட்டங்காணும்.அங்கே,உலகப் பொருளாதார ஆர்வங்களின் முரண்பாடுகள் மேலெழ நாட்டின் வறுமை மக்களை"அரிசி"யுத்தஞ் செய்த் தூண்டும்.இது, தவிர்க்க முடியாது தமிழ்-சிங்கள மக்களை ஒன்று படுத்தும் அபாயத்தை இந்தியா நன்றாகவே உணர்கிறது.அவ்வண்ணமே இலங்கை ஆளும் வர்க்கங்கள்.எனவே,பிள்ளையான் வாழ்க-பிரபாகரன் வாழ்க மற்றும் அவர்களின் அடிவருடும் "ஜனநாயக-தேசியவிடுதலை" ஆலோசகர்கள் வாழ்க!


ப.வி.ஸ்ரீரங்கன்
18.05.2008

Montag, Mai 05, 2008

இலங்கையென்ற அடிமைத் தேசம் உலகத்துக்கு அவசியமானதாகவே இருக்கிறது.

யுத்தத்தை நிறுத்து,
அப்பாவி மக்களை வாழவிடு!


அன்பு வாசகர்களே,வணக்கம்.தமிழ்மணமும் இப்படிக் காலைவாரிவிட்டது!வாசகர்கள்தம்மைத் தமிழ்மணம் தனது முகப்பின் விசாலாத்தாலேயேதாம் கவர்ந்திழுத்தது.கடந்தகாலத்தில் தமிழ் வெளித் திரட்டியைவிடத் தமிழ் மணத்தையேதாம் நாம் அதிகமாக மேய்ந்துள்ளோம்.இப்போது தமிழ்வெளியின் முகப்பையொத்த தமிழ்மணத்தின் முகப்பு மனதைக் கவர்வதில்லை.அது மிக அமைதியாக-உள்ளிழுக்கப்பட்டவொரு தளமாகவே காட்சிப்படுகிறது.இது நாளாவட்டத்தில் தமிழ்மணத்தைவிட்டோடி வேறுதிரட்டியை வாசிக்க வைக்கும்.முகப்பின் விசாலமும்,அது தரும் பல் முனைப் பரிணாமமுமே அதன் வெற்றியின் இரகசியமாக இருந்தது.இப்போது, தமிழ் மணத்துக்கு மங்கு சனி.இது, நிற்கட்டும்.


வாசகர்களே,மீளவும் ஒரு அரசியல் கட்டுரைக்குள் உங்களை அழைக்கிறேன்!


எமது வாழ்வும் சாவும் யுத்தத்தின் உந்துதலால் தீர்மானிக்கப்பட்டு நாம் நாடோடிகளானோம்!நம்மில் பலர் ஈழத்தேசத்தின் போரோடு ஏதோவொரு முறையில் சம்பந்தப்பட்டேயுள்ளோம்.இலங்கையைவிட்டு நாடுதாண்டி அஞ்ஞானவாசம் புரியும் நம்மில்பலருக்கு ஈழப்போராட்டத்தின் இருண்ட பக்கங்கள்மீதான பாரிய அழுத்தமும்,அருவருப்பும் உண்டு.நம்மைப் பலியெடுத்த அதன் பக்கங்கள் சொல்லிமாளா.ஈழப்போராட்டமென்று ஆரம்பமான காலத்திலிருந்து நமக்குள் மிக நேர்த்தியாக அந்நியச் செல்வாக்குத் தனது ஆதிகத்தைச் செலுத்தத் தொடங்கியது.இதில் முதன்மையான தேசம் நமது மூதாதையரின் தாயகமான இந்தியாவென்பது நமக்குக் கசப்பான உண்மையாகவுள்ளது.நாம் அகதியாகவும்,நமது உறவுகள் உயிரை உடமையை இழக்கவும் மூலகாரணமான தேசம் இந்தியாவென்பது கசப்பான உண்மையாகும்.இந்தியவில்லாமல் இலங்கையில் ஆயுதக்குழுக்கள் தோன்றி அராஜகமான ஆயுதக் குழுக்களாக உருவாகி இருக்கமுடியாது.படிப்படியாக மக்கள் மத்தியில் வேலை செய்து பரிணாம வளர்ச்சியுற்று ஆயுதப்போராட்டமாக வளர்ந்து புரட்சிகரமான இலங்கையை முன்நிபந்தனையாக ஏற்றுப் போராடவேண்டிய இயக்கங்களைத் திடீரென ஊதிப்பெருக்கவைத்தது இந்தியா.தேவையற்ற சூழலில் தேவைக்கதிகமான ஆயுதங்களை வழங்கி இயக்கங்களின் செயற்பாட்டை மிக விரிவாகச் செயற்பட வைத்துக் காலத்துக்கு ஏற்ப வளர்ச்சியைத் தடுத்துத் தமது ஆதரவில் தங்க வைத்துக் கலகம் நடாத்திப் படுகொலைகளையும், பம்மாத்து அரசியலையும் ஈழப்போராட்ட அமைப்புகுள் நிலவும்படி செய்த இந்திய வல்லாதிக்கம் இன்றைய அவல நிலைகளை செய்த முதற்தரமான குற்வாளித்தேசமாக நம்முன் நிற்கிறது.இந்தியாவெனும் தேசத்தின் உந்துதல் இல்லாமல் இதுவரையான இலங்கைப் போர் நிலவமுடியாது.




இலங்கையின் இனமுரண்பாடென்பது மிகமிகத் தந்திரமாக-நுணுக்கமாக மேல் நிலைக்கு உந்தப்பட்டு இலங்கைச் சமூகப் பொருளாதார வளர்ச்சிமுதல் அந்தத் தேசத்தினது இறைமையையும், குடிகளில் உயிர்வாழ்வையும் சிதைத்துச் சின்னாபின்னமாக்கிய உலக நலன்கள் இன்றும் மிகப்பெரும் எடுப்பிலான ஆயுதச் சாகசப்போரைத் திட்டமிட்டு நகர்த்திச் செல்கிறது.இதைத் தமிழ் மக்கள் தரப்பில் தமிழ்பேசும் மக்களுக்கு தேசத்தை உருவாக்கும் போராகவும், சிங்களத்தரப்பில் தேசத்தை-தேச ஒருமைப்பாட்டை நிலை நிறுத்துவதற்காகவுமான போராக இலங்கை-ஈழ ஆளும்வர்க்கங்கள் திட்டமிட்டுப் பொய்ப்பிரச்சாரஞ்செய்து, அப்பாவி ஏழை மக்களின் குழந்தைகளைப் யுத்தத்தில் பலிகொடுக்கிறது.இந்தப் பலியாட்டத்தில் பங்குபற்றி அரசியல்-பொருளாதார நலன்களை அடைய முனையும் அன்னியதேசங்கள் நமது மக்களைக் கொன்றழிப்பதை இனியும் பொருட்படுத்தாது,யுத்தமென்பது அழிந்த தேசத்தை நிர்மாணிப்பதற்கானதென எவரும் கருதிக்கொள்வதற்கானவொரு மன நிலையைத் திட்டமிட்டுப் பிரச்சார ஊடகங்கள் செய்து வருகின்றன.இவை தத்தம் சார்பு நிலைக்கொப்ப யுத்தத்தைக் கொள்முதல்செய்து அவற்றை மக்கள் மத்தியில் "தேசத்தை"நிர்மாணிப்பதற்கானதென வர்ணக்கனவை ஏற்படுத்தி அம்மக்களின் உயிரைத் தினமும் பறிக்கிறது.தமிழ் குறுந்தேசிய வாதக் கற்பனாவாதக் கதையாடல்கள் மக்களை இதுவரையில்லாதளவுக்கு வருத்திக் கொன்றுவருகிறது.இக்கொலை குண்டுகளாலும்,பசியாலும்,பட்டுணியாலும் நிகழ்கிறது!இத்தகைய நிகழ்வினு}டாகத் தமிழ்பேசும் மக்களை ஒடுக்கித் தத்தமது இருப்பை நிலைப்படுத்தும் இயக்கக் கட்சி வாதங்கள் இன்னும் காட்டமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இலங்கை மக்களைக் கொல்லும்"தேசவிடுதலை",ஜனநாயகத்துக்கானபோர்,என்று இருதரப்பாலும் யுத்தம் நடாத்தப்படுகிறது.



இந்த பாழாய்ப்போன யுத்தத்தால் ஈழம் என்பது உருவாகாதென்பதும் அது இனங்களுக்கிடையிலான முரண்பாட்டைத் தீர்க்கும் வடிவமுமில்லையென்று கால்நூற்றாண்டாகப் புரட்சியாளர்கள் சொல்லி வருகிறார்கள்.தேசியவாதக் கோரிக்கைகளின் பின்னே பதுங்கியிருந்து தமது நலன்களைத் தக்க வைக்கும் ஆளும் வர்க்கமானது இன்றுவரை இலட்சம் மக்களை இலங்கையில் கொன்றுகுவித்துள்ளது.இது தமிழ் சிங்கள-இஸ்லாமியச் சமுதாயங்களின் அனைத்து வாழ்வாதாரத்தையும் சிதைத்தபடி அவ்வின மக்கள் அனைவரையும் ஏதோவொருவடிவில் கொன்றுகுவித்து வருகிறது.இத்தகைய யுத்தின் இருப்பில் இயக்கங்களின் தலைமைகளும் இராணுவத்தின் அதியுயர் தளபதிகளும் நிறையவே சம்பாதிக்கிறர்¡கள்.அவர்கள் தமது வருமானத்தின் மிகையான திரட்சியில் இலங்கையின் இளைய தலைமுறையை அழித்துவிட முனையும் யுத்தத்தைச் செய்கிறார்கள்.இவ் யுத்தமானது மிகக் கொடூரமானது.அதன் வாயிலாகத் தமிழ்பேசும் மக்களோ அல்லது இலங்கையின் மற்றைய இன மக்களோ ஒருபோதும் சுபீட்சமானவொரு வாழ்வைப் பெற முடியாது.இது சாரம்சத்தில் அனைவராலும் உணரப்பட்டுள்ள ஒரு எளிய உண்மையாகும்.



யுத்தம் தடுத்து நிறுத்தப்படுவதற்கானவொரு ஜனநாயகச் சூழலைத் திட்டமிட்டு மறுத்தொதுக்கிய அன்னியத் தேசங்கள் நேரடியாகவே இலங்கையின் அரசியல் நகர்வில் மூக்கை நுழைக்குமொரு சூழல் மீளவும் திரும்புகிறது.அது மேன்மேலும் யுத்தத்தைத் தூண்டித் தமது வரும்படியைத் தக்கவைப்பதுமல்லாது இலங்கையின் சுயாதிபத்தியத்தைத் திட்டமட்டுச் சிதைத்து இந்திய-மேற்குலக-ஐரோப்பியத் தேசங்களின் உற்பத்தியில் தங்கியிருக்கும் தேசமாக உருவாக்குவதில் கவனமாக இருக்கிறது.இதன் தொடர்ச்சியில் இந்தியாவே மீளவும் பல்லாயிரம் கோடியை இலங்கை யுத்தத்தில் நிதிமூலதனமாக இட்டு வியாபாரஞ் செய்கிறது.பிணங்களின்மீது ஏறிநின்று உபரித் தொகைகளை எண்ணுவதான வியாபாரமில்லை இது.மாறாக,உயிர்களின் வீழ்ச்சியில் இலங்கைத் தேசத்தின் அனைத்துச் சுபீட்சமும் வீழ்ந்து அன்னியத் தயவின்றி இலங்கை உயிர்த்திருக்க முடியாதளவு நிலைமையை முன்னெடுத்து, அன்னிய முகவர்களால் நிர்வாகிக்கப்படும் தேசமாக உருவாக்குவதற்கே இத்தகைய யுத்தம் அவசியமாகிறது.அப்படியுருவாகும் தேசத்தில் அடிமைகளைக்கொண்டு சரிந்து விழும் தமது மூலதனத்தை மேலும் உறுதிப்படுத்தி ஸ்த்திரப்படுத்தும் பொறிமுறைகளுக்கு இலங்கையென்ற அடிமைத் தேசம் உலகத்துக்கு அவசியமானதாகவே இருக்கிறது.



இந்நிலையின் தொடர்ச்சியான அழுத்துங்கள் இலங்கையில் மேலும் தொடரும் யுத்தமாக உருமாற்றப்பட்டு இராணுவச் சமநிலைகள் தற்காலிகமாகவும், சமநிலையின்மை நிரந்தரமாகவும் பேணப்பட்டு இலங்கையின் இனப்போராட்டத்துள் பல் வகையான சிறியரக ஆயுதங்கள் உள்வாங்கப் படுகின்றன.இவை ஒருபோதுமே மக்களின் நியாயமான கோரிக்கைகளிலிருந்து எடுக்கப்பட்ட தீர்வுகள் அல்ல.இத்தகைய யுத்தின் விளைபயனானது பல்லாயிரம் மக்களையும், பல்லாயிரும்கோடி பொருள் அழிவையும் உள்வாங்கி இன்றும் பொய்யான ஒளிவட்டங்களுடே தேசத்தின் விடிவுக்கானதெனப் பரப்புரை செய்யப்பட்டு இளைஞர்களைத் திட்டமிட்டு ஏமாற்றி வரப்படுகிறது.இத்தகையவொரு சூழலில்தாம் பேராசியர் கோ.கர்ணனின் இந்தக் கட்டுரை 04.05.2008 ஞாயிறு தினக்குரலில் பிரசுரமாகியுள்ளது.இக்கட்டுரையூடாகப் பேராசிரியர் மிக யதார்த்தமான பல கருத்துக்களை,வாதங்களை முன் வைக்கிறார். கோகர்ணனின் வாதமானது தமிழ் பேசும் மக்களினது மட்டுமல்ல முழு இலங்கைத் தேசத்தினதும் மக்கள்தம் இன்றைய எண்ணவோட்டமாகவே இருக்கிறது.அதாவது யுத்தத்தை நிறுத்தி மக்களின் நலன்களை முன்னெடுக்கும் அரசியல் தீர்வை முன்வைக்கும் ஜனநாயகத்துக்கான அறைகூவல்கள் போரின் கொடூரத்தைச் சொல்வதிலிருந்து ஓங்கி ஒலிக்கிறது!


இன்றைய சூழலானது இளைய தலைமுறைக்கேற்ற சூழலில்லை!இலங்கையில் விலைமதிக்கமுடியாத இளைய தலைமுறை இக் கொடும் அநாவசியமான யுத்தத்தால் பட்டுணிச் சாவை எதிர்கொள்ளும் அவல நிலையிலும் போர் பெரும் ஆர்வத்தோடு இரு தரப்பாலும் முன்னெடுக்கப்படுகிறது.இலங்கையில் கொத்துக்கொத்தாக மக்கள்செத்த சுனாமியழிவைக்கண்டே அச்சமற்றுப் பெரும் போர் முனைப்போடு செயலூக்கமாகப் முன்னிறுத்தப்படுவதாக இருக்கும்போது, இலங்கையின் ஆட்சியாளர்கள்,ஈழத்தின் விடுதலையெனும் புலிகளின் அறைகூவல்கள் யாவும் மக்களை வருத்தும் கபடத்தனமான அரசியல் சூதாட்டத்தோடு சம்பந்தமுடையது.இத்தகையவொரு அவலத்தை இனியும் அனுமதிக்க முடியாதவொரு மனத்தின் பொது எண்ணவோட்டமாகப் பேராசியர் கோகர்ணின் இக்கட்டுரை அமைகிறது.மிக அவசியமான உண்மைகளைப் பேசும் இக்கட்டுரை இலங்கை மக்களின் முழுமொத்த எண்ணவோட்டத்தையும் பிரதிபலிக்கிறதென்பது மிகவும் உண்மையானதாகும்.


வாசகர்களே இக்கட்டுரையை வாசித்து,அதன் உள்ளார்ந்த அதிமானுடத்தன்மையை உணர்ந்து யுத்துத்துக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து இலங்கையில் அன்னியத் தயவோடு நடந்தேறும் இன அழிப்பைத் தடுத்து நிறுத்தும் பாரிய மனித ஒற்றுமையை ஏற்படுத்தி, யுத்தத்துக்குச் சாவுமணியடிப்போம்.இலங்கையில் சபீட்சமானவொரு வாழ்வை இலங்கையின் பல்லின மக்களுக்கும் பொதுவானதாக்கும் புரட்சியை முன் நிபந்தனையாக்கி மக்களை விடுவிப்போம்.


நன்றி.

அன்புடன்,

ப.வி.ஸ்ரீரங்கன்.


05.05.2008




மறுபக்கம்:


எமக்கு வேண்டாதவர்கட்கு ஏதேன் கெடுதல் நடந்தால் நம்மிற் சிலருக்கேனும் அதில் மிகுந்த மகிழ்ச்சி உண்டு. "தனக்கு மூக்கறுத்தாலும் எதிரிக்குச் சகுணப் பிழை" என்கிற மனநிலை இது. எதிரியே ஆனாலும் எதிரிக்கு ஏற்படுகிற எல்லாக் கெடுதலும் எங்களுக்கு நன்மையாகி விடாது.
எதிரிக்கு ஏற்படுகின்ற கெடுதல் யாரால் ஏற்படுகிறது, ஏன் ஏற்படுகிறது என்பன பற்றி நாம் யோசிக்க வேண்டும். எதிரிக்கு எதிரி எப்போதும் நண்பனல்ல. ஏனென்றால் மனித உறவுகளும், சமூக உறவுகளும் ஒரே நேர்கோட்டில் வைக்க கூடியவையும் அல்ல. நட்பும் பகையும் என்று வெட்டொன்று துண்டிரண்டாக வகுக்கக் கூடியவையும் அல்ல. எதிரிக்கு எதிரி எங்களுக்கு எல்லாரிலும் பெரிய எதிரியாகவும் இருக்க இயலும்.



இலங்கையின் தேசிய இனப் பிரச்சனை போரால் தீர்க்க இயலாததது
என்பது இப்போதைக்கேனும் எல்லாருக்கும் விளங்க வேண்டும். ஆனாலும் போர் தொடருகிறது.
போரை யாரும் வெல்ல இயலாது என்றும் பல முறை சொல்லப்பட்டுப் பெரும்பாலானோரால்
எப்போதாவது ஏற்கப்பட்டுள்ளது. போரில் தமது தரப்பு இழப்புக்களைச் சந்திக்கிற போது
இந்த விதமான ஞானம் வருகிற சிலருக்கு நிலைமைகள் தமக்குச் சாதகமாக மாறுகிற போது போரை
வெல்லலாம் என்கிற நம்பிக்கை ஏற்படுகிறது.
"போரில் யாரும் வெல்ல முடியாது" என்று சொல்லப்படுகிற போது பலர் எதிரியால் வெல்ல முடியாது என்ற கருத்திலேயே அதை விளங்கிக் கொள்கிறார்கள்.


கடந்த கால் நூற்றாண்டுக் காலத்தின் பாடங்களை எமது தலைமைகளும், ஊடகங்களும் பெருமளவு மறந்துவிட்டனர் என்றே தோன்றுகிறது. அது மட்டுமன்றித் தங்களைப் போரியல் நிபுணர்களாகவும் அரசியல் ஆய்வு நிபுணர்களாகவும் காட்டிக் கொள்ளுகிறவர்கள் தங்களது கட்டுரைகளிற் தமது முற்சாய்வுகட்கு வசதியான விதமாகவே தகவல்களைத் தெரிவு செய்கின்றனர். சிலர் தகவல்கள் என்ற பேரில் ஊகங்களையே முன் வைக்கின்றனர். இவ்வாறான திரிப்புக்கள் எந்த மக்களின் நலன் கருதிக் கட்டுரைகள் எழுதப்படுவதாகப் பாவனை செய்யப்படுகிறதோ அதே மக்களை ஏய்த்து முடிவில் அவர்களை விரக்திக்குள் தள்ளிவிடுகின்றன.


இது அரசாங்கத்தரப்பிலும் நடக்கிறது. விடுதலைப் போரட்டத்தின்
சார்பாகவும் நடக்கிறது
இருதரப்பிலும் மக்கள் அறிய வேண்டிய பல உண்மைகளில் ஒரு
சிறு பகுதியேனும் மக்களுக்கு சொல்லப்பட்டிருந்தால் இன்று மக்கள் மத்தியிலிருந்து
இன, மொழி, மத வேறுபாடு கடந்த அமைதிக்கான ஒரு வெகுசன இயக்கம் வலுவுடன் இயங்கிக்
கொண்டிருக்கும். அல்லது இன்று அத்தகைய ஒரு இயக்கத்திற்கு தேவையில்லாமலே
போயிருக்கலாம்.


எனினும் நமது செய்திகள் எவ்வாறு வழங்கப்படுகின்றன? பழிக்குப் பழி, உயிருக்கு உயிர் என்கிற விதமாகவே போர்ச் செய்திகள் வழங்கப்படுகின்றன. லட்சக் கணக்கானோரை பட்டினிக்குட்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தைச் சீர் குலைத்துக் கொண்டிருக்கிற போரை எவ்வாறு தமது ஊடகங்கள் சித்திரிக்கின்றன? போரால் முழு நாடுஞ் சிதைவதுபற்றிய கவலையை விட எதிரிகளில் நாலு பேர் மோதலிற் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கிற மகிழ்ச்சி பெரிது. நாட்டையும் போரையும் இப்படிப் பார்க்கிற விதமாக மக்களைப் இனவாத வெறுப்பில் அடிப்படையிலேயே பழக்கப்படுத்திய பிறகு அதற்கேற்ற விதமாக எழுதுவதும் பேசுவதும் காட்டுவதும் வணிக நோக்கில் நியாயப்படுத்தப்படுகின்றன.


தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு, நிலையான அமைதி என்பன பற்றி முன்னுக்குப் பின் முரணான சிந்தனைகளே முன்வைக்கப்படுகின்றன. வரலாறு பற்றியோ சமகால உலக நிகழ்வுகள் பற்றியோ சரிசரியான புரிதல் கூட இல்லாமாலேயே எல்லாத் தரப்பிலும் ஆய்வுகள் பல நடக்கின்றன.
பலஸ்தீனம், இஸ்ரேல், கொ சோவோ, பங்களாதேஷ்,திபெத், தாய்வான், காஷ்மீர், நேபாளம், தென்னாபிரிக்கா என்று பல விடயங்களில் "ஞானி நிலவைச் சுட்டிக்காட்டினால் மூடன் சுட்டுவிரலைப்" பார்பான் என்கிற விதமாக அடிப்படை உண்மையைத் தவிர்த்து மேலோட்டமாகத் தெரிகிறவற்றை வைத்து குழப்பமான முடிவுகட்கு வருகிறது அறியாமையால் மட்டும் அல்ல. தற்செயலான ஞாபக மறதியால் முக்கியமான உண்மைகள் மறக்கபடுவதில்லை. தமது வசதி கருதியே அவற்றை அவர்கள் புறக்கணிக்கின்றனர். அது நித்திரை அல்ல, பாசாங்கு.


சோவியத் ஒன்றியத்தில் உலக வரலாற்றில் முதல் முறையாகப் பிரிந்து
போதும் உரிமையுடன் கூடிய குடி அரசுகள் இணைந்து இருந்தன. ரஷ்யச் பேரரசின் கீழ்க்
கடுமையாக ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் அவ்வாறான குடி அரசுகளையோ சுயாட்சிகளையோ
கொண்டிருந்தன. சோவியத் ஒன்றியத்தின் சோஷலிஸம் விழுத்தப்பட்டதில் சோஷலிஸத்
கம்யூனிஸ்ட் தலைமையின் தவறுகட்குப் பெரும் பங்குண்டு. அதே வேளை, அமெரிக்கா,
ஐரோப்பிய ஏகாதிபத்தியக் கூட்டணியின் குழிபறிப்பு வேலைகளும் முக்கியமான பங்காற்றின.
அமெரிக்க ஏகாதிபத்தியம் வேண்டியது சோவியத் ஒன்றியத்தில் சோஷலிஸத்தின் முடிவு
மட்டுமல்ல, சோவியத் ஒன்றியம் என்கிற வலுவான ஒரு அமைப்பை இல்லாதொழிப்பதும் அதன்
தேவையாக இருந்தது.
கொர்பச்சொவைவிட யெல்ற்ஸின் தலைமை அதற்கு வசதியாக இருந்தது. யெல்ற்ஸினுக்கு பின்பு ரஷ்யா மீளவும் எழுச்சிபெற்று வருகிறது. பொருளாதாரத்துறையில் முக்கியமான சில பகுதிளில் அரச கட்டுப்பாட்டை மறுபடி இறுக்கமாக்கி கொண்டதாலேயே ரஷ்யாவின் அரசு வலிமையுடன் அந்நிய ஊடுருவலை எதிர்த்துநிற்க முடிகிறது. சீனாவில் சோஷலிஸத்தால் உயிர் பெற்ற ஒரு உற்பத்தித்தளத்தின் மீது முதலாளித்துவம் கட்டியெழுப்பப்பட்டுவருகிறது. சீனாவில் அமெரிக்க அக்கறை ஜனநாயகமின்மையோ மனித உரிமை மீறல்களோ பற்றியதல்ல. சீனா அமெரிக்க மேலாதிக்கத்திற்கு, ஆசியாவில் மட்டுமின்றி, மூன்றாமுலக நாடுகள் பலவற்றிலும் சவாலாக உள்ளது.


அதனாலேயே தாய்வானை நிரந்தரமாகவே பிரிக்கவும், திபெத்தில் பிரிவினையை ஊக்குவிக்கவும், வங்கூர் இனத்தவர் உட்பட்ட சிறுபான்மைத் தேசிய இனங்களிடையே கிளர்ச்சிகளை மூட்டவும் அமெரிக்கா முயன்று வருகிறது. பிரித்தானிய ஆட்சியால் சீனாவில் தனது இறுதித் தளமான ஹொங்கொங்கை இழந்ததை இன்னமும் தாங்கிக்கொள்ள இயலவில்லை. இவ்வாறான விடயங்களைப் புறக்கணித்து, இவற்றைவிட முக்கியமாக ஏற்கனவே பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சோவியத் அரசுகளைப் பிரிந்து போகத்தூண்டியது போல பூரண சுயாட்சிகளையும், சுயாட்சிப் பிரதேசங்களையும் யூகோஸ்லாவியாவிலிருந்து அமெரிக்கா ஏன் உடைத்தெடுத்தது என்று யோசியாமல், கொசோவோவை முன்னுதாரணமாக்கச் சிலர் முற்படுவது ஏன்? திபெத்தில் தலாய்லாமா மூலம் அமெரிக்கா செய்யவேண்டுவது என்ன என்று ஆராயாமல், திபெத் கலவரங்களைத் தூண்டிவிட்டோர் யார் என்று ஆராயாமல், தலாய்லாமாவை ஒரு மனிதாபிமான சமூக விடுதலைப்போராளியாகச் சிலர் சித்திரிப்பது ஏன்?


பலஸ்தீனம் பற்றி தலாய்லாமாவின் நிலைப்பாடென்ன? காஷ்மிர் பற்றிய அவரது நிலைப்பாடென்ன? அவையெல்லாம் போக, இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையில் அவரது நிலைப்பாடென்ன? மூர்க்கத்தனமான இடதுசாரி எதிர்ப்பும் அதன் தொடர்ச்சியாகச் சீன எதிர்ப்பும் தமிழ்த் தேசியவாதத்தை இன்னமும் பீடித்துள்ளன. குறுட்டுத்தனமான சிந்திய விசுவாசம், நன்கு பட்டுத் தெளிந்தும் பார்த்துத் தெரிய வேண்டியும், கண்முன் உள்ள உண்மைகளை மறைக்கிறது. அமெரிக்கா மீதும் ஐரோப்பிய நாடுகள் மீதும் நம்பிக்கைக்கான ஒவ்வொரு நியாயமும் காற்றோடு போன பின்பும் சர்வதேச சமூகம் இலங்கை அரசைத் தண்டிக்கும் என்ற ஆசையில் தமிழ் தேசியவாதிகள் பலரும் உள்ளனர்.
சோனியா காந்தியை இன்னொரு "மஹாத்மா காந்தி" என்று சொல்லக்கூடிய
அளவுக்குச் சிலரது எதிர்பார்ப்புக்கள் வளர்ந்துள்ளன. அவரது மகள் பிரியங்கா ராஜிவ்
காந்தி கொலை தொடர்பாகச் சிறையிலுள்ள நளினியைச் சந்தித்ததற்கு மனிதாபிமான
விளக்கங்களை ஒருசாரார் அள்ளி வழங்குகையில், இன்னொரு சாரார் அதில் ஈழத் தமிழருக்கும்
(இயலுமென்றால்) விடுதலைப் புலிகட்கும் சாதகமான காய் நகர்த்தல்களை துருவித்துருவி
தேடுகிறார்கள். பிரியங்கா - நளினி சந்திப்புக்கு தமிழ்த் திரையுலகக் கோமாளிகள்
சிலர் உட்பட யார்யாரோ எல்லாம் உரிமை கொண்டாடுகிறார்கள்.


மேற்படி சந்திப்புக்கு மனிதாபிமானம் காரணமென்றால் அது பத்து ஆண்டுகள் முன்பே கூட நடந்திருக்கலாம். அது ஒரு சின்ன அரசியற் காய் நகர்த்தல். அடுத்த ஆண்டு தமிழகத்தில் வரவுள்ள மாநிலசபைத் தேர்தலுக்கும், பாராளுமன்றத் தேர்தலுக்கும் அதனுடன் தொடர்பு உண்டு. தமிழக காங்கிரஸ் தனது தீவிர விடுதலைப்புலி எதிர்ப்புக்கும் ஈழத் தமிழர் பிரச்சினையில் உள்ள அக்கறையீனத்துக்குமிடையே உள்ள உறவைக் கையாள முடியாமல் திணறுகிற சூழ்நிலையில் தமிழகத்தில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் உள்ள சில சங்கடங்களைத் தீர்க்கவும் இச் சந்திப்பு உதவும்.


இலங்கை அரசுக்கு எதிரான சர்வதேச காய் நகர்த்தல்களின் காரணங்களை அறியாமற் சில கனவுகள் வளர்க்கப்படுகின்றன. அதனோடு சேர்த்து மூட நம்பிக்கைகளைப் போல, கொசோவோ போல சில நிகழ்வுகள் நல்ல சகுனங்களாகக் காணப்படுகின்றன. இலங்கை அரசிற்கு எதிரான இன்றைய நகர்வு எதுவும் இன்றைய ஆட்சிக்கு எதிரானதாய் இருக்குமே ஒழிய இன்னொரு அடக்குமுறை ஆட்சிக்கு எதிரானதாய் இராது. அது இனஒடுக்கலுக்கு முடிவுகட்டக்கூடியது என்றால், பலஸ்தீன மக்கள் எப்போதோ தமது விடுதலையை வென்றிருப்பர். ஏகாதிபத்திய நோக்கங்களை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தை அரசியல் மூட நம்பிக்கைகள் வழிநடத்த இயலாது.


இந்த நாட்டில் உள்ள மக்களாலேயே நாட்டின் தேசிய இனப்பிரச்சினையையும் மனித உரிமைப் பிரச்சினைகளையும் சனநாயகப் பிரச்சனையையும் தீர்க்க இயலும். வெளியிலிருந்து வரக்கூடிய எந்தக் குறுக்கீடும் பிரச்சினைகளை மோசமாக்குவதுடன் இருக்கிற ஒடுக்குமுறையை விட மோசமான ஒடுக்குமுறைக்கே இட்டுச்செல்லும்.


http://www.thinakkural.com/news/2008/5/4/sunday/marupakkam.htm