Dienstag, September 05, 2006

நில்லாத யுத்தம்.

நில்லாத யுத்தமும்
நினைவகற்றிச் செல்லும் ஈழமும்
சொல்லப்போகும் சேதிகள் என்னவோ?

"......................................."

யுத்தங்கள் வழமையாகவே,
அழிவும்-சாவும் வழமையாகவே...
எனினும்
தந்திரங்களும்,அரசியல் சூதாட்டமும் வழமையாகா!
இதுள்
(தமிழ்) மக்களின் தனியுரிமை-தாயகம்
பொய்மையாகி
அந்நியப் புழுதிக்குள் அழிந்தே போகும்
ம(க்)களின் அழிவைப் போலவே!!


இந்நிலையிலும்
வல்ல பல தமிழ்க்கிழ அரசியல் சகுனிகளும்
அற்பச் சலுகைகளின் பின்னே
அவசரப்பட்டுப் போகின்ற அடியாட்படைகளும்
ஆட்டிப்படைக்கும்
அற்ப ஊடகங்களும்
அப்படியே அடிவருடிக்கொண்டு
ஐயோ "மக்கள் பாவம்"
அமைதி
சமாதானமென்ற அழகிய வார்த்தைக்குள் அழிவைப் புதைத்து
"அட நம்ம ஈழத்தின்" சமாதியில் தவமாய்க் காத்திருக்க,

ஐயா அ(இ)ராஜகபக்ஷ
அடியாய்ப் போடுறார் குண்டுகள் தூக்கித் தமிழரின் தலையில்,
அக்கம் பக்கமும்
திரண்டவருக்கு அள்ளிக் கொடுக்கும்
கொள்ளிக்கட்டைகளால்
எரிவதென்னவோ தமிழர்தம் மனங்கள்தான்!


நித்தமொரு வேட்டு வைத்து
நிதானமாய்த் தமிழர் உரிமையை அழித்துப்
புலிகள் போட்ட முடிச்சும்
அவிழ்த்துப் பார்க்கும்"ஆரிய"தந்திரமும்
கந்தைத் துணியாய்"சமஷ்டி"க் கதையோடு
காரியத்துள் மூழ்க
நித்தமொரு குண்டு சத்தமின்றிக்
காவி வருவான் பாகிஸ்தானின் பங்குக்கென்று!
இதுவும்
அமெரிக்க மாமாக்களின்
மலட்டுத் திமிருக்குத் துணையாய்...

எத்தனை உயிர்கள் அழிய
எத்தனை மனைகள் இடித்து
எத்துணைப் பிஞ்சுக் கரங்கள் உடைத்து
எத்தனை இரணங்கள் எங்கள் தேசத்துள்?


கஞ்சிச் சிரட்டை காவிய தாத்தா
கபாலம் பிளக்க
தேசத்தின் மடியில் வீழ்ந்து கிடக்க,
பெற்றவள் முலையும்
பிறப்பின் வாசலும்
குண்டறத்துத் தசையும் நாருமாய்
இரும்புத் தொப்பிக்குள்!

இனியும் கதைகளைப் பேசி,
இனிதே இந்திய தரகுக்கு
இளிக்குது சிலதுகள் பற்கள் குருதிசொட்ட
இந்தப் பிசாசுகளின்
முந்திய வினையோ"சவுக்குத் தோப்பு"என்று சா பிணத்தோப்பாய்...
"........................."

எத்தனைகோடி
இழிவுகள் செய்து
"இந்திய" இதயம் மகிழ
இவர்களாற்றும் செஞ்சோற்றுக் கடனுக்கு
எங்கள் மக்கள்தம் எத்தனை தலைகள் உருளும் இன்னும்?

05.09.06

Keine Kommentare: