Montag, Januar 02, 2012

தமிழீழத் தேசியச் சின்னங்களை...

தமிழீழத் தேசியச் சின்னங்களை வேண்டி விடியலை விரைவுப்படுத்துங்கள்!

ன்பார்ந்த தமிழீழக் குடிகளே,நீங்கள் புலம் பெயர்ந்தபோதும் தாயகத்தை விடுவிக்கும் போராட்டத்துக்கு இறுதிவரை உழைப்பவர்கள்.அந்தவகையில் மீளவும்,உங்கள் ஒத்துழைப்பை நல்கி, நமது தேச நிர்மாணிப்பைத் தொடர்ந்து விரைவாக்கும் பணிக்கு, உங்கள் ஒத்துழைப்பைக் கோருகிறது தமிழீழ நாடு கடந்த அரசு.பிரதமர் உருத்திரகுமாரனது வேண்டுகோளுக்கிணங்க தபாற்றலைகளைப் பிரான்ஸ் அரசின் அனுமதிபெற்று வெளியிட்டுள்ளோம்.

கடந்த வாரம், தமிழீழத்தின் தேசியச் சின்னங்களை,பிராஞ்சு அரசின் அனுமதியோடு தபாற்றலைகளாக நாம் வெளியிட்டிருக்கின்றோம்.அவைகளை நீங்கள் வேண்டிப் பயன்படுத்துவதனூடாக ,தேசத்தின் விடிவை விரைவாக்க எமக்கு உதவுங்கள்.இது புலம்பெயர்ந்த ஒவ்வொரு தமிழினின் கடமையுங்கூட-எல்லாஞ் சரிதாம்!


புலிப் பினாமிகளும்,அதந்தப் பினாமிகளை ஆட்டிப்படைக்கும் புலிகளது மேல் நிலைத் தலைவர்களும் இப்போது தமது ஆயுதத் தலைமையை அழித்துவிட்ட கையோடு இலங்கை அரசுக்கு ஒத்தூதித் தமிழர்களது செல்வத்தைக் கொள்ளை அடித்துச் செல்வந்தர்களாகினார்கள்.

அதை மேலும், நிலைப்படுத்தும் நிர்வாக-அதிகாரத்துக்கான கோதாவில் மீளவும்,பிரஞ்சு அரசின் அனுமதியுடன் தபாற் தலைகள் வெளியிடுவதாகவும்,அவை தமிழ்த் தேசியத்தின் குறியீடெனவும்,கூறி எஞ்சியிருந்த அனைத்தையும் காசாக்கிக் கொள்கின்றனர்.

மக்களது பிள்ளைகளைக்கொன்று,அவர்களது பிணத்தைக் காட்டிக் காசாக்கிய கயவர் கூட்டம்,இப்போது,இவற்றைத் தமிழ்த் தேசியச் சொத்தெனச் சொல்லி ,மக்கள் மனதில் விதைத்த கருத்துருவாகக் குறியீட்டுப் பொருட்களையும்,அதன் குறிப்பான்களையுஞ் சொல்லிக் கூவி விற்றுப் பணம் பண்ணும் வியாபாரத்தை எப்படி அனுமதிப்பது?

தமிழ் மக்கள் மீது சிங்கள அரசை ஏவி,அவர்களைத் தொடர்ந்து அழிக்கக்கொடுத்த அரசியலில் எவர் செல்வந்தர்களானார்கள் என்பதை இப்போதாவது புரியமுடிகிறதா?


இந்த வியாபரப்புத்தியானது தொடர்ந்து செய்யும் அரசியல் துஷ்ப் பிரயோகமானது தமிழ் மக்களது உரிமைகளையே ஏலம்போட்டு விற்கும் ஒரு செயலின் உச்சம்தாம் இந்த முத்திரைகள் வியாபாரம்.

அது கூவி ஏலம் விடும் குறியீடுகள், ஒரு இனத்தின் உரிமையினது வெளிப்பாட்டு அலகாகக் காட்டப்பட்டு,வியாபாரமாவதில் அதன் பின்னே கொல்லப்பட்ட பாலகர்களதும், தமிழ் மக்களதும் உயிர்களே இந்தக் கூறியீட்டுக்கு உயிர்ப்புக்கொடுத்தவை என்பதால்,இக் குறியீடுகளின்வழி ஏமாற்றி வியாபாரமாகப்படும் முத்திரைகள், தமிழ் மக்களது உயிர்களை ஏலம் விடுவதன் உச்சமாகவே பார்க்கப்படவேண்டும்.

இது,இனத் துரோகம்.ஒரு மக்களினத்தின் உயிர்த் தியாகத்தைக் கொச்சைப்படுத்திக் காசு சேர்க்கும் கடைக்கோடித்தனமாகும்.

தமிழ்ர் உரிமை எனவும் பொய்யுரைத்துத் தமக்குள்ளே போட்டியிட்டுக் கொள்ளையிலும்,கொலையிலும் ஈடுபட்டது பத்தாதென்று ஒருவருக்குள் ஒருவர் தொடர்ந்து மோதிக்கொள்வதுவரை காசுக்காக அனைத்துத் தமிழ் பேசும் மக்களதும் ஆன்மாவையே ஏலம்போட்டுவிற்பதற்குத் தயாரான புலிப்பினாமிக்கூட்டம்,தமது தலைவனது மரணத்தையே மறைத்து அவனது படத்தைக்கூட முத்திரையாக வெளியிட்டு,அதைத் தமிழ் தேசிய அலகென்று பிரச்சாரப்படுத்திக்கொண்டு காசுக்காக வியாபாரமாக்கும் அனைத்துக் காரியங்களும்,தமிழ் மக்களை விற்பதாகவே நான் இனம் காண்கிறேன்.

ஒருபுறம், அரசியல் தலைவர்களெனப் புலிப்பினாமிகள் இலங்கை அரசோடிணைந்து மக்களை ஒட்ட மொட்டையடிப்பதும்,அந்தப் போக்கிரிகளது வால்கள்,தமது பங்குக்கு இந்த வடிவங்களில் அனைத்தையும் காசாக்க," முத்திரை,கொடி" பண்பாட்டு வடிவங்களது நுகர்வென அனைத்தையும் நுகர்வுச் சந்தைக்குள் கொட்டிவைத்துக் காசாக்கிச் செல்வத்தைக் குவிப்பதில் ஒரு இனத்தையே சிங்களப்பாசிச அரசுக்கு இரைக்யாக்கி விடுகின்றனர்!


அவர்களது இச் சமூகவிரோத்தச் செயற்பாட்டின்வழி, ஆபாசமான வக்கிரத்தோடு கொலை அரசியலைக் காசுக்காச் செய்து கொள்கின்றனர். இதை,தமிழ்த் தேசியத்தின்மீதான பாசமுடைய குழந்தைகள் மெல்ல,மிக இலகுவான மொழிகளால் கடிந்துகொள்கின்றனர்.அல்லது, தேசியத்தின் பெயரால் இவற்றை நுகர்வது தமிழ்பேசும் மக்களது கடமையெனச் சொல்லித் துரோகத்தனத்தைத் தியாகமாக்கிப் புனிதமாக்குகின்றனர்.இதுவே,புலிவழித் தேசியமாக மக்களும் நம்ப வைக்கப்பட்டுச் சரியானதைக் கண்டடைவதைத் தடுத்துப் பணத்தைக் குவிப்பதற்கான மனத்தைத் தேசிய உரையாடல்வழி தயார்ப்படுத்திக்கொண்டு வருகின்றனர்.இது மிகப் பெரும் துரோகமாகும்.

பிளவுபட்ட இயக்கவாதப்புலிக்குழுக்களுக்குள் நிலவுஞ் செல்வமானது தொடர்ந்து நிலைப்படுத்தப்படவும்-பெருக்கவும் இத்தகைய வடிவங்களுடாக ஒரு பாதுகாப்பான அத்திவாரத்தை நோக்கி மக்களைக் காயடிக்கிறது.

தமிழ்பேசும் மக்களிடம் கறந்த செல்வமானது பல வடிவங்களில் முதலீடாக்கிய தெருச் சண்டியர்களுக்குப் புலிகளால் "வலுகட்டாயமாகப் பிடித்துக் களப்பலியாக்கப்பட்ட" அடிமட்டப் போராளிகளது தியாகம் தேவைப்படும்போது,அதைத் தினமும் தமிழ் தேசிய அபிலாசையூடாக அனுமதிக்கும் புலம்பெயர் தமிழ் மக்கள் களப்பலியான ஏழைகளது குழந்தைகளது மரணத்தைக் கொச்சைப்படுத்துவதுமல்லாது அதை வியாபாரமுமாக்கி விடுகின்றனர்.


ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
02.01.2012