Donnerstag, Dezember 27, 2012

நாம் "தமிழீழம்" கண்ட பரம்பரை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,மக்கள் கிளர்ச்சி,மாணவர் கலகம்,கைது,புனர்வாழ்வு-சில குறுக்குவெட்டுக் குரங்குப் பார்வைகள் குறித்துக் " குழந்தைகள் கண்ட குடியரசுக் கூத்தில்"  எனது குரலும்...

லகத்தில் விடுதலை கோரிப் போராடும் தேசங்களையும் அத்தகைய விடுதலைக்காகப் போராடும் இயக்கங்களைப் பிளந்து நரவேட்டையாடும் இன்றைய உலக நலன்களை அறிய இலங்கையே நல்ல உதாரணமாகிறது.எவர் எந்த அந்நியச் சக்தியின் கைக்கூலியென்று அறியமுடியாதளவுக்கு நமது வாழ்வில் அவர்கள் இரண்டறக் கலந்துள்ளார்கள்.இவர்கள் அனைவருமே மக்களுக்காகக் குரல் கொடுக்கிறார்கள்.புரட்சி கரக் கட்சியையும் கட்டிக்கொண்டு"புதிய ஜனநாயகம்"பேசுகின்றனர்-தமிழர்களது சுய நிர்ணயம் உரிமைதாம் என்கின்றனர்.

முள்ளி வாய்க்காலில் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தியபடி புலிகளும், அதே மக்களை விடுதலை செய்வதாக இலங்கை அரசும் வியூகமமைத்துக்கொண்டு, ஒரு இனப்படுகொலையை இந்திய-அந்நிய நலன்களுக்கொப்ப இலங்கை யுத்த ஜந்திரஞ் செய்து முடித்துக்கொண்டிருந்தபோது,கிழக்குப் பகுதித் தமிழ் மக்களோ அன்றி வடபகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் பல்லாண்டு வாழ்ந்து வந்த வடபகுதி மக்களோ "எதுவுமே நடக்காத ஒரு தேசத்துள் வாழ்வதுபோன்று" வாளாதிருந்தனர்.

"வன்னியில் மக்களை விடுதலை செய்"

"புலியை அழிப்பதெனும் போர்வையில் தமிழ்பேசும் மக்களை நரவேட்டையாடும் அந்நிய-இலங்கை அரசுகளே யுத்தத்தை உடனே நிறுத்து"

"யுத்தத்தின் மூலம் தமிழர்கள் உரிமையை நசுக்காதே"

"புலிவழிப் போராட்டத்தைக் காரணங்காட்டி எம்மைத் திறந்தவெளிச் சிறையில் பூட்டி வைக்காதே"




எனும்,குறைந்தபட்ச மனிநேயக் குரலைக்கூடக் கொடுக்கமுடியாது வடபகுதி மக்களும்,அவர்களது பல்கலைக்கழக மாணவர்களும் நல்லூர்க் கந்தனுக்குத் தேரிழுத்து இலங்கை இராணுவவாதத்துக்குமுன் மண்டியிட்டுக்கிடந்தனர்.வன்னியிலோ இலங்கையிலென்றும் நடந்தேறாத பெரும் இனப்படுகொலை நடந்தேறியபடி இருந்தது-புலிப் பாசிசமானது "அதை"  இலங்கையரசு நடாத்திமுடிக்கும்வரை தனது கயமையான அரசியலை விட்டொதுக்க முடியவில்லை!

ஆனால்,இவ்வளவு பெரிய இனப்படுகொலையை உணர்வுரீதியாகக்கூட உள்வாங்க மறுத்து, ஏதோ செவ்வாய்க் கிரகத்துள் வாழ்ந்ததுபோன்று வாளாதிருந்தவொரு வடபகுதித் தமிழர்கள் சமீபத்து "மாவீரர் தினக் கொண்டாட்ட-நினைவுகூருரிமைக்காக " மட்டும் தமது வாரீசுகளைக்கொண்டு பல்கலைக் கழகத்துள் ஆர்பாட்டஞ் செய்தனராம்.இது யாருடைய காதில் பூச் சுத்தும்(ஒரு அந்நிய நல-இலங்கை இராணுவாத) அரசியல்?

முள்ளி வாய்க்கால் படுகொலைக்குடந்தையாக மௌனித்திருந்தவொரு மக்கட்டொகுதி,அதன் பிறகாவது இனப்படுகொலை அரசியல்-யுத்தங் குறித்து"விசாரணைக்கான"ஆர்ப்பாட்டத்தையோ அல்லது அதன் விளைவால் தமது உரிமைகள் அழிக்கப்படுவதையோ சுட்டிக்காட்டி, அடிப்படையுரிமைக்கான குரலைத் தன்னும் பொதுவெளியில் எடுத்துவர முடியாது,இராணுவத்தின் தேவைக்கேற்பவொரு ஒட்டுச் சமுதாயமாகக் கிடந்து சீரழிந்தது.இந்தச் சமுதாயத்துள் வியூகங்களை அமைத்துத் தொடர்ந்து தமிழ்ப் பிரதேசமெங்கும் இராணுவவாத ஆதிக்கத்தின் இருப்புக்குச் சாதகமாகப் பல்கலைக் கழகத்து மாணவர்கள் "மாவீரர்-நினைவு" உரிமைக்க்காகக் குரலெடுத்துக் கலகஞ் செய்கின்றனர்.அதன் போராட்ட முன்னோடிகளென இலங்கை-இந்திய நலனுக்குப் பலியானவர்களை மெல்லக் காவலில் வைத்துக்கொண்ட இலங்கையின் வியூகமானது அவர்களை வெளியல் விடாது,புனர் வாழ்வெனத் தன்னைக் காத்துக்கொண்டது.

மாணவர்களுக்குப் புனர் வாழ்வளித்துவிட்டு விடுவிப்பதென்பதன் அர்த்தம்,தமது வியூகம் அம்பலப்படுவதைத் தடுப்பதென்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

அப்பாவி மாணவர்களை வைத்து நடாத்தப்படும் தமிழ்பேசும் மக்களுக்கெதிரான அந்நியச் சதியரசியலானது மீளவும்,தமிழ்பேசும் மக்களை மொட்டையடிக்கும் போலி புரட்சி வாதிகளால் "மக்களது-மாணவரது" எழுச்சியாகக் காட்டப்படுவது அவர்களது எஜமானருக்கான வொரு சேவைதாம்.

இப்படியாகத் தமிழ்பேசும் மக்களை ஒட்ட மொட்டையடிக்கும் இந்த விபரீதமான புரட்டுப் புரட்சிப் பரப்புரைகள் யாவும் தமிழ்பேசும் மக்களது விடுதலைக்குக் குறுக்கே நிற்கும்வரை அந்நிய வேட்டையை-இனவொடுக்குமுறையையெவரும் புரிந்து அணித் திரட்சியடைந்து மக்களை அண்மித்த அரசியலை நிலத்திலும்-புலத்திலும் முன்னெடுப்பது நடைபெறாது.

உலகில் எந்தவொரு இனமும் இப்படித் தனது சொந்த அரசியலால் பலியிடப்பட்டது கிடையாது.இது தமிழர்கட்குரிய பிழைப்புவாத அரசியலாக நாறிக்கிடக்கிறது.

எங்கும்,எதிலும் பிழைப்பை நடாத்தியவொரு இனம் தனது சொந்த மக்களையே பலியிட்டுப் பண-நிதி மூலதனத்தைப் பெருக்கி உலகெல்லாம் முதலாளிகளாக வர்த்தகஞ் செய்கிறது.இதற்காகப் பலியிடப்பட்ட மக்களது உயிரானது எவ்வளவு தூரம் துஷ்ப்பிரயோகஞ் செய்யப்பட்டதென்பதைப் புரிய புலிகளது உயிராயுதக் கூத்தைக் கண்முன் நிறுத்துங்கள்.ஒரு டக்ளஸ் தேவா நந்தாவைக்கொல்ல எத்தனை மனித வெடிக் குண்டைத் தயார் செய்தனர்?ஒரு பெண் கமராவுக்குள் பிடிபடும் தற்கொலைக் காட்சியானது உலகத்துள் நமது வக்கிரமான கொலையரசியலது சாட்சி அல்லவா?இங்கே,மனித விழுமியம்-மகத்துவம்,ஜனநாயகப் பண்பு, என்பனவற்றின் அர்த்தங்கள் என்ன?புரியவே முடியாதவொரு காட்டுமிராண்டித்தனமான அராஜக அரசியல், திரை மறைவில் நிகழ்த்தும் வெளிப்படையற்ற சதிகளை முகமூடி மனிதர்கள் புரட்சிகாரர் போர்வையில் நடாத்தும் இந்தச் சூழலினுள் ஜனநாயகங் குறித்துப் பேசித்தான் ஆகணுமா?

இன்றய தேச அரசுகள் ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கவில்லை.மாறாக, முதலாளித்துவத்தின் போலி ஜனநாயகம் அம்பலமாகி வருகிறது.ஜனநாயகமெனப் பொத்தாம் பொதுவாகவுரையாடும் இது எத்தகைய மதிப்பீடுகளுக்குப் புரிதற்பாட்டுக்குள் நம்மை வைத்திருப்பதென்பதில் குழப்பமான திசையிலேயொவ்வொருவரும் ஜனநாயகமெனக் கூக் குரலிட்டுக்கொள்கிறோம்.

மேற்குலகம் ஜனநாயகமெனச் சொல்லிக்கொண்டதும்,புரியவைத்ததும் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தொடர்கதையாகி வந்தும் இதுவரையெந்தத் தேசத்துள்ளும் மக்கள் சுயாதீனமாக வாழ்வதாகத் தெரியவில்லை!நமக்குள் ஜனநாயகங் குறித்துப் பரவலாக வகுப்பெடுக்கப் பலர் முனைந்துகொண்டே இருக்கின்றனர்.எனினும்,மக்கள் ஏதோவொரு தளைக்குட்பட்டுத் தமது ஆன்மாவையிழந்து உழைப்பிலிருந்தும் ,துய்ப்பிலிருந்தும் அந்நியப்படுத்தப்பட்டுச் சதா சாகடிகப்படுகிறார்கள்.இந்தச் சாவு பௌதிகவிருத்தலை மறுக்காத புதிய போக்காக மாறுவதிலிருந்து மனிதர்களைக் கட்டிப்போடும் வாழ்வுப் போக்குகளிலிருந்து இந்த ஜனநாயத்தைப் புரிந்துகொள்வது படு சிரமமானதாகவே இருக்கிறது.





பூர்ச்சுவாக் கட்சிகளின் சமூக ஆதிக்கமானது மனிதவுரிமையை இன்னும் மட்டுப்படுத்தி அவற்றை மூலதனத் திருட்சிக்குத் தங்கு தடையற்ற உலகைத் திறந்துவிடுவதற்கான சட்டவுருவாக்கத்தை நிறைவேற்றப் பாடுபட்டுவருதில் அதன் மக்கள் விரோத அரசியல் தௌ;ளத் தெளிவாகத் தெரிகிறது.இவற்றைத் திசை திருப்பப் பற்பல வர்ணக் கட்சியுருவாக்கங்கள்,அவை மக்கள் நலன்,மனிதவுரிமை,பயங்கரவாதம் எனும் முகமூடிகளை அணிந்தபடி அணிவகுக்கின்றன.இலங்கையில்,ஆளுங்கட்சிகள்,எதிர்க்கட்சிக் கூட்டணிகளெனவொரு பரந்துபட்ட மக்களது நலனைச் சொல்லிப் பிழைக்கும் அரசியல் யுத்தத்துக்குப் பின்பான இன்றைய சூழலில் உருவாகிவருகிறது.


தொடர்ந்திருத்தி வைக்கப்பட்டிருக்கும் இராணுவ ஆதிக்கமானது அதிகாரத்தை மக்கள் நம்பும்படி ஏற்க வைப்பதில் பிரயத்தனஞ் செய்கிறது.இது நிலைப்பட்டு,மக்கள் சமுதாயத்தைக் காவுகொள்ளுமொரு அரசியலூக்கத்தை இலங்கைச் சிறுபான்மை மக்களுக்குள் தொடர்ந்திருத்தி வைக்கப்படும் தறுவாயில் மக்களது எதிர்புக் குரல்களைத் திட்டமிட்டு ஆரம்பத்திலேயே நசுக்குவதற்கேற்றவாறு அந்நியச் சகத்திகள்-இலங்கை அரச கூட்டுத் தமிழ்ப் பகுதியில்பல்கலைக் கழகங்களையும் பயன்படுத்தி வருகிறது.


அதற்கேற்ப யாழ்ப்பாணப் பல்கலைக் கழகமானது தனது பாரம்பரிய "போராட்ட வரலாற்றை" இதன் குறியீட்டு வியூகத்துக்குப் பயன்படவும் வரலாற்றில் அதன் மாணவர்களது வர்க்கவுணர்வும்,சிறுபிள்ளைத்தன போராட்டப் பாரம்பரியமும் உடைந்தையாச்சு.


புரட்சியை பல்கலைக்கழகத்துக்குள் எதிர்ப்பார்ப்பவர்களும் புரட்சிக்கான புறநிலைகள் குறித்து வகுப்பெடுப்பதும் நமது காலத்தின் கோலம் ஆகி வருகிறது.

இப்படியாக நாம் மக்களைக்கொன்று தின்றுகொண்டே புரட்கரத்"தமிழீழம்"கண்ட பரம்பரை!

ப.வி.ஸ்ரீரங்கன்
26.12.2012

Keine Kommentare: