Sonntag, Oktober 25, 2015

தமிழினியை முன்வைத்து ஈழத்தமிழர்கள் சிந்திக்க வேண்டியவை...

தமிழினியை முன்வைத்து ஈழத்தமிழர்கள் சிந்திக்க வேண்டியவை...
 
வரலாற்றுக் குறுக்கலது வக்காலத்து...

|| 2009 மே 18 இற்குப் பின் புலிகள் இயக்கத்தவர்கள் எதிர்கொண்டுவரும் அதே விதமான சவால்களைத்தான் 1990 களில் புலிகள் அல்லாத இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் எதிர்கொள்ள நேர்ந்தது என்று லண்டனில் வசிக்கும் ஈழம் ஹவுஸ் என்ற அமைப்பைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளரான வரதக்குமார் சில ஆண்டுகளுக்கு முன்பு சுட்டிக்காட்டினார். முன்னாள் இயக்கத்தவர்களை குறிப்பாகத் தடுப்பில் இருந்து வந்தவர்களை ஒரு சமூகம் எப்படி மதிக்கிறது என்பதை வைத்தே அந்த சமூகத்தின் அறநெறித் தளத்தை நீதி உணர்ச்சியை குறிப்பாக நன்றியுணர்ச்சியை மதிப்பிட வேண்டியிருக்கும்.தடுப்பில் இருந்து வந்தவர்களுக்கும் முன்னால் இயக்க உறுப்பினர்களுக்கும் சம்பளம் வழங்குவதும் நிவாரணம் வழங்குவதும் இரண்டாம்பட்சமானவை. முதலில் செய்யப்பட வேண்டியது. எந்த சமூகத்திற்காக அவர்கள் தமது இளமையை, கனவுகளை, படிப்பைத் துறந்து சென்றார்களோ அந்தச் சமூகம் அதைக் குறித்து நன்றி மறவாமல் இருக்கிறது என்பதை நிரூபிப்பதுதான்.|| -நிலாந்தன் [புலி இயக்கப் பரப்புரையாளர்)

மக்கள் படும் வேதனையும் துன்பத்தையும் கேவலமான முறையில் மறைத்தொதுக்கும் ஒரு அரசியலானது இன்று நம் சமுதாயத்துள் கோலாச்சுகிறது.
 
ஈழவிடுதலைப் போராட்டமென்று நடாத்தப்பட்ட அடியாட் சேட்டையானது அன்றும் ,இன்றும் யார்மீதும் சவாரிசெய்த-செய்யும் !.;இஃது , அன்று எந்தவொரு மனிதரையும் துப்பாக்கிக்குண்டுகளுக்கோ அல்லது எதன் பெயராலோ கொன்று குவித்தது.இந்தப்படு பயங்கரமான அரசியல் வாழ்வில் மூன்று இலட்சம் மக்களது உயிர் பலாத்தகாரமாகப் பறிக்கப்பட்டது.இதை இன்றுவரை மறுத்தொதுக்கும் புலித்திமிர் படுகுழியிற் தள்ளப்பட்ட தமிழினத்தைப் பார்த்து நன்றி இல்லாத சமுதாயமென்கிறது.எதற்கூக அவர்கள் நன்றி காட்டவேண்டும்?
30 ஆண்டுகளாக நடாத்தப்பட்ட "தமிழீழ விடுதலைப் போரில் "இதுவரை படுகொலை செய்யப்பட்ட /பலியெடுக்கப்பட்ட மற்றும் துரோகி சொல்லிக் வேட்டையாடப்பட்ட இலட்சக்கான தமது உறுவுகளை இழந்ததற்காக?;
வாழ்வாதாரங்கள் கொள்ளையிடப்பட்டு,தமிழ்ச் சுமுதாயத்தின் வாழ்சூழலைத் தகர்துச் சுடுகாடாக்கி அகதிகளாக்கியதற்காகவா?;

தம் இனத்தை ஒட்ட மொட்டையடித்து அங்கவீனர்களாக்கி,விதவைகளாக்கிச் சிங்கள ஆதிக்கத்திடம் கையளித்த புலிப் போராட்த் திறனுக்காகவா தமிழ்ச் சமுதாயம் நன்றி மறவாதிருக்கவேண்டும்?

அவதியுறும் மக்களை எந்தக் கவனமுமின்றிச் சில,பல மனிதர்கள் தங்கள் வக்கிரக் கண்ணோட்டத்தோடு யாருக்காகவோ வாலாட்டுகிறார்கள். ஏன் தமிழ்பேசும் மக்கள் , இயக்கவாத மாபியாக்களின் பாசிசவாதக் குணாம்சத்தையும் அதன் போராட்டத்தையும் நன்றிகொண்டு போற்ற வேண்டும்?

தமது சமுதாய அமைப்பே சிதறடிக்கப்பட்டு ,மூன்று இலட்சம் தமது உறுவுகளைப் பலியெடுத்துச் சிங்கள -இந்திய ஆளும் வர்க்கத்திடமும் மற்றும் மேற்குலக ஆதிக்கத் தேசங்களிடம் தம்மை அடிமையாக்கிச் சென்ற இந்தப் புலிவழிப் போராட்டத்தையம் அதன் போராளிகளையும் குறித்துச் தமிழ்ச் சமுதாயம் நன்றியோடு இருக்க வேண்டுமெனும் உரையாடல் புலிப்பாசித்தை வரலாற்றில் நீற்றுப் போக வைக்கும் வியூகத்தின் மொழியாகும்.இது தகவமைக்கும் எதிர்காலக் கருத்தியல் மனதானது தமிழ் தேசிய விடுதலைக்குக் குறுக்கே நின்று கல்லெறிவதாகும்.ஒரு இனம் சொந்த இழிநிலைக்குள் இருத்தி வைக்கப்பட்டு கையாலாகாத குற்றுவுணர்வுமிக்க இனமான மாற்றுவது எதிர்காலத்தில் அவ்வினத்தைத் தொடர்ந்து பலவீனமானவொரு இனமாக்குவதே!புலிகளது போராட்டச் செல்நெறியின் விளைபலன்களை மறைத்து, அதன்மீது இரக்கத்தைப் பொழிய வைப்பதற்கேற்பச் சிங்கள அரசால் கொல்லப்பட்ட பல்லாயிரம் போராளிகள் போக சில காரணங்களுக்காக விடப்பட்ட எஞ்சிய மேல்நிலைப் புலிகளை வைத்து புலிகளது தவறான அரசியல் வரலாற்றில் தமிழ்பேசும் மக்களது குற்றமாக வரையப்படுகிறது.

இத்தகைய மனித்துவமற்ற மக்கள் விரோதக் கூட்டமானது உலகத்தின் எந்த மூலையிலும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டே அற்பத்தனங்களுக்கு அடியெடுத்துக் கொடுப்பதில் தன்னை முன்னிலைப் படுத்திவிடுகிறது. இதுதான் இன்றைய ஆபத்தான புலி அரசியல்!இந்த அரசியலானது தன்னால் பலியெடுக்கப்பட்டவொரு சமுதாயத்தின் முன் திமிராக "நன்றி" குறித்துக் கப்பங் கேட்கிறது.

இலங்கைபோன்ற குட்டித் தீவில் தனியரசுக்கான தமிழர் போராட்டமானது வெறும் மேம்போக்கான ஒரு "ஆண்ட பரம்பரை"க் கனவானதாகும்.ஆனால் இலங்கைப் பாசிச அரசின் இனவாதச் சிங்களச் சியோனிசமானது எப்பவும் பாராளுமன்ற அரசியல் நெருக்கடியை தற்காலிகமாகவேனும் திசை திருப்புவதற்காக இந்தத் தமிழர் விரோத, இனவொதுக்கல் அரசியல் நகர்வைச் செய்தே வருகிறது.இதை எதிர்கொள்வதற்கான போராட்டமானது எந்தத் திசை வழியைப் பின்பற்றியதென்பதில்தான் நமது எதிர்காலம் தங்கியிருந்தது.எமது போராட்டத் திசைவழி அதே பாராளுமன்றச் சகதியைத் தழிர்களின் பேரால் ஏற்படுத்தும் ஒரு சட்டவாக்க எல்லையைத் தமிழர்களின் பெயரால் ஏற்படுத்தித் தமிழர்களை ஆளமுனையும்"ஆண்ட பரம்பரைக் கனவு"வெறும் நிர்பந்தப் போருக்கு இதுவரைத் தமிழர்களைத் தள்ளி, இலட்சக்கணக்காகப் பலியெடுத்து அவர்களது சகல குடிசார் உரிமைகளையும் இல்லாதாக்கி விட்டது.இதுதாம் முள்ளிவாய்க்கால்வரையிலான "ஈழவிடுதலை" ப் போராட்ட வரலாறு.

இங்கே ,மனிதவுயிர்ப்புக்கூட போராட்டத்துக்கான தேவையோடே கருத்தாடப்பட்டது..எந்தப் பக்கம் பார்த்தாலும் "போராடு,போராடு" என்பதாகவும், தற்கொலைக் குண்டுதாரிகளால் மட்டுப்படுத்தப்படும் உயிர்வாழ்வு, விடியலுக்கான உயிர் ஆயதமாகவும் குறித்துரைக்கப்பட்டது.

இத்தொடர் நடவடிக்கைகள் மனித வாழ்வின் மிகக் குறுகிய வழிகளைத் தகவமைத்துக்கொண்டு,ஒரு தேசத்தை விடுவிக்க முடியுமெனப் பொய்யுரைத்து,அந்நியர்களுக்கு நம்மை அடிமைப்படுத்தியது. "தேசிய விடுதலை"என்ற கருத்தாக்கத்தையும் அதன் இயக்க வினையையும் துஷ்பிரயோகஞ் செய்தது.அதைக் கேலிக்குரியதாக்கியது!

இத்தகைய கொடுமையான மனிதவிரோத அழிப்பு அரசியலை, தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் ஜனநாயக மறுப்பாக- உலகத்தில் தனிமைப்படும் தமிழ்பேசும் மக்களின் "சுயநிர்ணய உரிமை" சிங்களச் சியோனிசத்தின் வெற்றியாகவும்,தமிழ் மக்களின் நியாய வாதத்தைக் கையிலெடுத்த "பயங்கரவாத அமைப்பான" புலிகளின் தோல்வியாகவும் நாம் வரலாற்றில் பதியவேண்டும்.
 
 
ப.வி.ஶ்ரீரங்கன்
25.10.2015



Keine Kommentare: