Donnerstag, Juni 29, 2006

எழுக பிணங்களே,எழுக!

எழுக பிணங்களே,எழுக!

குருதிச் சேற்றில் புதையுண்டுபோகும் ஈழம் ,
தெருவேராத்துக் கம்பங்களில் தொங்கிய-தொங்கும்
தேசத்துச் செல்வங்கள்,

அடர்ந்த காடாய்ப்போன ஆத்தை படுத்துறங்கிய
அடுப்படியும் >முத்தமும்
அமைதி துறந்த அப்புவின் சாக்குக் கட்டிலும்
மானுடத்து எச்சமாக
எந்தத் துரும்புமற்ற ஈழத்துக் கிரமங்களும்,

போராளிக்குச் சோறுபோட்ட குற்றத்துக்காகவும்
நோட்டீசு ஒட்டியதற்காவும்
கூட்டத்துக்குப் போனதற்காகவும்,
போராடப் போனதற்காகவுமாக
சிறைகளில் இன்னும் இருண்டு பட்டுக் கிடக்கும்
ஈழத்து மனிதர்களும்
வாழ்விழந்து வதைபடுகையில்...

புறுசிலிலோ
கோவிலுக்குக் காவடி தூக்கிய பழக்கதோசத்தில்
ஒரு சிலரின் கரங்களில்
ஒரு முகமூடியும்
சில கோவணத் துண்டுகளுமாகத் தமிழரின் உரிமை
தெருவில் உலாவிக் கொண்டிருக்க,


சில தலைகள் மட்டும்
எதையோ தவப்பயனாய்ப் பெறுவதாகச் சொன்னர்கள்
தேசத்தின் கோவணம்
நாளைய தினம் (உலகக்) கம்பத்தில் பறக்கமுனையுமாம்


எந்தப் பொழுதிலும்
நமது கனவுகளுக்குக் கால் முளைக்கவில்லை!
இறக்கையேந்தித் தலை குத்தி வீழ்ந்த
ஈழத்துக் கனவு
மெல்ல இடம்பார்த்து மூலையைப் பிடித்தது.



இருவேறு குகைகளுக்குள் இடறிவிழும்
சில நடைபுணங்கள்
எல்லைகளில் எரிச்சலைக் கொட்டுகின்றன
இதுக்காகப் பல வர்ணக் கோலங்களுடன்!


இந்த இடருக்குள்
தலைகளைத் தறித்துச் சாக்கிலிட்டவனே
மக்களின் குரலாகத் தன்னையும்
விழிகள் முன் நிறுத்துகிறான் பல் முனைகளில்!


ஏகத் தலையோ உலகத்து வீதிகளில் உலா வந்தபடி...
மக்களின் சில்லறைகளைத் தட்டிப் பறித்த சில அண்டங் காகங்களோ
எழுக புண்ணாக்கு,ஏந்துக தவைர் படம் என்றபடி
தெருவோரப் பிணக்குவியல்களோ
ஏதோவொரு கனவான்(ள்)கள் படையலாக
துர் நாற்றமெடுத்துத் துயில்கின்றன ஈழமெங்கும்!


இப்போது
ஏதோ எழுவதுதான் பாக்கியாம்!
மிச்சசொச்சத் தலைகளையும்
உருட்டியபடி.


கொட்டிய குருதி உலர்வதற்குள்
வழித்து நக்கும் நாய்கள்
நாக்கைத் தொங்கப்போட்டு
நடுச் சந்தியில் காத்திருக்கிறது
ஈழத்தின் பெயரால்...


26.ஒக்டோபர் '05

Keine Kommentare: