Donnerstag, Februar 25, 2010

புரியப்படும் ஒவ்வொரு வெளியும் அடையாளமின்றி தனித்துவிடப்படுகிறது.

புள்ளிகளும்,புரிதற்பாடுகளும்.


ரு புள்ளியிலிருந்து ஆரம்பித்த இடத்தைக் குதறியபடி அழித்தவிடத்தில் அதுவே உயிர்ப்புக்கான இன்னொரு புள்ளியாகிறது. இந்தப் புள்ளிகளின் தோற்றத்தில் துளியளவும் ஆர்வமின்றி கருத்தின்மீதான கவனத்தைக் குவிப்பதில் ஆர்வங்கொள்ளும் நிலையில், மையப்படுத்தப்பட்ட சூழலின்பாலான எண்ணங்கள் மீதான ஒத்தோடல்-எதிர்த்தோடல்கள் சம்பந்தமான குறிப்பைத் தருவதென்பதால் நேர்கோட்டு விளக்கங்கொள்ளும் எவரையும் தள்ளிவைத்துவிட்டு இனிமேலும் தொடரலாம்.

உறவுகள்.சமூகவாழ்வு
உணர்வுகள்-ஆன்மீக நிலை
வளர்ப்பு முறை-அகவுலகம்
சூழல்-புறவுலகம்
சடங்கு மனித நிலை-புனைவுசார் உலகம்
பொருள் வாழ்வு-குவிப்புறுதியூக்கம்
மனித நிகழ்வு-படைப்பாற்றல்
புள்ளிகள்-இருப்பு


இன்று,பின் மதச்சார்பின்மைச் சமுதாயங்களின் காலத்தில் புதிய தெரிவுகளோடு மனித உருவாக்கம் நிகழ்வது குறித்து, நான் அதிகஞ் சிந்திப்பதுண்டு.

இத்தகைய தருணங்களினது மனிதர்களின் மனமென்பது மென்மைத்தன்வகையான விருத்தியின்பால் புனிதத்தினது தூதுவர்களாகின்ற நிலையைப் பின் நவீனச் சமுதயங்களாக ஏற்றுக் கொள்ளபட்ட இன்றைய மனித நடத்தையில் தங்களது கருத்தின் மெய்நிலைகள் தொடர்கின்ற தொனிப்பை அவதானிக்கிறேன்.

தாய்மையின் இருப்பைக் கேள்விக்குட்படுத்தும் மைந்தன் அவளது மூலத்தை அறியமுனைகிறான்.தான் பலரிடம் பெறும் "இன்ப"த்தைக் குறித்து மௌனித்தபடி தாயைப் புணர்வதில் எவனது இருப்பையோ உறுதிப்படுத்த எவனோ முனைவதில் எதிர்பால்வினைக்கு இலாடன் கொண்டு திரிபவன் தன்னைத் தொலைத்துவிட்ட அடுத்தவன்,அடுத்தவள் முலையில் எவனது பற்தடமுண்டென மோதித் திரிகிறான்...

மனிதர்கள் தமது பாதயைத் தொடர்ந்து தெரிந்துகொள்கிறார்கள்.

உள்ளொளியின் குரலை மேலும் தனித்துவமானதென்பதாகத் தொடர்ந்து, அதற்கானவொரு பாதையைத் தெரிகிறார்கள்.நேர்மையைச் செல்லுபடியாக்கும் செயலூக்கத்தில் முயற்சிகளைத் தொடருகிறார்கள்.அதற்கும் எல்லை இன்னொரு தலைப்பட்சமாக"நியாயப்படுத்தலில்"வந்து விடுகிறது.

இந்தப் பின் மதச்சார்பின்மைச் சமுதாயங்களின் முக்கியமான கோரிக்கைகள் சுயதெரிவோடு தன்னிலைகளைப் பெருக்குவதன் வாயிலாக அங்கீகரித்தலென்பதை இன்னொரு புறவயமான காரணிகளிடமிருந்து பெறுவதிலும்பார்க்க அகவயமான உள்ளொளியோடு சங்கமித்து அதன் அங்கீகாரத்தைப் பெறுதலென்ற போக்கு இன்றைய மேற்குலகில் காரசாரமாக இடம்பெறும் உரையாடல்.

தன்னிலை அங்கீகரித்தலோடான தேடுதலும் கண்டடைதலும் என்பது சுயபெறுமானங் குறித்த பிரச்சனையாக மனவெளியில் மனிதர்களை அலைத்துக்கொண்டிருப்பதாகச் சொல்வதே சிறப்பானதென்பது ஹாபர்மாசினது முடிவு.துளியளவும் எனக்கு முரணில்லாத வெளியைத் திறந்து வைத்து நானே பரிபாலிக்கும் அந்த வெளியின் தெரிவில் நான் தொலைந்துபோகும் கணத்தில் அழிக்கப்படும் புள்ளி எங்கே என்பதே எனது பிரச்சனை!

இதன் ஆரம்பம் புனிதம் என்ற பிம்பத்தில் தனது சுய தெரிவை உரைப்பதற்கெடுக்கும் முயற்சியில் மனிதர்கள் மீளவும் சடங்குச் சங்கதிக்குள் சென்று நித்தியத்தின் மகிமையைத் தேடுவதற்காகவும்-மதத் தாயகமொன்றை உருவாக்கி விடுவதில் தமது நிறைவுகளை தேடுவதாக உணர்வதில் இந்தப் புள்ளிக்கு என்ன வேலை?

புரியப்படும் ஒவ்வொரு வெளியும் அடையாளமின்றி தனித்துவிடப்படுகிறது.

இந்த வெளிகளை மரணப்பொறிவைத்து உறிஞ்சும் கருந்துளைகள் உறவுகளெனும் உருவங்கொண்டிருப்பதால் பதில்வினைமறுக்கும் எதிரீற்புவகைப்பட்ட புறப்பொருள் தொடர்பாடற்பாடுடைய நிறங்களது ஈற்பின் நடுவே நான் சஞ்சலம் அடைகிறேன்.எனக்குள் வெளிப்படும் "இன்மை"என்னைக் கொல்வதற்கு முன் பிறந்ததென்பதில் எனக்கான இருப்பு நீண்ட தூரம் துரத்தியடிக்கப்படும்போது எனது அடையாளம் மறுப்புக்குள்ளாக்கப்படுமென நம்பும் எனது பித்தாலாட்டுத்துள் இது முரண்நகை ஆகிறது.

இந்த நிலைகளை கடப்பதில் "அங்கீகிரிப்புக்களை"வலியுறுத்துவதென்பது ஒரே நேர்கோட்டுப்பாதையாகச் சமுதாயத்தில் அதன் அடித்தளத்தில் நிலவும் பொருள்வாழ்விலிருந்து முற்றுமுழுதாகத் துண்டித்துச் சென்றுகொண்டிருப்பதாக எண்ண முடியவில்லை.இத்தகைய தன்னிலைகளின் பின்னே படியெடுக்கப்படும் ஒரு "பொது நிலை"மீளவும் அந்தத் தன்னிலைகளைக் குறித்துக் குழப்பகரமான மறுத்தல்களைச் செய்வதை நான் பார்க்கின்றேன்.

என்னைப் புறந்தள்ளிச் செல்லும் காலத்தில் நான் வாழ்ந்தேன் இல்லை!காலத்தைத் தொலைத்துவிட்டு வாழும் ஏதோவொரு தடத்திலிருந்து எனது ஈனக் குரல் உறவுகளை நோக்கி பாசக்குரலெறிவதென்பது முடியாதிருப்பினும் முடிந்தவொரு புள்ளியை மீள அழித்துக் கீறமுனைவதில் எனது இருப்புக்கு நானே கட்டியம் கூறுகிறேன்.

துரத்தியடிக்கப்படும் எனது சுயம் எங்கோவொரு தொலைவில் மூச்சிறைக்கத் தனக்கான அடையாளத்தை அழித்துக்கொண்டிருக்க...

தம்பி,அண்ணா,அக்கா,தங்கை என ஏதோவொரு புள்ளிகள் தன்னிலைகளாக எனக்குள் அங்கீகரிக்கக் கோருவதில் நான் முழுமையுறுவதாக எண்ணும்போதே அவை தகர்கின்றன.தாய்மையின் "கற்பு"பரிசோதனைக்கூடமாக முடியுமா?அந்தப் பரிசோதனையில் பட்டம்பெற முனையும் தனயன்களோ ஆரம்பக் கல்வியின் அரிச்சுவடியையே அறிந்துகொள்ள முடியாத தற்கொலைத் தன்னிலைகளாக இருத்திய தமது வெளிகளை நெருங்க மறுக்கும் தருணங்களில் இவர்களுக்கான"தெரிவுகள்"என்ன?


தேசம் என்பது"தாய்மை"என்ற பொருளில் அவள் எப்போதோ "கற்பு"அழித்த பெண்மையுள் போதர்கர்களான "ஆண்மை"யின்நெடிய அடிவாரத்துள் மெலினப்பட்ட குரல்களாக உருக்கலைக்கும் சந்தர்ப்பம் தற்செயலானதில்லை!நிலைத்திருக்கமுனையும்"ஆண்"தன்மை எத்தனை வன்மத்தையும் தனது குறியினது மத்தியில் துயிலுரிக்கும் பெண்மை துடித்துக்கொண்டிருக்கும் வெளிகளுக்குள் நானும் கருவுற்றதென்பதில் எனக்கான இருப்பு நியாயம் அடைகிறது.இது,புனையப்பட்ட உலகத்துள் "அங்கீகாரத்தை"வலியுறுத்தும்போது தனது மேன்மைகளை அவற்றுள் இனங்காணுவதில் சுயதிருப்த்தி அடைகிறது.

இங்கே,அடையாளம் என்பது என்ன?

பொருண்மிய மேம் பாடென்பது எந்தப் புள்ளியையும் விட்டு வைக்காதாவொரு வெளியுள் எனது "அங்கீகாரம்"என்பதே அபத்தம்.

அபத்தப் பரிசோதனையுள் எவரது மூலத்தை எவர் தேடுவதென்பதில் அரிய புள்ளி என்பது புனைவுகளது எச்சமாக இருப்பதையும்,கற்பனையுள் நிலைத்திருக்கும் வடிவ மனித முனைப்புத் தனக்கான அடையாளமாக மற்றவர்களது அல்லது தனது எதிரீற்புப் புறவிருப்பின்பால் தற்கொலையை-பலியை ஊக்குவிக்கிறது.

இது என்ன புள்ளி?

வெளிகளை விரியவிடலாம்.வெளிகள் வெளிகளாக இருப்பதால்.இருப்பை அழித்துவிடு.அவை புனைவை வலியுறுத்துவதால்.எந்தத் தன்னிலைகளையும் அவை மறுக்கும் என்பது எனது இருப்பின் நடுவே நான் அனுபவமாக்கிய அடையாளம்.

என்னைக் கொல்,உன்னைக்கொல்.எதற்கும் நடுகல் வைப்பதில் உன்னை முன் தெரிவாக்கும்போது நீ உனக்கான சவக்குழியை நீயாகவே தோண்டுவதில் உனது சுயத்தை எனக்குச் சொல்கிறாய்.

நீயே ஒரு கட்டத்தில் எனது உடன் பிறந்தவன் என்பதும் எவ்வளவு கொடுமை!

நான் அழித்த புள்ளியுள் மறுதலையாகத் தோன்றும் இன்னொரு புள்ளியை அழிப்பதில் எனக்கு எந்தவிருப்பும் இல்லை.ஏனெனில், அதுவே இன்னொருதரம் தன்னை அழித்து மீளக் காத்திருக்கு.

புள்ளி.

ப.வி.ஸ்ரீரங்கன்

26.02.2010

(கீரிமலையில் கரையும் எனது புள்ளிக்காக).

Keine Kommentare: