Donnerstag, April 05, 2012

முள்ளிவாய்காலிற் தோற்றது பிரபாகரனது பேதமை மட்டுமல்ல.

" நாம் புலியோடு சமரசஞ் செய்து புரட்சி நடாத்தக் கனவுகண்டால் அது எமது தற்கொலைதாம்"


ன்று நிலத்திலுள்ள மக்கள் மிகக்கெடுதியான அரசியல் சூழ்ச்சிக்குள் தனித்து விடப்பட்டுள்ளனர்.முள்ளிவாய்க்கால்வரை "தமிழீழ விடுதலை"போராட்டமெனும் சதிப் போராட்டத்தை நடாத்திய அந்நியச்சக்திகளது கைக்கூலிகள்,பிரபாகரனையும் அவரது கோரிக்கைகளையும் ஏமாற்றிக்கொண்டிருந்தபோது அதை ஊகித்துணரமுடியாத பிரபாகரனது புத்திக்குக் கிடைத்த தோல்வியல்ல இந்தச்சதி. இது முழுமொத்த இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்கும் கிடைத்ததோல்வியாகிறது.இலங்கைச் சிறுபான்மை இனங்கள் யாவும் பன்முகத்தன்மையில் ஒடுக்கப்படும்போது இலங்கையின் ஆளும்வர்க்கம் மற்றும் அந்நியக் கூட்டணியோடு இலங்கையின் முழுமொத்த உழைப்பாளர்களும் இனங்கடந்து இன்னொரு தளத்தில் மிக நேர்த்தியாகவும் ஒடுக்கப்படுகின்றனர்.இதைக் கடந்து சிந்திக்கும் தமிழ் தேசிய அரசியலானது,பழிவாங்கப்பட்ட கட்சி-இயக்க நலன்களை மீளப்பெறவே தமிழீழ விடுதலை குறித்த அதே பழைய அரசியல்போக்குகளிலிருந்து தன்னைத் தகவமைக்கிறது.இதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைபுக்குள்ளும்,புலிகளது அரசியலிலிருந்து புரிந்துகொண்டு புலிவிசுவாசத்தின் வெளிப்பாட்டுத் தன்னார்வத் தமிழ்ச் சேர்க்கையின் இன்றைய அரசியலுக்குள்ளும் உணர்ந்துகொள்ளமுடியும்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்பது வழமையான புலியினது அந்நியக் கைக்கூலிகளால் நாடத்தப்படும் ஒரு மடம்.அதைத் தாண்டி இலங்கைச் சிறுபான்மை இனங்களைத் தொடர்ந்து அரசியல்ரீதியாகவும்,ஆன்மீக ரீதியாகவும் சிதைக்கும் விபரீதமான அந்நியக்கைக்கூலிகள் மக்களது அனைத்து வாழ்வு முன்னெடுப்புகளில் தம்மைப் பிணைத்து அந்த மக்களை அரசியல் ரீதியாகக் காய் அடிக்கின்றனர்.1990 களுக்குபின்"புத்திஜீவிகள்-பத்திரிகையாளர்கள்-சமூக ஆய்வாளர்கள்" என்போர் புலிகள் ஆயுதரீதியாக மக்களைக் காயடித்தபோது அதற்கெதிராகப் போராடவும்,புலிகளைக் கேள்வி கேட்பதையும் தவிர்த்து,புலிகளது அந்நியக் கைக்கூலி அரசியல் நடாத்தையை அநுமதித்தனர்.

இத்தகைய அநுமதித்தலூடாகத் தமிழ்பேசும் மக்களது வாழ்சூழலைத் தொடர்ந்து தமிழீழத்தின் பெயரால் அராஜகமயப்படுத்திக்கொண்டனர்.இதன் கட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவுற்றதென எவராவது கருதுவோமானால் நாம் மீளவும் தவறிழைப்பதில் மக்களிடமிருந்து அந்நியப்பட்டுச் செல்வோம்.

முள்ளிவாய்க்கால் அழிவுக்குள் அழிக்கப்பட்டது பிரபாகரனது பேதமை மட்டுமல்ல.அங்கே அழிக்கப்பட்டது அந்நியச் சக்திகளுக்கெதிரான விவேகமும்தாம்.அந்த விவேகத்தை மெல்ல மெல்ல அழித்த இந்திய-இலங்கைக் கைக்கூலிகள் புலிகளது மேல் நிலை ஆலோசகர்களாகவும்-தளபதிகளகவும் இருந்து வந்தனர்.அவர்களை,இன்று கே.பி. என்றும் தளபதி கருணாவென்றும் இனங்காணும் நாம் இவர்களது இன்னுமொரு பகுதியையும் இனங்காணுவதில் பாராமுகமாக இருக்கிறோம்.இதை இனங்கண்டு நிலத்திலுள்ள மக்களுக்குச் சரியான திசைவழியில் போராடும் உண்மைகளைப் பறையாதிருப்போனால்,மீளவும், அதே அந்நியக் கைக்கூலி அமைப்புகளே மக்களைக் கொலைக்குத் தயாரிப்பதில்"தமிழ்பேசும் மக்களது உரிமை"சொல்லி அந்நிய நலன்களுக்கானவொரு[Indian platform] அடியாட்படை-ஆட்டு மந்தைக்கூட்டத்தைத் தொடர்ந்து தயாரித்துக்கொள்வர்.இதைத் தடுக்காத எந்த உரையாடலும் இனிமேல் அர்த்தமற்றது.இது,அரசியல்-இலக்கியம் என்ற அனைத்து மட்டத்திலும் எடுத்துச்செல்லப்பட்டு மக்களுக்குள் பகிரப்பட வேண்டும்.

புலியை ஒரு உதாரணத்துக்கு எடுத்தோமானால்(ஏலவே, அந்நியக் கைக்கூலி அரசியல்-இயக்கச் சேவையில் பல ஆயுதக்குழுக்கள் மறைமுகமாகவும்,நேரடியாகவும் ஈடுபட்டு அம்பலப்பட்டபோது இந்த அமைப்புகளை ஒரு தளத்திலும்,இன்னொரு தளத்தில் புலிகளை மிக நுட்பமாகத் தமது கைக்கூலியாக்கியது இந்திய-இலங்கை-மேற்குலக அரசுகள்.எனவே,ஏனைய அமைப்புகளைக்கடந்து, புலிகளது அமைப்பை உதாரணத்துக்கு எடுப்போம்.)அந்த அமைப்பு ஒரு கட்டத்தில்(2000க்கு பின்)சரியான திசைவழியில் செல்வதாகவும்,அவர்களே மக்களுக்கான அரசியலை முன்னெடுப்பதாகவும் மேற்குலகில் புலம் பெயர்ந்த தமிழ்ச் சிந்தனையாளர்களில் பலர் எமக்கு வகுப்பெடுத்தனர்.இவர்களால் ஏமாற்றப்பட்ட விவேகமான போராளிகள் அழிவது உறுதியென ஆக்கப்பட்ட பெரு வன்னி யுத்தமானது இறுதிவரைப் பிரபாகரனுக்குப் புலப்படாத அரசியலாகவே இருந்ததென்பதற்கு அவரது சரணடைவு-கொலையே நமக்கான சாட்சி!

இந்தத் திசையில் அந்நியச் சக்திகள் தற்போது கட்டிவைத்திருக்கும் அரசியற்றளம் (Political Platform ) என்பதை மிக நுணுக்கமாகக் கவனிக்க மறுக்கும் எந்தத் தமிழீழ விசுவாசியும் மீளத் தோற்பது மக்களது உயிரோடு விளையாடும் விளையாட்டே!புலிகள் அமைப்பை மிக நேர்த்தியகத் தமக்கான மறைமுகமான கைக்கூலியாக்கிய அந்நியச் சக்திகள் அவர்களைத் தொடர்ந்தும் தமிழ் பேசும் மக்களது உண்மையான போராட்டத்தலைமையாகவும் ஆக்கிக் காட்டினர்.அதுள் பிரபாகரனது இருப்பே அவர்களுக்குக் கைகொடுத்தது.பிரபாகரனது மாயையே இந்த அந்நிய வியூகத்தை மறைத்து அந்த அமைப்பை முள்ளிவாய்க்கால்வரை விடுதலை அமைப்பாகப் பலரை நம்ப வைத்தது.ஆனால்,பிரபாகரனுக்கு அடிபணிவதாக நடித்தபடி அந்த அமைப்பின் தளபதிகள்-அரசியல் மேல் நிலை ஆலோசகர்கள் பிரபாகரனது மலட்டுத் தனத்தைக்கொண்டு புலிகளை அந்நிய அடியாட்படையாக்கிக்கொண்டது.

இங்கே,இனம் காட்டப்படுவது மிக நேர்த்தியான அரசியல்சதி:

மேற்குலகத்தின் கைக் கூலியாக இருந்தவர்களுள் முக்கியமானவர்கள்:

  • 1: அன்ரன் பாலசிங்கம்,அடோல் பாலசிங்கம்,
  • 2: தமிழ்ச் செல்வன்-இவர்கள் இறுதிவரை அம்பலப்படாதிருப்பினும்பாலசிங்கம் ஏலவே அம்பலப்பட்டுப் பிரபாகரனால் பின்தள்ளப்பட்டு இந்தியக் கைக் கூலிகள்அந்த இடத்துக்கு வந்தனர்.அதையும் பிரபாகரனால் இனங்காண்பது அரிதாகவே இருந்தது.

இந்தியாவின் எடுபிடிகளாக புலிகளுக்குள் இருந்த மாத்தையா குழுவுக்குப்பின்பான கூட்டு:

  • 1: கருணா கூட்டு,
  • 2: கே.பி.கூட்டு. முள்ளி வாய்க்காலுக்கு முன்னும்,பின்னருமாக இவர்கள் வெளிப்படையாகிவர்கள்,

வெளிப்படாததும்,இன்னும் மக்களுக்காகச் சிந்திக்கும்,உழைக்கும் கூட்டாக இருக்கும் இந்தியக் கைக்கூலிகள்:

  • 1: திருநாவுக்கரசு-கருணாகரன்,நிலாந்தன் கூட்டு,
  • 2:மேற்குலகில் புலிப்பிரமுகர்களாக இருக்கும் நபர்கள்வரிசையில் முரளிதரன்

புலம் பெயர்ந்து மேற்குலகில்வாழும் தமிழ்பேசும் இலங்கையருள் அதிகமாகத் குறுந்தேசிய வாதத்துக்குள்மூழ்கியவர்களும்-புலிகளது பரப்புரையால் காயடிக்கப்பட்டவர்களும் இன்றைய மேற்குலகப் புலிப்பினாமிகளின் அதிகார நகர்வில் மேற்குலக லொபிகளாகவே இருக்கின்றனர்.ஐரோப்பியக் கூட்டமைப்பின் அதீத விசுவாசத்துக்குரியவர் புலிப் பினாமிகளில் முக்கியமான உலகத் தமிழர் பேரவை நிறுவனர் எஸ்.ஜெ.இமானுவெல் அடிகளார்.

இங்கே,நாம் நிலத்துத் தமிழ்மக்களது அரசியல்தலைவிதி குறித்து கவனத்தைக் கொண்டோமானால்,அந்த மக்கள் முதலில் இனம்கண்டு அரசியல் நீக்கஞ்செய்யப்படவேண்டியவர்கள் இந்தியக் கைக்கூலிகளாக[A political platform is not only that typically widely distributed, with journalists and commentators being encouraged to quote from it when they analyze candidates and upcoming elections.] இருக்கும் "வெளிபடையாக" இனம் காட்டாதவர்களையே. இவர்கள்ரொம்ப ஆபத்தானவர்கள். முள்ளிவாய்க்காலில் புலி தோத்துக்கொண்டிருந்தபோது அடிக்கடி புலிகளது பரப்புரை ஊடகங்களால் கருத்தொன்று பரவியது.அந்தக்கருத்தானது புலிகளது அரசியல்வியூக வகுப்பாளர் திருநாவுக்கரசால் கருத்தியற்றளத்துக்கு எடுத்து வரப்பட்டது."தமிழீழத்தின் திறவுகோல் தமிழ்நாட்டில்தாம் உண்டு"என்பது அந்தத் திரு மந்திரம்.இவர்களேதாம் இப்போது கிட்டத்தட்ட மறைமுகமான இந்திய ஏஜன்டுகளாகத் தமிழ் பகுதியெங்கும் தங்கள் கைவரிசையைக் காட்டுகின்றனர்.

இவர்கள் இந்தியாவின் நலன்களை இலக்கைக்குள் தொடர்ந்து பதியம்போடும் மக்களோடு மக்களான கலைஞர்களாகிறார்கள்.இந்த மனிதர்களே சமீபத்தில் இலக்கிய வெளியீடுகள்-மதிப்பீடுகளெனச் செய்து தமது அரசியலை மிக நுணுக்கமாக முன்னெடுக்கின்றனர்.இந்த நடாத்தைகளை மிக நுணுக்கமாகக் கவனிப்போமானால்இந்தியா தனது எடுபிடிகளைப் பலமட்டத்தில்-பல வடிவங்களில் வைத்து இயக்கிவருகிறது.இவர்கள் அனைவருமே புலிகளது மேல்மட்டத் தலைவர்களாகவும்-கலைஞர்களாகவும் இருந்தவர்கள்.இவர்களுக்கு வெளியிலும் இந்தியக் கைக்கூலிகள் இலக்கிய வாதிகளாகவும்,தலித்தியவாதிகளாகவும் இருக்கின்றனர்.அவ்வண்ணமே,இந்தியா முன்னைய ஆயுத-அராஜகக் குழுக்களையும் இதுள் இன்னொரு தளத்தில் வைத்து இலங்கையின் ஆளுங்கட்சி-எதிர்க்கட்சிக்குள் கட்டி வைத்திருக்கிறது.இதன் பின்னணியுள் நடந்தேறும் அரசியல் நமது மக்களுக்கு ஆபத்தானது.

"தமிழீழ"ப் போராட்டத்துள்புலிகளது பாத்திரம் நேர்மையாப் பேசப்பட வேண்டும்:

புலத்து-நிலத்துத் தமிழ்பேசும்மக்களுக்கு அரசியல் உரைத்தலென்பது மிகக்கடினம்.அவர்கள் அதிகமாகப் புலிகளது பொய்யான கருத்துக்களால் கடந்த கால் நூற்றாண்டாகக் காயடிக்கப்பட்டவர்கள்.இவர்களே,தொடர்ந்து கருணாகரன்,நிலாந்தன்,திருநாவுக்கரசு போன்ற இந்தியத் தாசர்களைப் புலிகளது விசுவாசத்துக்குரிய தோழர்களெனப் புரிந்து அணைத்துக்கொள்கின்றனர்.இந்தத் துணிவுதாம் அவர்களும் சாம்பற்றத்துவமுரைக்கும் நிலைக்கும் மேலாக இப்போது இலங்கை தழுவிய முறையில் கலா நிகவுழ்வுகளுக்குத் தலைமைதாங்கித் தமிழ் மக்களது ஊடக அறிவுக்கு ஆப்பு வைக்கும் காரியத்தில் முழுமையாக இறங்கி இந்தியச் சார்புக் கருத்துகளைத் தினமும் மக்களுக்குப் பழக்கப்படுத்துகின்றனர்.இங்கிருந்து நாம் தொழிற்படவேண்டிய கட்டாயமான பணி என்ன?

புலிகளது வரலாற்றுப் பாத்திரத்தைப் புனையும் புலம்பெயர் ஈழமக்களது இருண்ட அரசியல் குறித்தும் இந்தச் சந்தர்ப்பதில் உரைத்தே ஆகவேண்டும்.சமீபத்தில் புலிகளது அமைப்பில் பட்ட அநுபவங்களைப் புலிகளது ஆரம்பகால தன்னார்வக் கோஸ்டியின் உறுப்பினர் கணேசன் ஐயர் இனியொருவில் எழுதியிருந்தார்.அந்தத் தொடர்களை நூலாகியவர்கள், வெளியீட்டு விழாவின் மூலம் பலதரப்பட்ட வர்க்கத் தளத்தவர்களையும் உள்ளிழுத்து விமர்சனத்தைப் பகிர்ந்துகொண்டனர்.விமர்சனம் என்பது வெறுமனவே நிலவுகின்ற பெரு மக்கட்டொகையின் எண்ண அலைக்கொப்ப கப்பலோட்டுவதாகவே அனைவரும் செய்து முடித்தனர்.உண்மையில் புலிகளது வரலாற்றை நாம் தலைமுறை தலைமுறையாகச் சொல்லிக்கொடுக்கப்படவேண்டியவர்கள்.புலிகளென்ற அமைப்பின் வரலாற்று உள்ளடக்கத்தையும் அதன் போராட்டப் பாத்திரத்தையும் நமது வருங்காலச் சிறார்கள் கற்றறியவேண்டும்.இதன் அவசியத்தை உரைப்பதற்கு 1980 களுக்குப் பின் இலங்கையிற் பிறந்த தமிழ் இளையோரை மிக நிதானமாக உற்றறிந்தால் பொய்யினதும்,காயடிப்பினதும் பலம் பொருந்திய வினை, நமக்கு புரிந்து பேகும்.

80 களுக்குப் பின்பிறந்தவர்கள் புலியினது அனைத்துப் பாத்திரத்தையும் மறுத்துப் புலிகளது தலைவனது ஒளிவட்டத்துக்குள் மாட்டுப்பட்டுக்கிடந்தவர்கள்.அவர்களே,புலியினது அழிவுவரைப் புலிகள் தலைவனையும்,அந்தத் தலைவனது போராட்டச் செல்நெறியையும் மக்கள் போராட்டமாகவும்,"கரிகாலன் காலத்துள் தமிழீழம் சாத்தியமென" அனைத்து ஜனநாயக பூர்வமான கோரிக்கைகளை-கருத்துக்களையெல்லாம்ஜீரணிக்கும் வலுவின்றி "எட்டப்பர்-துரோகி"என்றபடி தமிழ்பேசும் மக்களது தலையில் யுத்தத்தின் சுமையை ஏற்றினார்கள்.இவர்களுக்குப் புலிகளது ஒட்டுணித்தலைமையானது அந்நியச் சக்திகளால் இயக்கப்படுவதென நாம் உரைத்தபோது ,அவற்றைத் தட்டிகழித்தார்கள்.நம்மீது அவதூறு பொழிந்தார்கள்.நாம் மீளவும்,"புலிகள் தோற்பார்கள்"என்றபோது எம்மைப் பார்த்து,"எழுதி வைத்துக்கொள்ளுங்கள் புலிகள்சிங்கள இராணுவத்தை வென்று தமிழீழத்தை விடுவிப்பார்கள்"என்று எழுதிக் குவித்தனர்? இந்த வினை எங்ஙனம் உருவாகியது?எப்படி இந்த இளைஞர்கள் காயடிக்கப்பட்டார்கள்? வேள்விக்கு வளர்த்த கடாவாகவே இந்தக் கூட்டம் இதுவரை இருக்கிறது.இவர்களேதாம் இப்போது நமது மக்களது யுத்த வாழ்வையும்-வலியையும் புனைவு இலக்கியமாக்கிறார்கள்.இத்தகையவர்களது அரசியல்-வரலாற்றுத் தெளிவே இந்த இலட்சணத்தில் இருக்கும்போது, இவர்களால் ஆற்றப்படும் அனைத்து நடவடிக்கைகளும் ஏதோவொரு விசுவாசத்துக்குக் கட்டுப்பட்டு, உண்மைகளை இனங்காண்பதில் அநுபவக் கோளாறுடன் உரை அமைக்கின்றனர்.எனவே,புலியினது உண்மையான பாத்திரம் மிக நேர்த்தியாக எழுதப்படவேண்டும்.பொதுவெளியில் உரையாடப்படவேண்டும்.

சிங்கள ஆளும் வர்கத்தினது இனவாத ஒடுக்குமுறை நிகழ்வை வலிவுப்படுத்தியதும்,அதைத் தொடர்ந்து இலங்கைக் கூலிப்படையைத் தேசிய இராணுவமாகவும்,ஆக்கிய போராட்டச் செல்நெறியும்,வரலாற்றில் மிதவாதத் தமிழ்த் தலைமைகளது மேற்குலகச் சார்பு அரசியலது வினையின் பலாபலாத்தால் புலிகளென்றவொரு அமைப்புச் சுயவளர்ச்சியை மறுத்து முழுக்முழுக்க அந்நியச் சக்தியின் தயவில் தங்கி வைக்கப்பட்டதும் தற்செயல் நிகழ்வல்ல.இனவாத அரசியலுக்கெதிரானதும்,அந்த அரசியலது வினையால் மேற்கொள்ளப்பட்ட இனவொடுக்குமுறை வீரியத்துக்கெதிராகவும் போராடுவதென்ற பேர்வையில் அந்நிய நலன்களுக்காகப்பாடுபட்ட ஈழப்போராட்ட ஆயுதக்குழுக்களும்-கட்சிகளும் நமது மக்களை இலட்சக்கணக்காகக் கொன்றும்,சமுதாயத்தின் அனைத்து வளங்களையும் துஷ்பிரயோகஞ் செய்தும் தமிழ்பேசும் இனத்தை இலங்கையில் ஒட்ட மொட்டையடித்துச் சிங்கள ஆளும் வர்க்கத்துக்குக் காட்டிக்கொடுத்து, அடிமையாக்கியக் கொண்ட வரலாறு பேசப்படவேண்டும்-பகிரங்கமாக நாம் எமது மக்களுக்கு உரைக்கும் முதற் செய்தியானது,புலிகள் அந்நியக் கைக்கூலிகள். புலி இயக்கத்தின் மேல் நிலைத் தலைவர்களது இன்றைய அரசியல் சார்பே சாட்சியென்பதல்ல.அந்த அமைக்குள் நிலவிய போராட்டச் செல்நெறியும்,அவர்களால் அணுகப்பட்ட அரசியலுமே ஆழமாகப் பேசப்படவேண்டும்.அங்கே,இவர்கள் எப்படி அந்நிய அடியாட்படையாக உருவாகி வந்தனர் என்பதை மிக நேர்த்தியாக உரைத்தாகவேண்டும்.

இதைத் திட்டமிட்டு மறைக்கும் எந்தவுரையாடலும் புலிகளைத் தேசியப் போராட்டத் தலைமையாகவும்-மாவீரர்களாக்குவதும் மீளவும் நமது மக்களைத் தப்பான பாதைக்கு அழைத்துச் செல்லவே.அந்த வகையிற்றாம் இன்று, இந்தியக் கைக் கூலிகள் மீளவும் நமது மக்களுக்குள் வந்து திடமாக அரசியலை முன்னெடுக்கின்றனர்.

இவர்கள், இரண்டு இலட்சம் மக்களது அழிவுக்குப் பதிலுரைப்பதைத் தவிர்த்துவிட்டுப் புதிய தத்துவம் போதிக்கும் நிலை எப்படியுருவாகிறது?,திருநாவுக்கரசும்,கருணாகரனும்,நிலாந்தனும் எப்படித் தமிழ்ச் சமூகத்தின் முன் தலை நிமிர்ந்து நிற்கின்றனர்?,எப்படி இவர்களால் மீளமீள இந்தியாவுக்குச் சார்பான கருத்துக்களைப் பேச முடிகிறது?.எமது மக்களை கெடுதியாக வருத்தியவொரு கூட்டம்.மக்களது அனைத்து வளங்களையும் திருடிய கூட்டம்,குழந்தைகளைப் போருக்குள் புதைத்தவொரு கூட்டம் இன்னும், மக்களது நலனுக்காகவே அரசியல் பேசுவதாகப் பசப்பும் சூழ்நிலை உருவாகிறதென்றால் புலிகளது பாத்திரத்தை மக்கள் சரியாகப் புரியவில்லை என்பதே உண்மை!

புலியினது அமைப்பிலிருந்து போராட்ட அநுபவங்களைப் பேசமுனைபவர்கள் குறைந்தபட்சமாவது புலிகளது அந்நியக் கைக்கூலி அரசியலையும் பேசியே தீரவேண்டும்.மக்களிடமிருந்து அந்நியப்பட்டுவிடுவோமெனப் பயந்து விமர்சனத்துள் நாசுக்காகச் சொல்வதென்பது சிலருக்கு அவசியமாகலாம்.ஆனால்,பெரும் பகுதி மக்களது விடுதலையை விரும்புபவர்கள் உண்மைகளைக் கறாராகப் பேசவேண்டும்.ஒரு கைக்கூலி அமைப்பால் எத்தகைய வரலாற்றுத் துரோகம் ஒரு இனத்தின்மீது கட்டவிழ்த்து விடப்பட முடியுமென்பதற்குப் புலிகளே உதாரணமாக இருக்க முடியும்.இவ்வளவு பெரிய இழப்பும்,அற்பணிப்பும் அந்நிய அரசுகளது அரசியல்-பொருளியல் நலனுக்கேற்பப் பயன் படுத்தப்பட்டதென்றால் அது உண்மையிலேயே மன்னிக்க முடியாத குற்றம்.இங்கே, புலிகளது பினாமிகள் இப்போதும் இந்திய-மேற்குலகக் கைக்கூலிகளாகவும்,மகிந்தாவின் விசுவாசிகளாகவுமிருக்கின்றனரென்றால் அவர்களை மக்கள் மத்தியல் அம்பலப்படுத்தி அரசியல் நீக்கஞ் செய்யத் தூண்டியாகவேண்டும்.ஆனால்,நிலாந்தன்,கருணாகரன்,திருநாவுக்கரசு போன்றவர்களோடு அரசியல் நடாத்தும் புரட்சிக்கரத்"தோழர்களை"என்னவென்பது?புலிகளது அந்நியக் கைக்கூலிப்படைப் பாத்திரத்தை மறைத்துக்கொண்டு,அவர்களைத் தேசியவிடுதலைப் போராளிகளெனச் சொல்லப்படும் வரலாறானது மக்கள் விரோதமாகும்.அதற்கெதிரான பெறுமிதிமிக்க உண்மைகள் பகிரங்கமாகப் பதியப்படவேண்டும்.அவை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று புலிகளது மாயை தகர்க்கப்படும்போதுதாம் இத்தகைய இந்திய-மேற்குலகக் கைக் கூலிகளை முiறியடிக்க முடியும்.அதுவரையும் நாம் புலியோடு சமரசஞ் செய்து புரட்சி நடாத்தக் கனவுகண்டால் அது எமது தற்கொலைதாம்.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
05.04.2012





Keine Kommentare: