Mittwoch, Januar 02, 2013

தலித் எதிர்ப்புச் சாதிய அரசியல்

தலித் எதிர்ப்புச் சாதிய அரசியல்

கவின் மலர்-சில குறிப்புகள்

ன்புடையோரே,தன்னையே "நாண்டு நின்று" தன்னையழிக்கும் தமிழ்க் குடியோரே, "நாம் யார்க்கும் குடி என்றாம்" நமக்கின்றி!
நல்லது. நடுச் சந்தியில் வைத்துத் "தலித்துவ பாடங் கற்க" முனைவோம்.தமிழ்நாட்டில் மட்டுமல்ல முழு இந்தியாவிலும் தீண்டத்தகாதவர்களாக இந்தியக் குடிகளில் 239 மில்லியன் மக்கள் இந்தியப் பார்ப்பனிய நிறுவனத்தால் பிளவுபடுத்தப்பட்டும், இலங்கையில் "தமிழ்-சிங்கள" இனத்துள் சுமார் 8 மில்லியன் மக்கள் இங்ஙனம் பிளவுபடுத்தப்பட்டும்-சீரழிக்கப்பட்டும் அவலத்துள் வாழ விடப்பட்டுள்ளனர்.இதை முன் நிறுத்திக் கவின் மலர் அவர்களது உரையைப் புரிந்துகொள்ள முனைவோம்.

நாம், எடுத்த எடுப்பிலேயே சொல்லி விடுகிறோம்:
நாம் கவின் மலரது உரையோடு நூறுவீதம் உடன் படுகிறோம்.

அப்படியே, அவரது உரையின் பிரதான கருத்தைக் கோடிட்டுக்காட்டும் வேண்டுகோளையும்,அவர் குறித்துரைக்கும் வன்னிய சாதிக் கட்சியின் வியூகத்தையும் கொஞ்சம் சிந்தித்தீர்களானால் நமது இலங்கைத் "தலித்துவ" அமைப்பின் நிலையும் புரிந்துபோகும்.

திரும்பத் திரும்ப முரண்பாடுகளை முன் தள்ளிப் பிளவு படுத்தி தலித்துக்களைச் சாதிய ரீதியாகப் பிளப்பது குறித்துக் கவின் மலர் அவர்கள் பேசுகிறார்.இந்த முரண்பாடுகளைக் களைந்து பல்"தாழ்த்தப்பட்ட" சாதிகளது அடுக்குகள் தமக்குள் ஒன்றுபட வேண்டுமென்கிறார் கவின் மலர் அவர்கள்!,எவ்வளவு சரியான பார்வை இது!!

முற்று முழுதுஞ் சரியான பார்வை.இது, குறித்து மனித நேயமிக்க எவரும் முரண்பட முடியாது.

இவ்வண்ணம்தாம்,நாம் ஒரு சாதியக்-சங்கங்கள்-சாதிகளுக்குள் நிலவும் படிமுறை-சமூகத்துக்குள் இவ்வளவு வியூகம் விரிக்கப்பட்டு உரிமைகளுக்காகப் போராடும் உழைக்கும் மக்களைப் பிளந்து சிதைத்து ஒடுக்குஞ் சாதிகள்-வர்கங்கங்கள்-அரசுகள் மக்களைக் கொல்கிறார்கள்-குருதி குடிக்கிறார்களெனவுணரும்போது (கவின் மலரது கூற்றை வரவேற்கிறோம்.அதை யாருமே மறுக்க முடியாது) ஒரு தேசம்.70 வருட அரச ஆதிக்க அநுபவமும், அதிகார நிறுவனப் பலமும்முடையவொரு இனஞ்சார் அரசானது தனக்குள்ளிருக்கும் மாற்று இனங்களை-சிறுபான்மைச் சமுதாயங்களை எங்ஙனம் பழி வாங்குமென யோசிப்பீர்களா நண்பர்களே?


எத்தனை பிளவுகளை-வேறுபாடுகளைத் தனக்கேற்பப் பாவித்து ஒரு இனத்துக்குள்ளிருக்கும் அனைத்து அகமுரண்பாடுகளையும் தனக்கேற்ப-தனது இனவொடுக்குமுறைக்கு வலுச்சேர்க்கும் தந்திரத்தோடு நகர்த்தும் என்பதை நாம் உணர்ந்துள்ளோமா?உதாரணத்துக்கு நமது ஈழத்துத் தமிழ்ச் சமுதாயத்தை எடுங்கள்! நண்பர்களே,எம்மை எப்படியெல்லாம்  இந்த இனவாத இலங்கை அரசும்,அதன் கூட்டாளிகளான நமது அந்நிய அரசுகளும் எத்தகைய வகையில் நமக்குள் சதி செய்தனர்? 




அந்நியச் சக்திகள்-இலங்கை அரச வியூகங்கள்ஆரம்பத்தில் பாராளுமன்றக் கட்சிகளைத் தமக்கேற்பப் பயன்படுத்தின.பின்பு, ஆயுதப் போராட்டம் ஆரம்பித்தபோது ஆயுதக் குழுக்களைப் பலவாக உருவாக்கி-ஆயுதம் வழங்கியொருவரையொருவர் பகைத்து அழிக்கும் நிலைக்கிட்டனர் நம்மை. பின்னால், பாசிசப் புலிகளின் வழி நம்மைப் பிளப்பதற்கு அநுராதபுரச் சிங்கள அப்பாவிகளைக் கொல்ல வைத்தும், யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம் மக்களை 24 மணி நேரத்துக்குள் இடம்பெயர வைத்தும் நமது சமுதாயத்தின் இருப்பையே அசைத்தனர்.புலிகளை வைத்து சுயநிர்ணயப்போரை சிதறடித்தபோது, அந்தப் புலிகளையே பிளந்து கிழக்கில் கருணா-பிள்ளையான் குழுக்களைத் தகவமைத்து நமது பாரம்பரிய பூமியை வடக்காகவும்-கிழக்காவும் பிளந்தனர் அந்நிய அரசுகள்.இப்போது பாருங்கள்,மகிந்தாவும் இந்திய அரசும் எப்படி நமக்குள் ஆப்பு வைக்கின்றதென!அதே கவின் மலர் கூறும் அனைத்து வியூகத்தின்படியே நம்மையொடுக்குபவர்கள் நடக்கின்றனர்.அங்கு இராமதாசு இங்கே,தேவதாசன்,ஞானம்,சோபாசகத்தி,கீரன்,முரளி போன்ற மிகச் சிறிய கூலிகளை உங்களுக்கு உதாரணப்படுத்துகிறோம். இவர்களை ஆட்டிப்படைக்கும் மிகப் பெரும் வலுக்கரங்கள் அரசுகளாகவும்-அவவரசுகளது வியூக வகுப்பாளர்களாகவும்,பாரிய கட்சிகளாகவும், இயக்கங்களாகவும், அரசுசார நிறுவனங்களாகவும் பெரும்-பெரும் தலைகள் இவர்களுக்குப்பின்இருக்கின்றன.

தமிழ்பேசும் ஈழ மக்களை இந்துவென்றும்,கிறிஸ்த்தவர்களென்றும், இஸ்லாமியர்-மலைகயத்தவர்களென்று பிளந்து போலிக்கு அவர்களனைவரும் வௌ;வேறு தேசியவினங்களென முற்போக்கு வாதம் பண்ணி, நமது வலுவைப் பாழாக்கினர்.

அஃது கருத்தியல் ரீதியாக நியாயமுற்றபின்னும் நமக்குள் தமிழ்பேசும் மக்களுக்கான-ஒரு தேசிவினத்துக்கான அனைத்துப் பண்பும் இருப்பதைத் துடைத்தெறிவதற்காகவிப்போது நமக்குள்ளிருக்கும் சாதிய வேறுபாடுகளைக் கூர்மைப்படுத்தித் தலித்தமைப்புகளை உருவாக்கி, தலித்துக்கள் தமிழர்கள் இல்லையெனும் விவாதத்துக்கூடாக நம்மைப் பிளந்து அரசியல் செய்யுந் தந்திரத்தைப் பாருங்கள் நண்பர்களே! 

கவின் மலர் முன்வைக்கும் அதே நியாயத்தை இங்கும் பொருத்துவது மனித நேயமிக்க அனைவரதும் கடமை.ஏனெனில், கடந்த 30 ஆண்டுகளில் சிங்களப் பாசிச இராணுவத்தாலும் ,பாசிப்புலிகளாலும் அந்நியர்களது தூண்டுதலாலும் மூன்று இலட்சம் இலங்கைவாழ் சிறுபான்மை-பெரும்பான்மை மக்கள் செத்திருக்கின்றனர்.தமிழ்பேசும் அப்பாவி மக்கள் தனியே இரண்டரை இலட்சம் மக்கள் தமது இன்னுயிரை இழந்தும்,பல இலட்சக் கணக்கானோர் இடம் பெயர்ந்தும் அகதிகளானார்கள்.அவர்களது முழு வாழ்வாதாரமும் சிதைக்கப்பட்டுத் தொடர்ந்து சிங்களப் பாசிச இராணுவத்தின் கண்காணிப்பின்கீழ் இருத்தி வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தின் முழுத் தமிழனதையும் பாருங்கள் தமிழகத்"தலித்"தோழர்களே! 

ஈழ மக்களைக் குண்டுகள் போட்டுக் கொல்லும்போதும்-முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யும்போதும் இந்தத் தலித்து-சாதிய வேறுபாடுகள் பார்த்தா-யாழ்ப்பாண மேலாதிக்கம் பார்த்தா நம்மைக் கொன்றார்கள்?

தனியே தமிழைத் தாய்மொழியாகவும் அதன் வரலாற்றுப்பண்பைக் கலாச்சரமாகவும் அடையாளப்படுத்தி வாழ்த நம்மை இதன் வழிதானே கொன்றார்கள்?தமிழர்களென்பதற்காகத்தானே கொன்றார்கள்?

இப்போது, நம்மைப் பிளந்தெறிய தலித்துவச் சாதிய ரீதியானவுரையாடலின்படி " தலித்துக்கள் தமிழர்கள் அல்லர்" எனுஞ் சதி அரசியல் மூலம் சில பிழைப்புவாதிகளை வைத்தும்,பிரதேசவாதத்தைத் தூண்டும் தமிழின விரோதிகளை வைத்தும் நம்மைப் பிரதேசரீதியாகவும்,சாதிரீதியாகவும் பிரித்து நமது சுயநிர்ணயவுரிமையையும்,நமது வாழ்வாதாரப் பூமியையும் பறிப்பதற்கு நடக்கும் இந்தக் கெடுதியையும் உணருங்கள் தமிழகத்துத் "தலித்து"த் தோழர்களே!

கவின் மலரது கருத்து மிகச் சரியானது.

அவ்வண்ணம் ஒரு தேசியவினத்தின் சுயநிர்ணயத்துக்கான போராட்டமும்,அதன் கோரிக்கையும்,சிங்களஅரசினது ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டமும் சரியானது.அதை மேலுள்ள வகையில்-தந்திரத்தோடு முறியடித்த இந்த ஓடுக்கும் வர்க்க வியூகத்தை-திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்பத் தகவமைக்கும் அவர்களது சதி வியூகத்தைக் கவின் மலர் சொல்வதுபோல் நாம் முறியடித்தாகவேண்டும்.

அதற்குத் தமிழகத்துத் "தலித்து"த் தோழர்கள் நமக்குக் கரந்தரவேண்டும்.அவ்வண்ணம் நாமும் கவின் மலர் குறித்த வியூகத்தை முறியடிக்கும்இந்தியத் "தலித்துக்களின்" உரிமைப் போராட்டத்துக்குக் கை கொடுப்போம்.

எனவே,கவின் மலர் அவர்களது உரையுள் சொல்லப்படும் உண்மைகளுக்குச் செவி சாய்ப்போம்,அவ்வண்ணமே ஈழத்தில் நடக்கும் இதை விஞ்சிய சதிகள் குறித்துரைக்கப்படும் நமது குரல்களையும் செவி மடுங்கள்!

உண்மைகளால்தமிழ்த் தேசிய இனம் தனது அக விலங்கிலிருந்து விடுவிக்கப்படும் காலம் விரைவாக எழட்டும்!இலங்கை அரசுக்கு-இந்திய அரசுக்கு,மேற்குலக எஜமானர்களுக்குத் துணைபோகும் நமக்குள்ளிருக்கும் அனைத்துச் சமூகவிரோதிகளும் உண்மைகளால் தோற்கடிக்படும் காலம் இன்னுமின்னும் விரைவாக எழுந்து வருக!


தோழமையோடு,
ப.வி. ஸ்ரீரங்கன்
02.01.2013

2 Kommentare:

Anonym hat gesagt…

மிகவும் அருமையான ஆழமான பதிவு .. சாதிய, மத பிரிவினை வாத அரசியலிலேயே இலங்கையின் ஏகாதிபத்தியங்களும், உலக ஏகாதிபத்தியங்களும் குளிர் காய்கின்றன, இலங்கைத் தமிழர்களை பற்பலக் கூறுகளாக சிதறடித்து, அவர்களின் தாயக, சுயாட்சி உரிமைகளை இல்லாமல் செய்வதில் பல வெற்றியைக் கண்டு விட்ட போதும், இந்த உண்மைகளை பல இலங்கைத் தமிழர்களும், உலகத் தமிழர்களும் உணராமல் இருப்பதுவே வேதனையான ஒன்றாக உள்ளது.

தலித்களை பிரித்து வைக்கும் மனோபாவத்தை புலம் பெயர் நாடுகளில் உள்ள இலங்கைத் தமிழர்கள் மத்தியில் கூட காணக் கூடியதாக உள்ளது, வெளிப்படையாக ஏற்காவிட்டால் கூட மணம், வியாபாரம், கோவில் எனப் பற்பல சந்தர்பங்களில் இரு சாராரும் பிரிந்தேக் கிடக்கின்றனர். இது தமிழன் என்ற முறையில் எம்மை மிகுந்த மன வேதனைக்கு உள்ளாக்குகின்றது .. !

:(

ப.கந்தசாமி hat gesagt…

மாணவர்களை பலிகடாவாக்கி லாபம் காணும் அரசியல்வாதிகளே தமிழகத்தில் இன்று முன்னணியில் இருக்கிறார்கள் என்பது வேதனை தரும் விஷயம்.